செய்திகள் - 15.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை இத்தாலிய மருத்துவர்களிடம் : மனித வாழ்வு எப்போதும் புனிதமானது என்பதற்குச் சாட்சியாக இருங்கள்
2. திருத்தந்தை : ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு அமைதியை அளிக்கிறார்
3. ஜி-20 நாடுகளின் மாநாடு, விரிவாக்கப்பட்ட அரசியல் மேடையாக இருக்கக் கூடாது, பிரிஸ்பேன் பேராயர்
4. திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த பல்சமயக் கருத்தரங்கு
5. திருஅவை பக்த இயக்கங்களின் மூன்றாவது உலக மாநாடு
6. அமெரிக்கா, சிரியா இராணுவத்தைத் தாக்கினால் சிரியா, இரண்டாவது லிபியாவாக மாறும், பேராயர் Hindo
7. மலேசியாவில் கிறிஸ்தவப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு விதிமுறைகள்
8. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டத்தால் சிறுபான்மை மதத்தவர் தொடர்ந்து பாதிப்பு
9. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாணவிகளை அனுமதிக்காதது தவறு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை இத்தாலிய மருத்துவர்களிடம் : மனித வாழ்வு எப்போதும் புனிதமானது என்பதற்குச் சாட்சியாக இருங்கள்
நவ.15,2014. கருக்கலைப்பு, கருணைக்கொலை, ஆய்வுக்குழாய் குழந்தை போன்ற செயல்பாடுகள் போலியான கருணையாகும் என்று கூறிய அதேவேளை, மனித
வாழ்வைவிட மிகவும் புனிதம் மிக்கது வேறு எதுவுமில்லை என்பதை மருத்துவர்கள்
தங்கள் வார்த்தையாலும் வாழ்வாலும் எப்போதும் சான்று பகருமாறு
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய கத்தோலிக்க மருத்துவர்கள் கழகம் (AMCI) ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோமையில் இவ்வெள்ளி, சனி
தினங்களில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய ஐந்தாயிரம் பேரை
இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரை
வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வின் புனிதம் பற்றிப் பேசினார்.
கருக்கலைப்பை ஊக்குவிப்பதற்கு பெண்களுக்கு உதவுகின்ற, கருணைக்கொலைச் செயலை ஒரு மாண்புச் செயலாக நோக்குகின்ற, குழந்தையை உருவாக்குவதற்கு அறிவியலைக் கையாள்கின்ற போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பேசினார் திருத்தந்தை.
வேறு எந்த வளங்கள், உரிமைகள், பெருமளவான சமூக-பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைவிட மனித வாழ்வு தரத்தில் மிகவும் முக்கியமானதாக இருப்பது போன்று, மனித வாழ்வைவிட மிகவும் புனிதம் மிக்கது வேறு எதுவுமில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மனித வாழ்வு எப்போதும் புனிதமானது, மதிப்புமிக்கது, அதன் உரிமைகள் மீறப்பட முடியாதது, மேலும், மனித வாழ்வு அன்புகூரப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, மருத்துவர்கள் தங்களின் வார்த்தையாலும், எடுத்துக்காட்டாலும் சான்று பகர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
பல நோயாளிச் சிறார் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் இச்சந்திப்பில் கலந்து கொண்ட மருத்துவர்களிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, நோயாளிகள், வயதானவர்கள், சிறார் போன்ற நலிந்தோர்மீது திருஅவை கொண்டுள்ள தனிப்பட்ட அன்பு பற்றி எடுத்துரைத்து, கத்தோலிக்க மருத்துவர்கள், தங்கள் தொழிலை, மனித மற்றும் ஆன்மீகப் பணியாக நோக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வாழ்வுக்கு எப்போதும் பணி செய்வதற்குத் தங்களை அர்ப்பணிக்கும் ஹிப்போகிராட்டிக் உறுதி மொழியை மருத்துவர்கள் எடுக்கின்றனர், ஆனால் நற்செய்தி இதைவிட இன்னும் மேலே சென்று வாழ்வை எப்போதும், வரையறையின்றி அன்பு செய்ய அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு அமைதியை அளிக்கிறார்
நவ.15,2014. “ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு அமைதியைக் கொண்டு வருகிறார், அமைதியை மட்டுமல்ல, அன்பு, கனிவு, பிரமாணிக்கம் மற்றும் மகிழ்வையும் கொண்டு வருகிறார்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கலந்து கொள்கிறார்.
