Monday 16 November 2020

குரங்கணில் முட்டம் குடைவரை கோயில் | Kuranganilmuttam | Pallavas 1st Cave...

' கொடைக்கானல் உருவான கதை ' - இப்படிக்கு காலம் | Kodaikanal | Ippadikku ...

Pope appoints new archbishop in Agra, India

 Bishop Raphy Manjaly.


Pope Francis transfers Bishop Raphy Manjaly of Allahabad to the Archdiocese of Agra.

Pope Francis on Thursday appointed a new archbishop in Agra, India.   He transferred Bishop Raphy Manjaly of Allahabad to the metropolitan see of Agra, in northern India’s Uttar Pradesh State.  The appointment comes after the Pope accepted the resignation of Archbishop Albert D'Souza, who has been heading Agra Archdiocese since 2007.  Archbishop D’Souza reached the canonical retirement age for bishops last year. Sixty-two-year old

Bishop Manjaly was born on February 7, 1958, in Vendore, in southern India’s Kerala state.  After his school in his native state, he joined St. Lawrence Minor Seminary, Agra, in 1973 and continued his philosophy and theology at St. Joseph’s Regional Seminary, Allahabad.  He did his graduation and post-graduation degrees from Agra University.  He obtained a doctoral degree from Angelicum University of Rome, Italy. 

He was ordained a priest on May 11, 1983.  Pope Benedict VI appointed him Bishop of Varanasi on February 24, 2007, and he was consecrated bishop on April 30, that year.  Pope Francis appointed him Bishop of Allahabad on October 17, 2013.

ஜோ பைடன் அவர்களுக்கு, திருத்தந்தை நல்வாழ்த்து

 திருத்தந்தையும், ஜோ பைடன் அவர்களும் - கோப்புப் படம் (2016)

கரங்களை நீட்டுவதற்கு நம்மிடமுள்ள ஆற்றல், வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் வழிகளில் நாம் இயல்பாகச் செயல்படுவதற்குத் திறமையை கொண்டிருக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 15 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் நான்காவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் உலக நாள் (#WorldDayOfThePoor) என்ற ஹாஷ்டாக்குடன், நவம்பர் 13 இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“நம் கரங்களை நீட்டுவதற்கு உள்ள ஆற்றல், வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் வழிகளில் நாம் இயல்பாகச் செயல்படுவதற்குத் திறமையை கொண்டிருக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தொலைப்பேசி உரையாடல்

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் (Joseph Robinette Biden) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நவம்பர் 12, இவ்வியாழனன்று, தொலைப்பேசியில் அழைத்து, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர், மத்தேயோ புரூனி அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், ஜோ பைடன் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலை உறுதிசெய்த புரூனி அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், புதிய அரசுத்தலைவருக்கு வாழ்த்துக் கூறியதைத் தொடர்ந்து, திருத்தந்தையும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 35வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய, கத்தோலிக்கரான ஜான் எப் கென்னடி (John Fitzgerald Kennedy) அவர்களுக்குப்பின், தற்போது கத்தோலிக்கரான ஜோ பைடன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டிருந்த அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான, பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், ஜோ பைடன் அவர்களுக்கு ஆயர்கள் சார்பில், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

நாட்டுத் தலைவர்கள் அனைவரும், தேசிய ஒன்றிப்பு உணர்வில் இணைந்து, பொது நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு, காலம் கனிந்துள்ளது என்றும், கத்தோலிக்கர் மற்றும், அமெரிக்கர்கள் என்ற முறையில், அனைவரும் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவேண்டும் மற்றும், இவ்வுலகில் அவரது இறையாட்சியைக் கட்டியெழுப்பவேண்டும் என்றும், பேராயர் கோமஸ் அவர்கள், அச்செய்தியில் கூறியிருந்தார்.

இந்த மிகப்பெரும் நாடு கட்டியெழுப்பப்பட்ட அதே இலக்கோடு, தற்போது அனைவரும் உழைப்பதற்கு, அந்நாட்டின் பாதுகாவலராகிய புனித கன்னி மரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவதாகவும், பேராயர் கோமஸ் அவர்கள், அச்செய்தியில் கூறியிருந்தார்.

"Fratelli tutti" திருமடலை அனைவரும் தியானிக்க அழைப்பு

 புலம்பெயர்ந்தோருடன் நடைப்பயணம் மேற்கொண்ட கர்தினால் தாக்லே - கோப்புப் படம் (2019)


நல்ல சமாரியர் உவமை, நமக்கு அறிமுகமில்லாதவர்களை அன்புகூர அழைப்பு விடுக்கின்றது, இதுவே உலகளாவிய அன்பு. இந்த அன்பில், பிறரன்புச் செயல்கள் ஆற்ற தூண்டப்படுகிறோம் - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் மாதம் வெளியிட்ட, "Fratelli tutti", அதாவது, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற புதிய திருமடலை, நம்பிக்கையாளர்கள் அனைவரும் வாசித்து, தியானிக்குமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நவம்பர் 12, இவ்வியாழனன்று, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் நடத்திய, இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய, அந்நிறுவனத்தின் தலைவரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், பாரபட்சமின்றி, அனைத்து மக்களையும், தெளிவான செயல்கள் வழியாக அன்புகூரக் கற்றுக்கொள்ளுமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலின் ஒளியில், அன்பு, அல்லது, பிறரன்பை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது குறித்து நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், இத்திருமடலில் திருத்தந்தை வலியுறுத்தியுள்ள, உலகளாவிய அன்பு, சந்திப்பு கலாச்சாரம் ஆகிய இரு கூறுகள் பற்றி விளக்கினார்.

உலகளாவிய அன்பு

கடவுள் அனைவரையும் அன்பு கூர்கிறார், இந்த அன்பையே இயேசு வெளிப்படுத்தினார் என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இயேசு எல்லாரையும், குறிப்பாக, அன்புகூரத்தகுதியற்றவர்கள், புறவினத்தார் என்று, சமுதாயம் ஒதுக்கியவர்களை அன்புகூர்ந்தார், என்பதை, நாம் நல்ல சமாரியர் உவமை வழியே அறிந்துகொள்கிறோம் என்று கூறினார்.

நல்ல சமாரியர் உவமை, நமக்கு அறிமுகமில்லாதவர்களை அன்புகூர அழைப்பு விடுக்கின்றது, இதுவே உலகளாவிய அன்பு என்றும், இந்த அன்பில், பிறரன்புச் செயல்கள் ஆற்ற தூண்டப்படுகிறோம் என்றும் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள்,  உலகளாவிய அன்பு, சந்திப்பு கலாச்சாரத்தோடு இணைந்து செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

சந்திப்பு கலாச்சாரம்

ஒருவர் மற்றவரோடு உரையாடுகையில், நாம், மறுக்கப்படாத நமது தனித்துவம் மற்றும், பாதுகாப்பாக இருக்கும் சமய தனித்துவம் பற்றியும் அறியவருகிறோம். இது, பல்சமய உரையாடலுக்குத் திறந்தமனம் உள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது என்றுரைத்தார், கர்தினால் தாக்லே.

சந்திப்பு கலாச்சாரத்தின் வழியாக, பல்வேறு கலாச்சாரங்களைச் சந்திக்கின்றோம், இந்நிலையில், அரசியல், பொருளாதாரம், கலவரங்களுக்குத் தீர்வு, நட்பு கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றை சிறப்பாக ஆற்றுவதற்கு வழிகளைக் காண்கிறோம் என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இவையனைத்தும் பொது நலனுக்காகப் பணியாற்ற நம்மை இட்டுச் செல்கின்றது என்று கூறினார்.

மேலும், கர்தினால் தாக்லே அவர்கள், நவம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 - நான்காவது உலக வறியோர் நாள் நிகழ்வுகள்

 2019 உலக வறியோர் தினமன்று வறியோருடன் உணவருந்தும் முன்னர் செபிக்கும் திருத்தந்தை (17112019)


உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 60 பங்குத்தளங்களில் உள்ள 5000 குடும்பங்கள் சமைப்பதற்கு, ஒவ்வொரு நாளும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன - பேராயர் Fisichella

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 15 வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில், நான்காவது வறியோர் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு முயற்சிகளை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், விளக்கிக் கூறினார்.

நவம்பர் 12 இவ்வியாழனன்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி நேரடி ஒளிபரப்பில், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்கள், வறியோர் உலக நாளைக் குறித்த விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

சீராக்கின் ஞானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள, “ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு” (சீராக்.7:32) என்ற அறிவுரையை மையப்படுத்தி, நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 விளைவித்துள்ள துன்பங்களுக்கு நாம் தரக்கூடிய பதிலிறுப்பை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் என்று பேராயர் Fisichella அவர்கள், இச்சந்திப்பின் துவக்கத்தில் கூறினார்.

நவம்பர் 15 இஞ்ஞாயிறன்று காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், குறிப்பிட்ட அளவு விசுவாசிகளின் பங்கேற்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலி, Rai 1, TV2000, Telepace உட்பட, உலகின் பல்வேறு கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று பேராயர் Fisichella அவர்கள் கூறினார்.

கடந்த மூன்று வறியோர் உலக நாள்களையொட்டி, புனித பேதுரு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் மருத்துவமனை, மற்றும் வறியோருடன் திருத்தந்தை கலந்துகொண்ட மதிய உணவு ஆகிய நிகழ்வுகள், இவ்வாண்டு, கொள்ளைநோயின் தடுப்பு விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை, பேராயர் Fisichella அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேவேளை, இந்தக் கொள்ளைநோய் ஆரம்பமானதிலிருந்து, திருத்தந்தையின் தர்மப்பணி அலுவலகம் நடத்தி வரும் மருத்துவமனை வழியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும், குறைந்தது 50 பேருக்கு கொரோனா தொற்றுக்கிருமி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதையும் பேராயர் Fisichella அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Roma Cares மற்றும் Elite Supermarkets ஆகிய நிறுவனங்களின் தாராள உதவிகளுடன் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 60 பங்குத்தளங்களில் உள்ள 5000 குடும்பங்கள் சமைப்பதற்கு, ஒவ்வொரு நாளும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருவதையும் பேராயர் Fisichella அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

UnipolSai Assicurazioni நிறுவனத்தின் உதவியுடன், 15,000 மாணவர்களுக்குத் தேவையான 3,50,000 முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறிய பேராயர் Fisichella அவர்கள், 4வது வறியோர் உலக நாளன்று கத்தோலிக்கத் திருஅவையில் பல்வேறு முயற்சிகள், அந்தந்த நாட்டு அரசுகளின் விதிமுறைகளை கடைப்பிடித்து மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

வறியோர் உலக நாளில், இந்தியத் திருஅவை

 ஏழைகளோடு கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்


இந்தியத் திருஅவை, சிறுபான்மையாக இருந்தாலும், இந்த கொள்ளைநோய் காலத்தில், 2 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, நிவாரண உதவிகளை ஆற்றியுள்ளது - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் வறியோர் உலக நாளில், இந்தியத் திருஅவை, ஏழைகளுக்கு, உதவியையும், அன்பையும் வழங்குகின்றது என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், நான்காவது வறியோர் உலக நாள் பற்றி ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நாம் பிறரன்புச் செயல்கள் ஆற்றுகையில், அன்பையும் சேர்த்தே வழங்குகின்றோம் என்றும், ஏழைகளுக்கு பணத்தை மட்டும் கொடுக்கவேண்டாம், உங்கள் அன்புக் கரத்தை நீட்டுங்கள் என்றும், புனித அன்னை தெரேசா அவர்கள் அடிக்கடி கூறுவார் என்பதைக் குறிப்பிட்டார்.

அன்பு என்பது இரக்கப்படுவது அல்ல என்றும், இந்த கொள்ளைநோய் காலத்தில், இந்தியத் திருஅவை, ஏழைகளுக்கு கரத்தை நீட்டுகின்றது என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உங்கள் கரங்களைத் தொண்டாற்றவும், உங்கள் இதயங்களை அன்புகூரவும் பயன்படுத்துங்கள் என்ற அன்னை தெரேசாவின் வார்த்தைகளை, வறியோர் உலக நாளில் தொடர்ந்து செயல்படுத்துகிறோம் என்று கூறினார்.

இவ்வாண்டு வறியோர் உலக நாள், தீபங்களின் விழாவான தீபாவளி நாளையொட்டி சிறப்பிக்கப்படுகின்றது, இந்தியத் திருஅவையால் பரப்பப்பட்ட அன்பு மற்றும், பிறரன்பு ஒளி, துன்பம், வறுமை மற்றும், பசி ஆகியவற்றுக்கு மத்தியில் மெல்லிய கீற்றாக உள்ளது என்று உரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருமுழுக்கு மற்றும், உறுதிபூசுதல் ஆகிய அருளடையாளங்கள் வழியாக, நாம் உலகின் ஒளியாகத் திகழவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியத் திருஅவை, சிறுபான்மையாக இருந்தாலும், இந்த கொள்ளைநோய் காலத்தில், 2 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, 130 கோடி ரூபாய் செலவில்,  நிவாரண உதவிகளை ஆற்றியுள்ளது என்பதையும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் குறிப்பிட்டார். (AsiaNews)

கடல்தாவரங்கள் வளர்ப்பால் உலகில் பசியை அகற்ற முடியும்

 தென்னாப்ரிக்காவில் சுற்றுச்சூழல் நாள்


கடல் தாவரங்கள், மீத்தேன் வாயு வெளியேற்றத்தை, 90 விழுக்காடு குறைக்கும், இவை உணவில் சேர்க்கப்படும்போது, அவை செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தேவைகளைக் குறைக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெருங்கடலில், கடல்தாவரங்களை இரண்டு விழுக்காட்டுப் பகுதியில் மட்டும் பயிர்செய்தாலே, இந்த உலகில் நிலவும் பசிப்பிரச்சனையை முற்றிலுமாக அகற்ற முடியும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கடல்தாவரங்களை பயிர்செய்தால், அது, காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் மற்றும், கடல் மாசுபடுதலைக் குறைக்கவும், 2030ம் ஆண்டுக்குள் உலகில் நிலவும் பசிக்கொடுமையை முற்றிலும் அகற்றும் ஐ.நா.வின் இலக்கை நிறைவேற்றவும் உதவும் என்று, ஐ.நா. வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

பெருங்கடலில் இரண்டு விழுக்காட்டுப் பகுதியை மட்டுமே பயிர்செய்தால், இந்த உலகின் 12 பில்லியன் மக்களுக்குத் தேவையான புரோட்டின் சத்தை விநியோகிக்கலாம் என்றும், ஐ.நா.வின் பெருங்கடல் சார்ந்த மூத்த ஆலோசகர் Vincent Doumeizel அவர்கள் கூறினார்.

கடல்தாவரங்களில், புரோட்டின் சத்து மிக அதிகமாகவும், தேவையற்ற கொழுப்பு சத்தும், மாவுச் சத்தும் குறைவாகவும், வைட்டமின்கள், இரும்புச் சத்து, மற்றும், துத்தநாகம் அதிகமாகவும் உள்ளன என்றும், Doumeizel அவர்கள் கூறினார்.

ஆசியாவில் கடல்தாவர உணவு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்றும், ஜப்பானில் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு மூன்றுவேளை இந்த உணவை உண்கின்றனர் என்றும், கொரியாவில் பல உணவுத் தயாரிப்புக்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன என்றும் சீனாவில் பலர் இவற்றை உண்கின்றனர் என்றும், Doumeizel அவர்கள் கூறினார்.

கடல் தாவரங்களால், மீத்தேன் வாயு வெளியேற்றம், 90 விழுக்காடு குறைக்கப்படும், இவை உணவில் சேர்க்கப்படும்போது, அவை செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தேவைகளைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நமிபியா கடற்பகுதியில் ஏறத்தாழ எழுபதாயிரம் ஹெக்டேர் பகுதியில் கடலுக்கடியில் கடல்தாவரக் காடுகளை வளர்ப்பதற்கு, Kelp Blue என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், அதனைச் சுற்றி இருபது விழுக்காட்டுப் பகுதியில் மீன்வளத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. (UN)

காலணியிடம் மன்னிப்பா?

 மன்னிப்பின் தேவை


நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம்தான் செய்கிறோம். பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே, கோபம் அடங்கி விடும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு மகானைத் தேடி ஒருவர் படபடப்போடும் கோபத்தோடும் வந்தார். கால் செருப்பை கழற்றிக் கோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தார். கதவை வேகமாக அடித்துச் சாத்தினார். அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தார்.

மகான், “அப்பா, உன் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு வா” என்றார்.

“உயிரற்ற அப்பொருட்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?” என்று கேட்டார், வந்தவர்.

“அந்தச் செருப்புக்கும், கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய். மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?” எனக் கேட்டார் மகான்.

அவர் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டார். அவரது மூர்க்க குணம் அடங்கியது.

“நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம்தான் செய்கிறோம். பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே, கோபம் அடங்கி விடும்” என்றார் மகான்.

'செபிக்கும் கரங்கள்'

 Albrecht Dürer அவர்கள் உருவாக்கிய 'செபிக்கும் கரங்கள்'

தம்பிக்காக மேற்கொண்ட கடின உழைப்பால் உருவிழந்துபோன அண்ணன் ஆல்பர்ட் அவர்களின் 'செபிக்கும் கரங்கள்', கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இறைவேண்டல் செய்வதற்கு, நம்மை அழைக்கிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

15ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் 18 குழந்தைகள் இருந்தனர். வறுமை மிகுந்த அக்குடும்பத்தில் பிறந்த மூத்த இரு சகோதரர்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்ததால், ஓவியக் கலையைப் பயில விரும்பினர். இருந்தாலும், வீட்டின் வறுமையை எண்ணி தங்கள் கனவை நனவாக்க முடியாமல் தவித்தனர். ஒரு சில ஆண்டுகளுக்குப்பின், அவ்விருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, சகோதரர்களில் ஒருவர், நான்கு ஆண்டுகள் ஓவியக் கலைக்கூடத்திற்கு படிக்கச் செல்வார், அவரது கல்விக்கு உதவிசெய்ய, மற்றொரு சகோதரர் சுரங்கத்தில் தொழில் செய்வார். நான்கு ஆண்டுகள் சென்றபின், ஓவியக் கலையைப் படித்தவர், தன் ஓவியங்களை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டோ, அல்லது அவரும் சுரங்கத்தில் உழைத்தோ, அதுவரை சுரங்கத்தில் உழைத்த சகோதரரைப் படிக்க அனுப்பவேண்டும். இதுதான் அவர்கள் எடுத்த முடிவு. அதன்படி, அவ்விருவரும் சீட்டுக் குலுக்கி போட்டபோது, ஆல்பர்ட், ஆல்ப்ரெக்ட் (Albert, Albrecht) என்ற அந்த இரு சகோதரர்களில், ஆல்பர்ட் அவர்கள், உழைப்பார் என்றும், ஆல்ப்ரெக்ட் அவர்கள், ஓவியப் பள்ளிக்குச் செல்வார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆல்ப்ரெக்ட் அவர்கள், தன் ஓவியத் திறமையில், மிக அற்புதமாக வளர்ச்சியடைந்தார். அவரது புகழ் நாடெங்கும் பரவியது. நான்கு ஆண்டுகள் கழிந்து, ஒரு தலைசிறந்த ஓவியர் என்ற புகழுடன் அவர் வீடு திரும்பியபோது, ஊரே திரண்டு வந்து, அவருக்கு விருந்து கொடுத்தது. விருந்தின் முடிவில், ஆல்ப்ரெக்ட் அவர்கள், எழுந்து, இத்தனை ஆண்டுகள் தனக்காக உழைத்த தன் சகோதரரை அனைவர் முன்னிலையிலும் பாராட்டியபின், அவரை  நோக்கி, "ஆல்பர்ட், நாம் எடுத்த முடிவின்படி, இனி நான் சம்பாதிக்கப் போகிறேன், நீ ஓவியப்பள்ளிக்கு படிக்கச்செல்" என்றார். ஆல்பர்ட் அவர்கள் எழுந்து, "தம்பி, மிக்க நன்றி. ஆனால், என்னால் இப்போது பள்ளிக்குச் சென்று ஓவியம் படிக்க இயலாது. இந்த நான்கு ஆண்டுகள் நான் சுரங்கத்தில் வேலை செய்ததால், என் கை விரல்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. இனி என்னால் தூரிகை பிடித்து படம் வரையமுடியாது" என்று கூறினார். உருக்குலைந்து போயிருந்த தன் சகோதரரின் கரங்களை, தன் இரு கரங்களாலும் இறுகப் பற்றி, அவற்றை, தன் கண்ணீரால் நனைத்தார் ஆல்ப்ரெக்ட்.

Albrecht Dürer அவர்கள் உருவாக்கிய பல அழகான ஓவியங்கள், மிகவும் புகழ்பெற்றதாய் விளங்கின. ஆனால், தன் அண்ணனின் பழுதடைந்த கரங்களை வைத்து அவர் தீட்டிய ஓர் ஓவியம், நம்மில் பலருக்கு மிகவும் பழக்கமான ஓர் ஓவியம். 'கரங்கள்' என்று தலைப்பிட்டு அவர் தீட்டியிருந்த அந்த ஓவியம், 'செபிக்கும் கரங்கள்' என்ற பெயருடன், இன்று, உலகின் பல ஆலயங்களிலும், இல்லங்களிலும் காணப்படுகிறது. தம்பிக்காக மேற்கொண்ட கடின உழைப்பால் உருவிழந்துபோன அண்ணன் ஆல்பர்ட் அவர்களின் 'செபிக்கும் கரங்கள்', கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இறைவேண்டல் செய்வதற்கு, நம்மை அழைக்கிறது.

Tuesday 10 November 2020

நேர்மறையான எண்ணங்கள் மீண்டும் புத்துயிர்பெற...

 தீபாவளி திருநாளுக்கு தயாரிப்பு


கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், அந்நோய் முடிவுற்றபின்னும், நேர்மறையான எண்ணங்களும், நம்பிக்கையும், உலகில் மீண்டும் புத்துயிர்பெறச் செய்வதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், அந்நோய் முடிவுற்றபின்னும், நேர்மறையான எண்ணங்களும், நம்பிக்கையும் உலகில் மீண்டும் புத்துயிர்பெறச் செய்வதற்கு, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது.

இம்மாதம் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இந்துமத நண்பர்களுக்கு, நவம்பர் 06, இவ்வெள்ளியன்று, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள இன்னல்கள் மத்தியில், அச்சம், குழப்பம் மற்றும், கவலை ஆகிய அனைத்தும் அகன்று, நட்பு, பரந்தமனம், மற்றும், ஒருமைப்பாடு ஆகியவற்றின் ஒளியால், இதயங்களும் மனங்களும் நிரப்பப்படட்டும் என்ற தன் நல்வாழ்த்துக்களையும், அத்திருப்பீட அவை தெரிவித்துள்ளது.

இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் உரையாடலையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்தில், இத்தகைய செய்தி, இவ்வாண்டில் 25வது முறையாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் அத்திருப்பீட அவை, மனித சமுதாயம் அனைத்தின் நன்மைக்காக, நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதை ஊக்குவிப்பதற்கும், இத்தகைய செய்தி தூண்டுதலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.    

கோவிட்-19 கொள்ளைநோய், சமுதாய, பொருளாதார, அரசியல் மற்றும், ஆன்மீகம் ஆகிய துறைகளில் உருவாக்கியுள்ள எண்ணற்ற தடைகளுக்கு மத்தியிலும், மக்கள் வருங்காலத்தை உடன்பாட்டு உணர்வு மற்றும், நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கு, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் துணிந்து செயல்படுமாறு இத்திருப்பீட அவை கேட்டுக்கொண்டுள்ளது.

நம்மைப் படைத்துக் காத்து வருபவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற உறுதிப்பாட்டில் நம்பிக்கை வைத்து, நம் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அச்செய்தி, கொரோனா கொள்ளைநோய், நம் சிந்தனையிலும் வாழ்வுமுறையிலும் எண்ணற்ற நல்மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

நம் மத மரபுகள், போதனைகள், விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்துக்களும் கிறிஸ்தவர்களும், நன்மனம்கொண்ட எல்லாரோடும் இணைந்து, நம் சமுதாயங்களின் இதயங்களில், தற்போதைய இன்னலான நாள்களில் மட்டுமல்லாமல், நம்முன் உள்ள வருங்காலத்திலும், நேர்மறைச்சிந்தனை மற்றும், நம்பிக்கை கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும், அனைத்து மனித சமுதாயத்தின் நன்மைக்காக தங்களையே அர்ப்பணிக்கவும்வேண்டும் என்று, பல்சமய உரையாடல் திருப்பீட அவை அழைப்பு விடுத்துள்ளது. 

பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள இந்த தீபாவளிச் செய்தியில், அந்த அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்களும், அதன் செயலர் பேரருள்திரு Indunil Kodithuwakku Janakaratne Kankanamalag அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவின் தலித் விடுதலை ஞாயிறு

 புது டெல்லியில் தலித் மக்களின் போராட்டம்


பெண் தெய்வங்களை, அதிகாரம், அறிவு, மற்றும், செல்வமாக வழிபடும் இந்தியாவில், தலித் இன பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில், அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் தலித் விடுதலை ஞாயிறை இவ்வாண்டு 'சாதிக்கு சவால்: தலித் பெண்களின் மாண்பை உறுதிச் செய்தல்' என்ற தலைப்பில் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து இஞ்ஞாயிறன்று சிறப்பித்தன.

இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் துன்பங்களை அனுபவித்துவரும் தலித் இன மக்களை, குறிப்பாக, தலித் இன பெண்களின் மாண்பு குறித்து அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் என, இந்திய கத்தோலிக்க திருஅவையும், தேசிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

பெண் தெய்வங்களை, அதிகாரம், அறிவு, மற்றும், செல்வமாக வழிபடும் இந்தியாவில், பெண்கள், குறிப்பாக தலித் இன பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில், அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது என்ற கவலையை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின், வறியோர் மற்றும் பழங்குடியினர் அவையின் தலைவர், ஆயர் சரத் சந்திர நாயக் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அண்மைக்காலங்களில் பல தலித் பெண்கள், திட்டமிட்டு தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் துணையுடன் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிவதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் ஆயர்.

இந்துக்கள் அல்லாத தலித் இன மக்களுக்கு அனைத்து சலுகைகளும் 1950ம் ஆண்டு அரசியலமைப்பின்படி, தடுக்கப்பட்டபோதிலும், 1956ம் ஆண்டு சீக்கிய மத தலித் இன மக்களுக்கும், 1990 ஆண்டு புத்தமத தலித் இனத்தவருக்கும் இந்த சலுகைகள் திரும்பவும் வழங்கப்பட்டன. அனால், இந்திய கிறிஸ்தவ, மற்றும், இஸ்லாம் மத தலித் இன மக்கள் தங்கள் சலுகைகளுக்காக இன்னும் போராட வேண்டிய நிலையே இருந்து வருகிறது.

இந்தியாவின் ஏறக்குறைய 120 கோடி மக்களுள் 20 கோடியே 10 இலட்சம் பேர், சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். இந்தியாவின் 2 கோடியே 50 இலட்சம் கிறிஸ்தவர்களுள் 60 விழுக்காட்டினர், தலித், மற்றும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். (UCAN)

அருள்பணியாளர் Stan Swamyக்கு மேலும் 21 நாட்கள் காவல் நீட்டிப்பு

 இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாடு


கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளையும் மீறி அருள்பணியாளரை மும்பைக்கு எடுத்துச் சென்ற காவல்துறை, அதே கொள்ளைநோயைக் காரணம் காட்டி அவரை நீதிமன்றத்திற்கு கொணர மறுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் மும்பையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களை, மேலும் 21 நாட்களுக்கு சிறையில் வைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் ஒன்று உத்தரவு வழங்கியுள்ளது.

அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களை கடந்த மாதம் 8ம் தேதி இராஞ்சியில் கைது செய்து, கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த கட்டுப்பாடுகளையும் மீறி, அவரை மும்பைக்கு எடுத்துச் சென்ற தேசிய புலனாய்வுத் துறையின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர், அதே கோவிட் பிரச்சனையைக் காரணம் காட்டி, அவரை நீதிமன்றத்திற்கு முன் கொணர மறுத்து வருவது, முரண்பாடாக உள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் 23ம் தேதி அவர் நீதிமன்றத்தில் கொணரப்படவேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கட்டளையிட்ட போதிலும், இந்த கோவிட் காலத்தில் அவரின் வயதை கருத்தில் கொண்டு, அவரைக் கொணரமுடியாது என காவல்துறை அறிவித்து, அவரை கொணர மறுத்தது குறிப்பிடத்தக்கது..

பழங்குடியினத்தவரின் நில உரிமைகளுக்கு அயராது போராடி வந்த இயேசு சபை அருள்பணியாளர் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டு மும்பையில் சிறைவைக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து தடுப்புக்காவல் கால அளவு நீட்டிக்கப்பட்டே வருகின்றது.

தற்போது நவம்பர் 26ம் தேதி இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை தடுப்புக்காவல் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி சுவாமியின் வெளிஉலகத் தொடர்புகள் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட குளிர்கால உடைகளைக்கூட சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாகவும், இவ்வழக்கை ஆராய்ந்து வரும் வழக்கறிஞரும், இயேசு சபை அருள்பணியாளருமான சந்தானம் அவர்கள் தெரிவித்தார்.

குப்பை வண்டிகளைச் சுத்தப்படுத்துவோம்

 குப்பைகளை அல்ல, நன்றியுணர்வை அதிகரிப்போம்


நம் மீது, யாராவது, எந்த இடத்திலாவது, காரணமின்றி எரிச்சல்பட்டாலோ, வன்சொற்களை வீசினாலோ, அல்லது கொடுமைகள் புரிந்தாலோ, பதிலடி கொடுக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவதே மனதிற்கு நிம்மதி தரும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆசிரியர் ஒருவரிடம் படித்து வந்த மாணவர்கள் ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அவர்களில் ஒரு மாணவன் மற்ற மாணவர்களைவிட, மிகுந்த அறிவாளியாக விளங்கினான். ஒவ்வொரு நாளும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். படிப்பு, நடிப்பு, விளையாட்டு போன்ற எல்லாத் துறைகளிலும் சிறந்தவனாக, அவனே வகுப்பில் நம்பர் 1 ஆகத் திகழ்ந்தான். பொதுவாகவே, இத்தகைய மாணவர்களிடம் ஆசிரியர்களுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அந்த மாணவனின் வகுப்பு ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும், அக்கறையும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அந்த மாணவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லாரையும் ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்தான். தன்னைவிட மூத்த மாணவர்களைக்கூட அவன் மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமானக் கேள்விகள் கேட்டு, அவர்கள் பதில் தெரியாமல் விழிப்பதைப் பார்த்து, கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தால் அழும்வரை கேலிசெய்யத் தொடங்கினான். இந்த விடயம் வகுப்பு ஆசிரியரின் காதுகளுக்கு எட்டியது. பன்முக அறிவாளியான தனது மாணவனை, இந்த ஆணவம் அழித்துவிடும் என்பதை உணர்ந்த ஆசிரியர், அவனது நெறிதவறிய போக்கை அவனுக்கு உணர்த்த விரும்பினார். அவனுக்கு நேரடியாக அறிவுரை சொன்னால், அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில், அவன் தன்னையேகூட எதிர்த்துப் பேசக்கூடும் என்று உணர்ந்த ஆசிரியர், வேறொரு வழியில் சிந்தித்தார்.

அடுத்த நாள் ஆசிரியர், அந்த மாணவனைத் தன்னிடம் அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் மெய்யியலைக் கரைத்துக் குடித்தவர். அவர், இருநூறுக்கும் அதிமான நூல்களை எழுதியிருப்பவர். மத்திய அரசிடம் பத்து முறை சிறந்த அறிஞருக்கான விருதினையும் பெற்றிருப்பவர். அவரிடம் கற்ற பல மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்ந்த பதவியில் உள்ளனர். இப்போது நீ பக்கத்துத் தெருவிலுள்ள தச்சுத் தொழிலாளரிடம் சென்று விவரத்தைச் சொல்லி, அழகான ஒரு சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். அந்தப் பெட்டி, இன்று மதியம், இறந்த என் நண்பரின் அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்று சொன்னார். உடனே அந்த மாணவன் ஆசிரியரிடம், இதோ, உடனே செய்து முடிக்கின்றேன், ஐயா என்று சொல்லிவிட்டு தச்சுத் தொழிலாளர் வீட்டுக்கு விரைந்தான். அந்த தச்சுத் தொழிலாளரும் அவனை வரவேற்று, அவன் வந்த விடயத்தைக் கேட்டார். அவனும், இன்று 12 மணிக்குள், அழகான சவப்பெட்டி ஒன்று வேண்டும் என்று சொன்னான். உடனே, தச்சுத் தொழிலாளரும், இறந்தவர் குறித்த விவரங்களைக் கேட்டார். அந்த மாணவனும், இறந்தவர் பற்றி, ஆசிரியர் சொன்ன அனைத்துப் பெருமைகளையும் அப்படியே ஒப்பித்தான். உண்மையான ஞானம்

அந்த மாணவன் சொல்லி முடிப்பதற்குள், அந்த தச்சுத் தொழிலாளர் சூடாகி விட்டார். "ஏன்டா! இன்னிக்கு நீ பொழுதுபோக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம, வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்று கோபமாகக் கேட்டார். இந்தக் கேள்வி அவனுக்கு அடங்காத கோபத்தை மூட்டியது. அவன் அவரிடம், இறந்தவர் பற்றி இவ்வளவு சொல்லியும் புரியவில்லை என்றால், நீங்கள்தான் ஒரு அடி முட்டாள் என்றான். அந்த தச்சுத் தொழிலாளரும், "அறிவு கெட்டவனே! என்னதான் படித்திருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும், எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது, அந்த சடலத்தினுடைய உயர, அகலந்தான். நீங்கள் படிக்கும் படிப்பெல்லாம் உடம்பில் உயிர் உள்ளவரைக்கும்தான். உனக்குச் சவப்பெட்டி வேண்டும் என்றால், மரியாதையாகப் போய் சடலத்தை அளவெடுத்துக்கொண்டு வா" என்றார். அந்தச் சொற்கள், அவனுக்கு. எங்கோ பளீரென்று அடி விழுந்ததுபோல் இருந்தது. மனித அறிவு இவ்வளவுதானா? இதற்காகவா இத்தனை பேரை நான் அவமதித்தேன்? என்று சிந்தித்தான். அவனுக்கு தன்னை நினைத்து அவமானமாக இருந்தது. அவன் கூனிக்குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான். "என்ன மகனே! சவப்பெட்டி தயாரா?" என்று ஆசிரியர் கேட்டார். அதற்கு அவன், ஐயா, "அடிச்சாச்சு. ஆனா சவப்பெட்டியை அல்ல, என்னோட தலைகனத்தை" என்று பதில் சொன்னான். உடனே ஆசிரியர் அவனை அரவணைத்து, புன்னகைத்துக்கொண்டே சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் அறிவில் சிறந்து விளங்கினாலும், நமது உடம்பு, அழியப்போவதுதான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்! என்று.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி ஊடகங்கள் தங்களது அலசல்களைப் பதிவுசெய்துள்ளன. பிபிசி தமிழ் ஊடகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் அவர்கள், ஒருவரை சுட்டு இருந்தால்கூட, அவரது ஆதரவாளர்கள், அவருக்கே வாக்களித்திருப்பார்கள். ஆனால் அவரின் ஆணவம் மற்றும், அவரின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை,  அவரை நான்கு ஆண்டுகளுக்குமுன் ஆதரித்தவர்களைக்கூட, இந்த முறை ஆதரிக்கவிடாமல் செய்துவிட்டன. இந்த விடயம், குறிப்பாக, அமெரிக்க புறநகர் பகுதிகளில் நடந்து இருக்கின்றன.

விகடன் ஊடகம், தனது அலசலில் இவ்வாறு பதிவுசெய்துள்ளது. அதாவது, அமெரிக்காவை, அந்நாட்டினர் பார்க்கும்விதம் வேறு. அதேநேரம் உலகம், அமெரிக்காவை முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் முடிவுகள் எடுக்கும் சனநாயக நாடாகப் பார்க்கிறது. இன்னொரு பக்கம் விஷம் தோய்ந்த கருத்துகளால் அமெரிக்கச் சமூகத்தையே பிளவுபடுத்தியவர், கொரோனாவை அலட்சியம் செய்து 2,35,000 அமெரிக்கர்கள் பலியாகக் காரணமாக இருந்தவர், வரலாறு காணாத அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படும் வகையில் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தியவர்... இப்படியெல்லாம், ட்ரம்ப் அவர்களை உலகம் பார்க்கிறது.

