செய்திகள் - 18.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு
2. உள்ளார்ந்த அமைதியை வலியுறுத்தும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
3. குடியேற்றதாரர் குறித்த ஏழாவது உலக கருத்தரங்கில் ஆயர் களத்திப்பரம்பில்
4. ஈராக் நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற அச்சுறுத்தல்
5. குறைமாதப் பிரசவம் : குழந்தைகள் உயிரிழப்புக்குப் பெரிய காரணம்
6. கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு
நவ.18,2014. வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வது என்பது இறப்புக்கு சமம், வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் எவ்வித பயனும் இல்லை என எடுத்துரைத்தார்.
ஆன்மீக வாழ்வை மேற்கொள்வதிலும், கோவில் திருமணங்களிலும் நிறைவுகண்டு முடிந்துவிடுவதல்ல கிறிஸ்தவ வாழ்வு, மாறாக அது தனக்குள்ளேயே உயிர்துடிப்புடையதாக இருக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, அந்த வெளித்தோற்றத்திலிருந்து உண்மை தன்மை நோக்கி மனம் மாறவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு
எரிக்கோ நகர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது சக்கேயுவைக் கண்டு அவர்
வீட்டிற்கு சென்ற நிகழ்வை மையப்படுத்திய இச்செவ்வாய்க்கிழமை திருப்பலி
வாசகம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அநியாயமான வகையில் ஊழல் செய்து பணம் ஈட்டும் தலைவர்கள் இன்றும் உலகில் உள்ளனர் என்றார்.
பெரும் செல்வந்தராகவும், வரி வசூலிப்பவரின் தலைவராகவும் இருந்தபோதிலும் சக்கேயு, இயேசுவைக் காண மரத்தில் ஏறியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சக்கேயு அவர்களின் உள்ளத்தில் எழுந்த ஆர்வம், தூய ஆவியின் விதையாக இருந்து, அவரை தூய்மை நிலைக்குத் தயாரித்தது என்றார்.
சக்கேயுவின் மனமாற்றம் உண்மையானதாக இருக்கும் அதேவேளை, சக்கேயுவின் மனமாற்றத்தை ஏற்காமல் இருக்கும் ஏனையோரின் விமர்சனங்களோ ஏற்புடையதல்ல; ஏனெனில், பாவியாகிய
சக்கேயுவின் வீட்டிற்குள் இயேசு நுழைந்ததையே பாவச்செயல் என அவர்கள்
கருதினர் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. உள்ளார்ந்த அமைதியை வலியுறுத்தும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
நவ.18,2014. 'உலகில்
பெருமளவான இரைச்சல்கள் காணப்படுகின்றன! நம் இதயங்களிலும்
இறைவன் முன்னிலையிலும் அமைதியாய் இருக்கக் கற்றுக்கொள்வோமாக' என இச்செவ்வாய்க்கிழமை தன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், இஸ்பானியம், போலந்து, ஆங்கிலம், ஜெர்மன், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், அரபு என 9 மொழிகளில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய்க்கிழமையன்று விடுத்துள்ள செய்தியில், உள்ளார்ந்த அமைதியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. குடியேற்றதாரர் குறித்த ஏழாவது உலக கருத்தரங்கில் ஆயர் களத்திப்பரம்பில்
நவ.18,2014. நல்வாழ்வைத்தேடி வேறு நாடுகளுக்குக் குடிபெயரும் மக்களை அந்த நாடுகள் வரவேற்று அரவணைப்பது அவசியம் என்பதுபோல், அவர்களின் சொந்த நாட்டுத் திருஅவைக்கும், புதிய
நாட்டுத் திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கவேண்டியதும் அவசியம் என
வலியுறுத்தினார் திருப்பீட அதிகாரி ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில்.
குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள், குடியேற்றதாரர் குறித்த ஏழாவது உலக கருத்தரங்கில் துவக்க உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
நல்வாழ்வுத் தேடி வேறு நாடுகளில் மக்கள் குடியேறினாலும், இந்த குடியேற்றதாரர்கள், தாங்கள் புகுந்துள்ள புதிய நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் பங்களிப்பை வழங்குவதுடன், தங்கள் சொந்த நாட்டின் வருவாய்க்கும் உதவுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் ஆயர் களத்திப்பரம்பில்.
இன்றைய உலகில் பெண் குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை 49 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பதையும் குறிப்பிட்ட ஆயர், இது குறித்தும் திருப்பீடத்தின் இக்கருத்தரங்கு விவாதிக்கும் என்றார்.
குடியேற்றதாரரின்
மாண்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பது குறித்து இக்கருத்தரங்கு
மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எனவும் தெரிவித்தார் ஆயர்
களத்திப்பரம்பில்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஈராக் நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற அச்சுறுத்தல்
நவ.18,2014. சிரியாவின் Ar-Raqqah நகரிலிருந்து பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வெளியேறியபின், இன்னும் மீதமிருக்கும் 23 குடும்பங்களும் 535 டாலர் வரி கட்டவேண்டும்; இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஐ.எஸ்.ஐ.எல் இஸ்லாமிய அரசு கட்டளையிட்டுள்ளது.
ஈராக் மற்றும் லெவன்ட் பகுதியின் இஸ்லாமிய அரசு (Islamic State of Iraq and the Levant) என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்தக் குழு, ஏற்கனவே
விவிலியங்களையும் கிறிஸ்தவ இலக்கியங்களையும் எரித்துள்ளது. இஸ்லாமிய
அரசின் தலை நகராக வட மத்திய ஈராக்கில் இந்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ள Ar-Raqqah நகரில் கிறிஸ்தவர்களின் அனைத்து அடையாளங்களையும் அழிப்பதில் தீவிரமாக முயன்று வருகிறது இந்த அரசு.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈராக்கில் கிறிஸ்தவம் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Cath.Culture
5. குறைமாதப் பிரசவம் : குழந்தைகள் உயிரிழப்புக்குப் பெரிய காரணம்
நவ.18,2014. உலகெங்கிலும் சிறார் உயிரிழப்புகளுக்கு, குறைமாத பிரசவமே மிகப்பெரிய காரணியாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவர்கள் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
‘த லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 10 இலட்சம் உயிரிழப்புகளுக்கு குறைமாத பிறப்புகளே காரணமாகியுள்ளன.
குறைமாதத்தில்
பிறந்த பின்னர் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளினால் இறக்கும் குழந்தைகள்
எண்ணிக்கை அடிப்படையில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் நாடு இந்தியா என உலக
நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் ஓர் ஆண்டில் சுமார் 3.61,000 குழந்தைகள் குறைமாதப் பிரசவத்தின் பின்னர் ஏற்படும் உடல் நலப் பாதிப்பால் உயிரிழக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மிகவும் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல், மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சரியாக வளர்ச்சியடைந்திருக்காத காரணத்தினால் உயிரிழப்புக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
ஒருகாலத்தில் நிமோனியா போன்ற கிருமித் தொற்றுநோய்களால் இடம்பெற்ற குழந்தைகால உயிரிழப்புகளைவிட, தற்போது முதற்தடவையாக, குழந்தை பிறந்தவுடன் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கூடுதலான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.
ஆதாரம் : BBC
6. கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு முதலிடம்
நவ.18,2014. இந்தியாதான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகளைக் கொண்டுள்ள நாடு என உலக கொத்தடிமைகள் தகவல் அமைப்பு கூறுகிறது.
வேலையிடத்தில் சுரண்டப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில், இந்தியா முன்னணியில் உள்ளதாகவும், அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேர் கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
மக்கள்தொகை விழுக்காட்டு அடிப்படையில் மிக அதிகமானவர்களை அடிமையாகக் கொண்டுள்ள நாடு மௌரிடானியா என்றும், அந்நாட்டின் மக்கள்தொகையில் 4 விழுக்காட்டினர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
அடிமைத்தனத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும், ஆட்களை பலவந்தமாக கொண்டு சென்று வேலை வாங்குவோர்க்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை விண்ணப்பித்துள்ளது.
உலகில் இன்று, சுமார் மூன்று கோடியே அறுபது லட்சம் பேர் அடிமைத்தளையில் வாழ்கின்றனர் என இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment