செய்திகள் - 08.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, இத்தாலிய சாரணர் இயக்கத்தினர் சந்திப்பு
2. சலேசிய சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை : நம்பிக்கை மற்றும் மகிழ்வின் மறைப்பணியாளர்களாக வாழுங்கள்
3. திருத்தந்தைக்கு, “சுதந்திரத்துக்கான Shahbaz Bhatti” விருது
4. 12 வயதுச் சிறுவன் உட்பட எட்டுப் பேரின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன
5. போஹோ ஹராம் அமைப்பைத் தோற்கடிப்பதற்கு அரசியல் ஆர்வம் அவசியம்
6. தடுப்பூசி நடவடிக்கையில் கென்யப் பெண்கள் அறியாமலே கருவளக்கேடு செய்யப்படுகின்றனர்
7. இலங்கை அரசின் அணுகுமுறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம்
8. கிறிஸ்தவ மற்றும் யஜிதி இனப் பெண்களை ஐஎஸ் அமைப்பு விற்கிறது
9. 3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு, அறிவியலாளர் எச்சரிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, இத்தாலிய சாரணர் இயக்கத்தினர் சந்திப்பு
நவ.08,2014. கல்வியின் முதல் தளமாகவும், வாழ்வு மற்றும் அன்பின் சமூகமாகவும் இருக்கின்ற குடும்பத்தில் பிறரோடும், உலகோடும் உள்ள உறவை ஒவ்வொரு மனிதரும் கற்றுணர்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய
கத்தோலிக்க வயதுவந்தோர் சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டை
முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில்
கூடியிருந்த ஏழாயிரத்துக்கு மேற்பட்ட அவ்வியக்கத்தினர்களைச் சந்தித்து உரை
வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இவ்வியக்கத்தின் பயிற்சிப் பண்பை விளக்கும் “பாதை” என்ற கூறில் தொடர்ந்து செல்லுமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, குடும்பம், படைப்பு, நகரம் ஆகிய மூன்று பாதைகளைக் கோடிட்டுக் காட்டி விளக்கினார்.
எல்லா அழைப்புகளுமே முதலில் குடும்பங்களிலிருந்து ஆரம்பிக்கின்றன என்றும், தொடர் கல்வியில் அடிப்படையைக் கொண்ட இந்த இயக்கத்திலுள்ள கிறிஸ்தவப் பெற்றோர், தங்களது பணிக்கான மூலத்தை திருமணம் எனும் அருளடையாளத்தில் காண்கின்றனர் என்றும், இதில் குழந்தை வளர்ப்பு திருஅவையில் உண்மையான பணியாக உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும், சுற்றுச்சூழல் விவகாரம் மனிதரின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது, எனவே படைப்பைப் பராமரிப்பதில் இவ்வியக்கத்தினர் செல்லும் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இவ்விவகாரத்தில் எவரும் ஆர்வம் காட்டாமல் இருக்க முடியாது என்றும் கூறினார்.
நம்
ஆண்டவர் இயேசுவின் நல்ல மறைப்பணித் திருத்தூதர்களாகச் செயல்படுமாறு
சாரணர் இயக்கத்தினரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Masci எனப்படும் இத்தாலிய கத்தோலிக்க வயதுவந்தோர் சாரணர் இயக்கம்(Italian Catholic Movement of Adult Scouts), Mario Mazza என்பவரால் 1954ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் திருப்பீடச் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலி இயக்குனருமான அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களும் உறுப்பினராக உள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சலேசிய சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை : நம்பிக்கை மற்றும் மகிழ்வின் மறைப்பணியாளர்களாக வாழுங்கள்
நவ.08,2014.
தங்களின் சபையின் பொதுப்பேரவையை நடத்தி முடித்துள்ள சலேசிய சபையின்
ஏறக்குறைய இருநூறு அருள்சகோதரிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில்
சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சகோதரிகள் எப்பொழுதும், நம்பிக்கை மற்றும் மகிழ்வின் மறைப்பணியாளர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.
இளையோரின் வாழ்வு எப்பொழுதும் கிறிஸ்துவை மையப்படுத்தியதாய், அது இறைவார்த்தையால் வடிவமைக்கப்பட்டு, அதனால் வழிநடத்தப்படுவதாய் இருக்கும் விதத்தில் இளையோருக்கான பணி அமைதல் வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
துறவு வாழ்வை எவ்வளவு தூரம் திருஅவை போற்றுகின்றது என்பதை சகோதரிகளாகிய நீங்கள் அறிவீர்கள், முதலில் நீங்கள் ஒருவர் ஒருவரின் குறை நிறைகளை ஏற்று, சமத்துவத்தைப் போற்றி, ஒருவர்
ஒருவரின் திறமைகளை மதித்து உங்கள் மத்தியில் சகோதரத்துவ ஒன்றிப்புக்குச்
சாட்சிகளாய் வாழுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இளையோரை உள்ளடக்கிய உங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணிகளில், விசுவாசப் பயணத்தை ஊக்குவிப்பதில் பொறுப்புக்களைப் பகிர்ந்து வாழும் சூழலை உருவாக்குமாறும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை வரையறையின்றி ஏற்பதன்மூலம், எல்லா இடங்களிலும் இறைவாக்குச் சான்றுகளாய்த் திகழுங்கள் என்றும் பரிந்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தைக்கு, “சுதந்திரத்துக்கான Shahbaz Bhatti” விருது
நவ.08,2014. “நற்செய்தியை அறிவிப்பதற்குப் புதிய வழிகளைத் தேடுவதில் திருஅவை எப்பொழுதும் பயணத்தில் உள்ளது” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, “சுதந்திரத்துக்கான Shahbaz Bhatti” விருதை வழங்கியுள்ளார் உலக இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் பொதுச் செயலர் Geoff Tunnicliffe.
உலக
இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இவ்வியாழனன்று
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பு ஏற்படுவதற்கு திருத்தந்தை எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் சிறுபான்மை மத்தவரின் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhatti அவர்கள், 2011ம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 12 வயதுச் சிறுவன் உட்பட எட்டுப் பேரின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன
நவ.08,2014. அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கென, 12 வயதுச் சிறுவன் உட்பட எட்டு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் பற்றிய விபரங்களை, புனிதர்கள் திருப்பேராயம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் இச்சனிக்கிழமையன்று சமர்ப்பித்தது.
கப்புச்சின் சபையின் முதல் ஆயரான சிலே நாட்டு ஆயர் Francesco Massimiano Valdés Subercaseaux, இத்தாலியரான புனித பெனடிக்ட்டின் சில்வெஸ்த்ரினா சபையின் தலைவர் Ildebrando Gregori, புனித பிலிப்நேரி சபையின் அருள்பணியாளர் Raimondo Calcagno, அயர்லாந்து நாட்டு இயேசு சபை அருள்பணியாளர் Giovanni Sullivan, ஜெர்மானியரான புனித மீட்பர் சபையின் அருள்பணியாளர் Pelagio Saúter, பிரான்ஸ் நாட்டவரான Hotel-Dieu மருத்துவமனை சபையைத் தொடங்கிய Giovanna Mance, பிறரன்பு விடுதிக் கழகச் சபையைத் தொடங்கிய மற்றொரு பிரான்ஸ் நாட்டவர் Marta Luigia Robin, இத்தாலியரான சிறுவன் Silvio Dissegna ஆகிய எட்டுப் பேரின் வீரத்துவமான வாழ்வுமுறைகள் திருத்தந்தையிடம் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த எட்டுப் பேரில் பிரான்ஸ் நாட்டின் Giovanna Mance, Marta Luigia Robin ஆகிய இரு பெண்களும் பொதுநிலையினர். மேலும், 12 வயதுச் சிறுவனாகிய Silvio Dissegna, 1967ம் ஆண்டு ஜூலை ஒன்றாந் தேதி Moncalieriல் பிறந்து, 1979ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி Poirinoல் காலமானார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. போஹோ ஹராம் அமைப்பைத் தோற்கடிப்பதற்கு அரசியல் ஆர்வம் அவசியம்
நவ.08,2014. எபோலா நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு காட்டிய அரசியல் ஆர்வத்தைப் போன்று, போஹோ
ஹராம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்கும் காட்டப்பட்டால்
நைஜீரியாவில் போஹோ ஹராம் அமைப்பு தோற்கடிக்கப்படும் என்று நைஜீரிய ஆயர்
பேரவைத் தலைவர் கூறினார்.
மான்செஸ்டரில்
இயேசு சபையினர் பணியாற்றும் திருப்பெயர் ஆலயத்தில் உரையாற்றிய நைஜீரிய
ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இக்னேஷியஸ் கைகாமா அவர்கள், நைஜீரிய அரசு உண்மையிலேயே விரும்பினால், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற குடிமக்கள் மீதான போஹோ ஹராம் அமைப்பின் தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று கூறினார்.
நைஜீரியாவில், எபோலா நோய்க் கிருமிகள் பரவாமல் தடைசெய்வதில் வெற்றி கண்டுள்ள அரசு, அதேபோன்ற
உறுதியான அரசியல் ஆர்வத்துடன் செயல்பட்டு போஹோ ஹராம் அமைப்பின்
நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமெனக் கூறினார் பேராயர் கைகாமா.
இதற்கிடையே, இம்மாதம் நான்காம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமய சுதந்திரம் குறித்த அறிக்கையில், உலகில் சமய அடக்குமுறை உச்சத்தில் உள்ள இருபது நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ஆதாரம் : CNS
6. தடுப்பூசி நடவடிக்கையில் கென்யப் பெண்கள் அறியாமலே கருவளக்கேடு செய்யப்படுகின்றனர்
நவ.08,2014. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் டெட்டனஸ் நோய்க்கெதிரான தடுப்பூசிபோடும் நடவடிக்கையில், கருத்தாங்கும் நிலையைத் தடுக்கும்திறன், பெண்கள் அறியாமலே அவர்களுக்குச் செய்யப்படுகின்றன என்று கென்ய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நா.வின்
யூனிசெப் குழந்தை நல அமைப்பு மற்றும் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின்
உதவியுடன் இடம்பெறும் இந்த டெட்டனஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையில், கென்யாவில் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட இளம் பெண்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கை, மறைமுகமான
மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கை என்பதில் தாங்கள் உறுதியாய் இருப்பதாக
ஆயர்கள் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
பெண்களின் கர்ப்பகாலத்தின்போது சாதாரணமாக உற்பத்தி செய்யப்படும் HCG சுரப்பியை இந்தத் தடுப்பூசி மருந்து கொண்டிருப்பதாகவும், இந்த மருந்தை கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் பெறுவது, பின்னர் கரப்பம் தரிக்கும் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படக் காரணமாகும் எனவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
கென்யாவில் கடந்த மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தில் Beta-HCG இருந்தது என அனைவருக்கும் அறிவிக்க விரும்புவதாகவும் ஆயர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : Fides
7. இலங்கை அரசின் அணுகுமுறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம்
நவ.08,2014.
இலங்கையில் இடம்பெற்ற கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையம் நடத்திவரும் புலன்விசாரணைகளின் நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவற்றை இலங்கை அரசு தொடர்ந்து குறைகூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த ஆணையத் தலைவர் Zeid Ra’ad Al Hussein .
இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசு தடுப்பதாகவும் Al Hussein அவர்கள் குறைகூறியுள்ளார்.
இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனைத் தாக்குவது, அந்த விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களைத் தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் Al Hussein அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் பன்னாட்டுச் சட்டங்களைக் கடுமையாக மீறியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் சமூக அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும், தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : UN
8. கிறிஸ்தவ மற்றும் யஜிதி இனப் பெண்களை ஐஎஸ் அமைப்பு விற்கிறது
நவ.08,2014. கிறிஸ்தவ மற்றும் யஜிதி இனப் பெண்களை, ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அடிமைகளாக விற்கின்றனர் என்பதை விளக்கும் காணொளிப்படம் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது.
பல நாள்களுக்கு முன்னர், குர்த் இனப்படைகள் இஸ்லாம் தீவிரவாதி ஒருவரின் கைபேசியிலிருந்து கண்டுபிடித்த காணொளி ஒன்றில், பாலியல் அடிமை வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியவந்துள்ளது.
ஒன்று முதல் ஒன்பது வயதுச் சிறுமிகள் ஏறக்குறைய 140 யூரோக்களுக்கும், நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை ஐம்பது யூரோக்களுக்கும், மற்றவர்கள் இதில் பாதி விலைக்கும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.
ஒரே நேரத்தில் ஒருவர் மூன்று பெண்களுக்குமேல் வாங்க முடியாது என்ற விதிமுறைகள் உள்ளன, எனினும், ஈராக், சிரியா
மற்றும் வளைகுடாப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்கலாம் என்றும்
அந்தக் காணொளிப்படம் மூலம் தெரிவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இதற்கிடையே, ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் பெரும்பாலும் சிரியாவில் இருந்து சிறுவர்களைச் சண்டைக்காகச் சேர்த்து, அவர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆதாரம் : Rome Reports
9. 3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு, அறிவியலாளர் எச்சரிக்கை
நவ.08,2014. ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள்நலக் கண்காணிப்பு அமைப்பான ANSES பரிந்துரைத்துள்ளது.
வளர்ந்து
வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய
தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
ஒரு
முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில்
பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக
புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம்
கிரகித்துக்கொள்கிறோம்.
ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப்
படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிகச்
சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் உடல்நலனில் ஏற்படும் தாக்கம்
பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என அன்செஸ் கூறியுள்ளது.
தற்போது அதிகமான நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றன.
No comments:
Post a Comment