கோவிட்-19 பாடங்கள்

இந்த உலகத்திலிருந்து குறைந்தது போன்ற மாயையை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்கிருமி, இப்போது பல நாடுகளில் மீண்டும், இன்னும் வீரியமாக தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. அதேநேரம், இது சில பாடங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா, ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல், மூன்றாவது உலகப் போரில் வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் வெளிப்படையாய்க் காட்டிக்கொள்வதுபோன்று, கல்வியில் கற்றுத்தேர்ந்தவர்கள் அல்ல. உண்மையில் வறியோரைவிட, செல்வந்தர்களே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவானவர்கள். அருள்பணியாளர், கோவில் குருக்கள், ஜோதிடர்கள் போன்ற எவராலும், எந்த நோயாளியையும் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவ மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களே, விளையாட்டு வீரர்களைவிட அதிக மதிப்புமிக்கவர்கள். விலங்குகள், விலங்கியல் காட்சியங்களில் உணர்வதுபோலவே, மனிதர்களும், கோவிட்-19 கொள்ளைநோய் Quarantineல் உணர்கின்றனர். பூமிக்கோளம், மனிதரின் செயல்பாடின்றி விரைவில் மீண்டும் தானாக உற்பத்தி செய்கிறது. பதப்படுத்தப்பட உணவு இன்றி, நாம் அனைவருமே உயிர் வாழலாம். இவ்வாறு ஏறத்தாழ 12 பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது.  

குப்பை வண்டி விதி

‘குப்பை வண்டி விதி’ பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கலாம். ஒரு சமயம், ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், பணி காரணமாக, வாடகை வாகனம் ஒன்றில், வேகமாக இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் இவர்களுக்கு முன்னாள் சென்ற வாகனம் ஒன்று, திரும்புவதற்கான அறிகுறி எதையுமே கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய, அந்த அதிகாரி சென்ற வாகனத்தின் ஓட்டுனர்,  சாமார்த்தியமாக, எவ்வித விபத்தும் இன்றி தனது வாகனத்தை நிறுத்தினார். ஆனால், அவருக்கு முன்னே சென்ற அந்த வாகனத்தின் ஓட்டுனர், திரும்பிப் பார்த்து, இந்த ஓட்டுனரை நா கூசும் வார்த்தைகளால் திட்டினார். அதற்கு வசை வார்த்தைகளால் பதிலடி கொடுக்காமல், ஏதோ நண்பரிடம் நடந்துகொள்வதுபோல், புன்னகையோடு கைகளை காட்டினார், வாடகை வாகன ஓட்டுனர். இதனை வியப்போடு கவனித்த அந்த அதிகாரியிடம், அந்த ஓட்டுனர், இவ்வாறு சொன்னார். ஐயா, இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கின்றனர். விரக்தி, ஏமாற்றம், கோபம், எரிச்சல் போன்ற, நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும் மனம் நிறைய வைத்திருக்கின்றனர். அந்த குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவைப்படுகின்றது. சில நேரங்களில் அவர்கள் அவற்றை என்னைப் போன்றவர்களிடம் இறக்கி வைப்பார்கள். அதை நாம் நமக்கென எடுத்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே அவர்களைப் பார்த்து, ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு, நாம் நம் வழியில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நம்மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்துகொண்டுபோய், நாம் பணிபுரியும் இடத்திலோ வீட்டிலோ, அல்லது, பொதுவில் மற்றவர்களிடமோ கொட்டக் கூடாது. அப்படிச் செய்தால் நமது பெயர்தான் கெட்டுவிடும் என்று, வாடகை கார் ஓட்டுனர் சொல்ல, அந்த அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்தார்.

ஆணவம், வெறுப்பு, கோபம் போன்ற குப்பை வண்டிகள் தலைகளை நிறைத்திருந்தால், வாழ்வில் மதிப்பும், வெற்றியும் பெறுவது கடினமே. அந்த வாடகை வாகன ஓட்டுனர் போன்று, நாமும், நம் மீது, யாராவது, எந்த இடத்திலாவது, காரணமின்றி எரிச்சல்பட்டாலோ, வன்சொற்களை வீசினாலோ, அல்லது கொடுமைகள் புரிந்தாலோ, பதிலடி கொடுக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவதே நம் மனதிற்கு நிம்மதி தரும். மற்றவர் மனம் நிறையக் குவித்து வைத்திருக்கும் இத்தகைய குப்பைகள் நம்மீது கொட்டப்பட நம்மை ஒருபோதும் அனுமதிக்காதிருப்போம். அதேநேரம், நம்மைப் புரிந்து நடத்துகிறவர்களை நன்றியோடு நினைப்போம். அவ்வாறு நடத்தாதவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.

உண்மை அன்புக்கு மொழி ஏது?

 கபீர் தாசர்


வயது முதிர்ந்த தம்பதியரோ, நீண்டகாலம் சென்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் நண்பர்களோ, உறவுகளோ, தங்களுக்குள் பரிமாறும் மொழி மௌனம். ஆம். அன்பின் உச்சகட்டத்தில் பேச்சு செயலற்றுபோகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

15ம் நூற்றாண்டில் மிக உயர்ந்த நிலையில் ஞானம் பெற்றிருந்த கபீர் தாசர் அவர்களும்,  ரகீப் அவர்களும், ஒரே நேரத்தில், கிராமம் ஒன்றிற்கு வந்தனர். இவ்வளவு பெரிய ஞானிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பது சாதாரணமாக நடப்பது அல்ல. எனவே, அன்று அந்த இரு ஞானிகளும் தங்கள் கிராமத்திற்கு வந்திருப்பதை அறிந்து மக்கள் மகிழ்ந்தனர். அந்த மக்கள், அந்த ஞானிகளுடைய சீடர்களிடம் சென்று, அந்த இரு மகான்களும் நேருக்கு நேர் சந்தித்து, தங்களுக்கிடையே பேசிக்கொள்வதைக் நாங்கள் கேட்கவேண்டும், அதைப் பார்த்து நாங்கள் பரவசப்படவேண்டும் என்று கூறினர். சீடர்களும், ஞானிகளிடம் சென்று மக்களின் ஆவலைத் தெரிவித்தனர். அந்த ஞானிகளும், எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ஒரு மாலை நேரத்தில், ஓரிடத்தில் சந்திப்பதற்கு இசைவு தெரிவித்தனர். அன்று அவ்விருவரும் சந்திக்கும் அந்த அற்புதத்தைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சந்திப்பில், அவ்விரு ஞானிகளும், பல மணி நேரங்கள் எதுவுமே பேசாமல், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். இருவர் முகங்களிலும் ஒளிமயமான புன்னகை ததும்பியது. இவ்வாறு அவர்கள் இருவரும், நள்ளிரவுவரை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, எதுவுமே பேசாமல், ஒருவரை ஒருவர் வணங்கி விடைபெற்றுச் சென்றனர். பின்னர் அவர்களுடைய சீடர்கள் அவர்களிடம், மகான்களே, உங்களிடமிருந்து வெளிவரும் ஞானம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர், ஆனால் நீங்களோ ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மௌனமாக இருந்துவிட்டு வந்துவிட்டீர்களே என்று கேட்டனர். அப்போது அந்த இரு ஞானிகளும், பேசிவைத்தாற்போல், அன்பின் உச்சகட்டத்தில் வார்த்தைகள் வராது என்று கூறினர்.

வயது முதிர்ந்த தம்பதியரோ, நீண்டகாலம் சென்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் நண்பர்களோ, உறவுகளோ, தங்களுக்குள் பரிமாறும் மொழி மௌனம். ஆம். அன்பின் உச்சகட்டத்தில் பேச்சு செயலற்றுபோகும். அந்நிலையில் பேச வார்த்தைகள் உண்டா? (bing.com தினம் ஒரு கதை)

புத்தர் ஏற்றுக் கொள்ளாதவை

 புத்தர் சிலை


புத்தர் : அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஓர் ஊருக்குள் சென்றார். அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால் அவரோ, எதையும் எடுத்துக்கொள்ளாமல் புன்முறுவலோடு போய்விட்டார். அடுத்த ஊர் வந்தது. அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர். அப்போதும் அவர் புன்முறுவலோடு சென்றுவிட்டார். ஒரு சீடர் கேட்டார், “சுவாமி, அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே, பதிலுக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வந்து விட்டீர்களே? உங்களால் எப்படி முடிகிறது?”

அதற்குப் புத்தபிரான் சொன்னார், “நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை அல்லவா? அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை. அங்கே வயிறு ஏற்றுக்கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கே மனம் ஏற்றுக்கொள்ளாததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வளவுதான்''

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: பக்கிங்காம் கால்வாய் உருவான விதம...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: பக்கிங்காம் கால்வாய் உருவான விதம...

ROBERT JOHN KENNEDY: உலகின் முதல் மொழி எது? | மொழி உருவானது எப்படி? - இ...

ROBERT JOHN KENNEDY: உலகின் முதல் மொழி எது? | மொழி உருவானது எப்படி? - இ...

ROBERT JOHN KENNEDY: நோய் தீர்க்கும் தமிழிசை | முதலாவது உலகத் தமிழிசை...

ROBERT JOHN KENNEDY: நோய் தீர்க்கும் தமிழிசை | முதலாவது உலகத் தமிழிசை...

ROBERT JOHN KENNEDY: தமிழக பாறை ஓவியங்கள் |Rock Paintings in Tamil Nadu...

ROBERT JOHN KENNEDY: தமிழக பாறை ஓவியங்கள் |Rock Paintings in Tamil Nadu...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: காளிங்கராயன் கால்வாய் வரலாறு | K...

ROBERT JOHN KENNEDY: இப்படிக்கு காலம்: காளிங்கராயன் கால்வாய் வரலாறு | K...

ROBERT JOHN KENNEDY: சேரமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் பராமர...

ROBERT JOHN KENNEDY: சேரமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் பராமர...

ROBERT JOHN KENNEDY: Adichanallur | Archaeological Site History in Tami...

ROBERT JOHN KENNEDY: Adichanallur | Archaeological Site History in Tami...

ROBERT JOHN KENNEDY: Attirampakkam | Archaeological Site History | Tami...

ROBERT JOHN KENNEDY: Attirampakkam | Archaeological Site History | Tami...

ROBERT JOHN KENNEDY: Attirampakkam | Archaeological Site History | Tami...

ROBERT JOHN KENNEDY: Attirampakkam | Archaeological Site History | Tami...

ROBERT JOHN KENNEDY: சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? | ...

ROBERT JOHN KENNEDY: சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? | ...

ROBERT JOHN KENNEDY: வரலாற்றில் முதல்முறை: கொடுமணல் ஆராய்ச்சியில் தமிழ்...

ROBERT JOHN KENNEDY: வரலாற்றில் முதல்முறை: கொடுமணல் ஆராய்ச்சியில் தமிழ்...

இப்படிக்கு காலம்: பக்கிங்காம் கால்வாய் உருவான விதம் | 10/10/2020 | Bucki...

உலகின் முதல் மொழி எது? | மொழி உருவானது எப்படி? - இப்படிக்கு காலம் | The ...

நோய் தீர்க்கும் தமிழிசை | முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 | மதுரை...

தமிழக பாறை ஓவியங்கள் |Rock Paintings in Tamil Nadu| Gandhirajan |Tamizhi...

இப்படிக்கு காலம்: காளிங்கராயன் கால்வாய் வரலாறு | KalingarayanCanal | Ipp...

சேரமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் பராமரிப்பின்றி கிடக்கும் நி...

Adichanallur | Archaeological Site History in Tamil | Anthropology in Tamil

Attirampakkam | Archaeological Site History | Tamil | Anthropology in Tamil

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? | Emphasis on Sanskrit? ...

வரலாற்றில் முதல்முறை: கொடுமணல் ஆராய்ச்சியில் தமிழ் நெடில், குறில் எழுத்த...