Tuesday, 11 November 2014

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்! சென்னையில் அதிரடி கிளப்பிய விக்கினேஸ்வரன்

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்! சென்னையில் அதிரடி கிளப்பிய விக்கினேஸ்வரன்

Source; TAMIL CNN. “நாங்கள் பேசும் பேச்சுக்களும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கக்கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக்கூடாது. அதாவது, உணர்ச்சிப்பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் எமது மத்திய அரசாங்கம் தயங்காது. ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்து இயம்பும்போது மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழக்கு ஏற்பச் சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்” என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்க குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யூ.சி.எல்) நிறுவனர்களில் ஒருவரான கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நேற்று (9ஆம் தேதி) சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நடைபெற்றது.
ஈழ ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட விக்னேஸ்வரனின் உரையைக் கேட்பதற்கு ஆர்வத்துடன் வந்தவர்களால், அரங்கம் நிறைந்தது. சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரன், “பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாத்தல்” என்ற பொருளில் பேசினார்.
அவரை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய பி.யூ.சி.எல் மாநிலத் தலைவரான பேராசிரியை சரஸ்வதி, “வடமாகாண முதல்வராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதும் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், அங்கு பிரச்னைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக பிரச்சினை அதிகரிக்கவே செய்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். இதற்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
“குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ…” என்று மந்திரகரமாக பேச்சைத் தொடங்கினார் விக்னேஸ்வரன். ஆங்கில உரையை வாசித்து முடிக்க சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. தொடர்ச்சியாக தமிழில் பேசத் தொடங்கியதும், அவரது குரல் உயர்ந்து ஒலித்தது. உணர்ச்சி தெறித்தது. ஆனாலும், கருத்துக்களில் நிதானமும் முதிர்ச்சியும் வெளிப்பட்டது.
“எல்லா விதத்திலும் எம்மை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது. அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தெரிவானீர்கள் என்று கேட்பீர்கள். நியாயமான கேள்வி அது. முன்னர் இதேபோல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நாங்கள் பகிஷ்கரித்ததால், அரசாங்கத்தின் கை ஓங்கி தமிழ்ப்பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணம் மிகப்பெரிய அளவில் சிங்கள ஊருறுவல்கள் நடந்தன. நாம் சுதந்திரம் பெறுமுன் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த கிழக்கு மாகாண சிங்கள மக்களின் விகிதாசாரம், தற்பொழுது 30 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது.
இதே நிலை வடமாகாணத்தைப் பாதிக்கக்கூடாது என்பதாலேயே தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம். பலவிதங்களில் அது நன்மை பயத்துள்ளது. மக்களின் மனோநிலை இத்தேர்தல் மூலமாக உலகத்துக்குத் தெரியவந்தது. தாம் நினைத்தவாறு ஆடிவந்த ராணுவத்தின் ஆட்டம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அப்படி இருந்தும் சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
எனினும் எமது சொற்ப அதிகாரங்களை பாவித்து பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் சிங்கள மயமாக்கல் பயணத்துக்கு முட்டுக்கட்டைகளை இட்டு வருகிறோம். சுமார் ஒன்றரை லட்சம் படையினரை வடமாகாணத்தில் குவித்து வைத்து உள்ளனர். கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லா விதத்திலும் தலையீடு செய்கின்றனர். பெண்களின் கதி பெருத்த சங்கடமாக உள்ளது. எமது நிலங்களை ராணுவத்தினர் அபகரித்துள்ளனர். அங்கிருந்த மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வாழ வழியின்றி காலத்தைக் கடத்தி வருகின்றனர். இந்தியாவில் அகதிகளாக இருப்பவர்கள் எம் நாட்டுக்குத் திரும்பினால் அவர்கள் கதியும் இவ்வாறே அமையப்போகிறது.
உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. நான் அவ்வாறு புரியாத ஒருவன் என்ற மாயையைப் பத்திரிகைகளை சில ஏற்படுத்தி உள்ளதை நான் அறிவேன். ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல. அதற்காக நான் உதவி வேண்டாம் என்று கூறியதாக நினைக்க வேண்டாம். உரிய சட்ட மாற்றமே முக்கியம். 13-வது திருத்தச்சட்டமானது மேலும் திருத்தி அமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மை பயக்காது. ஒற்றை ஆட்சியில் இருந்து மாற்றி அமைக்கப்பட வேண்டும். எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோருவதற்கும் கொண்டு வருவதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு தார்மீக உரிமை உள்ளது” என்றார் விக்னேஸ்வரன்.
ஆங்கிலம், தமிழ் என அவரது உரை சுமார் ஒன்றரை மணி நேரம் நேரம் நீண்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சரான பிறகு, அவரது முதல் வெளிநாட்டுப்பயணம் இதுதான். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்துவிட்ட அவர், திருச்சியில் பிரேமானந்தா ஆஸ்ரமத்துக்குச் சென்றார். அவரிடம் சிறப்புப்பேட்டி காண்பதற்கு பல பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக முயற்சி செய்தன. யாருக்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் (இன்று) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
நிகழ்ச்சி குறித்து பேராசிரியை சரஸ்வதியிடம் பேசியபோது, “பி.யூ.சி.எல் என்பது அரசியல் சார்பற்ற ஒரு பொதுவான தளம். ஆகவே, நாங்கள் அழைத்தவுடன் வருவதற்கு அவர் உடனே ஒப்புக்கொண்டார். நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மேலே அவரது பேச்சு சிறப்பாக இருந்தது. ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கினார்.
தேர்தலில் பங்கேற்றால் அது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றெல்லாம் இங்கே பலர் முன்வைத்த பல விமர்சனங்களுக்கு ஆணித்தரமாக பதில் சொல்லிவிட்டார். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நேரில் கொடுத்தோம். ஆனால் பலரும் வரவில்லை” என்றார்.
vigneshwaran speech

No comments:

Post a Comment