செய்திகள் - 05.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : செல்வங்களைக் குவித்து வைத்தால் அவை ஆன்மாவைத் திருடிவிடும்
2. திருத்தந்தை சாரணர் இயக்கத்தினரிடம் : வாழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுபவர்களாக இருங்கள்
3. ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பலிப் பீட உதவியாளர்கள், திருத்தந்தை சந்திப்பு
4. தலத்திருஅவையை விட்டு விலகும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஜெர்மன் கர்தினால் கவலை
5. ஈராக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தின் உறுதியான சான்றுகள், ப்ரெஞ்ச் ஆயர்கள்
6. லிபியாவில் ஒரு கிறிஸ்தவர் இருந்தால்கூட அந்நாட்டிலே தங்கியிருப்பேன், டிரிபோலி அப்போஸ்தலிக்க நிர்வாகி
7. சீனாவில் கத்தோலிக்கர் தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படுமாறு ஆயர் வலியுறுத்தல்
8. புற்றுநோயைத் தடுக்கும் கருப்பு மிளகு
9. உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கடலூர் மாவட்ட 17 மாற்றுத் திறனாளிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : செல்வங்களைக் குவித்து வைத்தால் அவை ஆன்மாவைத் திருடிவிடும்
ஆக.05,2014. “அரும்பொருள் போன்று செல்வங்களை நீங்கள் குவித்து வைத்தால், அவை உங்கள் ஆன்மாவைத் திருடிவிடும்” என்று, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஸ்பெயினின் லுசெனாவில், அடைபட்ட துறவு வாழ்வு வாழ்கின்ற, காலணி அணியாத கார்மேல் சபை அருள்சகோதரிகளை இத்திங்களன்று தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2013ம் ஆண்டின் நிறைவு நாளில் அவ்வில்லச் சகோதரிகளைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, மீண்டும் இத்திங்களன்று தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இத்துறவு இல்லத்தில் அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த மூன்று அருள்சகோதரிகள் உள்ளனர். இத்துறவு இல்ல அருள்சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, கடந்த 15 ஆண்டுகளாகத் தெரியும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை சாரணர் இயக்கத்தினரிடம் : வாழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுபவர்களாக இருங்கள்
ஆக.05,2014. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல், செயல்படுபவர்களாக இருக்குமாறு, ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளம் சாரணர் இயக்கத்தினரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சில் நடக்கும் ஐரோப்பிய இளம் சாரணர் இயக்க மாநாட்டில் கலந்துகொள்ளும், ஏறக்குறைய இருபது நாடுகளின் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கேட்டுள்ளார்.
இயேசுவை நீங்கள் அறிவதற்கு முதலில், நீங்கள் அவரை அறிவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும்,
இறைவார்த்தை மற்றும் திருவருள்சாதனங்கள் வழியாக இயேசுவைச் சந்திக்க
முடியும் என்றும் இளம் சாரணர் இயக்கத்தினருக்கு அனுப்பியுள்ள செய்தியில்
குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவ
விழுமியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்களைச்
சந்திப்பதற்கு அஞ்சவேண்டாமெனவும் அச்செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
பிரான்சின் நார்மாண்டி மாநிலத்தில் Saint-Evroult-Notre-Dame-Du- Bois என்ற நகரில் நடக்கும் நான்காவது அனைத்துலக இளம் சாரணர் இயக்க மாநாடு இம்மாதம் 10ம் தேதியன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பலிப் பீட உதவியாளர்கள், திருத்தந்தை சந்திப்பு
ஆக.05,2014. ஜெர்மன் மொழி பேசும், பல்லாயிரக்கணக்கான திருப்பலிப் பீட வளர்இளம் பருவ உதவியாளர்களை இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில்
நான்கு நாள்கள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட
இந்தப் பீட உதவியாளர்களுள் ஜெர்மனியிலிருந்து மட்டும் ஏறக்குறைய
ஐம்பதாயிரம் பேர் வந்துள்ளனர்.
“சரியான காரியத்தைச் செய்வதற்கு போதுமான சுதந்திரம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவர்களின் இத்திருப்பயணம் குறித்துப் பேசிய ஜெர்மன் ஆயர் பேரவையின் ஆயர் Karl-Heinz Wiesmann அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் இதயங்களைத் திறப்பார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்துவில் நீங்கள் சுதந்திரமானவர்கள், சுதந்திரத்துடன் நல்ல காரியங்களை நீங்கள் செய்வதற்கு கிறிஸ்து சக்தி கொடுக்கிறார் என்று, இந்தத் திருப்பலிப் பீட உதவியாளர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவதாகவும் ஆயர் கூறினார்.
உரோம் வந்துள்ள இந்தத் திருப்பலிப் பீட வளர் இளம் பருவ உதவியாளர்கள் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. தலத்திருஅவையை விட்டு விலகும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஜெர்மன் கர்தினால் கவலை
ஆக.05,2014. ஜெர்மனியில் தலத்திருஅவையை விட்டு விலகும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கவலைதரும் வகையில் அதிகரித்து வருவதாகவும், குருக்கள்
ஈடுபடும் இழிவான மற்றும் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள் முடிவுக்கு
வரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் ஒருவர்.
Mainz உயர்மறைமாவட்ட “விசுவாசமும் வாழ்வும்” என்ற வார இதழில் இவ்வாறு எழுதியுள்ள கர்தினால் Karl Lehmann அவர்கள், கத்தோலிக்கர் அதிக அளவில் திருஅவையை விட்டு விலகி வருவது குறித்து நாம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.
குருகுலத்தார் கத்தோலிக்கரின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்றும், திருஅவை மற்றொரு பொழுதுபோக்கு கழகமல்ல என்றும், மனம் வருந்துதல், புதுப்பித்தல் மூலம், மேலும் அதிகமான இழிவான செயல்கள் நடக்காதபடி தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார் கர்தினால் Lehmann.
2013ம் ஆண்டில் வெளியான தகவலின்படி ஜெர்மனியின் 8 கோடியே 20 இலட்சம் மக்களில் கத்தோலிக்கர் 29.9 விழுக்காட்டினர். ஜெர்மனியில் 2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர் அது அதிகமாகி, இவ்வாண்டில் மீண்டும் திருஅவையில் இணைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு அதிகமாகியுள்ளது.
ஆதாரம் : CNS
5. ஈராக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தின் உறுதியான சான்றுகள், ப்ரெஞ்ச் ஆயர்கள்
ஆக.05,2014.
தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ள நிலையிலும் ஈராக் கிறிஸ்தவர்கள்
இயேசு கிறிஸ்து மீது தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்துக்குச் சான்றாக
உள்ளனர் என்று அந்நாட்டைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள ப்ரெஞ்ச் ஆயர்கள்
கூறியுள்ளனர்.
ஈராக்கின் Karakosh, Alqosh, Kirkuk, Erbil ஆகிய நகரங்களைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள நான்கு ப்ரெஞ்ச் ஆயர்கள் வத்திக்கான் வானொலி அளித்த பேட்டியில், மோசுல் நகரைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவர்கள் எவரும் இஸ்லாம் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு நாளும் பல தடவைகள் ஈராக் கிறிஸ்தவர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்களில் ஒருவரான Lyons பேராயர் கர்தினால் Philippe Barbarin அவர்கள், ஈராக் கிறிஸ்தவர்கள் நூற்றாண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
மோசுல் நகரிலிருந்து வெளியேறிய அகதிகளுக்கென ப்ரெஞ்ச் கத்தோலிக்கரிடமிருந்து சிறப்பு நிதியையும் சேகரித்து அங்கு வழங்கியுள்ளனர் ப்ரெஞ்ச் ஆயர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. லிபியாவில் ஒரு கிறிஸ்தவர் இருந்தால்கூட அந்நாட்டிலே தங்கியிருப்பேன், டிரிபோலி அப்போஸ்தலிக்க நிர்வாகி
ஆக.05,2014. லிபியாவில் நடைபெற்று வரும் கடும் மோதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும்வேளை, அந்நாட்டில் ஒரு கிறிஸ்தவர் இருந்தால்கூட அந்நாட்டிலே தான் தங்கியிருக்க முடிவுசெய்திருப்பதாக, தலைநகர் டிரிபோலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார்.
லிபியாவில் கடாஃபி ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் அந்நாடு கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், டிரிபோலி விமானநிலையத்தையும், Cyrenaicaவையும்
கைப்பற்றுவது தொடர்பாக பல்வேறு இஸ்லாம் தீவிரவாதக் குழுக்களுக்கிடையே
கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
இந்நிலையில் லிபியாவில் கிறிஸ்தவச் சமூகத்தின் சூழல் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய ஆயர் மார்த்தினெல்லி அவர்கள், Cyrenaicaவில் அருள்சகோதரிகள் எவரும் இல்லை, லிபியாவில்
கத்தோலிக்க சமூகத்தின் இதயமாக இருந்த பிலிப்பைன்ஸ் மக்களில்
பெரும்பாலானோர் அப்பகுதியைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும்
தெரிவித்தார்.
டிரிப்போலியிலும் பிலிப்பைன்ஸ் மக்கள் பெருமளவாக இருந்தனர், அந்நகரிலிருந்தும் அவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர் எனவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
மேலும், லிபியாவில்
பணியாற்றி வரும் நலவாழ்வுப் பணியாளர்களுள் அறுபது விழுக்காட்டினர்
பிலிப்பைன்ஸ் நாட்டவர். இருபது விழுக்காட்டினர் இந்தியர்கள். லிபியாவில்
பணியாற்றிய இந்தியர்களுள் 47 தாதியர்கள் உட்பட 58 பேர் திரும்பியுள்ளனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்பட்சத்தில், லிபியாவின்
மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சுக்களால்
காயமடைந்து ஏராளமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வரும் நிலையில், ஊழியர்கள் வெளியேறினால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : Fides
7. சீனாவில் கத்தோலிக்கர் தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படுமாறு ஆயர் வலியுறுத்தல்
ஆக.05,2014.
சீனாவில் சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தங்களின்
உரிமைகளையும் மாண்பையும் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படுமாறு
வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
சீனாவின் Wenzhou மறைமாவட்டத்தில்
சான்ஜியாங் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர்
உள்ளூர் அரசு அதிகாரிகளால் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின்னர் அந்நகரில்
கிறிஸ்தவம் அழிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தனது Wenzhou மறைமாவட்ட கத்தோலிக்கருக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ள ஆயர் Vincent Zhu Weifang அவர்கள், கத்தோலிக்கர் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் துணிச்சலைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.
தற்போது அப்பகுதியில் சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருவது அதிர்ச்சியைக் கொடுப்பதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறியுள்ள ஆயர் Zhu அவர்கள், அரசின் இந்நடவடிக்கை விரைவில் நின்றுவிடும் என்று சிலர் கூறியதால் இதுவரை தான் பொறுமையுடன் இருந்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை மோசமாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
88 வயதாகும் ஆயர் Zhu அவர்கள், சீனாவில்
இடம்பெற்ற கலாச்சாரப் புரட்சியின்போது 16 ஆண்டுகள் சீர்திருத்தத் தொழில்
முகாமில் வேலை செய்தவர். பின்னர் 1982ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டுவரை
சிறையில் இருந்தவர்.
ஆதாரம் : CNS
8. புற்றுநோயைத் தடுக்கும் கருப்பு மிளகு
ஆக.05,2014. உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், புற்றுநோய்க் கட்டிகள் வராமல் தடுப்பதிலும், கருப்பு மிளகு பெரும் பங்கு வகிப்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து கூறிய அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சன்டியாகோ மருத்துவப் பள்ளியை சேர்ந்த பேராசிரியர் அயால்ராஜ், கருப்பு மிளகில், வீரியமிக்க, 'Capsaicin ' உள்ளது. இது குடல் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
'டி.ஆர்.பி.,' என்றழைக்கப்படும் பெருங்குடல் சுவர்களில் காணப்படும் செல்களில், மிளகிலுள்ள கெப்செசின்
செயல்பட்டு புற்றுநோய்க் கட்டிகளை எதிர்க்கும் காரணிகளை உருவாக்குகிறது.
எலிகளிடையே செய்யப்பட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. எதிர்காலத்தில், டி.ஆர். பி., மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் அயால்ராஜ் கூறியுள்ளார்.
ஆதாரம் : தினமலர்
9. உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த கடலூர் மாவட்ட 17 மாற்றுத் திறனாளிகள்
ஆக.05,2014. கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் 17 பேர், தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான இசைவுக் கடிதத்தை கடலூர் ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தி இந்து நாளிதழிடம் பேசிய கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் குமார் அவர்கள், உடல்தான் ஊனமே தவிர எங்களது உள்உறுப்புகள் நன்றாக உள்ளன. உடல் ஊனமுற்றோர் என்ற அடையாளத்துடன் வாழும் நாங்கள், எங்களுக்குப் பிறகு சராசரி மனிதர் உடலில் எங்கள் உறுப்புகள் வாழ வேண்டும்” எனக் கூறினார்.
‘விபத்தினாலும், நோயினாலும் உடல் உறுப்புக்களை இழக்கும் பலர் உயிரிழக்கும் சம்பவம் எங்களைப் பாதிக்க வைத்துள்ளது என்றும், இறந்த
பிறகு இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. அதனால் யாருக்கும் பயனில்லை.
எங்களால் காசு பணம் கொடுக்க இயலாது. எங்கள் உறுப்புக்களைத் தானம்
செய்கிறோம் என்றும் கூறினார் சந்தோஷ் குமார்.
ஆதாரம் : தி இந்து
No comments:
Post a Comment