Tuesday 25 August 2020

மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி

 பேராயர்  Ziyaye அவர்கள், உயிர்காக்கும் சுவாசக்கருவியை வழங்குகிறார்


உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளார் – மலாவி பேராயர் Tarcisius Ziyaye

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 உருவாக்கியுள்ள அவசரகாலச் சூழலில், துன்புறும் வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கு, தொடர்ந்து உதவி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது மலாவி நாட்டு மருத்துவமனை ஒன்றிற்கும், மருத்துவ கருவி ஒன்றை வழங்கியுள்ளார் என்று, ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய மலாவியின், Lilongwe நகரில், அசிசி நகர், புனித பிரான்சிஸ் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் நடத்தும் Likuni மருத்துவமனைக்கு, உயிர்காக்கும் சுவாசக்கருவி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மலாவி மற்றும், சாம்பியா நாடுகளின் திருப்பீட தூதர், பேராயர் Gianfranco Gallone அவர்கள், இந்த சுவாசக்கருவியை, திருத்தந்தையின் பெயரில் வழங்கியுள்ளார்.

திருத்தந்தை வழங்கியுள்ள, உயிர்காக்கும் சுவாசக்கருவி குறித்து, மலாவி ஆயர் பேரவையின் blogல் செய்தி வெளியிட்டுள்ள, Lilongwe பேராயர் Tarcisius  Ziyaye அவர்கள், உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகள் மற்றும், மக்களுக்கு உதவுவதோடு, அவர்களுக்காக திருத்தந்தை செபித்து வருகின்றார் என்றும், மலாவி நாட்டிற்காகவும் திருத்தந்தை செபிக்குமாறு தான் கேட்டிருப்பதாகவும், பேராயர்  Ziyaye அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், Likuni மறைத்தள மருத்துவமனை இயக்குனர் அருள்சகோதரி Agnes Lungu அவர்களும், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றான மலாவியில், இதுவரை 4.988 பேர் கொரோனா கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 2.576 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும், 156 பேர் இறந்துள்ளனர்.

Likuni மறைத்தளம் என்ற பெயரில் இயங்கும், இந்த மருத்துவமனையில், ஒவ்வோர் ஆண்டும், 45,000த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கும், அதோடு, குறைந்த ஊதியத்தில் வாழ்கின்ற, சாலையோர விற்பனையாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.  தலைநகர் Lilongweவிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த மருத்துவமனை 231 படுக்கைகள் கொண்டது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...