Friday 30 April 2021

ஒளிவு மறைவற்ற, வத்திக்கான் நிதி விடயங்கள் வேண்டும்

 புனித பேதுரு பெருங்கோவில்


திருப்பீடத்தின் மிக உயர்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், எவ்வித குற்றமும் சுமத்தப்படாதவர்கள் என்றும், ஒளிவு மறைவற்ற நிலையில், தங்கள் நிதித்தொடர்பான விடயங்கள் இருக்கின்றன என்றும், அறிக்கை வெளியிடவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

“மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர், பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்” (லூக்கா 16:10) என்று, லூக்கா நற்செய்தியில், இயேசு விடுத்த எச்சரிக்கை சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 29, இவ்வியாழனன்று 'Motu proprio' எனப்படும் சுயவிருப்ப திருத்தூது மடல் ஒன்றை துவக்கியுள்ளார்.

திருப்பீடத்தின் மிக உயர்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், தாங்கள் எவ்வித குற்றமும் சுமத்தப்படாதவர்கள் என்றும், தங்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஒளிவு மறைவற்ற நிலையில், தங்கள் நிதித்தொடர்பான விடயங்கள் இருக்கின்றன என்றும், ஒரு பொது அறிக்கையை வெளியிடவேண்டும் என்று, திருத்தந்தை, இந்த மடல் வழியே பணித்துள்ளார்.

அத்துடன், வரிகள் விதிக்காது புகலிடம் வழங்கும் நிறுவனங்களிலும், திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களிலும் தாங்கள் நிதி சேமிப்பு வைத்திருக்கவில்லை என்றும், அவர்களது அறிக்கை உறுதி செய்யவேண்டும் என்று, திருத்தந்தை ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், திருப்பீடத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், 40 யூரோவுக்கு அதிகமான மதிப்புள்ள பரிசுப்பொருள்களை யாரிடமிருந்தும் பெறுவதற்கு, இந்த 'Motu proprio' மடல் வழியே திருத்தந்தை தடைவிதித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக, ஐ.நா.நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருப்பீடம், ஒளிவு மறைவற்ற முறையில் தன் பொருளாதார செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வண்ணம், 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'Motu proprio' திருத்தூது மடலின் ஒரு தொடர்ச்சியாக, இவ்வியாழனன்று வெளியான மடல் அமைந்துள்ளது.

ஒளிவு மறைவற்ற முறையில், திருப்பீடமும், வத்திக்கான் நாடும் தன் பணிகளைத் தொடர்வதற்கு உதவியாக, அனைத்து துறைகளின் தலைவர்களாக பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் ஆகியோரும், அவர்களுக்கு உதவி செய்யும் ஏனையோரும், தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை நிலவுவதை உறுதி செய்யும் வண்ணம், அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்பது திருத்தந்தை விடுத்திருக்கும் மிக முக்கிய ஆணையாகும்.

இந்த அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்கள், பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், அவர்களால் ஏற்பட்ட இழப்பை, அவர்களே ஈடு செய்யவேண்டும் என்றும், திருத்தந்தையின் ஆணை வலியுறுத்தியுள்ளது.

புதிய ஆயர் Carlassare, விரைவில் நலமடைய திருத்தந்தை செபம்

 மருத்துவமனையில் புதிய ஆயர் Carlassare


தென் சூடானில், இரு ஆயுதம் ஏந்திய ஆண்கள், 43 வயது நிரம்பிய, புதிய ஆயர் Carlassare அவர்களைக் கடுமையாய் அடித்து, அவரது கால்களிலும் நான்குமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த இயேசுவை, நம் தினசரி வாழ்வில், நாம் எங்கே காணலாம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று வெளியிட்ட, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த இயேசுவை, தினசரி வாழ்வில், நம் சகோதரர், சகோதரிகளின் முகங்களில், எல்லாவற்றிற்கும் மேலாக, வறியோர் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர் முகங்களில், நாம் கண்டுகொள்ளலாம். அப்போது, கடவுளின் மகத்துவம், மதிப்புக்குறைவானவைகளிலும், அவரது அழகு, ஏழைகள் மற்றும், எளியவர்களிலும்,  எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து, நாம் வியப்படைவோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தென் சூடான் புதிய ஆயர் Carlassare

மேலும், தென் சூடான் நாட்டின் Rumbek மறைமாவட்டத்தில், கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள, கொம்போனி மறைப்பணி சபையைச் சார்ந்த, புதிய ஆயர் Cristian Carlassare அவர்கள், விரைவில் நலமடைய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனை மன்றாடி வருவதாக, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள்  கூறியுள்ளார்.

Rumbek மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் Cesare Mazzolari அவர்கள், 2011ம் ஆண்டில் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி Carlassare அவர்களை, இவ்வாண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். இப்புதிய ஆயரின், திருப்பொழிவு நிகழ்வு, வருகிற மே மாதம் 23ம் தேதி நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

43 வயது நிரம்பிய, இத்தாலியரான, புதிய ஆயர் Carlassare அவர்கள் அறையில், ஏப்ரல் 25, இஞ்ஞாயிறு நள்ளிரவில், இரு ஆயுதம் ஏந்திய ஆண்கள் நுழைந்து, அவரைக் கடுமையாய் அடித்து, அவரது கால்களிலும் நான்குமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

புதிய ஆயர் Carlassare அவர்கள், தாக்கப்பட்ட தகவல் வெளியானபின், அவர் உடனடியாக, நைரோபிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அந்நகரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று கூறியுள்ள, புரூனி அவர்கள், புதிய ஆயர் Carlassare அவர்கள், தன்னை தாக்கியவர்களை மன்னித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென் சூடானில் பெரும்பான்மையாக வாழ்கின்ற dinka இன மக்கள், Rumbek மறைமாவட்டத்தில் அதிகம் என்றும், அந்த மறைமாவட்ட மக்கள், இம்மாதம் 16ம் தேதி, புதிய ஆயர் Carlassare அவர்களுக்கு, தங்கள் இன கலாச்சார முறையில் மகிழ்வோடு வரவேற்பளித்தனர் என்றும், புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

தென் சூடான் நாட்டில், வன்முறையும், இனவாதமும் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படும்வேளை, அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir அவர்கள், திருஅவையின் செயல்பாடுகளில் தலையிடும் குற்றவாளிகளை, அரசு அனுமதிக்காது என்று அறிவித்துள்ளார்.

18 இலட்சம் மக்கள் வாழ்கின்ற Rumbek மறைமாவட்டத்தில், 2 இலட்சம் பேர் கத்தோலிக்கர், மற்றும், 8 இலட்சம் பேர் பிற கிறிஸ்தவ சபையினர்.

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், Rumbek மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர் Christian Carlassare அவர்கள் தாக்கப்பட்டதற்கு தன் ஆழ்ந்த வருத்தத்தையும், அவரோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளது.

சட்டங்களை உருவாக்குவதில், மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்க...

OSCE கூட்டத்தில் உரையாற்றும் அருள்பணி Janusz Urbańczyk
ஐரோப்பிய நாடுகளில், சட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், மத நம்பிக்கையுள்ளவர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும் - திருப்பீடம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில், சட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், பொதுமக்களின் பங்கேற்பு இன்னும் அதிகமாக இடம்பெறவேண்டும் என்றும், குறிப்பாக, மத நம்பிக்கையுள்ளவர்களின் பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவை ஒன்றில் உரையாற்றினார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், கூட்டுறவையும் வளர்க்கும் நிறுவனமான OSCE ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், "குடியரசு சார்ந்த சட்டங்கள் உருவாக்குதல்: பங்கேற்பை உறுதிசெய்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

பொதுவாக, நாடுகள், சட்டங்கள் இயற்றும் வேளையில், மத நம்பிக்கை சார்ந்த விழுமியங்களுக்கும், நன்னெறி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், மத நம்பிக்கையுள்ளோரின் குரலுக்கு செவிமடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

மனிதர்களைக் குறித்த முழுமையான ஒரு புரிதலைப் பெறுவதற்கு, மத நம்பிக்கை, மனசாட்சி ஆகியவை இன்றியமையாதவை என்றும், இவற்றிற்கு உயர்ந்த இடத்தை வழங்கும் சமுதாயமே, நலமான சமுதாயமாக இருக்கமுடியும் என்றும், அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆயர்களின் தெரிவு பற்றி, ஆயர்கள் பேராயத்தின் தலைவர்

 0.jpg


உலக அளவுகோல்களின் அடிப்படையில் அல்லாமல், மத நம்பிக்கை, மற்றும் விவிலிய விழுமியங்களின் அடிப்படையில், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களாக ஆயர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக அளவுகோல்களின் அடிப்படையில் அல்லாமல், மத நம்பிக்கை, மற்றும் விவிலிய விழுமியங்களின் அடிப்படையில், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களாக ஆயர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்று, ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்க் உலெட் (Marc Ouellet) அவர்கள் கூறினார்.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் வண்ணம், வத்திக்கான் செய்தி தயாரித்து வெளியிட்டுவரும் ஒரு தொடர் நிகழ்வின் அங்கமாக, ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் உலெட் அவர்களுடன் வத்திக்கான் செய்தித்துறை மேற்கொண்ட நேர்காணல் இடம்பெற்றது.

ஆயர்கள் எவ்வாறு தெரிவு செய்யபப்டுகின்றனர்

இந்த நேர்காணலில், ஆயர்கள் எவ்வாறு தெரிவு செய்யபப்டுகின்றனர் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்த கர்தினால் உலெட் அவர்கள், ஆயராக தெரிவு செய்யப்படுபவர், பீடத்தில் ஏற்றிவைக்கப்படும் 'புனிதர்' என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல், அவர், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கொண்டவர் என்ற கண்ணோட்டத்துடன் தெரிவு செய்யப்படுகிறார் என்று கூறினார்.

ஆயர் பணிக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்து, திருத்தந்தையின் முடிவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயர்கள் பேராயம், இறைவேண்டல், கலந்துபேசுதல், உண்மைகளைக் கண்டறிதல் என்ற மூன்று செயல்பாடுகளின் அடிப்படையில் இப்பணியை ஆற்றுகின்றது என்று, கர்தினால் உலெட் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தலத்திருஅவையில் ஆரம்பமாகும் தெரிவு

ஆயர் பணிக்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யும் பணி, தலத்திருஅவையில் ஆரம்பமாகிறது என்று கூறிய கர்தினால் உலெட் அவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தலத்திருஅவை அளவில் இந்த பெயர்கள் விவாதிக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பப்படுகிறது என்றும், அங்கிருந்து, இந்த பெயர்கள், ஆயர்கள் பேராயத்தை அடைகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகெங்கிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 23 ஆயர்கள், மற்றும் கர்தினால்கள் அடங்கிய குழு, ஆயர்கள் பேராயம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களைக் குறித்த விவாதங்களை மேற்கொண்டு, பின்னர் தங்கள் தெரிவுகளை திருத்தந்தைக்கு அனுப்புகின்றனர் என்றும், இந்த தகவல்களின் அடிப்படையில் திருத்தந்தை வெவ்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்களை முடிவு செய்கிறார் என்றும் கர்தினால் உலெட் அவர்கள் தன் நேர்காணலில் குறிப்பிட்டார்.

மக்களை முன்னிறுத்தி பணிசெய்ய விழைவோரே, ஆயராக...

தங்கள் சொந்த பதவிகளை நாடுவோர், திருஅவைக்குத் தேவையில்லை என்பதையும், மக்களை முன்னிறுத்தி பணிசெய்ய விழைவோரே ஆயராகப் பணிபுரியத் தேவை என்பதையும், கர்தினால் உலெட் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளின் ஆயர்களுக்கும், திருத்தந்தைக்கும் இடையே நடைபெறும் 'அத் லிமினா' சந்திப்பு, அந்தந்த நாடுகளின் தேவைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை தெளிவாக்குவதால், புதிய ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில், இந்தச் சந்திப்புக்கள் உதவியாக உள்ளன என்பதையும், கர்தினால் உலெட் அவர்கள் எடுத்துரைத்தார்.

முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை – முதல் ஆண்டு

 திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்


திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் எண்ணங்கள், எழுத்துக்கள், மற்றும், வாழ்வு எடுத்துக்காட்டுக்கள், அனைவரையும் சென்றடைய உதவும் நோக்கத்துடன், உருவாக்கப்பட்ட அறக்கட்டளை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி நிறுவப்பட்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை, இவ்வாண்டு, ஏப்ரல் 28, இப்புதனன்று, தன் முதல் ஆண்டு நிறைவை சிறப்பித்துள்ளது.

திருஅவையில், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி முடிய, 34 நாள்களே திருத்தந்தையாக பணியாற்றி இறையடி சேர்ந்த திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் எண்ணங்கள், எழுத்துக்கள், மற்றும், வாழ்வு எடுத்துக்காட்டுக்கள், அனைவரையும் சென்றடைய உதவும் நோக்கத்துடன், இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் விட்டுச்சென்ற கலாச்சார, மற்றும், ஆன்மீக பாரம்பரியத்தைக் கட்டிக்காத்தல், அவர் குறித்த கருத்தரங்குகள், ஆய்வுகள் போன்றவற்றை ஊக்குவித்தல், அவரை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விருதுகள் போன்றவற்றை உருவாக்குதல், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை, ஓராண்டளவாகச் செயலாற்றி வருகிறது.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பணியாற்றிய 1978ம் ஆண்டு, வத்திக்கான் தொலைக்காட்சி நிலையம் உருவாகாத நிலையில், அவ்வாண்டில், இத்திருத்தந்தையின் செயல்பாடுகளை பதிவுசெய்து வந்த Rai என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து, இந்த அறக்கட்டளை, காணொளிப் பதிவுகளை வாங்கி, பாதுகாத்துவருகிறது.

மேலும், ஏப்ரல் 30 வருகிற வெள்ளியன்று, வெனிசுவேலா நாட்டில், இறையடியார் José Gregorio Hernández அவர்கள், அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியை தலைமையேற்று நடத்துவதாக இருந்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின் காரணமாக, அங்கு செல்லமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக, வெனிசுவேலாவின் திருப்பீடத்தூதர், பேராயர் Aldo Giordano அவர்கள் தலைமையில், இத்திருப்பலி நடைபெறும் என்றும், திருப்பீடம் அறிவித்துள்ளது.

வேளாங்கண்ணி உட்பட, 30 திருத்தலங்களில் செபமாலை

 செபமாலை செபித்தல்


கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், உலகெங்கும் உள்ள திருத்தலங்களில் மே மாதம் மேற்கொள்ளப்படும் செபமாலை பக்தி முயற்சி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், உலகெங்கும் உள்ள திருத்தலங்களிலிருந்து செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை, ஏற்கனவே அறிவித்திருந்த திருப்பீடம், பல்வேறு நாடுகளிலிருந்து, இம்முயற்சியில் இணையும் 30 திருத்தலங்களின் பெயர்களை, ஏப்ரல் 28, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

அனைத்து கண்டங்களிலிருந்தும் திருத்தலங்கள்

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், உட்பட, உலகின் அனைத்து கண்டங்களிலிருந்தும் இத்திருத்தலங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, மே மாதம் முதல் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைப்பார் என்றும், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை அவர் நிறைவு செய்துவைப்பார் என்றும், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

நேரடியாக ஒளிபரப்பாகும் செபமாலை

மே 1, வருகிற சனிக்கிழமை முதல், ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

புனித பூமியின் நாசரேத்தில் உள்ள கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருங்கோவில், இத்தாலியின் பொம்பேயி செபமாலை அன்னை திருத்தலம், லொரேத்தோவில் அன்னை மரியாவின் இல்லத்தைக் கொண்டுள்ள திருத்தலம், தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம், பிரேசில் நாட்டின் Aparecida திருத்தலம், அர்ஜென்டீனா நாட்டின் Lujan திருத்தலம் ஆகியவை திருப்பீடம் அறிவித்துள்ள 30 திருத்தலங்களில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், போஸ்னியாவின் Medjugorje, போலந்து நாட்டின் Częstochowa, துருக்கியின் Meryem Ana, அயர்லாந்தின் Knock, இங்கிலாந்தின் Walsingham ஆகிய இடங்களில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னை மரியா திருத்தலங்களும் இந்த செபமாலை பக்தி முயற்சியில் இணைகின்றன.

ROBERT JOHN KENNEDY: Keezhadi Agalvaraichi-யில் அடுத்தடுத்து கிடைக்கும்...

ROBERT JOHN KENNEDY: Keezhadi Agalvaraichi-யில் அடுத்தடுத்து கிடைக்கும்...

ROBERT JOHN KENNEDY: New information | மரத்தால் கட்டப்பட்ட ராஜேந்திர சோ...

ROBERT JOHN KENNEDY: New information | மரத்தால் கட்டப்பட்ட ராஜேந்திர சோ...

ROBERT JOHN KENNEDY: 2,400 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட இரும்பு உருக்கால...

ROBERT JOHN KENNEDY: 2,400 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட இரும்பு உருக்கால...

ROBERT JOHN KENNEDY: Konthagai Excavation : மதுரை பல்கலைக்கழக மரபணுவியல...

ROBERT JOHN KENNEDY: Konthagai Excavation : மதுரை பல்கலைக்கழக மரபணுவியல...

ROBERT JOHN KENNEDY: கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக் க...

ROBERT JOHN KENNEDY: கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக் க...

ROBERT JOHN KENNEDY: எலும்புக்‍கூடுகளை ஆய்வுக்‍கான வெளிக்‍கொணரும் பணி த...

ROBERT JOHN KENNEDY: எலும்புக்‍கூடுகளை ஆய்வுக்‍கான வெளிக்‍கொணரும் பணி த...

ROBERT JOHN KENNEDY: உலுக்கும் கொடூர காட்சிகள், உண்மையில் Delhi சுடுகா...

ROBERT JOHN KENNEDY: உலுக்கும் கொடூர காட்சிகள், உண்மையில் Delhi சுடுகா...

ROBERT JOHN KENNEDY: Rajendra Chola ன் அரண்மனை கண்டுபிடிப்பு? -Gangaiko...

ROBERT JOHN KENNEDY: Rajendra Chola ன் அரண்மனை கண்டுபிடிப்பு? -Gangaiko...

சங்ககாலப் பொருட்கள் கண்டெடுப்பு | Archaeological Excavation | Ramanatha...

KEEZHADI EXCAVATION | VAIGAI VALLEY CIVILIZATION | ARCHAEOLOGICAL SITES ...

Keezhadi Agalvaraichi-யில் அடுத்தடுத்து கிடைக்கும் எலும்புக்கூடுகள் | Ex...

New information | மரத்தால் கட்டப்பட்ட ராஜேந்திர சோழன் அரண்மனை | Rajendra...

2,400 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு | Kodu...

Konthagai Excavation : மதுரை பல்கலைக்கழக மரபணுவியல் பேராசிரியர்கள் ஆய்வு

கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு | K...

எலும்புக்‍கூடுகளை ஆய்வுக்‍கான வெளிக்‍கொணரும் பணி துவக்‍கம் | Keezhadi Ex...

உலுக்கும் கொடூர காட்சிகள், உண்மையில் Delhi சுடுகாடுகளில் நடப்பது என்ன? ...

Rajendra Chola ன் அரண்மனை கண்டுபிடிப்பு? -Gangaikonda Cholapuram அகழாய்வ...

Tuesday 27 April 2021

மே மாதம் முழுவதும், உலகத் திருத்தலங்களில் செபமாலை

 மக்களோடு இணைந்து செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்


உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், வருகிற மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், வருகிற மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும் என்று புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, மே மாதம் முதல் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைப்பார் என்றும், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை அவர் நிறைவு செய்துவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அன்னை மரியாவுக்காகவும், செபமாலைக்கெனவும் அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், இந்த பெருந்தொற்றை இறைவன் முடிவுக்குக் கொணரவேண்டும் என்ற சிறப்பு வேண்டுதலுடன், அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி, இந்த முயற்சி, உலகெங்கிலும் உள்ள திருத்தலங்களில் மேற்கொள்ளப்படும் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டு, மார்ச் மாதம், உலகெங்கும், இந்தப் பெருந்தொற்றின் முதல் அலை பரவிவந்த வேளையில், புனித பேதுரு பெருங்கோவிலின் முன்னாள் தலைமை அருள்பணியாளர், கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்கள், நண்பகல் 12 மணிக்கு, செபமாலை, மற்றும், மூவேளை செப உரை ஆகிய இறைவேண்டல் முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் பெயர் திருநாளில் 600 ஏழைகளுக்கு தடுப்பூசி

 புனித 6ம் பவுல் அரங்கத்தில் தடுப்பூசிகள் போடப்படும் இடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாதுகாவலர் திருநாளன்று, உரோம் மாநகரின் 600 ஏழை மக்களுக்கு, வத்திக்கானில், 2வது முறையாக, கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“வாழ்வின் ஆண்டவர், நாம் வாழ்வை முழுமையாக வாழுமாறு விரும்புகிறார், அவர், வாழ்வின் இரகசியத்தை நமக்குச் சொல்கிறார், அந்த வாழ்வை மற்றவருக்குக் கொடுத்து வாழும்போது மட்டுமே, அந்த வாழ்வை நாம் உடைமையாக்கிக் கொள்கிறோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாளான, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 23, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, மறைசாட்சியான புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைக் கொண்டிருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், நாம் கடவுளிடமிருந்து பெற்ற வாழ்வெனும் கொடையை, மற்றவருக்கு கொடையாக வழங்கி வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தைக்கு திருநாள் வாழ்த்து

மேலும், இஸ்பானிய மொழியில், ஹோர்கே, (Jorge Mario Bergoglio) அதாவது, ஜார்ஜ் என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாதுகாவலர் திருநாளைச் சிறப்பிக்கும் விதமாக, உரோம் மாநகரில் வாழும், ஏறத்தாழ 600 வறிய, மற்றும், வீடற்ற மக்களுக்கு, இரண்டாவது முறையாக, கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்திற்கு, திருத்தந்தை சென்று, அவர்கள் அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.

ஏப்ரல் 23, இவ்வெள்ளி, உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திற்குச் சென்று, அங்கு தடுப்பூசிகளை வழங்கியவர்கள், தன்னார்வலர்கள், மற்றும், அவற்றை பெற்றவர்களைச் சந்தித்து வாழ்த்தியதோடு, அவர்களுக்கு, சாக்லேட்டு இனிப்புகள் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு திருத்தந்தைக்கு, திருநாள் வாழ்த்துப் பாடலையும், அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.

தடுப்பூசி வழங்கிய இத்தகவலை அறிவித்த, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான, கர்தினால் Konrad Krajewski அவர்கள், இவ்வாண்டு புனித வாரத்தில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், கோவிட் 19 தடுப்பூசிகளை முதல் முறையாகப் பெற்ற 1,400 பேரில், 600 பேரே, இவ்வெள்ளியன்று, இரண்டாவது முறையாகத் தடுப்பூசிகளை, பெற்றவர்கள் என்று அறிவித்தார்.

2020ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, புனித ஜார்ஜ் திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, இஸ்பெயின், ரொமேனியா நாடுகளில், கோவிட்-19 நோயுற்றோருக்கு உதவிகள் செய்துவந்த மருத்துவமனைகளுக்கு பல மருத்துவ உதவிகளை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கோளப் பாதுகாப்பிற்கு காலந்தாழ்த்தாமல் செயல்பட...

 உலக பூமிக்கோள நாள்


இயற்கை, பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியுடையது என்பதை, இந்த பெருந்தொற்று காலத்தில் உலகினர் அதிகமதிகமாக உணர ஆரம்பித்துள்ளனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நமது பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கு உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தி, ஏப்ரல் 22, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட '51வது உலக பூமிக்கோள நாள்’ மற்றும், காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளுக்கு, இரு காணொளிச் செய்திகளை அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22, பூமிக்கோள நாள் 2021

கோவிட்-19 பெருந்தொற்றும், காலநிலை மாற்றமும் உலக அளவில் பேரழிவுகளை உருவாக்கியுள்ளவேளை, நம் உலகை பாதுகாப்பதற்கு, உலகின் அனைத்து தலைவர்களும், காலத்தைக் கடத்தாமல், உடனடியாகவும், நீதியோடும், துணிவோடும், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைவர்கள், தங்களின் நடவடிக்கைகளில் எப்போதும் உண்மையைக் கூறும்போது, அதைக் கேட்கும் மக்களும், பூமிக்கோளத்தின் அழிவினின்று எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்பதுபற்றியும், மனிதர்களாகிய நம்மால் அழிவை எதிர்கொள்ளும், பூமிக்கோளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதுபற்றியும் அறிந்துகொள்வார்கள் என்று, திருத்தந்தையின் காணொளிச் செய்தி கூறுகிறது.

காலநிலை மாற்றம் பற்றிய மெய்நிகர் மாநாடு

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் முயற்சியினால், நடைபெற்ற, காலநிலை மாற்றம் பற்றிய மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்ட, நாற்பது நாடுகளின் தலைவர்களிடம், மற்றொரு காணொளிச் செய்தி வழியாக, தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறிப்பிட்டு, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, மனிதரின் செயல்பாடுகள், கடவுளின் பன்முக உயிர்களை, மிகுந்த அக்கறையோடு பராமரிப்பதாயும்,  மதிப்பதாயும் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பன்முக உயிர்களைப் பாதுகாப்பது, இயற்கையைப் பாரமரிப்பதாகும் என்றும், இயற்கை, பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியுடையது என்பதை, இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் அதிகமதிகமாக உணர ஆரம்பித்துள்ளோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தைப் பகிர்ந்துகொள்வதில், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம் என்பதை கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்றும், பெருந்தொற்றும், காலநிலை மாற்றமும் உலக அளவில் உருவாக்கியுள்ள பேரழிவுகள், நீதியும், நியாயமும், பாதுகாப்பும் நிறைந்த சுற்றுச்சூழலைக் கொண்ட ஒரு பூமியை உருவாக்கவேண்டிய அவசியத்தையும், இவ்விவகாரத்தில், இனிமேலும் காலந்தாழ்த்தாமல், உடனடியாக செயலில் இறங்கவேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன என்று, திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் ஏற்பாடு செய்த, காலநிலை மாற்றம் பற்றிய உலக மெய்நிகர் மாநாட்டில், சீனாவின் அரசுத்தலைவர் Xi Jinping அவர்கள் உட்பட, நாற்பது நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம், வருகிற நவம்பர் மாதத்தில், கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை பற்றிய உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக நடைபெற்றது.

கிறிஸ்துவின் திருஅவையை கட்டியெழுப்புவதில் அருள்பணியாளர்

 நல்லாயன் ஞாயிறு திருப்பலி - 250421

அருள்பணியாளர்கள், தாங்கள் மகிழ்வுடன் பெற்றுள்ள இறைவார்த்தையை மற்றவர்களுக்கு வழங்குவதோடு, தாங்கள் கற்பிப்பதை தங்கள் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதிய ஏற்பாட்டின் ஒரே தலைமைக்குருவான நமதாண்டவராம் இயேசு, இறைமக்கள் அனைவரையும் இறைக்குருத்துவ மக்களாக தனக்குள் இணைத்துக் கொண்டுள்ளபோதிலும், அவர்களுக்குள்ளும், ஆயராகவும், அருள்பணியாளராகவும், போதகராகவும் தன் தனிப்பட்ட பணியை தொடர்ந்து நடத்த அருள்பணியாளர்களை தெரிந்துகொண்டார் என, இஞ்ஞாயிறன்று, திருத்தொண்டர்களை அருள்பணியாளர்களாக திருப்பொழிவுச் செய்த திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்டத்திற்கென்று, ஒன்பது புதிய அருள்பணியாளர்களை, ஏப்ரல் 25, நல்லாயன் ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பொழிவு செய்த திருப்பலியில் மறையுரையாற்றிய உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தை அனுப்பியதுபோல், தன் சீடர்களையும், அதன்பின் ஆயர்களையும், அவர்களின் உதவியாளர்களாக அருள்பணியாளர்களையும் இயேசு அனுப்பிவைக்கிறார் என்றார்.

கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த எண்ணிக்கையில் விசுவாசிகள் பங்குகொண்ட இத்திருப்பலியில், கிறிஸ்துவின் மறையுடலாக இருக்கும் திருஅவையினை கட்டியெழுப்புவதில் அருள்பணியாளர்களின் பணி பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் இறைமக்களுக்கு பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டி, இவர்கள் நற்செய்தியின் போதகர்களாகவும், இறைமக்களின் மேய்ப்பர்களாகவும், வழிபாடுகளில், குறிப்பாக, ஆண்டவரின் தியாகப்பலி கொண்டாட்டங்களில் தலைமைத் தாங்குபவராகவும் செயல்படுவார்களென, புதிதாக திருப்பொழிவுச் செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் பற்றி குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய அருள்பணியாளர்கள், தாங்கள் மகிழ்வுடன் பெற்றுள்ள இறைவார்த்தையை மற்றவர்களுக்கு வழங்குவதோடு, தாங்கள் கற்பிப்பதை தங்கள் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டுமென்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் வழியாக இவர்களின் போதனை மற்றவர்களுக்கு ஊட்டச்சத்தாகச் செயல்படுவதுடன், இறைவனின் இல்லத்தை கட்டியெழுப்ப உதவுவதாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

தங்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இறைமகனின் மரணம் மற்றும் உயிர்ப்பின் மறையுண்மையை பகிர்வதன் வழியாக, புதிய வாழ்வின் தன்மையோடு இறைவனோடு நடந்து செல்லவேண்டுமென்ற அழைப்பையும், புதிய அருள்பணியாளர்களுக்கு முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமுழுக்கு வழங்குவதன் வழியாக திருஅவைக்கு புதிய அங்கத்தினர்களைக் கொணரும் அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளம் வழியாக மன்னிப்பை வழங்குகின்றனர், புனித எண்ணெய் வழியாக நோயாளிகளின் துயரை நீக்க உதவுதல், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக இடம்பெறும் இறைவேண்டல், மற்றும் விண்ணப்பங்கள் வழியாக இறைமக்கள், மற்றும் உலகமக்களனைவரின் குரலாக செயல்படுகின்றனர் அருள்பணியாளர்கள், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களுக்காக அல்ல, மாறாக, கிறிஸ்துவுக்காக, இயேசுவின் குருத்துவப் பணியை உண்மையான பிறரன்புடன் நிறைவேற்றுங்கள் என புதிய அருள்பணியாளர்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணாமல்போன தன் ஆட்டை, தேடிவந்த இயேசு, பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே வந்தார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தார்.

பல்வேறு மறைமாவட்ட அருள்பணித்துவ பயிற்சி மையங்களில் பயின்று, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்திற்கென புதிய அருள்பணியாளர்களாக திருத்தந்தையால் திருப்பொழிவுச் செய்யப்பட்டுள்ள இந்த ஒன்பது பேரில், ஒருவர் ருமேனியா நாட்டையும், மற்றொருவர் கொலம்பியா நாட்டையும், இன்னொருவர் பிரேசில் நாட்டையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

பன்முக உயிரியல் - இணையவழி கருத்தரங்கு

 பன்முக உயிரியல் - இணையவழி கருத்தரங்கில், கர்தினால் பீட்டர் டர்க்சன்


பன்முக உயிர்களின் காவலர்களாக திகழும் பழங்குடியினர் நமக்குச் சொல்லித்தரும் சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றத்தை நாம் பயிலவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றமும், நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தின் பராமரிப்பும், இன்றைய உலகின் மிக முக்கியத் தேவைகளாக உள்ளன என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இணைய வழி கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும், கோவிட்-19 மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டு திருப்பீடக் கழகமும் இணைந்து, ஏப்ரல் 20, செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் பன்முக உயிரியல் கருத்தரங்கு COP15, மற்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் உச்சி மாநாடு COP26 ஆகிய பன்னாட்டு கூட்டங்களுக்கு தயாரிப்பாக, "COP15ஐ நோக்கிய பாதை" என்ற தலைப்பில், இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த இணையவழி கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் அவர்களும், ஐ.நா.வின் அமைதி தூதரும், ஜேன் குட்டால் (Jane Goodall) நிறுவனத்தின் தலைவருமான, முனைவர் ஜேன் குட்டால் அவர்களும் சிறப்புரைகள் வழங்கினர்.

விலங்குகளிடமிருந்து மனிதருக்கு தோற்றிய நோயாக கோவிட்-19 பெருந்தொற்று கருதப்படுவதால், நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை நோயுறும்போது, மனிதர்களாகிய நாமும் நோயுறுகிறோம் என்ற பாடத்தை, இந்த உலகளாவிய பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

பன்முக உயரியல் என்பது, படைப்பின் துவக்கத்திலிருந்தே கடவுளால் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை, விவிலியம் நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பன்முக உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், பன்முக உயிர்கள் ஒவ்வொன்றையும் படைத்த இறைவன், தொடர்ந்து அவற்றைப் படைத்து வருகிறார் என்று எடுத்துரைத்தார்.

கடவுளின் படைப்பை சிறிது, சிறிதாக மனிதர்கள் சிதைத்து வந்துள்ளனர் என்பதை தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், சிதைக்கப்பட்ட படைப்பு அனைத்தும், உலகின் வறியோரும் எழுப்பும் அழுகுரலைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்று பொருள்படும் 'Laudato si' திருமடலில் கூறியுள்ளார் என்பதை நினைவுறுத்தினார்.

பன்முக உயிர்களின் காவலர்களாக திகழும் பழங்குடியினரைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்றும், இவர்கள் நமக்குச் சொல்லித்தரும் சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றத்தை நாம் பயிலவேண்டும் என்றும் திருத்தந்தை தன் திருமடலில் கூறியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஞானத்தை நோக்கி இளையோரை திறக்கும் கத்தோலிக்க கல்வி

 மிலான் நகர் திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழக திருப்பலியில் கர்தினால் பரோலின்


தப்பிச் செல்வதாலோ, பலத்தின் வழியாகவோ, எந்த தீமையையும் வெற்றிகொள்ள முடியாது, அன்பின் வழியாக மட்டுமே வெற்றிகொள்ள முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரலாற்றில் முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலத்தின் சவால்களையும் தாண்டி, அந்த அனுபவத்தோடு வளர்ந்து வந்துள்ள கத்தோலிக்க கல்வி நிலையங்களின் எடுத்துக்காட்டு, வரவிருக்கும் காலங்களின் சவால்களை வெற்றிகொள்வதற்கு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் மிலான் நகரில் அமைந்துள்ள திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டதன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையும், கத்தோலிக்க கல்வியின் 97வது ஆண்டு தினத்தையும், இணைத்து, திரு இதய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், கல்விச்சூழல்களில் புதிய வாழ்வுமுறைகளுக்கும் ஆய்வுகளுக்குமான சவால்களை எதிர்நோக்கிய காலம்போல், இன்னும் சவால்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நினைவூட்டினார்

இளையோரின் மனதை அறிவின் அழகு நோக்கி திறப்பது என்பது, ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்வதோ, அல்லது, அறிவியல், தொழில்நுட்பத் திறமைகளைக் கைக்கொள்வதோடு நின்றுவிடுவதல்ல, மாறாக, ஞானத்தின் தேடுதல் நோக்கி அவர்களை திறக்க வைப்பதாகும் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அப்பணியே கத்தோலிக்க கல்வி நிலையங்களின் குறிக்கோளாக உள்ளது என்றார்.

துன்பங்களையும் துயர்களையும் அனுபவித்து இறந்த இயேசு, அனைத்து துன்பங்களையும் நம்மீது கொண்ட அன்பால் தாங்கி, வெற்றி வீரராக உயிர்த்தார் என்பதே இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் பெறும் செய்தி என்று கூறிய திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், தப்பிச்செல்வதாலோ, பலத்தின் வழியாகவோ, எந்தத் தீமையையும் வெற்றிகொள்ள முடியாது, அன்பின் வழியாக மட்டுமே வெற்றிகொள்ள முடியும் என்பதை இயேசு கற்பித்துள்ளார் என கூறினார்.

நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்ளும்போது, அது குறித்து அச்சம் கொள்ளாமல், அன்பால் அவைகளை வெற்றிகண்டு, வருங்கால சமுதாயத்தை நன்முறையில் உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் எனவும் அழைப்பு விடுத்தார், கர்தினால் பரோலின்.

அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்

 கனடாவில் வாழ்கின்ற பிள்ளைகள்


பரிவிரக்கம், இவ்வாறுதான் மற்றவர் இருக்கவேண்டும் என்று, நான் விரும்பும்போது, அவர்கள் வித்தியாசமாய் செயல்படும்போதும்கூட, அவர்கள் இவ்வுலகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்கச் செய்கின்றது (அன்பின் மகிழ்வு 92)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், ‘திருமணத்தில் அன்பு’ என்ற நான்காம் பிரிவின், 91,92ம் பத்திகளில் 'அன்பு பொறுமையுள்ளது' என்ற துணைதலைப்பில், அவர் கூறியுள்ள கருத்துக்கள்...

அன்பு பொறுமையுள்ளது (1கொரி.13:4) என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் கிரேக்க சொல்லாடல் makrothyméi என்பதாகும். இச்சொல், “அனைத்தையும் வெறுமனே பொறுத்துக்கொள்வது” அல்ல என்பதை வெளிப்படுத்தும் கருத்து, பவுலடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் 13ம் பிரிவின் 7ம் வசனத்தின் முடிவில் கூறப்பட்டுள்ளது. கடவுள் ‘சினம் கொள்ள தாமதிப்பவர்’ என்ற, இதன் அர்த்தம், பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில், தெளிவுபடுத்தப்பட்டுள்ளது (வி.ப.34:6; எண்.14:18). அதாவது, இது, உணர்ச்சிவசப்படாமல் செயல்படுகின்ற, மற்றும், கோபமூட்டுவதைத் தவிர்க்கின்ற ஒருவரின், குணநலனைக் குறிக்கிறது. இந்த, தமது குணநலனை, குடும்ப வாழ்விலும் பின்பற்றுமாறு, உடன்படிக்கையின் கடவுள், நமக்கு அழைப்பு விடுக்கின்றார். புனித பவுலடிகளாரின் திருமடலில் பயன்படுத்தப்பட்டுள்ள இச்சொல்லை, சாலமோனின் ஞானம் என்ற நூலின் (காண்க.11:23;12:2,15-18) ஒளியில் நாம் வாசிக்கவேண்டும். மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே கடவுள் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றார். ஆயினும், அவரது இரக்கச்செயல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அவர் தம் ஆற்றலை வலியுறுத்துகிறார். கடவுள், பாவிகள் மீது காட்டும் “பொறுமை”, அவரது உண்மையான ஆற்றலின் அடையாளம். (அன்பின் மகிழ்வு 91).

பொறுமையாய் இருப்பது என்பது, மற்றவர் தொடர்ந்து நம்மை மோசமாக நடத்துவதற்கு, அல்லது, மற்றவர் நம்மைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பது, உடலளவில் துன்புறுத்தப்படுவதைச் சகித்துக்கொள்வது என்ற அர்த்தம் அல்ல. நம் உறவுகளில், அல்லது, மக்களில், எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கும்போது, அல்லது, அனைத்திலும் நம்மையே மையப்படுத்தும்போது, மற்றும், அனைத்தும் நமது வழியில் நடக்கவேண்டும் என எதிர்பார்க்கும்போது, நாம் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். அதனால் அவை அனைத்தும் நம்மை பொறுமையற்றவர்களாக ஆக்குகின்றன, மற்றும், அவை, முரட்டுத்தனமாகவும் நம்மை செயல்பட வைக்கின்றன. எனவே நாம் பொறுமை என்ற பண்பை வளர்த்துக்கொள்ளவில்லையென்றால், கோபமாகச் செயல்படுவதற்கு எப்போதும் சாக்குப்போக்குகளைத் தேடுவோம். இறுதியில், ஒன்றிணைந்து வாழத் திறனற்றவர்களாக, சமுதாயத்தின் எதிரிகளாக, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆகிவிடுவோம். நம் குடும்பங்களும் போர்த்தளங்களாக மாறும். அதனாலேயே கடவுள், “மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும், தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்” (எபே.4:31) என்று நம்மிடம் கூறுகிறார். மற்றவரும் அவர்கள் இருப்பதுபோலவே, இந்த உலகத்தில் வாழ்வதற்கு உரிமையுடையவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படும்போது, பொறுமை, அனைத்தையும் பொறுத்துக்கொள்ளத் துவங்குகிறது.  அப்போது, மற்றவர், தங்களது, செயல், அல்லது சிந்தனையால், நம்மை எரிச்சல்படுத்தினாலும், அவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு இல்லாமலும், அவர்கள் நமது திட்டங்களுக்குத் தடைகளாகவும், நமது வளர்ச்சிக்குத் தடங்கலாகவும் இருந்தாலும், அவை நம்மை ஒன்றும் செய்துவிடாது. அன்பு எப்போதும் ஆழமான பரிவன்பைக் காட்டுவதாகும். அத்தகைய அன்பு, மற்றவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று நாம் விரும்பும்போதும், அவர்கள் வித்தியாசமாய் செயல்படும்போதும்கூட, அவர்கள் இவ்வுலகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்கச் செய்கின்றது. (அன்பின் மகிழ்வு 92)

அருளாளர் தேவசகாயம் உட்பட ஏழு புதிய புனிதர்கள்

 Paganica ஏழை கிளாரிஸ்ட் துறவு சபையின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்


பல்வேறு துயர்கள் மத்தியிலும், இறைவன், மற்றும் உடன்பிறந்த அன்பின் துணையுடன் நாம் உயர்ந்தெழ முடியுமென்பதை காண்பித்த ஏழை கிளாரிஸ்ட் அருள்சகோதரிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

அருளாளர் தேவசகாயம் உட்பட, திருஅவையின் ஏழு அருளாளர்களை, புனிதர்களாக உயர்த்துவது, அதற்குரிய நாளை நிர்ணயிப்பது, ஆகியவை குறித்து விவாதிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 3ம் தேதியன்று, கர்தினால்கள் அவையை கூட்ட உள்ளதாக, ஏப்ரல் 26, இத்திங்களன்று, திருப்பீடம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மறைசாட்சியாக  கொல்லப்பட்ட அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட, 7 பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவது குறித்து கலந்துபேசும் கர்தினால்கள் அவை இடம்பெற உள்ளது.

இந்த ஏழு அருளாளர்களுள் தேவசகாயம் மட்டுமே பொதுநிலையினர், ஏனைய 6 பேரில், நால்வர் அருள்பணியாளர்கள், மற்றும், இருவர் பெண்துறவிகள்.

மேலும், ஏப்ரல் 26, இத்திங்களன்று, இத்தாலியின் L'Aquila மலைப்பகுதியில் வாழும்  Paganica ஏழை கிளாரிஸ்ட் துறவு சபையின் அங்கத்தினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவேண்டல் வழியாக, அவர்கள், தனக்கு உதவி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

தனக்காக இத்துறவு சபையினர் தொடர்ந்து இறைவேண்டல் செய்துவருவதையும், தான் தங்கியிருக்கும் இல்லத்திலுள்ள சாந்தா மார்த்தா சிற்றாலயத்திற்கு பாஸ்கா மெழுகுதிரியை கொடையாக வழங்கி, அக்கோவிலை அலங்கரித்ததையும் குறிப்பட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் காண வந்திருந்த அச்சகோதரிகள் ஒவ்வொருவரையும் தன் இதயத்திலிருந்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இத்தாலியின் L'Aquila பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால், Paganica துறவு இல்லம் சேதமாகியதையும் அவ்வில்லத் தலைவி, அருள்சகோதரி Gemma Antonucci அவர்கள், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்ததையும், அருள்சகோதரிகள் பலர் படுகாயமுற்றதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மண்ணுக்குள் மடியும் விதை, தளிர்விட்டு வளர்ந்து கனி தருவதுபோல், இத்துறவு இல்லமும் மீண்டு வந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இத்துறவு சபையினர் எண்ணற்றத் துயர்களை சந்தித்தாலும், வானகத் தந்தையின் அன்புடன் கூடிய அக்கறையையும், எண்ணற்ற மக்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் வாழ்வில் அனுபவித்து வருவதையும், ஏழை கிளாரிஸ்ட துறவு சபை சகோதரிகளிடம் சுட்டிக்காட்டினார்  திருத்தந்தை.

2009ம் ஆண்டின் நிலநடுக்கத்தின்போது, அந்த இரவில், இறைவனையும் உடன் பிறந்த அன்பையும் தவிர அனைத்தையும் இழந்த இத்துறவு சபை சகோதரிகள், துணிவுடன் எழுந்து வந்து, முதல் பத்து ஆண்டுகளை ஒரு தற்காலிக இடத்திலும், பின்னர் தங்களின் புதுப்பிக்கப்பட்ட துறவு இல்லத்திலும் வாழ்ந்து வருவது மட்டுமல்ல, 12 இளம்பெண்கள் இத்துறவு சபையின் அங்கத்தினர்களாக புகுந்து, இச்சபை துளிர்விட்டு வளர்ந்து வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு துயர்கள் மத்தியிலும், இறைவன், மற்றும் உடன்பிறந்த அன்பின் துணையுடன் நாம் உயர்ந்தெழ முடியுமென்பதை ஏழை கிளாரிஸ்ட அருள்சகோதரிகள் உலகிற்கு காண்பித்துள்ளனர் என தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எச்சூழலிலும் இறைவேண்டல் செய்வதில் மனம் தளராதீர்கள், என அத்துறவு சபை சகோதரிகளை நோக்கி அழைப்புவிடுத்த திருத்தந்தை, அசிசியின் புனித கிளாரா, மற்றும் புனித பிரான்சிஸ் ஆகியோரிடமிருந்து பெற்ற தனிவரங்களின் பலத்துடன் முன்னோக்கி நடக்குமாறு விண்ணப்பித்து, அவர்களுக்கு தன் ஆசீரையும் அளித்தார்.

அத்துடன், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாம் நமக்கு அடுத்திருப்பவருக்காக காத்திருக்காமல், அவர்களுக்கு நன்மை செய்வதிலும், அவர்களை மதிப்பதிலும், நாமே முதலில் முன்வருவோம், என எழுதியுள்ளார்.

Monday 19 April 2021

மரணத்திலிருந்து வாழ்வு தளிர்விடும் என்பதில் நம்பிக்கை

 மியான்மார் துறவியர்


மியான்மாரில் மக்களாட்சியை நிலைநிறுத்த, மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களைப் பார்க்கும்போது, இறைவனே நம் துணை என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்களாட்சிக்காக குரல் எழுப்பிவரும் மியான்மார் நாட்டு மக்கள், இறை இரக்கத்தில் தங்களை ஒப்படைத்துச் செயல்படுவதை காணமுடிகிறது என தெரிவித்துள்ளனர், அந்நாட்டு துறவியர்.

நாமனைவரும் கடவுளின் கைகளில் உள்ளோம், நம் நாடு இறைஇரக்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது, வருங்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் நாடு இருக்கும்போது, இறைவனே நம் பாறையாகச் செயல்படுகிறார் என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மியான்மார் நாட்டு பெண் துறவியர், மக்களாட்சியை நிலைநிறுத்த, மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களைப் பார்க்கும்போது, இறைவனே நம் துணை என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்படுகின்றது என அதில் தெரிவித்துள்ளனர்.

மரணத்திலிருந்து வாழ்வு முளைவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக, நம்பிக்கையை பல்வேறு செயல்பாடுகளுடன் இணைத்து முன்னோக்கி நடைபோடுவோம் என்று மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங்க் போ அவர்கள் விண்ணப்பித்துள்ளதுபோல், அடக்கி ஒடுக்கப்பட்டோரையும், அடக்குமுறை மேற்கொண்டுள்ளோரையும் இறைவன் குணப்படுத்த வேண்டுமென இறைவேண்டல் செய்வோம் என விண்ணப்பித்துள்ளனர் மியான்மார் பெண் துறவியர்.

அண்மையில் சிறப்பிக்கப்பட்ட புனித வெள்ளியை நினைவுகூர்ந்து கார்தினால் போ அவர்கள், சிலுவைப் பாதையின் 13ம் நிலையில் அன்னை மரியா தன் மகனின் மரணம் குறித்து வெளிப்படுத்திய சோகத்தைப்போல், இன்றைய மியான்மாரில் எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மரணம், மற்றும் வருங்காலம் குறித்து கவலையுடன் வாழ்ந்து வருவதையும் கவலையுடன் வெளியிட்டது குறித்தும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துத்துள்ளனர் அந்நாட்டு துறவியர்.

மியான்மார் நாட்டின் நெருக்கடி காலத்தில் துறவியர், அருள்பணியாளர்கள், கிறிஸ்தவ பொதுநிலையினர் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையின் ஆழமான சான்றுகள், கத்தோலிக்கத் திருஅவையின் இரக்கம் நிறைந்த முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்ற மியான்மார் துறவியர், இராணுவத்தினர் முன்பு துணிச்சலுடன் மண்டியிட்டு வேண்டிய அருள்சகோதரி Ann Rose Nu Tawng அவர்களின் சான்று, கத்தோலிக்கத் திருஅவையின் அர்ப்பணத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது என தெரிவித்துள்ளனர்

இருளின் காலத்தில் மன்னிப்பையும், பகைமைகளின் காலத்தில் அன்பையும் வெளிப்படுத்துமாறு புனித Faustina Kowalskaவுக்குத் தோன்றியபோதெல்லாம் வெளிப்படுத்திய இயேசுவைக் குறித்து கர்தினால் போ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்ட மியான்மார் துறவியர், சவால்கள் நிறைந்த இருளான இந்த வேளையில் இறைஇரக்கத்தை நோக்கி வேண்டுவோம் என்ற கர்தினால்களின் வார்த்தைகளுடன் தங்கள் செய்தியை நிறைவு செய்துள்ளனர். (Fides)

திருத்தந்தை பிரான்சிஸ் புறக்கணிக்கப்பட்டோரின் குரல்- ஐ.நா.

 திருத்தந்தை பிரான்சிஸ்  U.N பிலிப்போ கிராந்தி


பெருமளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான இடம், மற்றும், ஏனைய உதவிகள் வழங்கப்படவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துன்ப, துயர நேரங்களில், கடவுள் நம் மீது வைத்துள்ள அன்பில், ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 17, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“கடவுளின் அன்பு ஒன்றே, நம் வாழ்வை மாற்றவல்லது, ஆழமான காயங்களைக் குணமாக்கவல்லது, மற்றும், ஏமாற்றம், கோபம், தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் புகார் ஆகியவற்றினின்று நமக்கு விடுதலையளிக்கவல்லது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பிலிப்போ கிராந்தி (UNHCR)

மேலும், சமுதாயத்தின் விளிம்புநிலைக்கு அதிகம் தள்ளப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்வோர், குடிபெயர்ந்தோர் போன்ற மக்களின் குரலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருக்கிறார் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

UNHCR எனப்படும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி (Filippo Grandi) அவர்கள், ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசியபின், உலகஅளவில் இடம்பெறும் புலம்பெயர்வு விவகாரம் குறித்து, திருத்தந்தை, ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலக அளவில் காட்டப்படும் தோழமை, மற்றும், பராமரிப்பு பற்றி, திருத்தந்தையும், தானும் கலந்துரையாடியதாக, செய்தியாளர்களிடம்  தெரிவித்த கிராந்தி அவர்கள், UNHCR அமைப்பு, புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோருக்கு உதவுவதில், திருப்பீடத்தோடு கொண்டுள்ள ஒத்துழைப்பை ஊக்குவிக்க விரும்புவதாகக் கூறினார்.

பெருமளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடுகள், அவர்களை சமுதாயத்தோடு ஒருங்கிணைத்து, அவர்களுக்கு பாதுகாப்பான இடம், மற்றும், ஏனைய உதவிகளை வழங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்கு, நல்ல பதில்கள் கிடைத்து வருகின்றன என்றும், கிராந்தி அவர்கள் கூறினார்.

பிரேசில் நாடு விவரிக்க முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறது

 பிரேசிலில் கோவிட்-19ஆல் இறந்தவர்கள் கல்லறை


கிறிஸ்துவில் நாம் வைத்துள்ள நம்பிக்கை, இந்த துயரம்நிறைந்த காலத்தைக் கடக்கமுடியும் என்பதை நமக்குக் காட்டுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் பலரின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாடு ஒப்புரவு பெறவும், ஆறுதல் அடையவும், ஆயர்கள் உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

ஏப்ரல் 12, இத்திங்களன்று, தன் 58வது பொதுப் பேரவையை இணையம் வழியாக துவக்கிய பிரேசில் ஆயர் பேரவைக்கு, ஏப்ரல் 15, இவ்வியாழன் மாலையில், காணொளிச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, பிரேசில் நாடு, தன் வரலாற்றில், மிகவும் இன்னல்நிறைந்த சோதனைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

பிரேசில் ஆயர்கள் வழியாக, அந்நாட்டினர் அனைவருக்கும் இச்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 பெருந்தொற்றில் தங்கள் அன்புறவுகளை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, தன் அருகாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

விவரிக்க முடியாத துன்பங்கள்

பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்ப சோதனைகள், இளையோர், வயது முதிர்ந்தோர், தந்தையர், அன்னையர், நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், திருஅவைப் பணியாளர்கள், செல்வந்தர், வறியோர் என, எவரையும் பாதிக்காமல் விட்டுவைக்கவில்லை என்று, திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.

Johns Hopkins பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பிரேசிலில், 1 கோடியே 36 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 3,61,000க்கு அதிகமான மக்கள், இப்பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இப்பெருந்தொற்ரால் உயிரிழந்த ஆயர்களை, குறிப்பாக நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இறந்த அனைவரின் ஆன்மாக்கள் நிறையமைதியடைய, தான் செபிப்பதாகவும், தங்களின் அன்புறவுகளை இழந்து துயரங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆறுதலைத் தெரிவிப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் அன்புறவுகளின் கடைசி நேரத்தில்கூட பார்க்க இயலாமல் இருந்துள்ளது, உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் உறவுகளுக்கும் மிகப்பெரும் துன்பங்கள் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை

கிறிஸ்துவில் நாம் வைத்துள்ள நம்பிக்கை, இந்த துயரம்நிறைந்த காலத்தைக் கடக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுகின்றது என்றும், அனைவரும் ஒன்றித்திருந்தால் மட்டுமே, பெருந்தொற்றையும், அதன் எதிர்விளைவுகளையும் நம்மால் முறியடிக்க முடியும் என்றும், பிரேசில் ஆயர் பேரவை, இந்நேரத்தில் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார. 

2013ம் ஆண்டில், பிரேசிலுக்கு தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஆயர்கள், பிரிவினைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒப்புரவை ஊக்குவிப்பதே, அவர்களின் மறைப்பணி என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நம்முன் உள்ள சவால் பெரியது, ஆயினும், ஆண்டவர் நம் அனைவரோடும் நடக்கிறார் என்றும், இயேசுவில் நம் அடித்தளத்தையும், சக்தியையும், ஒன்றிப்பையும் காண்கிறோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் மக்கள் அனைவருக்கும் தன் ஆசீரை அளித்துள்ளார்.

பிரேசில் ஆயர் பேரவையின் இணையவழி 58வது பொதுப் பேரவை, ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது. 

800க்கும் மேற்பட்ட பிறரன்பு அமைப்புக்களுக்கு புரவலர்

 அடக்கச் சடங்கிற்கு முன்னான இராணுவ ஊர்வலம்


கிரேக்க நாட்டில் பிறந்த பிரபு பிலிப்பு மவுண்ட்பேட்டன் அவர்கள், தான் குடிபுகுந்த இங்கிலாந்திற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

Edinburgh பிரபுவும், இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் கணவருமான பிலிப்பு அவர்கள் மரணமடைந்தது, நம் வரலாற்றில் ஒரு பெரிய இழப்பைக் குறிப்பிடுவதாக உள்ளது என, ஏப்ரல் 17, இச்சனிக்கிழமை காலைத் திருப்பலியில் குறிப்பிட்டார், பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

இம்மாதம் 9ம் தேதி இறைபதம் சேர்ந்த எடின்பர்க் பிரபுவின் உடல், இச்சனிக்கிழமையன்று அடக்கம் செய்யப்படுவதையொட்டி உரோம் நகரிலுள்ள அனைத்துப் புனிதர்கள் கோவிலில் இரங்கல் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் காலகர் அவர்கள், ஏறத்தாழ எழுபது ஆண்டுகள், இங்கிலாந்து அரசியுடன் இணைந்து எடின்பர்க் பிரபு, உதவியுள்ளதை எடுத்துரைத்தார்.

பிரித்தானிய இராணுவப் பணிகளுக்கு மிகுந்த ஆதரவை அளித்து வந்த பிரபு பிலிப்பு அவர்கள், 800க்கும் மேற்பட்ட பிறரன்பு அமைப்புக்களுக்கு புரவலராக இருந்துவருகிறார் என்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார் பேராயர் காலகர்.

கிரேக்க நாட்டில் பிறந்த பிரபு பிலிப்பு மவுண்ட்பேட்டன் அவர்கள், தான் குடிபுகுந்த இங்கிலாந்திற்காக தன்னால் முயன்ற அனைத்தையும் ஆற்றியுள்ளார் என்ற திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் காலகர் அவர்கள், இளையோரின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் வழியாக பிரபு பிலிப்பு அவர்கள் பங்காற்றியுள்ளார் என தெரிவித்தார்.

இங்கிலாந்து அரசியுடன் 73 ஆண்டு திருமணம், மற்றும் அரசியின் 69 ஆண்டு காலஆட்சி ஆகியவை வழியாக, இங்கிலாந்து நாட்டிற்கு பிரபு பிலிப்பு ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் குறிப்பிடும்படியானது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், கடற்படைத்தலைவராகவும், கணவராகவும், குடும்பத் தலைவராகவும், பிரபு பிலிப்பு அவர்கள் ஆற்றியுள்ள பணிகள், பசுமைக் காட்டில் புதிய மரங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துபவைகளாக உள்ளன என மேலும் எடுத்துரைத்தார். 

திருப்பீடம், ஐ.நா. தோழமையுணர்வுக்கு அழைப்பு

 கர்தினால் Guixot, நீதிபதி Muhammad Abd al-Salam இருவரும், ஐ.நா.பொதுச்செயலரிடம் அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலை வழங்குகின்றனர்.


கலந்துரையாடல் நடத்தும் கலையை அறிந்திருப்பது, சமுதாய நட்புணர்வைக் கட்டி எழுப்புவதற்கு உதவும் - கர்தினால் Guixot

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கலந்துரையாடல் நடத்துவது எவ்வாறு என்பதன் கலையை அறிந்திருப்பது, உலகின் தேவைகளுக்குத் திறந்தமனதாய் இருப்பதற்கும், சமுதாய நட்புணர்வைக் கட்டி எழுப்புவதற்கும் ஒரே வழி என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், பன்னாட்டு இணையவழி மெய்நிகர் கூட்டம் ஒன்றில் கூறினார். 

"உடன்பிறந்த நிலை, பன்முகத்தன்மை, மற்றும் அமைதி: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடலின் விளக்கம்" என்ற தலைப்பில், ஏப்ரல் 15, இவ்வியாழனன்று, ஜெனீவாவில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Guixot அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள் ஏற்பாடு செய்த இந்த மெய்நிகர் கூட்டத்தில், கர்தினால் Guixot அவர்கள், "உடன்பிறந்த நிலை, பல்சமய உரையாடல், மற்றும், சமுதாய நீதி" என்ற தலைப்பில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கலவரங்கள், மற்றும், ஆயுத மோதல்கள் ஆகியவை, தலைப்புச் செய்திகளாக வெளிவரும் வேளையில், உறுதியோடும், துணிவோடும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள், தலைப்புச் செய்திகளாக வருவதில்லை என்றும், அதேநேரம், அத்தகைய கலந்துரையாடல்கள், மேம்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு உலகிற்கு உதவும் என்றும், 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடல் கூறுகிறது என்றுரைத்த கர்தினால் Guixot அவர்கள், மதங்களுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு,  உலகின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாக் காலங்களிலும், மனிதர், தங்களின் உரிமைகளோடு வாழ்வதற்கு உதவமுடியும், மற்றும் உதவவேண்டும் என்றும் கூறினார்.

நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இந்த உலகின் குடிமக்களாக, சம உரிமைகளையும், கடமைகளையும் கொண்டிருக்கிறோம் என்று கூறி, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், தன் உரையை நிறைவுசெய்தார்.

மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய, அந்நகரிலுள்ள ஐ.நா. நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Tatiana Valovaya அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலையின் முதல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, கோவிட்-19 பெருந்தொற்று முடிவுற்றபின் உலகினர் ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, உலக தொழில் நிறுவனத் தலைமை இயக்குனர், Guy Ryder அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம், நன்னெறி கோட்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார், ஆனால் அவ்வழைப்பு, பலநேரங்களில்  புறக்கணிக்கப்படுகின்றது என்று கூறினார்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், நம்பிக்கையின் சாட்சிகள்

 நேபாளத்தில் முஸ்லிம்கள் செபம்


கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும், நம்பிக்கையின் பாதைகளில் தொடர்ந்து முன்னேற, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவர்களாக வாழ அழைப்பு – பல்சமய உரையாடல் திருப்பீட அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்,  உலகில் நம்பிக்கையின் சாட்சிகளாக வாழுமாறு, பல்சமய உரையாடல் திருப்பீட அவை, இரமதான் நோன்பு மாதம், மற்றும், ‘Id al-Fitr’ விழாவுக்கென்று வெளியிட்ட செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 13, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள இரமதான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, உலகின் முஸ்லிம்கள் அனைவருக்கும், ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று, “கிறிஸ்தவர்கள், மற்றும், முஸ்லிம்கள்: நம்பிக்கையின் சாட்சிகள்” என்ற தலைப்பில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பல்சமய உரையாடல் திருப்பீட அவை, முஸ்லிம்களுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று போன்ற சூழல்களில், நாம் கடவுளின் இரக்கம், மன்னிப்பு, பராமரிப்பு போன்றவற்றோடு, ஆன்மீக, மற்றும், பொருளாதாரக் கொடைகளையும் அவரிடம் இறைஞ்சுகிறோம், ஆயினும், இந்தக் காலக்கட்டத்தில், நமக்கு நம்பிக்கை அதிகம் தேவைப்படுகின்றது என்று, அச்செய்தி கூறியுள்ளது.

நம்பிக்கை என்பது, நேர்மறை எண்ணத்தை உள்ளடக்கியது என்பதை நாம் அறிந்திருந்தாலும், நேர்மறை எண்ணம் என்பது, மனிதக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையது, ஆனால், நம்பிக்கை என்பது, கடவுள் நம்மை அன்பு கூர்கிறார், அவரது பராமரிப்பால் நம்மைக் காத்து வருகிறார் என்ற, மத உணர்வை அடிப்படையாகக்கொண்டது என்று, அச்செய்தி கூறியுள்ளது.

மனிதரில் நன்மைத்தனம்

நாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில், கடவுள் நம்மைப் பராமரித்து காத்துவருகிறார் என்றுரைக்கும் அச்செய்தி, நம் பிரச்சனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை ஏற்பதிலிருந்து பிறப்பது, நம்பிக்கை என்றும், இது, எல்லா மனிதரிலும் நன்மைத்தனம் பிரசன்னமாக இருக்கின்றது என்பதை ஏற்கச் செய்கின்றது என்றும் கூறியுள்ளது.

மனித உடன்பிறந்தநிலை

மனித உடன்பிறந்த உணர்வு, தன் அனைத்து பரிமாணங்களுடன், அனைவருக்கும்  நம்பிக்கையின் ஊற்றாக உள்ளது என்றும், இந்த உணர்வு, பேரிடர் காலங்களில், விரைவாகவும், தாராளம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வோடும் நம் உடன்வாழ்வோரைச் செயல்படவைக்கின்றது என்றும், இவர்களில் வெளிப்படும் இந்த நன்மைத்தனம், உடன்பிறந்த உணர்வு, உலகளாவியப் பண்பாகும் என்பதை, நம்பிக்கையாளர்களாகிய நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், அச்செய்தி கூறியுள்ளது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாப்பதும், அதன்மீது அக்கறை காட்டுவதும் அதிகரித்துவருவது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துப்படி, நம்பிக்கையின் மற்றுமோர் அடையாளம் என்றுரைக்கும் அச்செய்தி, நம்பிக்கையின் எதிரிகளையும் குறிப்பிட்டுள்ளது.

கடவுளின் அன்பு, அவரது பராமரிப்பு போன்றவற்றில் சந்தேகம், மனச்சோர்வு, நம் உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை இழப்பு போன்ற, நம்பிக்கைக்கு எதிரான பகைவர்களைக் குறிப்பிட்டுள்ள அச்செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தன் திருமடலில், திருத்தந்தை பல இடங்களில் நம்பிக்கை பற்றி பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுமாகிய நாம், நம்பிக்கையின் பாதைகளில் தொடர்ந்து முன்னேறுவோம், நம்பிக்கையின் சான்றுகளாக, அதனைக் கட்டியெழுப்புவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம் என்ற அழைப்புடன், பல்சமய உரையாடல் திருப்பீட அவை அச்செய்தியை நிறைவுசெய்துள்ளது.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், இச்செய்தியில் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளார். இந்த இரமதான் நோன்பு மாதம், வருகிற மே மாதம் 12ம் தேதியன்று நிறைவடையும்.

Friday 16 April 2021

Cardinal Parolin: Multilateralism, fraternity needed on path toward better society

 Cardinal Pietro Parolin, Vatican Secretary of State


The Vatican Secretary of State, Cardinal Pietro Parolin, highlights key elements central to ongoing efforts toward achieving a fraternal society envisioned by Pope Francis in his Encyclical "Fratelli tutti." He reflects on the themes of healthcare, refugees, work, international humanitarian law and disarmament during a high-level online meeting held on Thursday, themed: "Fraternity, Multilateralism and Peace."

By Fr. Benedict Mayaki, SJ

Cardinal Pietro Parolin gave a discourse on Thursday, focusing on important themes in Pope Francis’s latest Encyclical, Fratelli tutti, in order to reflect on the impact that the crisis generated by the outbreak of the Covid-19 pandemic is having on the international community and the entire human family.

The high-level online event on “Fraternity, Multilateralism and Peace” was divided into two panels. The first, dedicated to the importance of multilateralism, saw Cardinal Parolin and UN officials reflect on this important theme. The second panel, opened by a discourse from the President of the Pontifical Council for Interreligious Dialogue, Cardinal Miguel Ayuso Guixot, analyzed how interreligious dialogue can contribute to promoting a culture of social justice, dialogue and peace on the path toward human fraternity.

The virtual meeting was organized by the Permanent Mission of the Holy See to the United Nations and promoted by the Mission of the Order of Malta to the UN in Geneva, with the collaboration of the International Catholic Migration Commission, the Forum of Catholic NGOs, the Caritas in Veritate Foundation, as well as the Pontifical Lateran University.

Fraternity at center of Holy See’s diplomatic actions

In his discourse, Cardinal Parolin highlighted that to fully understand the concept of fraternity and its place in the Holy See’s multilateral diplomatic action, it is important to recall that fraternity was the first theme Pope Francis referred to on the day of his election as Pope, eight years ago. On that day in fact, Pope Francis said: “Let us always pray for one another. Let us pray for the whole world, that there may be a great spirit of fraternity.”

“All the subsequent actions and activities of the Pontificate have been a natural and coherent consequence of a path oriented towards it,” Cardinal Parolin said.

Re-echoing Pope Francis’ 2017 message to the President of the Pontifical Academy of Social Sciences, Cardinal Parolin noted that “while solidarity is the principle of social planning that allows the unequal to become equal; fraternity is what allows the equal to be different people. Fraternity allows people who are equal in their essence, dignity, freedom, and their fundamental rights to participate differently in the common good according to their abilities, their life plan, their vocation, their work, or their charism of service.”

In the same regard, continued the Cardinal, fraternity, when applied to multilateral action, translates into “the courage and generosity to freely establish certain common goals and to ensure their fulfilment of certain essential norms throughout the world” while maintaining faith with legitimately manifested will and resolving disputes through means offered by diplomacy, to achieve “a truly universal common good and the protection of weaker states.”

Therefore, in the present time – one year after the start of the pandemic - fraternity is important to help overcome the current dichotomy between the “code of efficiency” and the “code of solidarity”, as it pushes the world towards “an even more demanding and inclusive code,” Cardinal Parolin stressed.

Equal access to healthcare

In line with efforts towards achieving fraternity, Cardinal Parolin went on to propose some reflections on access to healthcare, refugees, work, international humanitarian law and disarmament.

As regards healthcare, the Vatican Secretary of State highlighted the “indissoluble bond” experienced around the world in the past year due to the pandemic, which has aroused the awareness that we are in the same boat and that the suffering of one affects all. He however lamented that this bond has given way to a race for vaccines and treatments at national levels, further making evident the gap in access to healthcare between developed countries and the rest of the world.

On this issue, Cardinal Parolin noted that the Holy See has issued a set of guidelines, inspired by a conviction of the importance of fraternity. Also from this perspective, the Cardinal emphasized that “the international community has an obligation to ensure that any Covid-19 vaccine and treatment is safe, available, accessible and affordable to all who need it.”

Care for refugees

“Attention to the neediest and those in vulnerable situations, especially refugees, migrants and internally displaced persons, is not only a testimony of fraternity, but a recognition of a concern for the real needs of our sisters and brothers,” the Vatican Secretary of State affirmed.

Recalling Pope Francis’ incessant appeals to leaders and international organizations for a globalization of solidarity capable of supplanting indifference, he bemoaned the suffering of refugees which continues to be a “wound in the social fabric of the international community” even in the year that marks the 70th anniversary of the establishment of the United Nations High Commissioner for Refugees (UNHCR).               

The Cardinal went on to reaffirm the Holy See’s support for the underlying vision of the Global Compact on Refugees which seeks to strengthen international cooperation through equitable sharing of responsibility for a sustainable solution to refugee situations.

Workers, hard-hit by pandemic

Another group significantly impacted by global pandemic containment strategies is workers, including informal workers, small business owners and traders, “who have seen an erosion of their savings and have often faced systematic barriers to accessing basic health care,” Cardinal Parolin pointed out.

To respond to this, he proposed that the traditional format of social dialogue be expanded to include the involvement of workers’ and employers’ organizations, complemented by actors in the informal economy, as well as a consideration for environmental protection.

Citing Fratelli tutti, the Cardinal insisted that we need to think about “social, political and economic participation that can include popular movements and invigorate local, national and international governing structures with that torrent of moral energy that springs from including the excluded in the building of a common destiny.”

Need to strengthen international humanitarian law

Cardinal Parolin went on to re-emphasize the importance of strengthening and promoting a respect for humanitarian law, stressing that it aims to safeguard the essential principles of humanity, protect civilians and ban the use of certain weapons in the context of war, which itself, is inhuman and dehumanizing.

He recalled that Henry Durant, the founder of the Red Cross, was inspired by a sense of fraternity when he convinced local populations and volunteers to provide aid to parties in conflict regardless of their affiliation. He added that in the same vein, the Geneva Conventions of 1949 represent an implicit recognition of the bond of fraternity that unites peoples, as well an acknowledgement of the need to set limits in conflicts.

In this regard, the Cardinal reiterated the Holy See’s hopes that States will achieve further development in humanitarian law “in order to take proper account of the characteristics of contemporary armed conflicts and the physical, moral and spiritual suffering that goes with them, with the aim of eliminating conflicts altogether.”

Disarmament

“The desire for peace, security and stability is in fact one of the deepest desires of the human heart, since it is rooted in the Creator, who makes all peoples members of the human family,” Cardinal Parolin said.

This aspiration, he insisted, cannot be satisfied by military means alone, and even less by the possession of nuclear weapons and weapons of mass destruction.

He further noted that “it is not rhetorical to say that war is the antithesis of fraternity as “conflicts always cause suffering” – in those who experience them, but also in those who fight in them.

Despite some encouraging signs, including the re-entry into force of the Treaty on the Prohibition of Nuclear Weapons, Cardinal Parolin laments the huge amounts allocated to armaments, pointing out that the disproportion between the material resources and human talents dedicated to the service of death and the resources dedicated to the service of life is a cause for scandal.

The Cardinal therefore seized the opportunity presented by the online event to reiterate the Holy See’s encouragement for efforts by States in the field of disarmament and arms control towards lasting peace and nuclear disarmament.

Concluding his discourse, the Vatican Secretary of State noted that it is not enough to proclaim commitment or encourage efforts in response to these great challenges, rather we are invited to respond concretely through individual responsibility and the capacity to share in a reciprocity of relationships through a spirit of fraternity that will help to overcome isolation. He added that that Pope Francis’ calls demand a presence and conduct that “responds to the actuality of relations between states and between peoples, especially when attitudes that abandon the vision of the common good seem to prevail.”

Vatican Hospital makes important breakthrough in cancer research

 On the left a healthy cell in duplication phase. On the right a defective cell, lacking the protein Amber1, during duplication: the errors accumulated on the DNA induce the production of a thin strand of chromosomes (in bright green) that keeps the two daughter cells connected, preventing a proper distribution of genetic material.


Research conducted by the Holy See’s Pediatric Hospital, Bambino Gesù, in collaboration with the University of Rome "Tor Vergata" and other European and U.S. research centres, sheds light on the cycle of cell division. The relationship between the proteins Ambra1 and Cyclin D has been identified: an imbalance can cause the process leading to a tumour. Below is a working translation of a joint press release by Bambino Gesù Hospital and the University of Rome "Tor Vergata".

By Vatican News staff writer

This new discovery opens the way to therapies that block the defense system of diseased cells. After decades of research and many hypotheses, it closes the circle on the mechanisms of the cell cycle, the process through which cells, including cancer cells, mature and proliferate. Researchers at the Bambino Gesù Children's Hospital and the University of Rome "Tor Vergata", in collaboration with other European and U.S. research centres, have discovered the missing piece: what regulates the life of Cyclin D, an essential molecule in cell division.

The switch that turns the activity of Cyclin D on and off  is a protein called Amber1: when it does not work it triggers a process that leads to the rapid formation of many types of cancer. The discovery opens the way to specific therapies that inhibit the defense system of the diseased cells up to their self-destruction. The results of the study supported by AIRC, have just been published in the scientce magazine Nature.

The cell cycle

The cell cycle consists of a series of events concatenated and finely regulated that lead to the division of cells, a vital process through which the cells of the entire organism are formed from a fertilised ovum, as well as the process by which the cells of the skin, blood and organs are renewed. This cycle is regulated by the cyclins, a group of proteins classified with the letters A, B, C, D, and so on. Each does a piece of the work of cell division and are produced and destroyed in a precise alternation, until the birth of daughter cells.

The mechanism of regulation of these molecules was already almost completely known, except - until now - for Cyclin D. With the study coordinated by Bambino Gesù, the entire pathway has finally been defined.

Tumours: The "errors" of the cell cycle

During the process of division, the genes responsible for controlling the cell cycle can be subject to mutations from which many types of tumours originate. These abnormalities generally develop during the replication of the genetic heritage (DNA) to be transferred to the daughter cells: if the mechanism is jammed, any errors accumulated in this crucial phase become the cause of mutations, tumours and cell death.

The study

The study that led to the discovery of the correlation between the proteins Ambra1 and Cyclin D was carried out by the researchers of the Bambino Gesù Hospital - led by Professor Francesco Cecconi of the Research Area of Oncohaematology, directed by Professor Franco Locatelli - along with the research team of the University of Rome "Tor Vergata" and has benefited from the collaboration of the Danish Cancer Society Research Centre and other European and U.S. centres.

The research has been conducted on hundreds of samples (animal models, cells produced in the laboratory, cells derived from both animal and human tumours) with a combination of advanced techniques (imaging, microscopy, fluorescence, genetic engineering, biochemistry, histology), starting from the intuition of a possible role of Ambra1 - a molecule discovered in 2007 by Professor Cecconi's team - in some defects of the cell cycle.

During the investigations, the researchers have in fact noticed that in case of an absence of or low amount of Amber1, Cyclin D is not destroyed as it should be and, therefore, accumulates. Due to this accumulation, cells begin to divide at an uncontrolled rate, DNA is damaged and the formation of tumour masses is triggered. The imbalance of levels of the two proteins has been found in many types of cancer including lung adenocarcinoma, sarcoma and glioblastoma.

Therapeutic perspectives

The Bambino Gesù study describes the testing of a therapy for tumors based on the imbalance of Amber1 and Cyclin D. As there are no drugs available to date that can act directly on the two proteins to restore the right amount, researchers have identified an alternative solution that exploits one of the weak points of cancer cells: the repair system.

The great speed with which cancer cells divide generates a series of errors in their DNA that are gradually corrected by a system of enzymes (present in all cells of the human body) that allows them to survive and proliferate. However, if the repair process is inhibited, the diseased cells accumulate so many defects that they self-destruct.

The therapy (a mix of specific drugs called "repair system inhibitors") has been successfully tested on cellular and animal models: the tumour regressed and survival increased. The research, therefore, suggests that this treatment strategy, already used for the treatment of some types of human tumors, may also be applied to patients with the combination Amber1 - Cyclin D altered.

"The idea is that patients diagnosed with cancer will also be examined for levels of Ambra1 and Cyclin D," says Francesco Cecconi, professor of Developmental Biology at the University of Rome "Tor Vergata" and a researcher at Bambino Gesù. "If the absence or low levels of Ambra1 in association with an accumulation of Cyclin D is detected in tumour cells, we could try to suppress the ability of tumour cells to repair the genetic material with specific drugs that are already used in therapy. If we could thus limit their repair, we could aim to kill cancer cells by exploiting their Achilles heel, namely that same genomic instability that induced them to proliferate."

"Our data also extends to the processes of cell proliferation in the developing nervous system and this new level of regulation could represent a new frontier in the molecular oncology of brain tumors in children," adds Dr. Giacomo Milletti, research biologist at Bambino Gesù, PhD student at the University of Rome "Tor Vergata" and first co-author of the study.

3 studies in Nature

The results of the research of the Bambino Gesù and the University of Rome "Tor Vergata" are further confirmed by two other international studies, conducted in the United States of America - in New York and San Francisco - which, from different starting points, reach the same conclusion: Ambra1 controls Cyclin D. For the high scientific value of the discovery, the three studies have been published in sequence in the same issue of Nature.

யூத தொழுகைக்கூடத்திற்குச் சென்ற முதல் திருத்தந்தை

 உரோம் தொழுகைக்கூடத்தின் தலைமைக்குரு, ரபி எலியோ தொஆப், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களை வரவேற்றபோது...


2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 2016ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரிலுள்ள யூத தொழுகைக்கூடத்திற்கு சென்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

35 ஆண்டுகளுக்கு முன், 1986ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, கிறிஸ்தவ-யூத உறவுகள் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும்வண்ணம், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், உரோம் நகரில் உள்ள யூத தொழுகைக்கூடத்திற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயர் பெற்றார்.

பழமைவாய்ந்த உரோம் தொழுகைக்கூடம்

மேற்கத்திய நாடுகளில் துவக்கப்பட்ட முதல் யூத குழுமங்களில் ஒன்றான உரோம் யூத குழுமத்தின் அடையாளமாக விளங்கும் உரோம் தொழுகைக்கூடத்திற்கு திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் சென்ற வேளையில், அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான யூதர்களும், உலகின் பல்வேறு ஊடகப் பிரதிநிதிகளும் காத்திருந்தனர்.

இத்தொழுகைக்கூடத்தின் தலைமைக்குருவாக பணியாற்றிய ரபி எலியோ தொஆப் (Elio Toaff) அவர்கள், தொழுகைக்கூட வாசலில் திருத்தந்தையை அரவணைத்து அழைத்துச் சென்றார்.

தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற வழிபாட்டில், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், ரபி எலியோ தொஆப் அவர்களும், திருப்பாடல்கள் நூலிலிருந்து ஒரு சில பகுதிகளை மாறி, மாறி வாசித்தனர்.

யூதர்கள், கிறிஸ்தவர்களின் மூத்த உடன்பிறப்புகள்

"யூத மதம், கிறிஸ்தவ மதத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது. யூத மதத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் மூத்த உடன்பிறப்புகள். வேறு எந்த மதத்தினரையும் எங்களால் இவ்வாறு அழைக்கமுடியாது" என்று, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் இந்த வழிபாட்டில் கூறினார்.

“யூதர்களுக்கு எதிராக எழுந்த அனைத்து வெறுப்பையும், வன்முறைகளையும் கத்தோலிக்கத் திருஅவை, இன்று என் வழியே, வன்மையாகக் கண்டனம் செய்கிறது” என்று கூறிய திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், 1979ம் ஆண்டு தான் Auschwitz வதைமுகாமுக்குச் சென்ற வேதனையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

உரோம் நகரில் வாழ்ந்த 2,091 யூதர்கள், நாத்சி படைவீரர்களால், வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என்பதையும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 2016ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரிலுள்ள யூத தொழுகைக்கூடத்திற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கன.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுத்துதவும் திட்டம்

ஏழை நாடுகளுடன் தடுப்பூசி பகிர்தல்

பெருந்தொற்றால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, உலகின் ஏழைகளுக்கு உதவும் கொரிய ஆயர்களின் திட்டங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுத்து உதவும் திட்டத்திற்கென வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கு, தென் கொரிய மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கவேண்டும் என  விண்ணப்பித்துள்ளது, Seoul  உயர்மறைமாவட்டம்.

கொரியாவின் முதல் கத்தோலிக்க அருள்பணியாளர் புனித Andrew Kim Tae-gon அவர்களின் 200வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும்வண்ணம், கொரியாவில் கொண்டாடப்படும் யூபிலி ஆண்டின் இறுதி நாளான நவம்பர் 27ம் தேதிவரை இந்த நிதி திரட்டும் முயற்சி கொரியாவில் இடம்பெறும் என Seoul உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கப்பட்ட ‘ஊர்பி எத் ஓர்பி’ வாழ்த்துச் செய்தியின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு உலக நாடுகள் உறுதிப்பாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  விண்ணப்பித்ததை சுட்டிக்காட்டிய Seoul பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தை கொரிய ஆயர்கள் துவக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பெருந்தொற்றால் நெருக்கடியான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இச்சூழலை, உதவி செய்வதற்கு தகுந்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, ஏழை நாடுகளின் பங்குத்தளங்கள், நிறுவனங்கள், மற்றும் துறவு இல்லங்கள் வழியாக, உலகின் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை கொரிய ஆயர் பேரவைத் தீட்டியுள்ளதாகத் தெரிவித்தார், கர்தினால் Yeom Soo-jung.

ஏழை நாடுகளின் தடுப்பூசித் திட்டங்களுக்கென கொரிய மக்களின் நிதியுதவியைக் கேட்டு, பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது, கொரிய தலத்திருஅவை.

ROBERT JOHN KENNEDY: கருணையின் சக்தி - சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்

ROBERT JOHN KENNEDY: கருணையின் சக்தி - சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்:   எனக்கு வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே மற்றவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர எனக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடைகளாகக் கருதுகிறே...

கருணையின் சக்தி - சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்

 சமுதாய ஆர்வலர் சிந்துதாய் சப்கல்


எனக்கு வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே மற்றவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர எனக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடைகளாகக் கருதுகிறேன்- சிந்துதாய்

மேரி தெரேசா: வத்திக்கான்

“எப்போதெல்லாம் உன்னால் இயலுமோ அப்போதெல்லாம் கருணை காட்டு. ஆனால் இது எப்போதுமே இயலக்கூடியது. அன்பும், கருணையும் ஆடம்பரமானவை அல்ல, அவை அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது” என்பது 14வது தலாய் லாமா அவர்களின் பொன்மொழி. “அன்பும், கருணையும் ஒருபோதும் வீணாவதில்லை. ஏனெனில் அவையிரண்டுமே, அவற்றைப் பெறுபவரையும், கொடுப்பவரையும் ஆசீர்வதிக்கும்” (Barbara de Angelis). கருணை காட்டுங்கள், பரிவன்போடு நடந்துகொள்ளுங்கள் என்ற அழைப்புகளை, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிக அதிகமாகவே கேட்டுவருகிறோம். உலகில் கருணைநிறை வாழ்வுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் திகழ்பவர்களின் கடந்தகால வாழ்வுப் பாதை நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவர்களில் ஒருவர்தான், சிந்துதாய் சப்கல் (Sindhutai Sapkal). இந்திய குடிமகளாகிய இவர், அனாதைகளின் தாய், உலகை திரும்பிப் பார்க்க வைத்த தாய்.. என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவர், 273க்கு மேற்பட்ட, உள்நாட்டு மற்றும், பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்' என்று கேட்டால், உடனே அவர் தயங்காமல் சொல்வது ''1,500க்கு மேல்" என்று. உங்கள் குடும்பம்...?  என்று கேட்டால், ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் என ஆயிரத்திற்கும் மேலே இருக்கும். இவ்வாறு, மற்றொரு அன்னை தெரேசாவாக வாழ்ந்துவரும் சிந்துதாய் அவர்களின், முந்தைய வாழ்வைத் திரும்பிப் பார்த்தால், கல்லான மனதும் கரைந்துருகிவிடும்

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!

சிந்துதாய் சப்கல் அவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தின், வார்தா மாவட்டத்தில், பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) என்ற கிராமத்தில், 1948ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி,  ஆடுமாடுகள் மேய்க்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ‘சிந்தி’ என்றால், மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். சிந்துதாய், பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்தார் என்று, அவருக்கு, அந்தப் பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எழுதுபலகை வாங்கக்கூட வசதி இல்லாததால், பாரதி மரத்தின் (Bharadi Tree) இலைகளில், இவர் எழுதிப் படித்தார். நான்காம் வகுப்பு படித்து முடித்த சமயத்தில், அதாவது, இவருக்கு ஒன்பது வயதானபோது, ஸ்ரீஹரி ஹர்பாஜி எனும், முப்பது வயது நிரம்பிய, மாடுமேய்க்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். 19 வயதுக்குள் மூன்று ஆண் பிள்ளைகளுக்கு, இவர் தாயானார். பண்ணையார் ஒருவர், சிந்துதாய் வாழ்ந்த கிராமத்தில், மக்களை, குறிப்பாக, பெண்களை மிரட்டி அதிகமாக வேலை வாங்கியதோடு, வேலைக்குரிய கூலியையும் சரியாகக் கொடுக்காமல் இருந்தார். எனவே, சிந்துதாய், அந்த நபர் பற்றி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று, கிராம மக்களுக்கு சாதகமாக, தீர்ப்பும் பெற்றுக்கொடுத்தார். இதுதான், சிந்துதாய் அவர்களை, பெருந்துன்பங்கள் துரத்தக் காரணமாய் அமைந்தது. சிந்துதாயின் இந்தச் செயலால் கோபமடைந்த அந்த பண்ணையார், சிந்துதாய், தன்னோடும், பல ஆண்களோடும் தகாத உறவு வைத்துள்ளார், இப்போது அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்குக்கூட நான்தான் தந்தை என்று, அவரின் கணவரிடம் பொய்யான தகவலைச் சொன்னார். மேலும், நீ அவளைக் கொல்லாவிடில் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்றும், அந்த நபர் சிந்துதாயின் கணவரை மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த சிந்துதாயின் கணவர், அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துதாயின் வயிற்றிலே பலம்கொண்ட மட்டும் பலமுறை மிதித்து உதைத்து, நள்ளிரவில் மாட்டுத்தொழுவத்தில் அவரைத் தூக்கி வீசினார். சுயநினைவிழந்து கிடந்த சிந்துதாய், மாடுகள் மிதித்து இறந்துவிட்டார் என கிராமத்தினரை நம்ப வைப்பதற்காக அவ்வாறு அவர் செய்தார். சிந்துதாய்க்கு நினைவு திரும்பியபோது, தான் ஒரு பசுமாட்டின்கீழ் கிடந்ததை, அவர் கண்டார். அந்த பசு, அங்கிருந்த எருமை மாடுகளையும், காளைகளையும், சிந்துதாயின் அருகில் வரவிடவில்லை. அங்கு வந்த மனிதர்களையும், அந்த பசு தன் கொம்புகளால் சீறி விரட்டியது. சிந்துதாய், அந்தப் பசுவின் பாதுகாப்பிலே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அங்குக் கிடந்த ஒரு கருங்கல்லை எடுத்து தனது தொப்பிள்கொடியை இருபது துண்டுகளாக அறுத்து வீசினார். சிறிது சக்தி பெற்றவுடன் எழுந்து, அந்தப் பசுவைத் தடவி, முத்தம் கொடுத்து, நீ என்னைப் பாதுகாத்தது போல, தேவையில் இருக்கும் எல்லாருக்கும் நான் உதவுவேன் என்று உறுதி சொல்லி அங்கிருந்து வெளியேறினார் சிந்துதாய். பின்னர், அவர் தன் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு அவரது குடும்பமும் அவரை ஏற்க மறுத்துவிட்டது.  சொந்த ஊரிலிருந்து திரும்பிய சிந்துதாய், தெருவில் பிச்சையெடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றத் தொடங்கினார். ஆண்களுக்குப் பயந்து, இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கினார். பிணங்களுக்குப் போடப்படும் கோதுமை மணிகளை எடுத்து கழுவி, பிணங்கள் எரியும் நெருப்பில் சமைத்து உண்டார். இதனால் இவரை மக்கள், ஆவி என்றே அழைத்தனர். ஒருகட்டத்தில், தற்கொலைதான் ஒரே தீர்வு என நினைத்த சிந்துதாய், இரயில் தண்டவாளத்தில் தன் பச்சிளம்குழந்தையைக் கிடத்திவிட்டு, இரயில் வருவதற்காக, காத்திருந்தார். அச்சமயத்தில், வயதான ஒருவரின் அழுகுரல் அவருக்கு கேட்டது. ஏறத்தாழ மாற்றுத்திறனாளியாக இருந்த அந்த முதியவர், உணவு மற்றும், தண்ணீருக்காக ஏங்கினார். உடனே இரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து அந்த முதியவருக்கு உதவினார். அந்த முதியவரின் குரலை கடவுளின் குரலாக நினைத்தார் சிந்துதாய். தற்கொலை செய்துகொள்வதைவிட்டு, இந்த உலகிற்கு ஏதோ மேலான ஒன்றைச் செய்யுமாறு அந்தக் குரல் கூறுவதாக நினைத்தார். எனவே சிந்துதாய், அதே நாளில், ஒரு மரத்தடியில் கைக்குழந்தையோடு உட்கார்ந்துகொண்டு, எனக்கென யாரும் இல்லை, என்னிடம் எதுவுமே இல்லை, நான் எவ்வாறு மற்றவருக்கு உதவமுடியும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார்.

சிந்துதாயின் புதிய வாழ்வு

அந்நேரத்தில், சிந்துதாய் அவர்கள், அந்த மரத்தின் ஒரு கிளையை ஒருவர் ஓங்கி ஓங்கி வெட்டிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். அந்தக் கிளை சரிந்து, சிந்துதாய்க்கும், அவரது மகளுக்கும் நிழல் கொடுப்பதைப் பார்த்தார். இதுவே தனது கேள்விக்குப் பதில் என்பதையும் சிந்துதாய் உணர்ந்தார். தான் எவ்வளவுதூரம் அடித்து வதைக்கப்பட்டிருந்தாலும், மற்றவருக்கு ஏதாவது என்னால் செய்யமுடியும் என்று நினைத்தார் சிந்துதாய். உடனே அங்கிருந்து புறப்பட்டு, வீடற்று, கைவிடப்பட்டு, தெருவில் அலைந்த அனாதைச் சிறாரைத் தேடி, அவர்களுக்குத் தாயாக இருக்கத் தொடங்கினார். எப்படியோ நன்றாகப் பாடவும் கற்றுக்கொண்டு, பாடியே பிச்சையெடுத்து, அந்தச் சிறாரைக் காப்பாற்றினார். நாளடைவில் சிந்துதாயைக் கவனித்த மக்கள், அவருக்கென கருணை இல்லம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தனர். தற்போது அவரது கருணை இல்லத்தில் 1,500க்கும் மேற்பட்ட அனாதைச் சிறார் உள்ளனர். அவர்களை மருத்துவர்களாக, கல்வியாளர்களாக, வழக்கறிஞர்களாக, விவசாயிகளாக, அவர் உருவாக்கியுள்ளார். சிந்துதாய் அவர்களின் சமுதாயநலப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு 2021ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதும், அளிக்கப்பட்டுள்ளது.

சிந்துதாயின் முன்னாள் கணவர்

இதற்கிடையே, சிந்துதாயின் முன்னாள் கணவர், வீடின்றி தனித்துவிடப்பட்ட நிலையில் தனது எண்பதாவது வயதில் சிந்துதாயிடம் தஞ்சம் கேட்டுச் சென்றார். அவரை விரைவில் அடையாளம் கண்டுகொண்ட சிந்துதாய், அவரைத் தான் மன்னிப்பதாகவும், இப்போது மனைவியாக இல்லாமல், ஒரு தாயாக அவரை ஏற்பதாகவும் கூறியுள்ளார். அந்த கருணை இல்லத்திற்கு வருவோரிடம் அவரை, தன் மூத்த மகன் என்றே அறிமுகம் செய்து வைக்கிறார் சிந்துதாய். பசுமாட்டின் பாதுகாப்பில் பெற்றெடுத்த பெண் குழந்தையை, மற்றோரு அறக்கட்டளைக்குத் தத்து கொடுத்துள்ளார். அந்தக் குழந்தை இன்று, மருத்துவராக, மற்றொரு கருணை இல்லத்தை பராமரித்து வருகிறார். சிந்துதாய் அவர்கள், 84க்கும் மேற்பட்ட கிராமங்களின் புனர்வாழ்வுக்காகவும் போராடியுள்ளார்.

வேதனைகளை இறையாசீராக ஏற்ற துசிந்துதாய்

“துன்பமும், மன்னிப்பும், ஒருவரை எவ்வளவு சிறந்தவர்களாய், வலிமையானவர்களாய் மாற்றுகின்றன என்பதையும், எத்தனை இடர்கள் நேர்ந்தாலும், தன் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை வைப்பதன் பயனையும் உணர முடிகின்றது. வாழ்க்கையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற பேரார்வம் இருந்தால், அந்த உங்கள் இலட்சியத்திலிருந்து உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது”. இவ்வாறெல்லாம், சிந்துதாய் அவர்களிடமிருந்து சிறந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக, பலர் பதிவுசெய்துள்ளனர். “எனக்கு வாழ்வில் நிகழ்ந்த அனைத்துமே மற்றவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர எனக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் கொடைகளாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைப் பாதை, நிறைய முள்களாலானது. ஆனால் நான் அந்த முள்களை எனது நண்பர்களாக்கிக்கொண்டேன். அதனால் எனது வாழ்வும் அழகானதாக மாறியுள்ளது. அந்த அழகை நான் பலருக்கு அளிக்க முடியும்”.  சிந்துதாய் அவர்களை, புனே நகரில் சந்தித்தபோது, இவ்வாறு அவர் தன்னிடம் கூறியதாகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை, உங்களது வாழ்க்கையையும் மாற்றும் என்றும், Redhanath Swami அவர்கள், ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். பெருஞ்செல்வமின்றி செல்வாக்குப் பெற முடியும், கருணையின் சக்தி, பணபலம் செய்துகாட்டுவதைவிட மிக மிகப் பெரியது. பணம், அறிவு, திறமை போன்ற சக்திகள், கருணை என்ற பண்பை அடித்தளமாகக் கொண்டு அமைப்பவரின் வாழ்வு வளம்பெறுவது மட்டுமல்ல, உலகிலும் பெரியதொரு நல்தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இரக்கத்தின் கருவிகளாக நாம் வாழ்வதே, உலகில் உண்மையான நல்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே, ஒற்றை மனிதராகச் சாதித்துள்ள, சிந்துதாய் அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் எனவும், Redhanath Swami அவர்கள், கூறியுள்ளார். இறை இரக்க விழாவாகிய ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நாம் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ளோம், இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.