தலைநகர் யாங்கூனில் இந்த நவம்பர் 21 முதல் 23 வரை இந்த 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இன்னும், இம்மாதம் 30ம் தேதியன்று தொடங்கும் உலக கத்தோலிக்க துறவிகள் ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பாக, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி ஆரம்பித்து வைக்கிறார் கர்தினால் João Braz de Aviz.
துறவிகள் பேராயத் தலைவராகிய கர்தினால் João Braz de Aviz அவர்கள், இந்த நவம்பர் 30ம் தேதி காலை பத்து மணிக்கு இத்திருப்பலியை நிறைவேற்றுவார். உலக கத்தோலிக்க அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் ஆண்டு, 2015ம் ஆண்டு நவம்பரில் நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஜி-20 நாடுகளின் மாநாடு, விரிவாக்கப்பட்ட அரசியல் மேடையாக இருக்கக் கூடாது, பிரிஸ்பேன் பேராயர்
நவ.15,2014. ஆஸ்திரேலியாவில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் மாநாடு, விரிவாக்கப்பட்ட அரசியல் மேடையாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாறிவிடக்கூடும் என்ற அச்சம் பலரில் ஏற்பட்டுள்ளதென்று, ஆஸ்திரேலிய பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் மாநாடு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பிரிஸ்பேன் பேராயர் Mark Coleridge அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாநாட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று, இதில் எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மனித மற்றும் அறநெறிக் கூறுகளைக் கொண்டதாய் இருக்குமாறு பேராயர் Coleridge அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
புவியின் வெப்பநிலை மாற்றம், சிறுபான்மையினர் நடத்தப்படும் முறை, புகலிடம் தேடுவோர்மீது கொண்டுள்ள எண்ணங்கள், வறுமை, பாதுகாப்பின்மை, பயங்கரவாதம் போன்ற விவகாரங்கள் இம்மாநாட்டில் இடம்பெற வேண்டும் என்றும் பேராயர் Coleridge அவர்கள் கூறினார்.
இதற்கிடையே, உலகில்
அதிகமான பொருளாதார வளமையைக் கொண்டிருக்கும் இருபது நாடுகளின் தலைவர்கள்
கூடியுள்ள இம்மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த பல்சமயக் கருத்தரங்கு
நவ.15,2014. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவு குறித்த ஆழமான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் நவம்பர் 17, வருகிற திங்களன்று பல்சமயக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது வத்திக்கான்.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் முடிந்துள்ள இவ்வேளையில், 'Humanum' என்ற தலைப்பில், 17,18,19 தேதிகளில் மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
14 மதங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட நாற்பது பேர் உரையாற்றுவார்கள்.
ஒரு நலமான சமுதாயத்திலும், சமயத்திலும், மனிதரின் உடல், உள்ளக் கூறுகளிலும் திருமணம் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இக்கருத்தரங்கில் அலசப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருஅவை பக்த இயக்கங்களின் மூன்றாவது உலக மாநாடு
நவ.15,2014. மனித வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளையோரின் செயல்பாடுகள் பற்றி அறிவதற்கும், இவ்வர்த்தகத்தைத் தடை செய்வதற்கான சிறந்த வழிகள் பற்றி ஆராயவும் இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இன்றைய உலகில் ஏறக்குறைய இரண்டு கோடியே பத்து இலட்சம் ஆண்களையும் பெண்களையும், சிறாரையும் பாதிக்கும் மனித வர்த்தகம் மற்றும் பாலியல் பயன்பாட்டிலிருந்து மீண்டவர்கள் இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், “நற்செய்தியில் மகிழ்வு : ஒரு மறைபோதக மகிழ்வு” என்ற தலைப்பில் இம்மாதம் 20 முதல் 22 வரை, திருஅவை பக்த இயக்கங்கள் மற்றும் புதிய சமூகங்களின் மூன்றாவது உலக மாநாடு உரோம் Maria Mater Ecclesiae பாப்பிறைக் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்தும் இந்த உலக மாநாடு பற்றிப் பேசிய அவ்வவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ அவர்கள், திருஅவையின்
மறைப்பணிக்கு இன்றைய உலகம் முன்வைக்கும் கடும் சவால்களுக்குத் தூய
ஆவியிடமிருந்து காலத்துக்கேற்ற பதில் கிடைக்கும் ஒரு கொடையாக, இந்தப் பக்த இயக்கங்களின் கூறுகள் உள்ளன என்று கூறினார்.
இந்த இயக்கங்கள், திருஅவைக்கும், உலகுக்கும் நம்பிக்கையாக இருக்கின்றது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் குறிப்பிட்டதையும் நினைவுகூர்ந்தார் கர்தினால் ரில்கோ.
இந்த நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும் இந்த மூன்றாவது உலக மாநாட்டில், ஏறக்குறைய நூறு பக்த இயக்கங்களிலிருந்து முன்னூறு பொதுநிலையினர் கலந்துகொள்வார்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. அமெரிக்கா, சிரியா இராணுவத்தைத் தாக்கினால் சிரியா, இரண்டாவது லிபியாவாக மாறும், பேராயர் Hindo
நவ.15,2014.
ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் சமயத் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய
நாட்டின் தலைமையிலான தலையீடு சிரியா இராணுவத்தின்மீதும் நடத்தப்பட்டால், சிரியா, இரண்டாவது லிபியாவாக மாறும் என்று எச்சரித்துள்ளார் சிரியா பேராயர் ஒருவர்.
ஐஎஸ் இஸ்லாமிய நாட்டிற்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள், சிரியா
இராணுவத்தின்மீதும் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவது குறித்து
பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிரியாவின் கத்தோலிக்கப் பேராயர் Jacques Behnan Hindo அவர்கள், சிரியாவிலுள்ள மக்களின் நிச்சயமற்ற வாழ்வு குறித்த கவலையையும் தெரிவித்தார்.
சிரியாவின்
வட கிழக்கிலுள்ள ஜசீரா மாநிலத்தின் ஹசாக்கே மாவட்டத்தை 250க்கும் மேற்பட்ட
ஐஎஸ் நாட்டினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளவேளை, அப்பகுதியில் ஒரு மாதத்துக்கு மேலாக சிரியா இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்றும் பேராயர் ஹின்டோ கூறினார்.
ஆனால் இத்தாக்குதல்கள் தொடர்ந்தால், அறுபது குர்த் இனத்தவர், 1,20,000 கிறிஸ்தவர்கள் உட்பட ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் பேராயர் ஹின்டோ கூறினார்
மேலும், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் கட்டுப்பாட்டில் வாழும் சிரியா நாட்டு அப்பாவி மக்கள், பொதுவில் தலைவெட்டப்படுதல், சுடப்படுதல், கல்லால் எரிந்து கொல்லப்படுதல் மற்றும் போராளிகளால் கைது செய்யப்படல் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர் என்று, ஐ.நா. மனித உரிமை புலன் விசாரணையாளர்கள் இவ்வெள்ளியன்று கூறினர்.
ஆதாரம் : Fides
7. மலேசியாவில் கிறிஸ்தவப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு விதிமுறைகள்
நவ.15,2014. மலேசியாவில், தகுதியான தலைவர்கள், கிறிஸ்தவ
சமயப் பொருள்களை அவசியமின்றி பறிமுதல் செய்வதைத் தடை செய்வதற்கு அந்நாட்டு
அரசு சில விதிமுறைகளை அமைத்து வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
SOP என்று சொல்லப்படும் இவ்வழிமுறைகள், சுங்கவரி, காவல்துறை
போன்ற துறைகளின் அதிகாரிகளால் தயாரிக்கப்படுகின்றது என்று உள்துறை
அமைச்சகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுவதாகவும் அச்செய்தி நிறுவனம்
மேலும் கூறியது.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய மலேசிய பிரதமர் அலுவலகத்திலுள்ள சட்ட அமைப்பாளர் Tan Sri Joseph Kurup, இவ்வழிமுறைகள் உண்மையிலேயே செயல்வடிவம் பெற வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
மலேசியாவின்
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி
பறிமுதல் செய்யப்பட்ட சாபா பிரிந்த கிறிஸ்தவ சபையின் 130க்கும் மேற்பட்ட
நூல்களும், 290 குறுந்தகடுகளும் கடந்த புதனன்று திருப்பி வழங்கப்பட்டதையும் Joseph Kurup குறிப்பிட்டார்.
இந்த நூல்களில் இறைவனுக்குப் பதில் அல்லா என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததால் இவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆதாரம் : AsiaNews
8. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டத்தால் சிறுபான்மை மதத்தவர் தொடர்ந்து பாதிப்பு
நவ.15,2014.
பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் தெய்வநிந்தனைச் சட்டம் சிறுபான்மை
மதத்தவரைத் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றது என்று சொல்லி, அது குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டில் பணியாற்றும் ஓர் அரசு-சாரா அமைப்பு.
1987ம் ஆண்டுக்கும் 2014ம் ஆண்டு அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,438 பேர் தெய்வநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்றும், தெய்வநிந்தனை குற்றம் சுமத்தப்படுபவரில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டினர், அந்நாட்டில் நான்கு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள சிறுபான்மை மதத்தவர் என்றும் Awaz-e-Haq Itehad (AHI) என்ற அமைப்பு கூறியது.
இக்குற்றத்தின்கீழ்
1990ம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டுள்ள 60 பேரில் 32 பேர் சிறுபான்மை
மதத்தவர் மற்றும் 28 பேர் முஸ்லிம்கள். இவர்களில் 20 பேர் காவல்துறையின்
தடுப்புக்காவலில் அல்லது காவல்துறையாலும், 19 பேர் வெறித்தனமான கும்பல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகின் பல நாடுகளில் தெய்வநிந்தனை, குற்றமாகக் கையாளப்படுகிறது.
ஆதாரம் : Fides
9. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாணவிகளை அனுமதிக்காதது தவறு
நவ.15,2014.
இந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முக்கிய நூலகத்தில்
பெண்களை அனுமதிக்காமல் இருப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான ஒரு செயல்
என வட இந்திய அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.
அந்தப்
பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆயிரக்கணக்கான பட்டயப்படிப்பு மாணவிகள்
அங்குள்ள மத்திய நூலகத்துக்குச் செல்வதற்கு நிர்வாகம் இதுவரை தடை
விதித்திருந்தது.
பல
ஆண்டுகளாகவே மௌலானா ஆசாத் நூலகம் என்றழைக்கப்படும் அலிகார் முஸ்லிம்
பல்கலைக்கழகத்தின் மைய நூலகத்திற்குள் நுழைய இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்
மாணவிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அண்மையில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Zameer Uddin Shah கருத்து கூறுகையில், மாணவிகளை உள்ளே நுழைய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதன் காரணாமாக மாணவர்களின் வருகை நான்கு மடங்கு அதிகரிக்க கூடும் என்றும், அதனால் ஏற்படக்கூடிய இடநெருக்கடியை தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ அமைப்பினர் வருத்தம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்துதான் தீக்ஷா திவிவேதி என்பவர், இந்த விவகாரம் தொடர்பான பொதுநலன் மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment