செய்திகள் - 17.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்
2. திருத்தந்தையின் பாராட்டு - Zambia நாடு, மறை போதகர்களாலும், தேவ அழைத்தல்களாலும் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
3. அடுத்த ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு திருத்தந்தை திருப்பயணம்
4. திருத்தந்தை: நம்மீது நம்பிக்கை வைத்துள்ள இறைவனை ஏமாற்றாதிருப்போம்
5. திருத்தந்தை : பேச்சுவார்த்தை மூலம் குடியேற்றதாரர் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்
6. திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுளின் படைப்பில் தேவையற்றது என்று எதுவுமில்லை
7. மத நம்பிக்கையாளர்களுக்கு சீன அரசுக்கட்சியில் அனுமதியில்லை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்
நவ.17,2014. நாம் இறைவனை உற்றுநோக்கும் அதேவேளை, அவரின்
தேவைகளை உற்றுநோக்கத் தவறிவிடுகிறோம் என்று இத்திங்கள் காலை ஆற்றியத்
திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நான் பசியாயிருக்கிறேன், தாகமாயிருக்கிறேன், சிறையிலிருக்கிறேன், நோயுற்றிருக்கிறேன்' என்று இறைமகன் இயேசு வெளிப்படுத்திய தேவைகளைக் குறித்து நாம் சிந்திக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
ஆயர்களாக, அருள் பணியாளர்களாக, பொதுநிலை விசுவாசிகளாக இறைவனோடு எப்போதும் இணைந்து, அவரை உற்றுநோக்கும் நாம், இறைவனின் தேவைகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சுற்றியிருக்கும் ஏழை சகோதர, சகோதரிகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மை அன்புகூர்ந்ததுடன், நம்மை அழைத்து நமக்கு மீட்பை வழங்கிய இறைவன், நாம் நலமுடன் வாழவே ஆவல் கொள்கிறார்; அவர்மீது நாம் கொள்ளும் அன்புடன், நாம் பிறரையும் அன்புகூரும்போது இறை ஆவல் நிறைவேறுகிறது என்று மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையின் பாராட்டு - Zambia நாடு, மறை போதகர்களாலும், தேவ அழைத்தல்களாலும் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
நவ.17,2014. Zambia நாடு, கத்தோலிக்க மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளோடு மட்டுமல்ல, பொது நிலையினரான மறை போதகர்களாலும், தேவ அழைத்தல்களாலும் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டுக்களை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் Ad Limina சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்துள்ள Zambia நாட்டு ஆயர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Zambiaவில் குடும்பங்கள் அனுபவித்துவரும் இக்கட்டானச் சூழல் குறித்து கவலை வெளியிட்டார்.
உறுதியான கிறிஸ்தவக் குடும்பங்கள் உருவாக்கப்பட ஊக்கமளித்தல், இன்றைய உலகில் குறிக்கோளற்று வாழும் இளையோருக்கு வழிகாட்டி நடத்திச் செல்லுதல், ஏழைகளுக்கு உதவுதல், AIDS நோயுற்றோருக்குப் பணியாற்றுதல் போன்றவற்றில் தலத்திருஅவை முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற, ஆயர்களிடம் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கலாச்சாரங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், Zambia நாட்டு ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அடுத்த ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு திருத்தந்தை திருப்பயணம்
நவ.17,2014. இறைவன்
திருவுளம் கொண்டால் வரும் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய
நாட்டின் ஃபிலடெல்ஃபியாவில் இடம்பெறும் எட்டாவது உலக குடும்ப மாநாட்டிற்கு, தான் செல்லவிருப்பதாக இத்திங்களன்று காலையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரில் முழுமையடைதல்' என்ற
தலைப்பில் திருப்பீடத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்ட உலகக் கருத்தரங்கில்
பங்குபெற்றோரை இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தன் திருப்பயணம் குறித்துத் தெரிவித்ததுடன், ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரில் முழுமையடைதல் என்பது குறித்தும் விளக்கினார்.
ஒருவரின்
குறைபாட்டை மற்றவர் நிறைவுச் செய்வது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம்
நோக்கக்கூடாது என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவருக்கும்
வழங்கப்பட்டுள்ள கொடைகளை அனைவரின் நலனுக்காக பயன்படுத்தி ஒன்றிப்பில்
வாழ்வதை இது குறிப்பிடுகின்றது என்று கூறினார்.
குடும்பங்களிலேயே இதை நாம் முதலில் கற்றுக்கொள்கின்றோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கணவனும் மனைவியும் தங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்டக் கொடைகளோடு மற்றவர்களை நிறைவுச் செய்வதுடன், ஒன்றிணைந்த முயற்சியில் குழந்தைகளின் கல்விக்கும் உதவுகின்றனர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை: நம்மீது நம்பிக்கை வைத்துள்ள இறைவனை ஏமாற்றாதிருப்போம்
நவ.17, 2014.
இறைவன் நமக்கு வழங்கியுள்ள திறமைகளை நாம் மேலும் வளப்படுத்துகிறோமா அல்லது
அவைகளை பூட்டிவைத்து வாழுகிறோமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என
அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு
நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த
மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலி வாசககத்தின் தாலந்து உவமை குறித்து எடுத்துரைத்தார்.
ஒவ்வொருவரும் வீட்டிற்குச் சென்று இந்த தாலந்து உவமையை நற்செய்தியில் படித்து, நம் திறமைகள் குறித்து ஆராயுமாறுக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது நம்பிக்கை வைத்து நமக்குத் திறமைகளை வழங்கியுள்ள இறைவனை நாம் ஏமாற்றக்கூடாது என அழைப்புவிடுத்தார்.
நமக்கு
இறைவன் வழங்கியுள்ள அருளை நாம் மற்றவர்களின் நலனுக்காகப் பயன்படுத்த
வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
நம் விசுவாசம் எத்தனை பேரைத் தொட்டுள்ளது, நம் நம்பிக்கையால் எத்தனை பேருக்கு ஊக்கமளித்துள்ளோம், நம் அன்பை எத்தனை பேருடன் பகிர்ந்துள்ளோம் என்ற கேள்விகளை நமக்குள் கேட்டு, நமக்கு
வழங்கப்பட்டுள்ள அருளை எத்தகைய முறையில் பயனுள்ளதாக செலவழித்துள்ளோம்
என்பது குறித்து ஆராயவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை : பேச்சுவார்த்தை மூலம் குடியேற்றதாரர் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்
நவ.17,2014. உரோம் நகரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த பதட்டநிலைகள் குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரில் மட்டுமல்ல, பல
ஐரோப்பிய நகர்களிலும் இடம்பெறும் இத்தகைய பதட்டநிலைகளுக்கு அமைதியான
தீர்வுகாண அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும் என விண்ணப்பித்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பதட்ட நிலைகள் உடனடியாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படவில்லையெனில், மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்.
மோதல்களின் மத்தியிலும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிமக்களும் குடியேற்றதாரர்களும், பொறுப்புடைய அதிகாரிகளின் முன்னிலையில் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, ஒன்றிணைந்து திட்டங்களைத் தீட்டுவதன் மூலம் அமைதிவாழ்வை உருவாக்கமுடியும் எனவும் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுளின் படைப்பில் தேவையற்றது என்று எதுவுமில்லை
நவ.17,2014. பயன்படுத்தப்பட்டு குப்பையென வீசியெறியப்படும் பொருள் மனிதர்கள் என்ற எண்ணத்திற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு, தன் ஊக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதர்கள் பொருள்களாக கடத்தப்பட்டு, விற்கப்படுவதை
எதிர்த்துப் போராடும் குழுவொன்று ஏற்பாடு செய்துள்ள திருப்பீடக்
கல்விக்கழகக் கருத்தரங்கில் பங்கு பெறுவோரை இஞ்ஞாயிறன்று சந்தித்தத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் படைப்பில் தேவையற்றது என்று எதுவுமில்லை, அனைத்தும் அதற்குரிய மாண்பை உள்ளடக்கியது என்று கூறினார்.
ஒவ்வொருவரும் வாழ்வைப் பாதுகாக்க தங்களை இன்னும் கூடுதலாக அர்ப்பணிக்கவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருத்தரங்கில் கலந்துகொள்வோரிடம் முன்வைத்தார்.
இதற்கிடையே, ஞாயிறு பிற்பகல் திருத்தந்தையர்களின் கோடைவிடுமுறை இல்லம் அமைந்துள்ள Castel Gandolfo சென்று, ஆர்ஜென்டீனா கலைஞர், Alejandro Marmo அவர்கள் உருவாக்கியுள்ள இரு சிலைகளை ஆசீர்வதித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரும்பி வரும் வழியில், உரோம் நகரில் அமைந்துள்ள 11ம் பயஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்தினால் Jorge Maria Mejia வையும் சந்தித்து உரையாடினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மத நம்பிக்கையாளர்களுக்கு சீன அரசுக்கட்சியில் அனுமதியில்லை
நவ.17,2014. சீன அரசுக்கட்சியில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றுபவர்களாக இருக்கமுடியாது, ஏனெனில் இறை நம்பிக்கையின்மையே சீன அமைப்புமுறையின் அடிப்படைக் கொள்கை என அரசு இதழ் கூறுகின்றது.
சைனாவின் சிறுபான்மை மற்றும் மதவிவகாரங்களுக்கான துறையின் தலைவர் Zhu Weigun அவர்கள், சீனக் கம்யூனிசக் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில், கம்யூனிசக் கட்சியின் அங்கத்தினர்கள் மதச்சடங்குகளில் பங்குபெறுவது குறித்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
வியட்நாம், கியூபா மற்றும் இரஷ்யாவிலுள்ள கம்யூனிச கட்சி அங்கத்தினர்கள் மத நடவடிக்கைகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவதால், அத்தகைய போக்கை சீனாவிலும் கொண்டுவர எண்ணுவது தவறு என உரைத்துள்ள Weigun அவர்கள், சீனாவில் மத சுதந்திரத்திற்கு அழைப்புவிடுக்கும் சீன அறிஞர்கள் குறித்த தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment