செய்திகள் - 14.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பொருளாதாரத்தின் மையத்தில் பணம் அல்ல, மனிதரே வைக்கப்பட வேண்டும்
2. திருத்தந்தை பிரான்சிஸ், பெரு குடியரசுத் தலைவர் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ்: சிறாருக்கு விசுவாச வாழ்வில் எடுத்துக்காட்டாய் இருங்கள்
4. திருத்தந்தையின் இலங்கை, பிலிப்பீன்ஸ் திருப்பயணம்
5. மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கு கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் கண்டனம்
6. மெக்சிகோவில் இடம்பெறும் வன்முறை ஒரு தேசிய நெருக்கடிநிலை, ஆயர்கள் கவலை
7. வத்திக்கான் வளாகத்திலுள்ள பொதுக் கழிப்பறைகளுடன் குளியல் அறைகளும் சேர்க்கப்படும்
8. ஓர் இயேசு சபை அருள்சகோதரருக்கு உயரிய அறிவியல் விருது
9. வீடற்றவர்களுக்கு முகாம்கள், அரசுகளிடம் விவரம் கேட்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பொருளாதாரத்தின் மையத்தில் பணம் அல்ல, மனிதரே வைக்கப்பட வேண்டும்
நவ.14,2014. இன்றைய உலகின் தாராளமயமாக்கலுக்குப் பதிலளிக்கும் வகையில் எல்லாவற்றுக்கும் மேலாக பணத்தை முதலிடத்தில் வைக்கும் போக்கு உள்ளது, ஆனால் அதற்கு மாறாக, பொருளாதாரத்திலும்கூட மனித மாண்பு எப்பொழுதும் மையத்தில் வைக்கப்பட வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்
நகரில் நடைபெறும் அனைத்துலக பொருளாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாநாட்டில்
கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஏழாயிரம் பேரை இவ்வெள்ளியன்று திருத்தந்தை ஆறாம்
பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனிதரை மையப்படுத்துவது, பொருளாதார மற்றும் பொருளியக் கூறுகளுக்கான பதிலாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் நிதியிலும் தொழிலிலும் நன்னெறிகளை ஊக்குவித்து வளர்ப்பதற்கும் உதவியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை
இன்று உலகில் பலரின் வேலைவாய்ப்புகள் உறுதியற்ற நிலையில் உள்ள சூழலில், உலகத் தாராளமயமாக்கலில் தொழிலாளர்களுக்குத் தோழமையுணர்வு காட்டப்படுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உலகில் பலர் வேலைகளை இழந்துள்ளனர், இதனால் ஏற்படும் விளைவுகளை பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன, பல இளையோர் முதலில் வேலையையும் மாண்புடன்கூடிய வேலையையும் எதிர்பார்க்கின்றனர், இந்த நிலையை அறிந்துள்ள கணக்கர்கள் தங்களின் பணிகளில் மனித மாண்பை எப்போதும் முதலிடத்தில் வைக்குமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.
பொதுநலனுக்கான பணியில் சொந்த ஆதாயத்தை முன்வைக்கும் சோதனைகள் எல்லாருக்கும், குறிப்பாக, பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் பணிசெய்வோருக்கு ஏற்படலாம், ஆனால் ஒவ்வொருவரும் செபம் மற்றும் இறைவார்த்தையிலிருந்து ஊட்டம்பெற்று சரியான பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், பெரு குடியரசுத் தலைவர் சந்திப்பு
நவ.14,2014. பெரு நாட்டு அரசுத்தலைவர் Ollanta Moises Humala Tasso அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெரு நாட்டுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், குறிப்பாக, பெரு நாட்டின் தனித்துவத்தை உருவாக்கியதில் கிறிஸ்தவத்தின் சிறப்பான பங்கு குறித்தும், அந்நாட்டு மக்களின் மனித, சமூக
மற்றும் கலாச்சார முன்னேற்றத்துக்கு ஆதரவாக கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிய
மற்றும் தொடர்ந்து ஆற்றும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது
கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம்
கூறியது.
அப்பகுதியின் அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்தும், இன்னும், அப்பகுதியின்
முழு வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டு
வரும் முயற்சிகள் பற்றியும் இச்சந்திப்பில் மிகுந்த அக்கறையுடன்
பேசப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவுகள் கொள்ளும் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும், பெரு நாட்டு அரசுத்தலைவரும், அவருடன் வந்திருந்தோரும் சந்தித்துப் பேசினர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ்: சிறாருக்கு விசுவாச வாழ்வில் எடுத்துக்காட்டாய் இருங்கள்
நவ.14,2014. சொற்களைவிட செயல்கள் அதிகச் சப்தமாகப் பேசுகின்றன, குறிப்பாக, இக்காலத்திய டிஜிட்டல் உலகின் சிறாருக்கும் இளையோருக்கும் விசுவாசத்தை வழங்குவதில் வார்த்தைகளைவிட, எடுத்துக்காட்டான வாழ்வே மிகவும் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வயது வந்தோராகிய நாம், சிறாரும் இளையோரும் உண்மை மற்றும் அன்பை அனுபவிக்க அவர்களுக்கு உதவ வேண்டுமென்று விரும்பினால், நமது எடுத்துக்காட்டான வாழ்வுமூலம் அதைச் செய்ய வேண்டுமென்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஓர் உரோம் பங்குத்தளச் சிறாருக்கும் இளையோருக்குமென சிறப்பான திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சிறாரைப் பார்க்கும்போது வரவிருக்கும் உலகை, ஒரு வாக்குறுதியை நோக்குவதாக உள்ளது என்று கூறினார்.
நாம் நமது எதிர்காலத்துக்கு எதை விட்டுவைக்கப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, இந்நாளைய முதல் வாசகத்தில் நாம் கேட்டதுபோன்று, சிறாரும் இளையோரும் அன்பிலும் உண்மையிலும் நடப்பதற்கு அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்கிறோமா, அல்லது வெறும் வார்த்தையால் மட்டும் போதித்துவிட்டு, வேறொரு வழியில் செல்வதற்கு நம் வாழ்வை அனுமதிக்கின்றோமா என்ற கேள்வியையும் கேட்டார்.
சிறுசெடிகள் வளருவதை நாம் புறக்கணிக்க முடியாது என்றும், ஒரு கிறிஸ்தவர் சிறார் நலன்மீது அக்கறை காட்டி, தனது விசுவாசத்தையும், தான் வாழும் முறையையும், தனது இதயத்தில் உள்ளதையும் சிறாருக்கு வழங்க வேண்டுமென்றும் தனது மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நம்மிடமிருக்கின்ற மிகச் சிறந்ததாகிய விசுவாசத்தை இவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, சிறாரிடம், நீங்கள் ஏன் திருப்பலிக்கு வந்தீர்கள் என்றும் கேட்டார்.
உங்களைப் பார்க்க வந்தேன் என்று ஒரு சிறுவன் கூற, நானும் உங்கள் அனைவரையும் பார்க்க விரும்பினேன் என்று திருத்தந்தையும் பதில் கூறினார்.
உண்மையிலும், அன்பிலும் பயணம் செய்வதற்கு உதவிகேட்டு இயேசுவிடம் செபியுங்கள், அன்னைமரியிடம் செபியுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறாரிடம் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையின் இலங்கை, பிலிப்பீன்ஸ் திருப்பயணம்
நவ.14,2014.
அடுத்த ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருப்பயணம் மேற்கொள்வார் என்று
இவ்வெள்ளியன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.
சனவரி 13ம் தேதி செவ்வாயன்று இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் திருத்தந்தை, 15ம் தேதி வியாழனன்று பிலிப்பீன்ஸ் சென்று 19ம் தேதி திங்கள்கிழமை உரோம் திரும்புவார் எனவும் அச்செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.
14ம் தேதி காலை 8.30 மணிக்கு கொழும்பு நகரின் Galle Face Green பூங்காவில் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் திருத்தந்தை, 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு மடுமாதா திருத்தலம் சென்று உரையாற்றுவார். அடுத்தநாள் Bolawalana இலங்கை அன்னைமரியா திருத்தலமும் செல்வார் திருத்தந்தை.
பிலிப்பீன்ஸில்
2013ம் ஆண்டில் ஹையான் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரைச் சந்திப்பார்
மற்றும் அவர்களுடன் உணவருந்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இத்திருப்பயணம், ஆசியாவுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணமாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கு கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் கண்டனம்
நவ.14,2014. பயங்கரவாதம், அடக்குமுறை, வன்முறை போன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு மதத்தைப் பயன்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் இவ்வியாழனன்று கூறினர்.
உரோம் நகரில் மூன்று நாள்கள் நடைபெற்ற கத்தோலிக்க-முஸ்லிம் கருத்தரங்கில் கலந்துகொண்ட இவ்விரு மதங்களின் பிரதிநிதிகள், அக்கருத்தரங்கின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதம், அடக்குமுறை, வன்முறை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான தங்களின் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
மதத்தின் பெயரால் இடம்பெறும் வன்முறைகளுக்குக் கண்டனம், இளையோருக்குக் கல்வி, பல்சமய உரையாடலுக்கு அர்ப்பணம், சமூகங்களுக்குப் பணிசெய்வதற்கு அதிக வாய்ப்புக்களைத் தேடுதல் ஆகிய நான்கு தலைப்புக்களில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதங்களுக்கிடையே உரையாடல் நடத்தும் நோக்கத்துடன் 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க-முஸ்லிம் அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறது.
மூன்றாம் முறையாக உரோமையில் கூடிய இவ்வமைப்பின் பிரதிநிதிகள், கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பிறருக்குப் பணிபுரிதல் என்ற தலைப்பு குறித்து விவாதித்தனர். மேலும், இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இப்பிரதிநிதிகள் சந்தித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மெக்சிகோவில் இடம்பெறும் வன்முறை ஒரு தேசிய நெருக்கடிநிலை, ஆயர்கள் கவலை
நவ.14,2014.
மெக்சிகோவில் திட்டமிட்டக் குற்றக்கும்பலால் 43 ஆசிரியர் பயிற்சி
மாணவர்கள் கடத்தப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட வன்செயலால் நாடு நெருக்கடி
நிலையை சந்தித்து வருகிறது என்று கவலை தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
2010ம் ஆண்டு முதல் மெக்சிகோவின் நிலைமை மோசமடைந்து வருவதைத் தாங்கள் கவலையுடன் ஏற்பதாகத் தெரிவித்துள்ள ஆயர்கள், நாட்டில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்செயல்கள் நிறுத்தப்படுமாறும், நாட்டில் அமைதி நிலவவும் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திட்டமிட்டக் குற்றக்கும்பல்களின் அச்சுறுத்தல்களால் பலர் அச்சத்திலே வாழ்வதாகவும், சில விவகாரங்களில் அரசு அதிகாரிகளின் ஊழலும் மக்களைக் கவலைப்பட வைத்துள்ளது எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
மெக்சிகோ நகரின் புறநகர்ப் பகுதியில் கூட்டம் நடத்திய ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ள ஆயர்கள், நாட்டில் இடம்பெற்றுள்ள வன்முறைகளும் இறப்புகளும் இனிமேலும் வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
மேலும், மெக்சிகோவில் அமைதி வழியில் இடம்பெறும் போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவையும் கொடுத்து வருகின்றனர் ஆயர்கள்.
ஆதாரம் : Fides
7. வத்திக்கான் வளாகத்திலுள்ள பொதுக் கழிப்பறைகளுடன் குளியல் அறைகளும் சேர்க்கப்படும்
நவ.14,2014. வீடில்லாத மக்கள் குளிப்பதற்கு உதவியாக,
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறைகளுடன்
குளியல் அறைகளும் கட்டப்படும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரால் பிறரன்பு உதவிகள் செய்யும் பேராயர் Konrad Krajewski அவர்கள், ஊடகங்களிடம் இத்தகவலை அறிவித்தார்.
இப்பிறரன்புப் பணிக்கு தன்னார்வப் பணியாளர்களும், இன்னும், சோப், துண்டுகள், சுத்தமான உடுப்புகள் போன்றவையும் தேவைப்படுகின்றன என்று கூறிய பேராயர் Krajewski அவர்கள், நாம் நற்செய்தி அறிவுரைகளின்படி நடக்க வேண்டும், அதேநேரம் அறிவோடும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
குளியல் அறைகள் கட்டும் பணிகள் இம்மாதம் 17ம் தேதி ஆரம்பிக்கப்படும் என்றும் பேராயர் கூறினார்.
கடந்த
அக்டோபரில் வத்திக்கானுக்கு அருகில் வீடற்ற ஒரு மனிதரிடம்
பேசிக்கொண்டிருந்தபோது அன்று அவரின் 50வது பிறந்த நாள் என்றறிந்து அவரை ஓர்
உணவு விடுதிக்குச் சாப்பிட அழைத்ததாகவும், ஆனால் இந்த அழுக்கான, நாற்றமடிக்கும் ஆடையுடன் இருக்கும் தன்னை அங்கு அனுமதிக்கமாட்டார்கள் என அவர் கூறியது, இந்தப் புதிய முயற்சிக்குக் காரணம் எனவும் பேராயர் Krajewski அவர்கள் கூறினார்.
ஆதாரம் : CNS
8. ஓர் இயேசு சபை அருள்சகோதரருக்கு உயரிய அறிவியல் விருது
நவ.14,2014. இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்களுக்கு, உயரிய அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் வானியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான Guy Consolmagno அவர்களுக்கு, AAS என்ற அமெரிக்க வானியல் கழகம், Carl Sagan Medal அறிவியல் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
Arizona மாநிலத்தின் Tucsonல் வான்கோள்கள் அறிவியல் பற்றி நடைபெற்ற 46வது கூட்டத்தில், அருள்சகோதரர் Guy Consolmagno அவர்கள் இவ்விருதைப் பெற்றார்.
அமெரிக்க வானயியலாளரும், உலகவியலாளரும், கணித நிபுணருமான Carl Sagan அவர்கள் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
வத்திக்கான் வானியியல் ஆய்வு மையம் கையாளும் நவீன தொழில்நுட்ப டெலஸ்கோப், அரிசோனா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள Pinaleno மலைகளில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், மூன்று திருத்தந்தையர்க்கு, ஊடகத்துறையில்
25 ஆண்டுகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டி உரோம் சலேசிய பல்கலைக்கழகம்
அவருக்கு கவுரவ முனைவர் பட்டத்தை இவ்வெள்ளி மாலை வழங்குவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
9. வீடற்றவர்களுக்கு முகாம்கள், அரசுகளிடம் விவரம் கேட்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்
நவ.14,2014. இந்தியாவில் வீடற்ற ஏழை எளிய மக்கள் வாழ்வதற்குத் தேவையான பாதுகாப்பான முகாம்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, மூன்று வார காலத்திற்குள் மத்திய அரசு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இது
தொடர்பான வழக்கு விசாரணையில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய அரசு இன்னும் பத்து நாள்களுக்குள் இது தொடர்பான அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் கூட்டத்தை நடத்தவும் கூறியுள்ளது.
அந்தக் கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு அழைப்பு விடுக்குமாறும், இது
தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த
விளக்கத்தைப் பெறுமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்கூட குறைகள் உள்ளதாக இது தொடர்பான வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் மட்டும் 39 ஆயிரம் பேர் வீடற்று வாழ்வதாகவும், ஆனால்
அரசால் அங்கு 17 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் பாதுகாப்பு முகாம்களை
ஏற்படுத்தி தர முடியும் என்று கூறப்பட்டதாகவும் இவ்வழக்கில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் : பிபிசி
No comments:
Post a Comment