செய்திகள் - 20.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : உரிமைகளைக் குறித்து அதிகமாகப் பேசும் நாம் கடமைகளை மறந்து வருகிறோம்
2. திருத்தந்தை : தொழில் திறமையுடனும், மனிதாபிமான உணர்வுகளுடனும் செயல்படும் FAO ஊழியர்களுக்கு பாராட்டு
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பழக்கமான வழிகளில் சுகம் கண்டுவிட்டதால், இறைவனின் வரவை ஏற்றுக்கொள்ள எருசலேம் அஞ்சியது
4. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் அரேபிய கலாச்சாரத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை வரலாறு மறக்காது - முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ
5. எருசலேமில், தாக்கப்பட்ட தொழுகைக் கூடத்தில், அனைத்து மதத் தலைவர்களும் சந்திப்பு
6. இந்தியாவில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒன்றிணைந்து உழைக்கவும் முன்வர வேண்டும் - Vasai பேராயர்
7. திருத்தந்தையின் பயணத்திற்கு ஆகும் செலவுகளை மிகக் குறைவாகச் செய்ய முயன்று வருகிறோம் - பிலிப்பின்ஸ் கர்தினால் தாக்லே
8. நவம்பர் 20 - குழந்தைகள் உரிமை அகில உலக நாளின் வெள்ளி விழா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : உரிமைகளைக் குறித்து அதிகமாகப் பேசும் நாம் கடமைகளை மறந்து வருகிறோம்
நவ.20,2014. உரிமைகளைப் பற்றி நாம் அனைவரும் பேசும் வேளையில், தெருவோரம் கையேந்தி நிற்கும் மனிதர்கள், தங்களுக்கு உரிய மாண்பை ஒரு தர்மமாக அல்ல, மாறாக, தங்கள் உரிமையாகக் கேட்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான, FAO, 'ஊட்டச்சத்து அளித்தல்' என்ற மையக் கருத்துடன், உரோம் நகரில் நடத்திய இரண்டாவது பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரிமைகளைக் குறித்து அதிகமாகப் பேசும் நாம் கடமைகளை மறந்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
வர்த்தகச் சந்தைகளின் தேவைகள், இலாபம் ஈட்டுதல் ஆகியவை முதன்மை எண்ணங்களாக மாறிவரும் இன்றைய உலகில், மனிதர்களின் அடிப்படை தேவையான உணவை, ஒரு விற்பனைப் பொருளாக மட்டுமே பார்க்கக்கூடிய ஆபத்து பெருகிவருகிறது என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
மனித உரிமைகள், குறிப்பாக, மக்களின் உணவுத் தேவை என்ற உரிமை, வெறும் சட்டங்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் கருதப்படாமல், பகிர்ந்தளிக்கும் செயல்களாக மக்களை சென்று அடையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
1992ம் ஆண்டு, ஊட்டச்சத்து குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், உலகம் பெற்றிருக்கும் அளவுகடந்த செல்வங்களும், நாம் வீணாக்கும் பொருள்களும் ஒருசேர காட்டும் முரண்பாட்டை விளக்கினார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முரண்பாடு இன்னும் நம்மிடையே உள்ளது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
நம்மிடையே நிலவும் ஊழலை மறைக்கும் வகையில், உலகில் நிலவும் பசிக்கொடுமையின் கோரத்தை முற்றிலும் வெளிப்படுத்தாதவண்ணம் புள்ளிவிவரங்களை மாற்றி, திரித்துக் காட்டுவது உலக அரசுகளின் போக்காக உள்ளது என்பதையும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
உலக அரசுகள் எழுதும் சட்டங்கள் அனைத்தையும் தாண்டி, அன்பு, நீதி, அமைதி என்ற அடிப்படை மனித பண்புகள், எழுதப்பாடாத சட்டங்களாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதியும்போது, மனித குடும்பத்திற்கு உணவளிப்பது இன்னும் எளிதாக மாறும்.
மனித குடும்பம் அனைத்தும் ஒரே இறைவனிடமிருந்து உருவானது என்பதை நாம் நம்பினால், மக்கள் அனைவரும் மாண்புடன் தங்கள் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்குத் தடையாக எந்த ஒரு சட்டமும், தடையும் எழாது என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : தொழில் திறமையுடனும், மனிதாபிமான உணர்வுகளுடனும் செயல்படும் FAO ஊழியர்களுக்கு பாராட்டு
நவ.20,2014. உலகின் வளங்களைப் பெருக்கவும், உலகச் செல்வங்களைப் பகிரவும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான, FAOவைச் சேர்ந்தவர்கள், அமைதியாக ஆற்றிவரும் பணியை, தான் மனதாரப் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, உரோம் நகரில் FAO நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், FAO ஊழியர்களை தனிப்பட்ட வகையில் சந்தித்து, தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் திறமையுடன் செயலாற்றுவது முக்கியம் என்றாலும், மனிதாபிமான உணர்வுகளுடனும் செயல்படுவது அவசியம் என்று கூறியத் திருத்தந்தை, தொழில் திறமை, மனிதாபிமான உணர்வுகள் இரண்டும் FAO ஊழியர்களிடம் இருப்பதைக் காணமுடிகிறது என்று எடுத்துரைத்தார்.
FAO ஊழியர்கள் ஆற்றும் பணி, சவால்கள் நிறைந்த பணியென்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவைகள், தடைகள் வரும்போது அவற்றை வெல்லும் துணிவும், தொடர்ந்து செயலாற்றும் தளரா மனமும் அவர்களுக்கு இறைவன் தரவேண்டும் என்ற வேண்டுதலையும் ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பழக்கமான வழிகளில் சுகம் கண்டுவிட்டதால், இறைவனின் வரவை ஏற்றுக்கொள்ள எருசலேம் அஞ்சியது
நவ.20,2014. நமக்குத் தெரிந்த பழக்கமான விடயங்களைக் கையாள்வதில் நாம் பாதுகாப்பாக உணர்கிறோம்; இறைவனின் வரவு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதால், அதனைக் கையாள்வதற்குத் தயங்குகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றிய வேளையில், எருசலேமைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் மையப்பொருளாகப் பகிர்ந்தார்.
எருசலேம் நகரம் தனக்குத் தெரிந்த, பழக்கமான வழிகளில் சுகம் கண்டுவிட்டதால், இறைவனின் வரவை ஏற்றுக்கொள்ள அந்நகரம் அஞ்சியது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
எருசலேம் நகருக்கு இயேசு கொணர்ந்த அமைதியைப் புரிந்துகொள்வதற்கு அஞ்சி, அந்நகரம்
தன் கதவுகளை மூடிக்கொண்டதைக் கண்டு இயேசு கண்ணீர் வடித்ததையும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
கோவிலையும், அதில் நிகழும் சடங்குகள், பலிகள் இவற்றையும் மையப்படுத்தி, பாதுகாப்பாக வாழ்ந்த எருசலேம் போலவே, இன்றையத்
திருஅவையும் தனக்குப் பழக்கமானச் செயல்பாடுகளில் பாதுகாப்பு உணர்வை அடைவது
ஆபத்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இயேசு தன் அமைதியுடன் வரும்போது, அவரைப் பெற்றுக்கொள்வதால் நாம் அடையும் ஆனந்தத்தை நம்மால் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை, மனமாற்றம் என்பது, இறைவன் நம் வாழ்வை நடத்திச் செல்ல அனுமதிப்பதே என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், "நமது கிறிஸ்தவ அழைப்பிற்கேற்ற முறையில் வாழ்வதற்குரிய வழியைத் தேடுவோமாக" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் அரேபிய கலாச்சாரத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை வரலாறு மறக்காது - முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ
நவ.20,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் அதிக ஆண்டுகளாக காயப்பட்டு வரும் ஈராக் நாட்டின் வரைப்படத்தைக் கையில் ஏந்தி, இஸ்லாமிய உடன்பிறப்புக்களாகிய உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
நவம்பர் 17, இத்திங்கள் முதல், இப்புதன்
முடிய ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியென்னாவில் நடைபெற்ற ஒரு
கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கூடியிருந்த அனைத்து இஸ்லாமியர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வந்துள்ளதாகக் கூறினார்.
சவூதி அரேபியா, ஆஸ்திரியா, இஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து King Abdullah Bin Abdulaziz அவர்களின் பெயரால் வியென்னாவில் உருவாக்கியுள்ள KAICIID, (the King Abdullah Bin Abdulaziz International Centre for Interreligious and Intercultural Dialogue) என்ற பன்னாட்டு உரையாடல் மையத்தில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலகெங்கும் உள்ள நடுநிலையான இஸ்லாமியர் அனைவருக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறினார்.
Mosul நகரிலும், Nineveh பள்ளத்தாக்கிலும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள, இன்னும்
தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடுமைகள் உலக இஸ்லாமியர் அனைவரின் மனசாட்சியைத்
தட்டி எழுப்ப வேண்டும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கேட்டுக்
கொண்டார்.
ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்தவர்கள் என்றும், அரேபிய
கலாச்சாரத்திற்கு அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை வரலாறு மறக்காது என்றும்
ஈராக் ஆயர்கள் அவையின் தலைவரான முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் தன்
உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. எருசலேமில், தாக்கப்பட்ட தொழுகைக் கூடத்தில், அனைத்து மதத் தலைவர்களும் சந்திப்பு
நவ.20,2014.
மக்கள் வழிபாடு மேற்கொள்ளும் இடங்களில் வன்முறைகளை மேற்கொள்வது மனித
கலாச்சாரத்திற்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று எருசலேம் நகர் இலத்தீன்
வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
நவம்பர் 18, இச்செவ்வாயன்று, எருசலேமில் அமைந்திருந்த Kehilat Bnai Torah என்ற யூதத் தொழுகைக் கூடத்தில் இரு பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு யூத மதக் குருக்களும், ஒரு காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, எருசலேமில் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து, தாக்கப்பட்ட தொழுகைக் கூடத்தையும், யூத மதத் தலைவர்களையும் சந்தித்தபோது, வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
பல்வேறு மதத் தலைவர்களும் இந்த யூதத் தொழுகைக் கூடத்தில் கூடிவந்திருப்பது நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று கூறிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், கிறிஸ்தவர்கள் கொண்டாடவிருக்கும் திருவருகைக் காலம், வன்முறையில் மூழ்கியுள்ள இவ்வுலகிற்கு அமைதியின் இளவரசரைக் கொணரும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஆதாரம் : Fides
6. இந்தியாவில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒன்றிணைந்து உழைக்கவும் முன்வர வேண்டும் - Vasai பேராயர்
நவ.20,2014. இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒன்றிணைந்து அனைத்து மனிதர்களின் விடுதலைக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு பணியாற்றும் ஆசிய ஆயர் பேரவை பணிக்குழுவின் தலைவரும், Vasai உயர்மறை மாவட்டத்தின் பேராயருமான Felix Machado அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியாவின் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 கோடி என்பதைக் குறிப்பிட்ட பேராயர் Machado அவர்கள், இந்தியாவில் கல்விப்பணியை நோக்கும்போது, இவ்விரு மதத்தினரும் நடத்தும் கல்வி நிலையங்கள் மொத்த கல்வி நிலையங்களில் 17 விழுக்காடு உள்ளது என்று குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலித் குழுவினர் எவ்வித சலுகைகளையும் அரசிடமிருந்து பெறுவது கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Machado அவர்கள், இரு மதத்தினரும் இணைந்து செயலாற்றினால், இன்னும் அதிக நன்மைகள் இருவருக்கும் விளையும் என்று குறிப்பிட்டார்.
ஆதாரம் : AsiaNews
7. திருத்தந்தையின் பயணத்திற்கு ஆகும் செலவுகளை மிகக் குறைவாகச் செய்ய முயன்று வருகிறோம் - பிலிப்பின்ஸ் கர்தினால் தாக்லே
நவ.20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளும் பயணம் மிக எளிமையாக, மக்களைச் சந்திக்கும் ஒரு பயணமாக அமையவேண்டும் என்று கூறியதை நினைவில் கொண்டு, அப்பயணத்திற்கு ஆகும் செலவுகளை மிகக் குறைவாகச் செய்ய முயன்று வருகிறோம் என்று கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று பார்வையிடும்போது, அங்குள்ள மக்களைச் சந்திப்பதை மட்டும் அவர் விரும்புகிறார் என்றும், அவ்விடத்தில் அரசு அதிகாரிகளையும், பிற முக்கிய நபர்களையும் அவர் சந்திக்கமாட்டார் என்றும் Palo உயர் மறைமாவட்டத்தின் பேராயர் John Du அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் பயணம் ஆடம்பரமாக அமைவதற்கு ஆகும் செலவுகளைக் குறைத்து, அந்தத் தொகையை, அந்நாட்டில் துன்புறும் வறியோருக்கு வழங்கவேண்டும் என்பதே திருத்தந்தையின் விருப்பம் என்று பயணத்தை ஏற்பாடு செய்யும் அருள் பணியாளர் Anton Pascual அவர்கள் UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சனவரி 15 முதல் 19 முடிய திருத்தந்தை மேற்கொள்ளும் பயணத்தின் முக்கிய நோக்கம், வறியோருக்கும், இயற்கைப் பேரிடர்களால் துன்புறுவோருக்கும் ஆறுதலும் உதவிகளும் வழங்குவதே என்று அருள் பணியாளர் Pascual அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : UCAN
8. நவம்பர் 20 - குழந்தைகள் உரிமை அகில உலக நாளின் வெள்ளி விழா
நவ.20,2014. குழந்தைகளின் உரிமைகள் பற்றி பேசும்போது, குழந்தைகளின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கும் அவசியம் உள்ளது என்று ஐ.நா. அவை கூறியுள்ளது.
நவம்பர் 20, இவ்வியாழன்று, குழந்தைகள் உரிமை அகில உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு தன் 25வது ஆண்டைச் சிறப்பிக்கிறது.
இவ்வெள்ளி விழாவையொட்டி, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், குழந்தைகளின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு, குழந்தைகளே தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
1989ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் உரிமை அகில உலக அறிக்கையின் அம்சங்கள், 194 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும், ஐ.நா. அவை இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளிலும், இவ்வறிக்கையே உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், ஐ.நா. செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
குழந்தைகள் உரிமை அகில உலக நாளின் வெள்ளி விழாவையொட்டி, கருத்தரங்குகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.
No comments:
Post a Comment