Tuesday, 3 June 2014

மறைசாட்சி புனித ஜஸ்டின் (St. Justin – Martyr)

மறைசாட்சி புனித ஜஸ்டின் (St. Justin – Martyr)

யூதேயாவில் Nablus (Flavia Neapolis) என்ற ஊரில் ஏறத்தாழ கி.பி.100ம் ஆண்டில் பிறந்தவர் ஜஸ்டின். இவர் தான் பெற்ற இளமைகாலக் கல்வியில் திருப்தியடையாமல், கடவுளின் இருப்பைத் தேடும் முயற்சியில் இறங்கினார். இதற்கு மெய்யியல் சிந்தனையுடைய சில பள்ளிகளை அணுகினார். பித்தகோரஸ் மெய்யியல் பள்ளியினர் இவரிடம், முதலில் இசை, வானியல், புவியியல் ஆகியவற்றைக் கற்றுவருமாறு கூறினர். எனவே அவர்களைவிட்டு பிளேட்டோவின் சிந்தனையுடைய மெய்யியல் பள்ளியிடம் சென்றார். ஞானம் கடவுளைக் காண உதவும் என இவர்கள் கூறியதிலும் அவ்வளவாகத் திருப்தியடையாத ஜஸ்டின் கடவுள் எங்கே? எனத் தேடினார். சப்தம் சந்தடிகள், குழப்பும் குரல்கள் இவற்றினின்று ஒதுங்கி, உள்ளத்தில் பேசும் குரலைக் கேட்பதற்கு ஜஸ்டின் எப்பொழுதும் கடற்கரை பக்கம் தனிமையான இடத்துக்குச் செல்வதுண்டு. இப்படிச் சென்ற சமயம், ஒருநாள் தன்னை ஒரு வயதான மனிதர் பின்தொடர்வதை திடீரெனப் பார்த்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்த ஜஸ்டின் தான் அறிவுத்தாகம் கொண்ட ஒரு மெய்யியலாளர் என தன்னை அறிமுகப்படுத்தினார். முதியவர் தனது கேள்விகளால் ஜஸ்டினிடம் சவால் விடுத்தார். அறிவு உண்மைக்கும், மெய்யியல் மகிழ்வுக்கும் இட்டுச்செல்லும் என்றார் ஜஸ்டின். உடனே முதியவர் அவரிடம், மெய்யியல், மகிழ்வு ஆகிய இவற்றுக்கு விளக்கம் கேட்டார். இறுதியில் ஜஸ்டின் சொன்னார் - மெய்யியலாளர் கடவுள் பற்றிப் பேசலாம், ஆனால் அவர்கள் அவரை ஒருபோதும் பார்த்ததில்லை, மெய்யியலாளர் ஆன்மா பற்றிப் பேசலாம், ஆனால் உண்மையில் அவர்களுக்கு அது தெரியாது என்று. பின்னர் முதியவர் ஜஸ்டினிடம், பழங்கால இறைவாக்கினர்கள் பற்றிச் சொல்லி, இவர்கள் தாங்கள் அறிந்ததையும், அனுபவித்ததையும், பார்த்ததையும் கேட்டதையும் பற்றிப் பேசினர். அதுதான் கடவுள் என்றார். பின்னர் ஜஸ்டினிடம், ஒளியின் வாசல்கள் உனக்குத் திறக்கும்படி செபி எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் முதியவர். இந்த உரையாடலில் உள்ளொளி பெற்ற ஜஸ்டின், மறைநூல்களைத் தேடி வாசித்தார். அவற்றை அன்புசெய்யத் தொடங்கினார். கிறிஸ்துவின் வார்த்தைகள் அவரை ஆட்கொண்டன. எபேசு நகரில் திருமுழுக்குப் பெற்றார் ஜஸ்டின். கிரேக்கம், எகிப்து, இத்தாலி ஆகிய நாடுகளில் நற்செய்தி அறிவித்தார். உரோமையில் கிறிஸ்தவத்தை விளக்கும் பள்ளியைத் தொடங்கினார். கிறிஸ்தவர்களை துன்புறுத்திய உரோமைப் பேரரசர்களுக்கு, கிறிஸ்தவம் உண்மையான மதம் என்பதை எடுத்துச் சொன்னார். இதனால், கி.பி.167ம் ஆண்டில், ஜஸ்டினும் அவரது மாணவர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். இவரது விழா ஜூன் 01.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment