Monday 24 November 2014

கம்யூனிச அடக்குமுறையிலும் தழைத்து வளர்ந்த கிறிஸ்தவம் (St. Andrew Dung-Lac and Companions)

கம்யூனிச அடக்குமுறையிலும் தழைத்து வளர்ந்த கிறிஸ்தவம்
(St. Andrew Dung-Lac and Companions)

வியட்னாமை, டான்கின், அன்னாம், கோகின் சினா ஆகிய மூன்று அரசுகள் ஆட்சிசெய்துவந்த காலத்தில் போர்த்துக்கீசியர்கள் வழியாக அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவியது. 1615ம் ஆண்டில் Da Nang என்ற இடத்தில் இயேசு சபையினர் மறைப்பணித்தளத்தை ஆரம்பிதனர். ஜப்பானில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளுக்குத் தப்பிவந்த ஜப்பானியர்களுக்கு இவர்கள் மறைப்பணியாற்றினார்கள். ஆனால் வியட்நாமை ஆட்சி செய்த அரசர்களில் ஒருவர் அனைத்து வெளிநாட்டு மறைபோதகர்களையும் தடை செய்தார். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட வியட்நாம் நாட்டினர் அனைவரும் விசுவாசத்தை மறுதலிக்குமாறு சிலுவையில் அறைந்து துன்புறுத்தினார். 1820ம் ஆண்டுக்குப் பின்னர் அறுபது ஆண்டுகளுக்கு இக்கொடுமைகள் அதிகரித்தன. அச்சமயத்தில் ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் கத்தோலிக்கர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் மிகவும் கடினமான வேலைகள் கொடுக்கப்பட்டனர். இதில் பல வெளிநாட்டவரும் கொல்லப்பட்டனர். வியட்நாம் பேரரசர் மின்ங் மான்ங் என்பவரின் மகன்களில் ஒருவரால் வழிநடத்தப்பட்ட கிளர்ச்சிக்கு வியட்னாம் கிறிஸ்தவர்களும் வெளிநாட்டு மறைப்பணியாளர்களும் ஆதரவு தருகின்றார்கள் என்று சந்தேகப்பட்டு 1847ல் அடக்குமுறைகள் அதிகமாயின. 1862ம் ஆண்டில் ஒன்பது வயது சிறுவன் உட்பட 17 பொதுநிலையினர் கொல்லப்பட்டனர். 1839ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஹனோய்ப் பகுதியில் 117 பேர் தலைவெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆன்ட்ரூ டுங் லாக். வியட்னாமின் வட பகுதியில் வாழ்ந்த இவரது ஏழைக் குடும்பம் பிழைப்புதேடி ஹனோய்ப் பகுதிக்குச் சென்றது. அப்போது இவர் கிறிஸ்தவம் பற்றி அறிந்து அதை ஏற்றார். 1823ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி குருத்துவ அருள்பொழிவும் பெற்றார் ஆன்ட்ரூ. இவரது வாழ்வுமுறை மற்றும் போதனையினால் மக்கள் பெருமளவில் திருமுழுக்குப் பெற்றனர். கிறிஸ்தவர்களை வெறித்தனத்தோடு கொலைசெய்துவந்த பேரரசர், ஆன்ட்ரூவைக் கைது செய்தார். ஆயினும் துறவற சபை அருள்பணியாளர்கள் பணம் கொடுத்து இவரை மீட்டனர். இப்படி மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டார் ஆன்ட்ரூ. இறுதியில் கொலை செய்யப்பட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...