Monday 27 July 2020

வெறுப்பும், வன்முறையும், குழப்பங்களை இன்னும் அதிகரிக்கும்

புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் ஆலயத்தைப் பாதுகாப்பதில் காவல்துறை

கலிபோர்னியா மாநிலத்தின் புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் பழமைவாய்ந்த கோவில் ஜூலை மாதத் துவக்கத்தில் தீக்கிரையானது. புளோரிடா மாநிலத்தின் கோவில் ஒன்றின் மீது கார் ஒன்றை மோதி, அக்கோவிலை தீக்கிரையாக்க முயற்சி நடந்தது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
வெறுப்பு மற்றும் வன்முறையால் தூண்டப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள கோவில்களுக்கு தீயிடுதல் மற்றும் அப்புனித தலங்களை அவமதிக்கும் வகையில் சேதங்களை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கத்தோலிக்க ஆலயங்கள், திரு உருவங்கள், மற்றும் ஏனைய அடையாளங்களை அகற்றுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோருக்கு, அமெரிக்க ஆயர் பேரவையின் மதச் சுதந்திரம் பணிக்குழுவின் தலைவரும், நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவரும் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.
இப்பணிக்குழுக்களின் தலைவர்களான மியாமி பேராயர் தாமஸ் வென்ஸ்கி (Thomas Wenski) அவர்களும், ஓக்லஹோமா பேராயர் பால் கோக்லி (Paul Coakley) அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வெறுப்பும், வன்முறையும் நம்மிடையே ஏற்கனவே நிலவி வரும் பிரிவுகளையும், குழப்பங்களையும் இன்னும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று கூறியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் பழமைவாய்ந்த கோவில் ஜூலை மாதத் துவக்கத்தில் தீக்கிரையானது என்பதும், ஃபுளோரிடா மாநிலத்தின் ஒரு கோவில் மீது கார் ஒன்றை மோதி, அக்கோவிலை தீக்கிரையாக்க முயற்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கன.
இன்னும் சில இடங்களில், புனிதர்களின் உருவச்சிலைகளும், இயேசு, மற்றும் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் சேதமடைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
"கறுப்பினத்தவரின் உயிர்கள் மதிப்பிற்குரியவை" (#BlackLivesMatter) என்ற அறைக்கூவலுடன், உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, அடிமை வர்த்தகத்தை ஆதரித்த பல வெள்ளையினத்தவரின் உருவச் சிலைகள் அகற்றப்பட்டும், சேதமாக்கப்பட்டும் வருகின்றன.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...