Tuesday, 11 November 2014

செய்திகள் - 10.11.14

செய்திகள் - 10.11.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்ந்துகாட்ட, பொது நிலையினருக்கு ஆயர்களின் ஆதரவு தேவை

2. திருத்தந்தையுடன் Ghana அரசுத்தலைவர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிக்கத் தெரியாதவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது

4. இஸ்பெயின் பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

5. திருத்தந்தை: விசுவாசத்தின் வெளிப்பாடே பிறரன்பு நடவடிக்கைகள்

6. உலகில் வறியோர்-செல்வந்தர் இடைவெளி அதிகரிக்கிறது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்ந்துகாட்ட, பொது நிலையினருக்கு ஆயர்களின் ஆதரவு தேவை

நவ.10,2014. பொதுவாழ்வில் விசுவாசத்தை வெகுதூரம் ஒதுக்கிவைத்து விடாமல், நற்செய்தி மதிப்பீடுகளைத் தாங்கள் வாழும் சூழல்களில் வாழ்ந்துகாட்ட, பொது நிலையினருக்குப் பயிற்சியும், தொடர்ந்த ஆதரவும் வழங்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, உலகின் ஆயர்கள் உரோம் நகர் வந்து, திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' நிகழ்வை மேற்கொண்டுள்ள Senegal, Mauritania, Cape Verde, மற்றும் Guinea-Bissau நாடுகளைச் சேர்ந்த ஆயர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கு ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
அருள் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சிகளில் சிறப்புக் கவனம், மதங்களிடையே உரையாடல், குறிப்பாக, இஸ்லாம் மதத்துடன் மேற்கொள்ளவேண்டிய உரையாடலுக்கு ஊக்கமளித்தல், பாகுபாடுகள், சகிப்பற்ற நிலைகள், மத அடிப்படைவாதம் ஆகியவற்றைக் களைய முனைதல் போன்ற பணிகளைக் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்கு வழங்கிய உரையில் வலியுறுத்தினார்.
தாங்கள் வாழும் நாடுகளின் அமைதிக்கும், ஒப்புரவுக்கும் பணியாற்றும் அதேவேளை, மனிதகுல முன்னேற்றம், கல்வி, நல ஆதரவு போன்ற துறைகளில் தங்கள் பணிகளை, தலத்திருஅவைகள் சிறப்புடன் தொடருமாறும் ஊக்கமளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையுடன் Ghana அரசுத்தலைவர் சந்திப்பு

நவ.10,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் Ghana நாட்டு அரசுத் தலைவர் John Dramani  Mahama.
திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் திருப்பீடச்செயலர்  கர்தினால் பியேத்ரோ பரோலின், நாடுகளுடனான திருப்பீடச் செயலகத்தின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார் Ghana அரசுத்தலைவர் .
திருப்பீடத்திற்கும்  Ghana நாட்டிற்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, கல்வி மற்றும் நலத்துறைகளில் Ghana திருஅவை ஆற்றிவரும் பணிகள், பல்வேறு மதங்களிடையே, இனங்களிடையே இருக்கவேண்டிய இணக்க வாழ்வு போன்றவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது.
சர்வதேச விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக ஆப்ரிக்காவை அச்சுறுத்திவரும் Ebola நோய் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிக்கத் தெரியாதவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது

நவ.10,2014. ஒவ்வொரு கிறிஸ்தவரும் மற்றவரை மன்னிப்பவராகவும், பிறர் இடறிவிழ காரணமாக இல்லாதவராகவும் இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறருக்கு இடறலாக இருப்பது என்பது, விசுவாசத்தை அழிவுக்கு உள்ளாக்குகின்றது என்று, இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர் என்று பறைசாற்றிக் கொண்டு, வாழ்வு நடவடிக்கைகளில் அதன் அடையாளமின்றி இருப்பது, பிறர் இடறிவிழ காரணமாகிறது என்று கூறினார்.
"நான் கோவிலுக்குச் செல்வதில்லை; ஆனால், நாணயமானவராக வாழ்கிறேன், மற்றவரோ கோவிலுக்குச் செல்கின்றனர்; ஆனால், செய்யக் கூடாததையெல்லாம் செய்கின்றனர்" என்று பிறர் சொல்வதை நாம் கேட்கும்போது, அது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று கூறினார் திருத்தந்தை.
பாவம், மன்னிப்பு, விசுவாசம் என்று மூன்று கூறுகள் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் மன்னிப்பின் அவசியம் குறித்து அறிந்திருக்கவேண்டும் என்று விளக்கினார்.
மன்னிக்கத் தெரியாதவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களாலேயே, பிறரை மன்னிக்காமல் இருக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இஸ்பெயின் பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

கடந்த சனிக்கிழமையன்று இரவு இஸ்பெயினின் தென்கிழக்கு நகரான Bullas அருகே இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
Bullas நகர் அருள்பணியாளர் ஒருவர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ள, மற்றும் 28 பேர் காயமடைந்துள்ள இந்த பேருந்து விபத்து குறித்து Cartagena ஆயர் Jose Manuel Lorca Planes அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான திருத்தந்தையின் செபத்திற்கு உறுதி கூறப்பட்டுள்ளதுடன், காயமடைந்தோர் மற்றும் உறவினர்களை இழந்தோருக்கு ஆறுதல் வார்த்தைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை: விசுவாசத்தின் வெளிப்பாடே பிறரன்பு நடவடிக்கைகள்

கிறிஸ்துவின் இரத்தத்தாலும் உயிர்த்த ஆண்டவரின் ஆவியாலும் புனிதப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொருவரும் விசுவாசம் எனும் கொடையில் நிலைத்திருந்து, கிறிஸ்தவ சாட்சிய வாழ்வை தொடரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித இலாத்தரன் பேராலய அர்ப்பண விழா குறித்து தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கோவிலின் அர்ப்பணவிழா சிறப்பிக்கப்படும்போதெல்லாம் அது நமக்கு , வரலாற்றில் திருஅவையின் உயிர்துடிப்பான செயல்பாடுகள, அதாவது ஆன்மீகக் கோவிலை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றார்.
நம் விசுவாசத்தில் என்றும் நிலைத்திருந்து முன்னோக்கி நடைபோடுவது அவ்வளவு எளிதானது அல்ல எனினும், முன்னோக்கி நடைபோடவேண்டியது அவசியம், ஏனெனில், நாம் உரைப்பதை வைத்தல்ல, ஆனால் நம் செயல்பாடுகளை வைத்தே நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகின் மீட்பராம் இறைமகன் இயேசுகிறிஸ்துவில் தன் விசுவாசத்தை அறிக்கையிடும் மக்கள் சமூகத்தைக் கொண்டதே திருஅவை, இந்த விசுவாசம், பிறரன்பு நடவடிக்கைகளின் மூலம் செயலாகிறது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தின் வெளிப்பாடே பிறரன்பு நடவடிக்கைகள், பிறரன்பு நடவடிக்கைகளுக்கான விளக்கமே விசுவாசம் என எடுத்துரைத்தார்.
இன்றும் திருஅவையானது, இயேசுகிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசத்தை தாழ்ச்சியுடனும் வீரமுடனும் அறிக்கையிட்டு, பிறரன்பின் சாட்சியாக செயல்படவேண்டும்  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நோக்குடனேயே திருஅவையின் அமைப்புகளும் மேய்ப்புப்பணி நிறுவனங்களும் செயல்படுகின்றன என்றுரைத்தார்.
ஜெர்மனியின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. உலகில் வறியோர்-செல்வந்தர் இடைவெளி அதிகரிக்கிறது

உலகில் வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துவருவதாக வறுமையை அகற்றுவதற்கு உழைத்துவரும் OXFAM என்ற பிறரன்பு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
உலகிலிருந்து வறுமையை ஒன்றிணைந்து அகற்றவேண்டும் என்ற நோக்குடன் இயங்கிவரும் இந்த அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் 350 கோடி மக்களின் கைகளில் இருக்கும் சொத்துக்களின் மதிப்புக்கு இணையாக, உலகின் பெரிய செல்வந்தர்கள் 85 பேர் சொத்துக்கள் சேர்த்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது.
இந்த 85 செல்வந்தர்களின் சொத்து கடந்த ஆண்டில், ஒவ்வொரு நாளும் 66 கோடியே 80 இலட்சம் டாலர்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும் கூறும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பு, வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரித்து வருவதன் விளைவாக, வறியோர் இன்னும் துன்பங்களையே தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள் எனவும் உரைக்கிறது.

ஆதாரம் : Catholic Online 

No comments:

Post a Comment