Thursday 30 September 2021

Episode 1: The Lost Port of Muziris

இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம் அனைவரையும் பாதுகாக்கும்

 


நம் பொதுவான இல்லத்தையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதுகாப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் என்றால், அவைகளுக்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாத்தல், மனித உரிமைகளை மதித்தல் உள்ளிட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஐரோப்பிய ஒன்றிய அவை  மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், ஐரோப்பாவை மட்டுமல்லாமல், உலகினர் அனைவரையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற அவை, "சூழலியலும் மனித உரிமைகளும்: பாதுகாப்பான, நலமான மற்றும், நீடித்த நிலையான சுற்றுச்சூழல்" என்ற தலைப்பில் நடத்தும் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 29, இப்புதனன்று, செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் திருப்பீடம் தன் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று, 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் தான் உறுதி கூறியதை, மீண்டும் இச்செய்தி வழியாக குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த  COP26 உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பொது அவையின் அடுத்த அமர்வுக்கு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த செயல்திட்டங்களை, காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இப்பூமிக்கோளத்தின் பாதுகாவலர்கள் என்ற கடமையுணர்வின்றி, அதன் முதலாளிகள் என்று, மனிதர் தங்களையே நினைக்கும்போதெல்லாம், அவர்கள், இந்த உலகோடு தங்களுக்குள்ள சரியான தொடர்பை ஏற்கமாட்டார்கள் என்றும், அவர்கள் வீணாக்கும் அனைத்திற்கும் நியாயம் சொல்வார்கள் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இயற்கையையும், மற்ற மனிதரையும் வெறும் பொருள்களாக நடத்தும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவர்கள் நியாயம் சொல்வார்கள் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, உண்பதற்காக வாழ்வதில்லை, மாறாக, வாழ்வதற்காக உண்ணுகிறோம் என்ற பழமையான கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கையை நாம் பாதுகாத்தால், அது நம் எல்லாரையும் பாதுகாக்கும் என்றும், மனிதர் தங்களின் வாழ்வுப் பாதையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும், தங்களோடும், மற்றவரோடும், சமுதாயத்தோடும், படைப்போடும், கடவுளோடும் உள்ள உறவு பற்றிய புதிய விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம் என்றும், திருத்தந்தை பரிந்துரைத்துள்ளார்.

நம் பொதுவான இல்லத்தையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் பாதுகாப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் என்றால், அவைகளுக்குரிய நடவடிவடிக்கைகளை நாளைவரைத் தள்ளிப்போடாது, நம்பிக்கை, துணிவு மற்றும், விருப்பார்வத்தோடு உடனடியாக திட்டவட்டமான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத்தொடர்புகள் 56வது உலக நாளின் மையக்கருத்து

 

சென்று பாருங்கள் என்று, 2021ம் ஆண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, 2022ம் ஆண்டு, 'செவிமடுப்பதை மீண்டும் கற்றுக்கொள்ள' என்பதை தன் மையக்கருத்தாகத் தெரிவுசெய்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 29, இப்புதனன்று, தலைமைத் தூதர்களும் புனிதர்களுமான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் ஆகியோரின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டர் பதிவை, இம்மூவரை மையப்படுத்தி வெளியிட்டார்.

"இறைவன் அருளின் தூதர்களாக விளங்கும் தலைமைத் தூதர்களான மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் ஆகியோரை திருஅவை இன்று நினைவுகூருகிறது. அவர்களிடம் நம்மையே கையளிப்போம். அதன் வழியே, நம் நற்செயல்களால் கடவுளின் அன்பு இவ்வுலகில் வெளிப்படட்டும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

நமது நம்பிக்கையின் பதிலிருப்பாக, இறைவன் மீதும், அயலவர் மீதும் நாம் கொண்டுள்ள அன்பு விளங்கட்டும் என்று, தன் புதன் மறைக்கல்வி உரையில், திருத்தந்தை கூறிய ஒரு கருத்து, அவரது இரண்டாவது டுவிட்டர் பதிவாக வெளியானது.

மேலும், செப்டம்பர் 29ம் தேதி, உணவை வீணாக்குவதைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மூன்றாவது டுவிட்டர் செய்தி இக்கருத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்டது.

"பட்டினி என்ற பயங்கரக் கொடுமைக்கு எதிராக போராடுவது எனில், வீணாக்குவதற்கு எதிராக போராடுவது என்றும் பொருள், உணவைத் தூக்கியெறிவது, மக்களைத் தூக்கியெறிவதற்கு சமம். நன்மைகளை உருவாக்கக்கூடிய உணவு, வீணடிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பது, பெரும் இடறலாக உள்ளது" என்ற உணர்வுப்பூர்வமான சொற்கள், திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் பதிவாக வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2022ம் ஆண்டுக்குரிய சமுகத்தொடர்புகள் 56வது உலக நாளின் மையக்கருத்தை, தலைமைத் தூதர்களின் திருநாளான செப்டம்பர் 29ம் தேதி இப்புதனன்று வெளியிட்டார்.

சென்று பாருங்கள் என்று, 2021ம் ஆண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, 2022ம் ஆண்டு, 'செவிமடுப்பதை மீண்டும் கற்றுக்கொள்ள' என்பதை தன் மையக்கருத்தாகத் தெரிவுசெய்துள்ளார்.

"நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்" (காண்க. லூக்கா 8:18) என்று இயேசு தன் சீடர்களிடம் கூறியதை பின்னணியாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைத்தொடர்புகளின் 56வது உலகநாளுக்குரிய கருத்தை தெரிவு செய்துள்ளார்.

Wednesday 29 September 2021

“உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” நூலுக்கு அணிந்துரை

 உடன்பிறந்த உணர்வு, நீதி, அமைதி, மற்றும், மாண்பு ஆகியவை, அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சமுதாயத்தில், இறையாட்சி வெளிப்படுத்தப்படுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உடன்பிறந்த உணர்வும், திருஅவையின் சமுதாயக் கோட்பாடும், மனித சமுதாயத்தின் மீது கடவுள் வைத்துள்ள அன்பில் வேரூன்றியுள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களும், அருள்பணி Christian Barone அவர்களும் இணைந்து, “உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” என்ற தலைப்பில், எழுதிய நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு மற்றும், சமுதாய நட்புறவு குறித்த, “Fratelli tutti” அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் எனப்படும், தனது திருமடலை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வும், திருஅவையின் சமுதாயப் போதனைகளும், இறையியலுக்கு அப்பாற்பட்டவை அல்ல, மாறாக, அவை, மனித சமுதாயத்தின் மீது கடவுள் வைத்துள்ள ஆழமான அன்பில் வேரூன்றியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மானுவேலாய் கடவுள் நம்மோடு இருக்கவந்த இயேசுவாகிய இறையாட்சியை அறிவிப்பதே நற்செய்தியின் மையம் என்றும், கடவுள், படைப்பின்மீது தமக்குள்ள ஆளுமையை உருவாக்கி, இயேசுவில், மனித சமுதாயத்தின் மீது தாம் வைத்துள்ள அன்பை முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 

உடன்பிறந்த உணர்வும் இறையாட்சியும்

உடன்பிறந்த உணர்வு என்ற கருத்தியல், இறையாட்சியில் எவ்வாறு வேரூன்றப்பட்டுள்ளது என்பதை தனது அணிந்துரையில் விளக்கியுள்ள திருத்தந்தை, இவ்வுலகில் இறையாட்சியை விதைப்பதற்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்த இறையாட்சிப் பணியில், கிறிஸ்தவ நம்பிக்கையின் சமுதாயக்கூறை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

ஆன்மாவைக் கொல்லும் தான் என்ற முனைப்பை முறியடித்து, நற்செய்தி கூறும் உடன்பிறந்த உணர்வோடு, நம்பிக்கையை விதைத்து, மீட்பு மற்றும், விடுதலைக் கதவுகளைத் திறப்பதன் வழியாக, இவ்வுலகில் இறையாட்சியின் கனவு நிறைவேற ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.  

உடன்பிறந்த உணர்வு, நீதி, அமைதி, மற்றும், மாண்பு ஆகியவை, அனைவருக்கும் கிடைக்கும் ஒரு சமுதாயத்தில், இறையாட்சி வெளிப்படுத்தப்படுகிறது என்றும், இந்த ஓர் உணர்வில், நம் அன்னை பூமியைப் பாதுகாக்கவும், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற ஒருமைப்பாட்டுணர்வில் சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் நாம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ள “உடன்பிறந்த உணர்வு: காலத்தின் அறிகுறி” என்ற இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிடுகிறது. செப்டம்பர் 30, வருகிற வியாழனன்று, திருப்பீடத் தகவல் தொடர்பகம், இந்நூலை, செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


இனவெறிக்கும், இனப்பாகுபாட்டிற்கும் எதிராக திருப்பீடம்

 

கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள், குறிப்பாக, அவ்வுயிர்களின் பாலினம், அவற்றில் உருவாகும் குறைபாடுகள் ஆகியவற்றைப் பொருத்து, அவ்வுயிர்களின் மாண்பு குறைக்கப்படுவதை, திருப்பீடம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது – பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனப்பாகுபாட்டின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்துலக ஒப்பந்தத்தில் இணைந்துள்ள திருப்பீடம், இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியரின் மீது உருவாகும் அச்சம், மற்றும் அதனால் எழும் வன்முறைகள் அனைத்திற்கும் எதிராகப் போராடிவருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையில் கூறினார்.

ஆப்ரிக்க வழிமுறையில் வந்த மக்களுக்கு சமத்துவம், இன அடிப்படையில் நீதி, மற்றும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஈடு வழங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட டர்பன் அறிக்கையின் (Durban Declaration) 20ம் ஆண்டு நிறைவையொட்டி, ஐ.நா. அவையில் இடம்பெற்ற கூட்டத்தில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

இனவெறியை வேரறுக்கும் கடமை

ஒவ்வொரு மனிதரும், சமமான மாண்புடனும், உரிமைகளோடும் படைக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படை உண்மைக்கு எதிராக வளர்ந்துள்ள இனவெறியை வேரறுப்பதோடு, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற உணர்வை வளர்ப்பது நம் அனைவரின் கடமை என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மனித சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னேற்ற முயற்சிகளிலும், இனவெறியும், இன பாகுபாட்டு நடவடிக்கைகளும் பரவியிருப்பதை, Fratelli Tutti என்ற தன் திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

ஆப்ரிக்க வழிமுறை வந்த மக்களுக்கு உதவிகள்

ஆப்ரிக்க வழிமுறையில் வந்த மக்களுக்கு உதவிகள் செய்ய ஒரு நிரந்தர அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை திருப்பீடம் பெரிதும் வரவேற்கிறது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், இவ்வமைப்பின் செயல்பாடுகள், ஒவ்வொரு நாட்டிலும், பன்னாட்டளவிலும் செயல்பட திருப்பீடத்தின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு என்பதையும் எடுத்துரைத்தார்.

மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக...

சகிப்புத்தன்மை குறைந்து, பகைமை உணர்வுகளும், வன்முறைகளும் பெருகியுள்ளதற்கு தன் கவலையை வெளியிட்டுள்ள டர்பன் அறிக்கை, இத்தகைய சகிப்பற்ற தன்மை மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராகவும் பின்பற்றப்படுவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கருவில் வளரும் குழந்தையின் உரிமை

இதேவண்ணம், மனித உயிர்களுக்கு வழங்கப்படும் மாண்பு பல்வேறு வழிகளில் தரம் பிரிக்கப்படுவதால், கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள், குறிப்பாக, அவ்வுயிர்களின் பாலினம், அவற்றில் உருவாகும் குறைபாடுகள் ஆகியவற்றைப் பொருத்து, அவ்வுயிர்களின் மாண்பு குறைக்கப்படுவதை, திருப்பீடம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதையும், பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இனவெறியும், இன பாகுபாடுகளும் மனித மனங்களிலிருந்து வேரறுக்கப்படவில்லையெனில், எத்தனை சட்டங்கள் வந்தாலும், இந்தப் பிரச்சனையை முற்றிலும் தீர்க்க இயலாது என்பதை வலியுறுத்திக் கூறி, மனித மனமாற்றத்துக்கு அழைப்பு விடுத்து, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.


மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புங்கள்

 


அறிவியல் சாதனைகளை முறியடிக்கும் வண்ணம், அரசுகளிடையே ஒருங்கிணைந்த அரசியல் முடிவெடுக்கும் மனம் இல்லாமல் போனது, பெரும் வேதனை - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி, அவர்கள் எதிர்நோக்குடன் வாழ்வதற்கு ஓர் உந்துசக்தியாக, உலகத்தலைவர்கள் செயலாற்றுவதற்கு இப்போதே துவங்கவேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செப்டம்பர் 21 இச்செவ்வாயன்று கூறினார்.

செப்டம்பர் 14, கடந்த செவ்வாய் முதல், ஐ.நா.வின் 76வது பொது அவை, நியூ யார்க் நகரில் துவங்கியது.  செப்டம்பர் 21, இச்செவ்வாய் முதல், உலகத்தலைவர்கள் பலர் 76வது பொது அவையில் பங்கேற்றதையடுத்து, கூட்டேரஸ் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வுலகில் தற்போது நிலவும் பெரும் பிளவுகள் குறித்து தன் கவலைகளை வெளியிட்டார்.

தற்போது இவ்வுலகில் வாழ்வோர் இதுவரை கண்டிராத நெருக்கடிகளை, கோவிட்-19 பெருந்தொற்று, சுற்றுச்சூழல் பேரிடர், மற்றும், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஏமன் போன்ற ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் ஆகியவை உருவாக்கியுள்ளன என்பதை, கூட்டேரஸ் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

பயன்படுத்தப்படாமல், காலம் கடந்துபோன நிலையில், கோவிட் தடுப்பூசிகள், குப்பையில் கொட்டப்பட்டிருந்தது, தன் மனதை பெரிதும் பாதித்த ஒரு காட்சி என்றும், நாம் வாழும் இன்றைய உலகின் சுயநல, அக்கறையற்ற நிலையை இந்தக் காட்சி படம்பிடித்து காட்டுகிறது என்றும், கூட்டேரஸ் அவர்கள் வருத்தத்துடன் கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத வண்ணம், மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது, அறிவியலிலும், மனித அறிவுத்திறனிலும் நாம் அடைந்துள்ள வெற்றிகள் என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், இந்த சாதனைகளை முறியடிக்கும் வண்ணம், சுயநலத்தாலும், ஒருவரையொருவர் நம்பாமல் இருப்பதாலும், அரசுகளிடையே ஒருங்கிணைந்த அரசியல் முடிவெடுக்கும் மனம் இல்லாமல் போனது, பெரும் வேதனை என்று கூறினார்.

நாம் தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடிகளின்போது, உறுதியான தீர்வுகள் மிக அவசரமாக, அவசியமாகத் தேவைப்படும் சூழலில், நம்மிடையே உள்ள பெரும் பிளவுகளை முதலில் இணைத்து, சமாதானத்தை நிலைநாட்டுவது நமக்கு முன்னிருக்கும் மிகப்பெரும் தேவை என்று ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் வலியுறுத்திக் கூறினார்.

உலக அமைதி என்பது, பலருக்கு தூரத்துக் கனவாக மாறிவருகிறது என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, மியான்மார், சிரியா, ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி ஆகிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து, இராணுவ சக்தியைப் பயன்படுத்தி, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் போக்கு கூடிவருவதை குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

அத்துடன், இவ்வுலகில் இன்றைய பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இரு நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன என்பதை தன் உரையில் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், இதன் விளைவாக, உலகிற்குத் தேவையான முன்னேற்ற முயற்சிகளை துவங்க இயலாமல் இருக்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.

அக்டோபர் 31ம் தேதி கிளாஸ்கோவில் துவங்கவிருக்கும் COP26 காலநிலை உச்சி மாநாட்டிலும், உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்குத் தேவையான முயற்சிகளிலும், அனைத்து நாடுகளும், ஒருங்கிணைந்த பார்வையுடன் முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் பெருந்தொற்று, மனித சமுதாயத்தில் வேரூன்றியுள்ள பாலின வேறுபாட்டை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அவர்கள், பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலங்களில், பாலின சமத்துவத்திற்கும், பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுவதற்கும், பெரும் முயற்சிகள் தேவை என்று கூறினார்.

பாலின வேறுபாட்டைப்போலவே, சந்ததியருக்கிடையியே நிலவும் வேறுபாடும் அதிகமாக உள்ளது என்பதை, தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட கூட்டேரஸ் அவர்கள், சுற்றுச்சூழல் சீரழிவை கண்டு மனம் தளர்ந்துள்ள இளையோருக்கு, எதிர்காலத்தின்மீது நம்பிக்கையை வளர்ப்பது, நம் அனைவரின் கடமை என்று கூறினார். (UN)


பொருநை... தமிழர் சரித்திர சான்று

கீழடிக்கும் மூத்த சிவகளை ( தாமிரபரணி நாகரீகம் ) | Sivagalai | Tamil Civi...

3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு | Keezha...

Monday 20 September 2021

"பூச்சிகளைதான் எட்டு மாதங்களாக நானும் என் குழந்தைகளும் சாப்பிட்டு வருகிற...

2 crore Years old in Tamilnadu | Thiruvakkarai Fossil Wood | Tamil Navig...

அநீதியாக வெளிநாட்டுச் சிறைகளிலிருப்போர் விடுதலை பெறவேண்டும்

 

மெக்சிக்கோவில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்காகவும், வெளிநாடுகளில் அநீதியாக சிறைவைக்கப்பட்டிருப்போருக்காகவும் திருத்தந்தை செபம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

மெக்சிக்கோவின் அண்மைய வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்காகவும், வெளிநாடுகளில் அநீதியாக சிறைவைக்கப்பட்டிருப்போருக்காகவும், தன் செபங்களை, ஞாயிற்றுக்கிழமையன்று சமர்ப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியபின், மெக்சிக்கோவின் அண்மைய வெள்ளப்பெருக்கால் உயிழந்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் மாதம் 7ம் தேதி இடம்பெற்ற பெருமழையால் மெக்சிக்கோவின் Hidalgo மாநிலத்தின் Tula மாநகராட்சியில் Tula மற்றும் Rosas ஆறுகள் நிரம்பி வழிந்ததுடன், மருத்துவமனை உடபட் பல கட்டிடங்களிலும், தெருக்களிலும் வெள்ளம் புகுந்து அழிவை உருவாக்கியது.

கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவமனையின் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதால் 17 நோயாளிகளின் உயிரிழப்பும் இடம்பெற்றது.

மேலும், வெளிநாடுகளில் அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் தன் செபங்களை சமர்ப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எண்ணற்றோர்,  வெளிநாட்டுச் சிறைகளில் வாடுவது கவலை தருவதாக உள்ளது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வாறு, அநீதியான முறையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரும் தங்கள் சொந்த வீட்டிற்கு விரைவில் திரும்ப வழி பிறக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

திருப்பீடம்: சுத்தமான குடிநீர் பெறுவது, அடிப்படை மனித உரிமை

 


அனைவருக்கும் சுத்தமான குடிநீரும், நலவாழ்வு வசதிகளும் கிடைக்குமாறு செய்வதற்கு, உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தண்ணீர், ஒரு விற்பனைச் சரக்கு அல்ல, மாறாக, அது, வாழ்வின் ஊற்றாகவும், நலவாழ்வின் உலகளாவிய அடையாளமாகவும் உள்ளது, எனவே, அது குடிப்பதற்கும், நலவாழ்வுப் பணிகளுக்கும், அனைவருக்கும் கிடைப்பதற்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார்.

தண்ணீர், மற்றும், நலவாழ்வு பற்றி, ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 48வது கலந்துரையாடலில் உரையாற்றிய, திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு John Putzer அவர்கள், உயிர் வாழ்வுக்கு முக்கியத் தேவைகளில் ஒன்றான, குடி நீரைப் பெறுவது, மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும், இதை ஊக்குவிக்கும் பணிகளுக்கு, திருப்பீடம் எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது என்றும் கூறினார்.

உலக அளவில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றிய, ஐ.நா. அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய பேரருள்திரு Putzer அவர்கள், காலநிலை மாற்றம், கோவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றால், இப்பிரச்சனை அதிகமாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் அதிகளவில் வளர்ந்துள்ள இக்காலத்திலும், அனைத்து மக்களும், பாதுகாப்பான, மற்றும், சுத்தமான குடிநீரைப் பெற இயலாமல் உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய பேரருள்திரு Putzer அவர்கள், உலகில் ஏற்கனவே நிலவும் சமூக, மற்றும், பொருளாதார இடைவெளி, பெருந்தொற்றால் மேலும் விரிவடைந்துள்ளது என்றும், இது தேவையில் இருக்கும் மக்கள் மத்தியில், தண்ணீர் பிரச்சனையையும் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரும், நலவாழ்வு வசதிகளும் கிடைக்குமாறு செய்வதற்கு, உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதையும், திருப்பீட அதிகாரி, ஐ.நா. அவையில் வலியுறுத்திக் கூறினார்.


கூட்டொருங்கியக்கம், திருஅவையின் இயல்பை வெளிப்படுத்துகிறது

 

பல்வேறு மக்களையும், பல்வேறு நிலையில் உள்ளவர்களையும் கொண்ட உரோம் மாநகர விசுவாசிகளை, இந்த பெருந்தொற்று காலத்தில், நலிந்தவர்களைப் பாரமரிக்கும் திருஅவையாகச் செயல்பட ஆண்டவர் அழைக்கின்றார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2023ம் ஆண்டில், 'கூட்டொருங்கியக்கம்' என்ற தலைப்பில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்கட்டத் தயாரிப்புக்கள், உலகெங்கும் தலத்திருஅவைகளில் துவங்கவிருக்கும் இவ்வேளையில், செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உரோம் மறைமாவட்டத்தின் ஏறத்தாழ நான்காயிரம் விசுவாசிகளை, வத்திக்கானின் புனித 6ம் பவுல் அரங்கில் சந்தித்து, 'கூட்டொருங்கியக்கம்' பற்றிய தன் விரிவான எண்ணங்களை எடுத்துரைத்தார்.

கூட்டொருங்கியக்கம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்கள், 2021ம் ஆண்டுக்கும், 2023ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மூன்று கட்டங்களாக இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, இத்தயாரிப்புக்கள், திருஅவையில் அனைத்து நிலைகளில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறினார்.

இத்தயாரிப்புக்களில், அனைத்து விசுவாசிகளின் கருத்துக்களைச் சேகரிப்பது என்பதோடு, தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, முதல் கட்டத் தயாரிப்புக்கள், 2021ம் ஆண்டு அக்டோபர் முதல், 2022ம் ஆண்டு ஏப்ரல் வரை நடைபெறும் என்றும் கூறினார்.

'கூட்டொருங்கியக்கம்' என்பதன் பொருளை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது திருஅவை பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஒரு பிரிவு அல்ல, மாறாக, இது திருஅவையின் இயல்பு, அதன் வடிவம், அதன் வாழ்க்கைமுறை, அதன் மறைப்பணி போன்றவற்றை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறினார்.

கூட்டொருங்கியக்கத் திருஅவை என்று நாம் பேசும்போது, மாற்றுச்சிந்தனைகளோடு சிந்திக்கும் ஒரு முறை என்று, தான் கருதுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மாமன்றம் என்பது, ஒன்றுசேர்ந்து நடத்தல் என்று கூறி, அதற்கு விவிலியத்திலிருந்து பல்வேறு மேற்கொள்களையும் குறிப்பிட்டார்.

உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென நடைபெறும் தயாரிப்புக்கள், மறைமாவட்ட அளவில் நடைபெறுவது மிகவும் முக்கியம், ஏனெனில் இது திருமுழுக்குப்பெற்ற அனைவரின் குரலுக்குச் செவிமடுப்பதாக உள்ளது எனவும், இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றுள்ள மிகப்பெரும் மக்களின் ஓர் அங்கம் என உணர்வது அவசியம் எனவும் உரைத்த திருத்தந்தை, இறைமக்கள் என்ற சொல்லாடல் பற்றியும் விளக்கினார்.

இத்தயாரிப்புப் பாதையில் செவிமடுத்தல் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும், இத்தயாரிப்பில் ஊக்கப்படுத்தவே இன்று உங்களைச் சந்தித்தேன் என்றும் உரைத்த திருத்தந்தை, தூய ஆவியாருக்குச் செவிகொடுங்கள், எவரையும் புறக்கணியாதீர்கள், அவ்வாறு இருப்பது, உரோம் மறைமாவட்டத்திற்கும், உலகளாவிய திருஅவைக்கும் நல்லது என்று கூறினார்.

உரோம், பல்வேறு மக்களையும், பல்வேறு நிலையில் உள்ளவர்களையும் கொண்ட மாநகரம், இந்த பெருந்தொற்று காலத்தில், நலிந்தவர்களைப் பாரமரிக்கும் திருஅவையாகச் செயல்பட உங்களை ஆண்டவர் அழைக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரோம் மறைமாவட்ட விசுவாசிகளிடம் கூறி, தன் நீண்ட உரையை நிறைவுசெய்தார்.


“சிறிய அமல்”, புலம்பெயர்ந்தோரின் துயர்களை நினைவுபடுத்துகின்றது

 

Handspring Puppet நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “சிறிய அமல்”, தங்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள பல புலம்பெயர்ந்த சிறாரை நினைவுபடுத்துவதாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 10, இவ்வெள்ளிக்கிழமை காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், “சிறிய அமல் (Little Amal)” என்ற பெயரில் நடைபெற்ற பொம்மலாட்டம், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று, கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எடுத்துரைப்பதற்காக, சிரியா நாட்டு புலம்பெயர்ந்த 9 வயது சிறுமி ஒருவரை நினைவுபடுத்தும் முறையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான “சிறிய அமல்” என்ற பொம்மலாட்டப் பொம்மை, துருக்கி நாட்டிலிருந்து இங்கிலாந்து வரை, எட்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றது.

எங்களை மறக்கவேண்டாம், எங்களைப் புறக்கணிக்கவேண்டாம் என்றும், இந்த பொம்மை விண்ணப்பிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் தலைமையிலான திருப்பீட சிறிய குழு ஒன்று, இவ்வெள்ளி காலையில் “சிறிய அமல்” என்ற பெரியதொரு பொம்மலாட்டப் பொம்மையை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வரவேற்றது.


“சிறிய அமல்”, பொம்மலாட்டம்

Handspring Puppet நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “சிறிய அமல்”, தங்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள பல புலம்பெயர்ந்த சிறாரை நினைவுபடுத்துவதாகவும், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களின் துன்பங்களை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.

அனுமதியின்றி வாழும் குடியேற்றதாரர்களை ஏற்க ஆயர்கள் கோரிக்கை

 

சட்ட அனுமதியின்றி வாழ்வோரும், நாட்டின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளதால், அவர்களை சமுதாயத்தின் பின்தங்கிய நிலைகளில் வாழும்படித் தள்ளுவது நாட்டுக்கு அழகல்ல

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் முன்வைக்கப்படவிருக்கும் நிதி திட்டங்கள் குறித்த ஒப்புரவு சட்டவரைவில், உரிய அனுமதியின்றி நாட்டிற்குள் வாழும் வெளிநாட்டவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்ட திருத்தங்கள் கொணரப்பட வேண்டும் என்பதற்கு அந்நாட்டின் அனைத்து ஆயர்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் சமுதாயப் பாதுகாப்பு வளையத்தை மேலும் விரிவாக்கும் நோக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 350 கோடி டாலர் திட்டத்தில், உரிய அனுமதியின்றி வாழும் வெளிநாட்டவர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் திட்டத்தையும் உள்ளடக்கும் அரசின் முயற்சிகளுக்கு தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

அனுமதியின்றி குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுள் நியாயமான கோரிக்கையுடையோர் அங்கீகரிக்கப்படவேண்டும் என சில விதிமுறைகளை செப்டம்பர் 13, திங்கள்கிழமை, அமெரிக்க செனட் அவையின் நீதி குழு நிறைவேற்றியதைக் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்ட அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் அவைத்தலைவர், ஆயர் Mario E. Dorsonville அவர்கள், இந்த நடவடிக்கை, பொதுநலனுக்கும் குடும்பங்களுக்கும் ஒரு பெரிய மைல்கல் என கூறினார்.

சட்ட அனுமதியின்றி வாழ்வோரும் நாட்டின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளதால், அவர்களை, சமுதாயத்தின் பின்தங்கிய நிலைகளில் வாழும்படித் தள்ளுவது, நாட்டுக்கு அழகல்ல என, மேலும் எடுத்துரைத்தார், ஆயர் Dorsonville.

ஒப்புரவு சட்டவரைவின் இறுதி வடிவம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு மனிதனின் மாண்பும் மதிக்கப்படுவதை உறுதிச் செய்யும்வகையில் புதிய சீர்திருத்தங்கள் சட்டத்தில் இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,  பொருளாதார கடைநிலையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவிகள், குடும்ப பலப்படுத்தல்கள், மதவிடுதலை பாதுகாக்கப்படுதல், படைப்பின் மீது அக்கறையை ஊக்குவித்தல், கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வின் மாண்பும் உரிமையும் மதிக்கப்படுதல் போன்றவைகளை வலியுறுத்தியுள்ளனர்.


அயர்லாந்து மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபம்

 


அயர்லாந்து, மற்றும் வட அயர்லாந்து மக்களின் அமைதி, குணப்படுத்தல், மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்பிக்கையின் செபவழிபாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1921ம் ஆண்டு அயர்லாந்து பிளவுபட்டது, மற்றும், வட அயர்லாந்து உருவாக்கப்பட்டதன் நூறாமாண்டு நினைவு, செப்டம்பர் மாதம் 21ம் தேதி செபவழிபாடுகளுடன் நிறைவேற்றப்பட உள்ளதாக அயார்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

அயர்லாந்து, மற்றும் வட அயர்லாந்து மக்களின் அமைதி, குணப்படுத்தல், மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நம்பிக்கையின் செபவழிபாடு விளங்கும் என ஆயர்களின் அறிக்கைக் கூறுகிறது.

அயர்லாந்தின் கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் ஆயர்கள் Armaghலுள்ள தங்கள் பேராலயங்களில் ஒன்றுகூடி, அயர்லாந்து மக்களின் அமைதி மற்றும் ஒப்புரவிற்காக செபிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு பின்னணிகளையும் பாரம்பரியங்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து, கடந்த கால காயங்களை குணப்படுத்தும் நோக்கத்தில், செப்டம்பர் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று, வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் Armagh நகரின் இரு பேராலயங்களிலும் செபவழிபாடுகளை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்புக்கு எதிராக கிறிஸ்தவர்களின் 40 நாள் செப முயற்சி

 


உலகில் நிகழும் மரணங்களுக்கு முக்கியமானக் காரணிகளுள், கருக்கலைப்பு, முக்கிய இடம் வகிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகில், 4 கோடி கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில் சட்ட ரீதியாக கருக்கலைப்பைத் தடுக்கும் அதிகாரம் திருஅவைக்கு இல்லாத நிலையில், செபத்தின் வழியாக அதனை நிறைவேற்றும் நோக்கத்தில், 40 நாள் செப முயற்சியில் இணைந்துள்ளதாக, தென் கொரிய தலத்திருஅவை அறிவித்தது.

மனித வாழ்வு பாதுகாக்கப்படவேண்டும், மற்றும் கருக்கலைப்பை சட்டரீதியாக அங்கீகரிப்பதை நிறுத்தவேண்டும் என, தொடர்ந்து குரல் எழுப்பிவரும் தென்கொரிய திருஅவை, கருக்கலைப்புக்கு எதிராக, செப்டம்பர் 22ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி முடிய, உலக அளவில் இடம்பெறும் 40 நாள் செப முயற்சியில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

கருக்கலைப்பு எனும் அநீதிக்கு எதிராக, 2007ம் ஆண்டில், வாழ்வுக்கு ஆதரவான குழுவால், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 40 நாள் செப முயற்சியில், இந்த ஆண்டு, தென் கொரியாவும் இணைந்துள்ளது. இந்த 40 நாள் செப முயற்சியானது, 63 நாடுகளின் 1000 நகர்களில், 10 இலட்சம் தன்னார்வ ஆதரவாளர்களுடன் நடத்தப்படுகிறது.

இந்த 40 நாள் முயற்சிக்கென தனிச்செபம் ஒன்றைத் தயாரித்து, மக்களிடையே விநியோகித்துள்ள கொரிய தலத்திருஅவை, இந்த 40 நாள் செப முயற்சியில் பங்கு கொள்ளும் கிறிஸ்தவர்கள், அந்நாட்களையும் தாண்டி, கருக்கலைப்புக்கு எதிரான தங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும் என விண்ணபித்துள்ளது.

வாழ்வுக்கு ஆதரவான இந்தக் குழுவின் முயற்சியால், இதுவரை, 19,198 குழந்தைகள், கருவிலேயே காப்பாற்றப்பட்டு, பிறப்பைக் கண்டுள்ளனர். 221 பேர், கருக்கலைப்பு தொடர்புடைய தொழிலைக் கைவிட்டுள்ளனர், கருக்கலைப்பு செய்துவந்த 112 சிறு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

உலகில் மரணங்களுக்கு முக்கியமானக் காரணிகளுள் கருக்கலைப்பு முக்கிய இடம் வகிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகில் 4 கோடி கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று, ஒவ்வோர் ஆண்டும், 40 நாள் செப முயற்சியை உலகெங்கும் மேற்கொண்டுவரும், வாழ்வுக்கு ஆதரவான கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. (UCAN)

 

வேட்டை சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகள் மதுரையில் கண்டெடுப்பு | Madurai Ex...

கீழடியில் 13 எழுத்து தமிழி பானை ஓடு கண்டுபிடிப்பு | Keezhadi Excavation

Will Keeladi rewrite Indian History?

Wednesday 15 September 2021

Card. Koch: Pope seeks to deepen bonds of friendship between Christianity and Judaism

 

The President of the Pontifical Council for Promoting Christian Unity, Cardinal Kurt Koch, writes to two Jewish leaders in response to concerns raised about the Holy Father’s catechesis during the General Audience on 11 August.

By Vatican News staff writer

Cardinal Kurt Koch, the president of the Pontifical Council for Promoting Christian Unity, has written to two Jewish leaders, addressing concerns about the Pope's catechesis during a recent General Audience.

The Cardinal’s letter, written at the direction of Pope Francis, comes in response to Rabbi Rasson Arussi’s letter, dated 12 August, and Rabbi David Fox Sandmel’s letter, dated 24 August, in which they both referred to Pope Francis’ catechesis at the General Audience of 11 August, during which the Holy Father reflected on St. Paul’s letter to the Galatians (Gal 3, 19. 21 – 22).

Rabbi Rasson Arussi is the Chair of the Commission of the Chief Rabbinate of Israel for Dialogue with the Holy See, while Rabbi David Fox Sandmel is the Senior Advisor on Interreligious Affairs at the Anti-Defamation League (ADL).

The Torah is not devalued

Cardinal Koch explained that in the Holy Father’s address, “the Torah is not devalued,” as the Pope firmly affirms that St. Paul was not opposed to the Mosaic law. Indeed, he continued, “Paul observed this Law, emphasized its divine origin, and attributed to it a role in salvation history.” In this light, he said, the phrase, “The law does not give life, it does not offer the fulfillment of the promise” should not be extrapolated from its context, but must be “considered within the overall framework of Pauline Theology.”

He wrote, "The abiding Christian conviction is that Jesus Christ is the new way of salvation. However, this does not mean that the Torah is diminished or no longer recognized as the 'way of salvation for Jews'."

The Cardinal then pointed at Pope Francis’ audience with the International Council of Christians and Jews (ICCJ) on 30 June 2015, when the Pope affirmed:

“The Christian confessions find their unity in Christ; Judaism finds its unity in the Torah. Christians believe that Jesus Christ is the Word of God made flesh in the world; for Jews, the Word of God is present above all in the Torah. Both faith traditions find their foundation in the One God, the God of the Covenant, who reveals himself through his Word.”

Cardinal Koch also noted that the Holy Father, in his catechesis, "does not make any mention of modern Judaism," rather, "the address is a reflection on Pauline theology within the historical context of a given era.” Thus, “the fact that the Torah is crucial for modern Judaism is not questioned in any way.”

Doctrinal differences do not hinder peaceful colloboration

Recalling Pope Francis’ constant positive affirmations on Judaism, the Cardinal went to assert that it cannot, in any way, be presumed that he is returning to a so-called “doctrine of contempt.”

The Holy Father, rather, “fully respects the foundations of Judaism and always seeks to deepen the bonds of friendship between the two faith traditions,” Cardinal Koch said.

He added that the Pope agrees with the content of the Jewish document “Between Jerusalem and Rome”, published in 2017, regarding the relationship between Judaism and Christianity, which stated that “the doctrinal differences are essential and cannot be debated or negotiated; their meaning and importance belong to the international deliberations of the respective faith communities…However, doctrinal differences do not and may not stand in the way of our peaceful collaboration for the betterment of our shared world and the lives of the children of Noah.”

 

Lunik IXல் திருத்தந்தை, ரோமா இன மக்கள் சந்திப்பு

 

ரோமா இனத்தின் சிறார், ஆரம்பக் கல்வியைக்கூட முடிப்பதில்லை. விரைவிலேயே பெற்றோராகி விடுகின்றனர். இம்மக்களின் கலாச்சார வாழ்வுமுறையால், இவர்கள் அதிகம் புறக்கணிக்கப்படுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

செப்டம்பர் 14, இச்செவ்வாய் மாலை 3.45 மணிக்கு, Košice நகரின் 22 மாவட்டங்களில் ஒன்றாகிய Lunik IX பகுதிக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. இப்பகுதியில், சுலோவாக்கியா நாட்டின் ரோமா நாடோடி இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர். தற்போது Lunikல், ஏறத்தாழ 4,300 ரோமா இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் போதுமான எரிவாயு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி ஏழ்மை நிலையில் உள்ளனர். ரோமா இனச் சிறார் மற்றும், இளையோர் மத்தியில், சலேசிய சபையினரோடு இணைந்து பணியாற்றும் Alexandra Voláková என்ற தன்னார்வலர், அம்மக்கள் மத்தியில் தான் ஆற்றும் பணிகள் பற்றி வத்திக்கான் செய்திகளிடம் விவரித்துள்ளார். இந்த இனத்தின் சிறார், ஆரம்பக் கல்வியைக்கூட முடிப்பதில்லை. விரைவிலேயே பெற்றோராகி விடுகின்றனர். சிறுமிகள் தங்களின் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர். இம்மக்களின் கலாச்சார வாழ்வுமுறையால் இவர்கள் அதிகம் புறக்கணிக்கப்படுகின்றனர். வேலைவாயப்புகள் கிடையாது. திருத்தந்தையைச் சந்திப்பதற்கு இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தனர். இவ்வாறு Alexandra அவர்கள் கூறியுள்ளார்

இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, இந்திய இலங்கை நேரம், இரவு 7.30 மணிக்கு ரோமா இன மக்களைச் சந்தித்தார், திருத்தந்தை. அம்மக்களுக்கென்று சலேசிய சபையினர் பணியாற்றும் மையத்தில், அம்மைய இயக்குனர், இரு ரோமா இனச் சிறார் திருத்தந்தையை வரவேற்றனர். இச்சந்திப்பில் முதலில், அம்மைய இயக்குனர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் ரோமா இனத்தவர் ஒருவரும், தொழில்துறையில் இணைக்கப்பட்ட ரோமா இன ஒரு குடும்பமும் தங்கள் சாட்சியங்களை வழங்கினர். அதற்குப்பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். அதிகாரம், பணம், அக்கறையற்ற நிலை என்பவைகளில் நாம், கடவுளின் திருப்பெயரை தவறாகப் பயன்படுத்துகிறோம். கடவுளின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு நாம், ஒருவருக்கொருவர் உதவுவோம் என்று திருத்தந்தை கூறினார். இச்சந்திப்பிற்குப்பின்னர், Košice நகரில் Lokomotiva அரங்கில் இளையோரைச் சந்திப்பது, பின்னர் பிராத்திஸ்லாவா செல்வது ஆகிய இரண்டும், இத்திருத்தூதுப் பயணத்தின் 3ம் நாள் பயணத்திட்டத்தில் உள்ளன.

அருள்பணி Jaroslav Lajčiak, திருத்தூதுப் பயணம் பற்றி..

Košice உயர்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வர் அருள்பணி Jaroslav Lajčiak அவர்கள், திருத்தந்தையின் இப்பயணம் பற்றியும், சுலோவாக்கியா கத்தோலிக்கர் பற்றியும், தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். திருத்தந்தை துவக்கிவைத்த Byzantine வழிபாட்டு முறை, திருஅவை இரு நுரையீரல்களால் சுவாசிக்கிறது என்பதையும், திருஅவையின் ஒன்றிப்பையும் காட்டுகிறது. சுலோவாக்கியா, கத்தோலிக்க விழுமியங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு சமுதாயம் வாழ்கின்ற நாடாகும். 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுலோவாக்கியாவில், 65.8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் உள்ளனர். இவர்களில் 62 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர். 3.8 விழுக்காட்டினர், கிரேக்க கத்தோலிக்கர். அந்நாட்டின் 53,97,036 மக்கள் தொகையில், ஏறத்தாழ 2,06,871 பேர், Byzantine வழிபாட்டுமுறையைப் பின்பற்றும், சுலோவாக்-கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையைச் சார்ந்தவர்கள். சுலோவாக்கியா மக்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழப்படுத்தவும், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவும், நாட்டை ஆசீர்வதிக்கவும் திருத்தந்தை, எம் நாட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு அருள்பணி Jaroslav அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 15, இப்புதன், துயருறும் அன்னை மரியா திருநாள். சுலோவாக்கியா நாட்டின் Sastin நகரில், ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா தேசிய திருத்தலம் அமைந்துள்ளது. இப்புதனன்று Sastin நகர் சென்று, அன்னை மரியா விழாவைச் சிறப்பிப்பதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.


ரோமா நாடோடி இனத்தவருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

 


திருத்தந்தை பிரான்சிஸ் - சகோதரர்களாக, சகோதரிகளாக திகழும் ஒரு குடும்பமே, திருஅவையின் இலக்கணம். திருஅவை ஓர் இல்லம், உங்கள் இல்லம். எனவே, நான் முழு உள்ளத்துடன் கூறுகிறேன்: நீங்கள் அனைவரும் இங்கு வரவேற்கப்படுகிறீர்கள்!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டில், Košiceயில் வாழும் நாடோடி இனத்தவரான ரோமா குழுமத்தினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 14, இச்செவ்வாய் பிற்பகலில் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தன் வாழ்க்கைத்துணையான Beáta அவர்களுடன் இங்கு வந்திருக்கும் Ján அவர்கள் பகிர்ந்துகொண்டபோது, உங்கள் இனத்தவரைக் குறித்து, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்கள் என் நினைவுக்கு வந்தன. "திருஅவையில், நீங்கள் விளிம்புகளில் இல்லை, நீங்கள் திருஅவையின் இதயத்தில் இருக்கிறீர்கள்" என்று அவர் கூறியிருந்தார். இது வெறும் சொற்கள் அல்ல, இவ்விதம் வாழ்வதையே இறைவன் விரும்புகிறார். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறாக இருந்தாலும், அனைவரும், பிள்ளைகளாக, அவரைச்சுற்றி ஒன்றிணைந்து வருவதையே அவர் விரும்புகிறார். சகோதரர்களாக, சகோதரிகளாக திகழும் ஒரு குடும்பமே, திருஅவையின் இலக்கணம். திருஅவை ஓர் இல்லம், உங்கள் இல்லம். எனவே, நான் முழு உள்ளத்துடன் கூறுகிறேன்: நீங்கள் அனைவரும் இங்கு வரவேற்கப்படுகிறீர்கள்!

Ján, நீங்களும், உங்கள் துணைவியார் Beáta அவர்களும், என்னை வாழ்த்தினீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பினும், நீங்கள் இருவரும், குடும்பம் என்ற கனவுக்கு, வாழும் அடையாளங்களாக இருக்கிறீர்கள். இருவரும் இணைந்து வாழ்வதன் வழியே, உங்களிடையே இருக்கும் முற்சார்பு எண்ணங்களையும், பிரச்சனைகளையும் புறந்தள்ளி வாழமுடியும் என்பதை உணர்த்துகிறீர்கள்.

அடுத்தவரை சரியாகப் புரிந்துகொள்வதற்குப் பதில், நம் முற்சார்பு எண்ணங்களால் அவர்களை எளிதில் தீர்ப்பிடுகிறோம். இயேசு, நற்செய்தியில் கூறும், "தீர்ப்பு அளிக்காதீர்கள்" (மத். 7:1) என்ற அறிவுரைக்கு செவிமடுப்போம். ஒவ்வொருவரும் இறைவனின் மகன், அல்லது மகள் என்ற அழகை உடையவர்கள், படைத்தவரின் சாயலைப் பெற்றிருப்பவர்கள். எனவே, அவர்களை நம் முற்சார்பு எண்ணங்களுக்குள் அடைத்துவைக்க முயலவேண்டாம்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, மக்களின் முற்சார்பு எண்ணங்களுக்கும், தவறான தீர்ப்புகளுக்கும், அதனால் வெளிப்படும், புண்படுத்தும் சொற்களுக்கும், செயல்பாடுகளுக்கும், நீங்கள் அடிக்கடி உள்ளாகியிருக்கிறீர்கள். முற்சார்பு எண்ணங்களிலிருந்து விடுபட்டு, உரையாடல் வழியே, மனிதமாண்பை நிலைநாட்டமுடியும். சமுதாயத்தில் ஒருங்கிணையமுடியும்.

இதை எவ்வாறு செய்வது என்பதை புரிந்துகொள்ள, Nikola மற்றும் René ஆகிய இருவரும் உதவி செய்துள்ளனர். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, அத்தகைய ஆவலை, உங்கள் குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறீர்கள். எனவே, நீங்கள் எங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியைத் தந்துள்ளீர்கள். எங்கு ஒருவர்மீது ஒருவருக்கு உண்மையான அக்கறை உள்ளதோ, எங்கு பொறுமை காட்டப்படுகிறதோ, அந்த உறவு பலன்கள் அளிக்கும் என்ற செய்தியை நீங்கள் தந்துள்ளீர்கள்.

நம் குழந்தைகள், பாகுபாடுகளையும், தடைகளையும் உணராமல், அனைவரோடும் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர். அவர்கள் எதிர்காலத்தில், சமுதாயத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ளபப்ட்டு, இணைந்து வாழ்வதற்கு, நாம், தற்போது, துணிவுடன் முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கும்.

அனைத்து இனத்தவரையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்றி சொல்ல விழைகிறேன். அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, பொதுநிலையினரே, இத்தகைய ஒருங்கிணைப்பு பணிக்கென உங்கள் நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்தும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! விளிம்புகளில் வாழ்வோரை சமுதாயத்தின் மையத்திற்குக் கொணரும் உங்களுக்கு நன்றி. இவ்வேளையில், நான் புலம்பெயர்ந்தோரையும், சிறையில் இருப்போரையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரோடும், என் நெருக்கத்தை, இப்போது வெளிப்படுத்த விழைகிறேன்.

அருள்பணி பீட்டர் அவர்களே, நீங்கள் நடத்திவரும் மேய்ப்புப்பணி மையத்தைப்பற்றிக் கூறியதற்காக உங்களுக்கு நன்றி. விளிம்பில் வாழ்வோருக்காக, இந்த மையத்தில் பல்வேறு உதவிகள் செய்வதோடு, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அக்கறை காட்டி, அவர்களோடு உடன் பயணிப்பதற்காக உங்களுக்கு நன்றி.

வெளியில் சென்று, விளிம்பில் வாழ்வோரைச் சந்திக்க அஞ்சவேண்டாம். அங்கு நீங்கள் இயேசுவைச் சந்திப்பீர்கள். தேவையில் இருப்போர் நடுவே, அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்.

உங்கள் அனைவரிடமும் நான் கேட்பது இதுதான். உங்கள் அச்சங்களையும், கடந்தகால காயங்களையும் வெற்றிகொண்டு, புதிய நம்பிக்கையுடன் அடுத்தவரைச் சந்திக்கச் செல்லுங்கள். உங்கள் அனைவருக்கும் திருஅவை முழுவதிலுமிருந்து, அரவணைப்பையும், ஆசீரையும் வழங்குகிறேன்.

சாத்தூர் 4000 வருட பழமையான கீழடி | Sattur another Keeladi | 4000 Yrs Old...

40 ಗಡಿಗೆ.. 17 ಅಸ್ಥಿಪಂಜರ..! ಏನಿದು ತಮಿರಭರಣಿ ರಹಸ್ಯ..? mystery of river

Monday 13 September 2021

international tamils demand CM MK stalin to create tamil department in L...

'கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும்' | ஆதிச்சநல்லூர்| சிவகளை| K...

"Linguistic Fanaticism Dangerous":Madras HC Asks Modi Govt Not To Use Hi...

பொருநை நாகரிகம்..பிரமிக்க வைக்கும் தகவல்கள்!தமிழர்கள் காணவேண்டிய Documen...

Tamil Culture And Archaeology Minister Thangam Thennarasu On Porunai Civ...

Tamil Nadu River Civilisation 3200 Years Old, Will Go for Excavations Ab...

3,200-year-old civilization confirmed in Tamil Nadu, Govt to excavate in...

Evidence Of 3200-Year-Old Civilization In Tamil Nadu. Rewrite History, S...

வியக்க வைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தில் தென்னிந்திய மனித படிமங்கள் ! ...

Saturday 4 September 2021

பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் இல்லை - திருத்தந்தை

 

தான் பெற்ற அறுவை சிகிச்சை, ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் நிலவும் சூழல், கருணைக்கொலை, கருக்கலைப்பு, வத்திக்கானில் நிகழும் உயர்மட்ட மாற்றங்கள் போன்ற தலைப்புக்களில், திருத்தந்தையின் வானொலி உரையாடல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்பானியாவின் Radio COPE என்ற வானொலி நிறுவனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில், இவ்வாண்டு ஜூலை மாதம், உரோம் நகரிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் தான் பெற்றுக்கொண்ட அறுவைசிகிச்சையைப் பற்றியும், மற்றும் ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் பற்றியும் பேசினார்.

இஸ்பானிய ஆயர் பேரவையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் Carlos Herrera அவர்களுடன், திருத்தந்தை மேற்கொண்ட 90 நிமிட உரையாடலில், தூக்கியெறியும் கலாச்சாரத்தை கொண்டுள்ள இன்றைய சமுதாயத்தில் நிலவும் கருணைக்கொலை, கருக்கலைப்பு ஆகியவை குறித்தும், வத்திக்கானில் நிகழ்ந்துவரும் உயர்மட்ட மாற்றங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அறுவை சிகிச்சையைப்பற்றிய சிந்தனைகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், அவரது மனதுக்குப் பிடித்தமான சிக்கல்களைத் தீர்க்கும் அன்னை மரியாவின் திரு உருவப்படத்திற்குக் கீழ் நடைபெற்ற இந்த உரையாடல் பதிவில், ஜெமெல்லி மருத்துவ மனையில் தான் பெற்ற அறுவை சிகிச்சையைப்பற்றிய சிந்தனைகளை முதலில் பகிர்ந்துகொண்டார்.

தன் குடல் பகுதியில் ஏற்பட்டிருந்த பிரச்சனையை, மருந்தின் வழியே குணமாக்கலாம் என்று, ஒரு சில மருத்துவர்கள் கருத்து தெரிவித்த வேளையில், வத்திக்கான் மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் ஒரு மருத்துவத் தாதியர் மட்டும், தான் அறுவை சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தினார் என்று திருத்தந்தை கூறினார்.

1957ம், ஆண்டு, ஒரு மருத்துவ தாதியர் வழியே தன் உயிர் காப்பாற்றப்பட்டதைப் போலவே, இம்முறை, வத்திக்கானில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஒரு தாதியர் வழங்கிய ஆலோசனை, தன் உயிரை, இரண்டாவது முறை காத்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு தன் சிறப்பான நன்றியை வெளிப்படுத்தினார்.

அறுவைச்சிகிச்சைக்குப்பின் வழக்கம்போல்...

இந்த அறுவைச்சிகிச்சைக்குப்பின் தன் குடலில் 33 சென்டிமீட்டர் குறைந்துவிட்டது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருப்பினும், இதனால் தன் உணவிலும், செயல்பாடுகளிலும் பெரும் மாற்றங்கள் இன்றி தன்னால் இயங்க முடிகிறது என்றும் இந்த உரையாடலில் கூறினார்.

தன் உடல்நலக் குறைவையொட்டி, இத்தாலி மற்றும் ஆர்ஜென்டீனா நாளிதழ்களில் தான் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பேசப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம், தனக்கு இதுவரை எழவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடி

இந்த வானொலி உரையாடலில் தன் உடல்நலனைக் குறித்து முதலில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியைக் குறித்து பேசியபோது, தற்போது திருப்பீடச் செயலராகப் பணியாற்றும் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பன்னாட்டு உறவுகளில் மிகவும் திறமைவாய்ந்தவர் என்றும், அவர், ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் ஈடுபட்டுள்ளது, தனக்கு பெரும் பக்கபலமாக உள்ளது என்றும் கூறினார்.

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் கலாச்சாரத்தையும், மக்களின் பாரம்பரியத்தையும் மதிக்காமல், அந்நிய நாட்டு படையெடுப்பின் வழியே, ஒரு நாட்டில், குடியரசை நிறுவமுடியும் என்று, அரசுகள் முடிவெடுக்கும் போக்கிற்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்று, ஜெர்மன் நாட்டின் தலைவர் Angela Merkel அவர்கள் கூறியதை தன் உரையாடலில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய அரசியல் உலகில், ஜெர்மன் தலைவர் மீது தான் அதிகம் மதிப்பு கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

சீனாவுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே...

சீனாவுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்பூர்வ உறவுகளைப் பற்றிய கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவுடன் உறவு கொள்வது எளிதல்ல என்பதையும், இருப்பினும், உரையாடல் வழியே நன்மைகள் செய்யும் முயற்சிகளை திருப்பீடம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் பணிக்காலத்தில் திருப்பீடச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் அகோஸ்தீனோ காசரோலி (Agostino Casaroli) அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், திருப்பீடம் மேற்கொள்ளும் உரையாடல் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்துவருகின்றன என்பதை, திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

கருணைக்கொலை, கருக்கலைப்பு

இதைத் தொடர்ந்து, திருப்பீடத்தின் உயர்மட்ட அளவில் துவக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு, நிதித்தொடர்பாக வத்திக்கானில் நடைபெறும் வழக்கு, பாலியல் முறையில், சிறார் அடைந்துவரும் துன்பங்களுக்கு பதிலிறுப்பு, கருணைக்கொலை, கருக்கலைப்பு என்ற பல்வேறு தலைப்புக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Radio COPE வானொலியில், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இம்மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி முடிய ஹங்கேரி நாட்டிற்கும், ஸ்லோவாக்கியா நாட்டிற்கும் செல்வதற்குரிய சக்தி தனக்கு இருப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிளாஸ்கோ நகரில், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் COP26 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டிற்குச் செல்லும் திட்டம் தற்போது இருப்பதாகவும், அன்றைய நிலையில் தன் உடல்நலம் அனுமதித்தால், தான் கட்டாயம் அந்தக் கூட்டத்திற்குச் செல்லவிருப்பதாகவும், இந்த உரையாடலில் கூறினார்.