செய்திகள் - 19.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் வாழ்த்து - ஆசிய நாடுகளில், நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்
2. ஆசியத் திருஅவை, பெயர் தெரியாத பல்லாயிரம் மறைசாட்சிகளை தாய் திருஅவைக்கு வழங்கியுள்ளது - கர்தினால் தாக்லே
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தை - மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
4. "நான்" என்ற தன்னிறைவில் நம்பிக்கை கொள்ளும் ஆபத்தை இன்றைய உலகம் உருவாக்கி வருகிறது - கர்தினால் Müller
5. ‘அன்னியர்’ அனைவரும் நம் ‘அயலவர்’ என்பதை விவிலியம் வலியுறுத்தி வந்துள்ளது - கர்தினால் வேலியோ
6. நியூயார்க் நகர் ஐ.நா. தலைமையகத்தில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் கண்காட்சி
7. அனைத்துப் போர்களிலும் பலியாவது அப்பாவி மக்களே - பேராயர் சில்வானோ தொமாசி
8. வத்திக்கானில், Autism எனப்படும் மாற்றுத்திறன் கொண்டோரை மையப்படுத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் வாழ்த்து - ஆசிய நாடுகளில், நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்
நவ.19,2014. ஆசிய நாடுகளில், நற்செய்தியை அறிவிக்கும் பணியில், திருத்தூதருக்குரிய ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்ற தன் வாழ்த்துக்களையும், செபங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.
“ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்பில், நவம்பர் 18, இச்செவ்வாயன்று, உரோம் நகரில், ஆசிய செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த வாழ்த்துத் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, அன்னை மரியாவின் பரிந்துரையால் இறைவனின் விண்ணகக் கொடைகள் அனைத்தும் கிடைக்குமாறு திருத்தந்தை வாழ்த்தியிருந்த இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் அனுப்பியிருந்தார்.
இந்த ஒரு நாள் கருத்தரங்கில், மணிலா பேராயர், கர்தினால் அந்தோனியோ தாக்லே, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் உட்பட பலர் கருத்துரைகள் வழங்கினர்.
ஆதாரம் : AsiaNews
2. ஆசியத் திருஅவை, பெயர் தெரியாத பல்லாயிரம் மறைசாட்சிகளை தாய் திருஅவைக்கு வழங்கியுள்ளது - கர்தினால் தாக்லே
நவ.19,2014. எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள ஆசியத் திருஅவை, அகில உலகத் திருஅவைக்கு பல மறைசாட்சிகளை வழங்கியுள்ளது என்பது, ஆசியத் திருஅவையின் சக்தி என்று கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
“ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இச்செவ்வாயன்று உரையாற்றிய மணிலா பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள், எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஆசியத் திருஅவை, பெயர் தெரியாத பல்லாயிரம் மறைசாட்சிகளை தாய் திருஅவைக்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.
சிறுபான்மை என்ற வலுவற்ற நிலையில் ஆசியத் திருஅவை பல்வேறு துன்பங்களைத் தாங்கிவந்தாலும், வலுவற்ற நிலை, துன்பம் ஆகிய அம்சங்கள் நம்பிக்கை என்ற சக்தியைத் தருகின்றது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டு கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் இயற்கைப் பேரிடர்களை சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.
வறியோர், நம்பிக்கையைச் சொல்லித்தரும் சிறந்த ஆசிரியர்கள் என்றும், அவர்களின் பற்றுறுதி, மற்றும் துணிவு ஆகியவற்றின் உதவியால், அவர்கள் ஒளிர்விடும் சாட்சிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், வறியோரின் எண்ணிக்கை ஆசியக் கண்டத்தில் பெருமளவில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தை - மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
நவ.19,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாக இருப்பார் என்றும், அவரது வருகை இலங்கையில் நிலவும் துயரம் நிறைந்த பிளவுகளை குணமாக்கும் என்று தான் நம்புவதாகவும் இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.
“ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்புடன், உரோம் நகரில் இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அருள் பணியாளர் ஜோசப் வாஸ் அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார் என்று கூறினார்.
இலங்கையில்
வாழும் கத்தோலிக்கர்களில் 32 விழுக்காட்டினர் மன்னார் மறைமாவட்டத்தில்
வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், 30 ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரிலும், அதைத் தொடர்ந்த கடந்த 5 ஆண்டுகளும் பெருமளவு துன்பங்களைத் தாங்கி வருபவர்கள் தமிழர்களே என்று கூறினார்.
இத்தகையச் சூழலில் வட இலங்கைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருவது, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
4. "நான்" என்ற தன்னிறைவில் நம்பிக்கை கொள்ளும் ஆபத்தை இன்றைய உலகம் உருவாக்கி வருகிறது - கர்தினால் Müller
நவ.19,2014. உலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் தன்னிலேயே முழுமையும், நிறைவும் அடையமுடியாது; ஒவ்வொருவரின் முழுமைக்கு, அடுத்தவர் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
‘ஆண் பெண் உறவு ஒன்றையொன்று நிறைப்பது’ என்ற மையக்கருத்துடன் நவம்பர் 17, இத்திங்கள் முதல், 19 இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Gerhard Müller அவர்கள் இவ்வாறு கூறினார்.
"நான்" என்ற தன்னிறைவில் நம்பிக்கை கொள்ளும் ஆபத்தை இன்றைய உலகம் உருவாக்கி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Müller அவர்கள், இந்தத் தவறிலிருந்து விடுபட்டு, நாம் ஒருவரை ஒருவரைச் சார்ந்திருப்பதையும், இறைவனைச் சார்ந்திருப்பதையும் உணர்வது அவசியம் என்று கூறினார்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவும் அடிப்படை வேற்றுமைகளை ஒருவரை ஒருவர் நிறைவு செய்யும் வேற்றுமைகளாகக் காணும்போது, இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணம் முழுமை பெறுகிறது என்று கர்தினால் Müller அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
"ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதை உணரும் நாம், தெய்வீக மறைபொருளை உணர்வோம்" என்ற தலைப்பில், நடைபெற்ற இக்கருத்தரங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இத்திங்களன்று துவக்கப்பட்டு, இப்புதனன்று நிறைவுக்கு வந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ‘அன்னியர்’ அனைவரும் நம் ‘அயலவர்’ என்பதை விவிலியம் வலியுறுத்தி வந்துள்ளது - கர்தினால் வேலியோ
நவ.19,2014. சமுதாயம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மதம்
என்று மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கும் ஓர் உண்மையாகத்
திகழ்வது புலம்பெயர்தல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 17, இத்திங்கள் முதல், 21, இவ்வெள்ளி முடிய உரோம் நகரின் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர், மற்றும் பயணிப்போர் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
'புலம்பெயர்ந்தோர்' என்ற வார்த்தையின் கருவாக 'அன்னியர்' என்ற வார்த்தை அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் வேலியோ அவர்கள், 'அன்னியர்' அனைவரும் நம் ‘அயலவர்’ என்பதை விவிலியம் வலியுறுத்தி வந்துள்ளது என்று கூறினார்.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தடாக்ஸ்
சபையினர் மற்றும் திருப்பீடத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்து நாடுகளின்
தூதர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்தப் பன்னாட்டு கருத்தரங்கு வருகிற
வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. நியூயார்க் நகர் ஐ.நா. தலைமையகத்தில் அசிசி நகர் புனித பிரான்சிஸ் கண்காட்சி
நவ.19,2014. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருந்த பல விழுமியங்கள், ஐக்கிய நாடுகள் அவை போற்றிவரும் விழுமியங்களை ஒத்ததாய் உள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.தலைமையகத்தில், "சகோதரர் பிரான்சிஸ்: வார்த்தைகள், உருவங்கள்" என்ற தலைப்பில், இத்திங்களன்று ஒரு கண்காட்சி துவக்கப்பட்டது.
ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் Bernadito Auza அவர்கள், இக்கண்காட்சியின் திறப்பு விழாவில் உரையாற்றுகையில், புனித பிரான்சிஸ் அவர்கள், அமைதி, இயற்கைச் சூழல் பாதுகாப்பு ஆகிய விழுமியங்களைக் கொண்டிருந்த புனிதர் என்று எடுத்துரைத்தார்.
புனித பிரான்சிஸ் அவர்கள் வாழ்வுடன் தொடர்புகொண்ட பல பழமைவாய்ந்த கைப்பிரதிகள், ஓவியங்கள் ஆகியவை இடம்பெறும் இக்கண்காட்சியை உருவாக்க, திருப்பீடம் எடுத்துக்கொண்ட கடினமான முயற்சிகள் குறித்தும் பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
அமைதி, இயற்கை மீது காட்டும் மரியாதை போன்ற உயர்ந்த பண்புகள், புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், ஐ.நா.அவைக்கும் பொதுவான பண்புகள் என்று சுட்டிக்காட்டிய பேராயர் Auza அவர்கள், இத்தகையப் பண்புகள் மறையும்போது, போரும், வன்முறையும் வளர்கின்றன என்று வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. அனைத்துப் போர்களிலும் பலியாவது அப்பாவி மக்களே - பேராயர் சில்வானோ தொமாசி
நவ.19,2014. நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவரும் நிலையில், நகர்ப்புறங்கள் போர்களின் இலக்காக மாறிவருவது, உயிர்ப்பலிகளைப் பெருகச் செய்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டார்.
ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஆயுதங்கள் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நாடுகளிடையிலும், உள்நாட்டிலும் உருவாகும் அரசியல் மோதல்கள் போர்களாக மாறும் வேளையில், அனைத்துத் தாக்குதல்களிலும் பலியாவது அப்பாவி மக்களே என்று, பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் கவலையை வெளியிட்டார்.
மனிதர்களால் நேரடியாக இயக்கப்படாமல், கணணிகளின் துணையோடு, வெகு தூரத்திலிருந்து இயக்கப்படும் போர்க் கருவிகள் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், தொழில்நுட்பத்தை அளவுக்கதிகமாக நம்பி மேற்கொள்ளப்படும் போர்களில், மனித உயிர்கள் பலியாவதும் பெருகிவருகிறது என்று எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / VIS
8. வத்திக்கானில், Autism எனப்படும் மாற்றுத்திறன் கொண்டோரை மையப்படுத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு
நவ.19,2014. Autism எனப்படும் மாற்றுத்திறன் கொண்டோரை மையப்படுத்திய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு, நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 22, சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலவாழ்வுப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை ஏற்பாடு செய்யும் இக்கருத்தரங்கில், 57 நாடுகளைச் சேர்ந்த, 650 பேர் கலந்துகொள்வர் என்று, இத்திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள குழைந்தைகளில் 1 விழுக்காட்டினர் Autism என்ற மாற்றுத்திறன் கொண்டவர்களாய்ப் பிறக்கின்றனர் என்று பேராயர் Zimowski அவர்கள், விவரம் வழங்கினார்.
நடைபெறவிருக்கும் கருத்தரங்கின்போது, தைவான் நாட்டைச் சேர்ந்த ஓவியர், Leland Lee அவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றும், இத்தாலியப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என்று பேராயர் Zimowski அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment