செய்திகள் - 04.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் தேவைகளைவிட, பிறரின் தேவைகளை முன்னிலைப்படுத்தியே நாம் செயலாற்றவேண்டும்
2. ஆஸ்திரேலிய கர்தினால் மறைவு. திருத்தந்தையின் அனுதாபத் தந்தி
3. உலகில் கொடுமைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இத்தாலிய ஆயர்களின் செப நாள்
4. ஈராக் மோசுல் நகரில் கிறிஸ்தவ கோவில்கள் தகர்ப்பு
5. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் தலித் மக்களுக்கு நீதி கேட்கும் கறுப்பு தினம்
6. வியட்நாமில் மத உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. அதிகாரி கவலை
7. உலகிலேயே பாலர் தொழிலாளர் அதிகமுள்ள நாடு இந்தியா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் தேவைகளைவிட, பிறரின் தேவைகளை முன்னிலைப்படுத்தியே நாம் செயலாற்றவேண்டும்
ஆக.04,2014. இயேசு நிகழ்த்திய 'அப்பம் பலுகுதல்' புதுமை, இரக்கம், பகிர்தல்
மற்றும் திருநற்கருணை என்ற மூன்று அடையாளங்களை உள்ளடக்கி நிற்கிறது என்று
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தேவைகளைவிட, பிறரின்
தேவைகளை முன்னிலைப்படுத்தியே நாம் செயலாற்றவேண்டும் என்பது இப்புதுமை
வழியே இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்று கூறினார்.
நம்முடையத் தேவைகள் முக்கியமானதாக இருக்கின்றபோதிலும், எதுவும் இல்லாமல் துன்புறும் ஏழைகளின் தேவைகள்போல் அவசரமானதல்ல என்பதை ஏற்று, அவர்களுள் ஒருவராக நாமும் உணர்வதே உண்மையான இரக்கம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஏழைகள் தங்கள் சுமைகளை தாங்களே சுமக்கட்டும் என்று விட்டுவிட்டு பாராமுகமாய்ச் செல்வது, சுயநலப் போக்காகும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு
அப்பத்தைக் கைகளில் எடுத்து வானத்தை அண்ணாந்துப் பார்த்து கடவுளைப் போற்றி
மக்களுக்குப் பகிர்ந்தளித்தது திருநற்கருணையின் அடையாளமாக உள்ளது என்று
கூறினார்.
திருநற்கருணையில் இயேசு வெறும் அப்பத்துண்டை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக, முடிவற்ற வாழ்வின் அப்பத்தை, அதாவது, தன்னையே வழங்குகிறார் என்று தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஆஸ்திரேலிய கர்தினால் மறைவு. திருத்தந்தையின் அனுதாபத் தந்தி
ஆக.04,2014. ஆஸ்திரேலிய கர்தினால் Edward Bede Clancy அவர்கள் இறைவனடி சேர்ந்ததையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை சிட்னி உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
90 வயதான கர்தினால் Clancy அவர்கள், இஞ்ஞாயிறன்று இறைபதம் அடைந்ததையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், ஏழைகளின் தேவைகள் குறித்து கர்தினால் அவர்கள் கொண்டிருந்த அக்கறை, கத்தோலிக்கக் கல்விக்கு அவர் வழங்கிய ஆதரவு, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த அவரின் கண்ணோட்டம் போன்றவற்றிற்கு தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளதோடு, சிட்னி உயர் மறைமாவட்ட மக்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் பேராயராகப் பணியாற்றி 1988ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2001ல் பணி ஓய்வுபெற்ற கர்தினால் Clancy அவர்களின் மரணத்துடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 211ஆகக் குறைந்துள்ளது, இதில் 118 பேர் 80 வயதிற்குட்பட்டவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உலகில் கொடுமைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இத்தாலிய ஆயர்களின் செப நாள்
ஆக.04,2014. ஈராக், நைஜீரியா போன்ற நாடுகளில் சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக, இம்மாதம் 15ம் தேதியை செப நாளாக அறிவித்துள்ளது இத்தாலிய ஆயர் பேரவை.
மத நம்பிக்கைகளின் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உயிரிழந்து வருவது குறித்து ஐரோப்பா கவலையற்றதாய், பாராமுகமாய் செயலாற்றுவதாகக் குற்றம்சாட்டும் இத்தாலிய ஆயர்கள், மனித மாண்பு, உரிமைகள் மற்றும் நாகரீகத்தின் அடிப்படை மீது இடம்பெறும் இத்தாக்குதல் குறித்து தாங்கள் அமைதி காக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
தான் பிறந்த பகுதியிலிருந்து கிறிஸ்தவம், முழுமையாகக் காணாமல்போகும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி கவலையை வெளியிடும் ஆயர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியில், மத தீவிரவாதத்தால் கோவில்களும், கிறிஸ்தவக் கலாச்சாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன எனவும் உரைத்துள்ளனர்.
ஆதாரம் : Asia News
4. ஈராக் மோசுல் நகரில் கிறிஸ்தவ கோவில்கள் தகர்ப்பு
ஆக.04,2014. ஈராக்கின் மோசுல் நகரை ISIS என்ற இஸ்லாமிய தீவிரவாதக்குழு கைப்பற்றியபின் அங்குள்ள 45 கிறிஸ்தவ நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் மசூதிகளாகவும் இஸ்லாமிய அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மோசுல் நகர் புனித எஃப்ரேம் பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாம் தீவிரவாதிகள் அங்குள்ள சிலுவையை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் தங்கள் கொடியை நாட்டியுள்ளனர்.
மோசுல் நகரில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சித்ரவதைச் செய்யப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும், வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டும் வருவதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் உரைக்கின்றன.
ஆதாரம் : Catholic Online
5. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் தலித் மக்களுக்கு நீதி கேட்கும் கறுப்பு தினம்
ஆக.04,2014. மதத்தின் அடிப்படையில் தலித் மக்கள் இந்திய அரசால் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இம்மாதம் 10ம் தேதியை கறுப்புத்தினமாக அனுசரிக்கத் திட்டமிட்டுள்ளது இந்தியத் திருஅவை.
இந்துமதத்தைப் பின்பற்றும் தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களில் வாழும் அதே இன மக்களுக்கு வழங்கப்படாமலிருப்பது சமூக அநீதியாகும் எனக் கூறும் இந்தியத் திருஅவை, இந்த அநீதியை எதிர்த்தே கறுப்பு தினம் அனுசரிக்கப்படுவதாக உரைத்தது.
இந்து மதத்தில் உள்ள தலித் மக்கள் தவிர, ஏனையோருக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குரிய சலுகைகள் வழங்கப்படமாட்டாது என அப்போதையக் குடியரசுத் தலைவர் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கையெழுத்திட்டதை முன்னிட்டு, ஆகஸ்ட் 10ம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறது இந்தியத் திருஅவை.
ஆதாரம் : CBCI
6. வியட்நாமில் மத உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. அதிகாரி கவலை
ஆக.04,2014. வியட்நாம்
நாட்டில் மதச்சுதந்திரம் மிகப்பெரிய அளவில் மீறப்பட்டு வருவதாக
அப்பகுதியில் பயணம் மேற்கொண்ட ஐ.நா. அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வியட்நாம் அரசு அதிகாரிகளையும் மதத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்திய, மத விடுதலை தொடர்பான ஐ.நா. சிறப்பு அதிகாரி Heiner Bielefeldt, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான அரசின் எதிர்மறைப் போக்கினை வியட்நாமில் உணரமுடிகிறது என்றார்.
இதற்கிடையே, ஐ.நா. சிறப்பு அதிகாரியை சந்திக்க விரும்பிய வியட்நாம் மத அமைப்புகள் சில, அரசால் அச்சுறுத்தப்பட்டதாகவும், காவல்துறை மூலம் தடுக்கப்பட்டதாகவும் CSW என்ற உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆதாரம் : FIDES
7. உலகிலேயே பாலர் தொழிலாளர் அதிகமுள்ள நாடு இந்தியா
ஆக.04,2014. உலகிலேயே
பாலர் தொழிலாளர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடாக இந்தியா இருப்பது தேசிய
அவமானம் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
புது டெல்லியில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட CRY என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது ஒரு கோடியே ஒரு இலட்சம் பாலர் தொழிலாளர்கள் உள்ளனர்.
5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்கள், வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் எவ்வித ஓய்வுமின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment