செய்திகள் - 07.11.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து நற்செய்திக்குச் சாட்சி சொல்ல வேண்டும்
2. திருத்தந்தை:செபம், திருநற்கருணை ஆராதனை, உடன்பிறந்தோர் சாட்சிய வாழ்வுக்கு உதவுகின்றன
3. திருத்தந்தை : திருச்சிலுவைக்கு எதிரிகள்போன்று வாழும் கிறிஸ்தவர்கள் இக்காலத்திலும் உள்ளனர்
4. சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பரிவன்பு நிறைந்த சேவையின் முக்கியத்துவத்தை உணர அழைப்பு
5. கர்தினால் Tauran : பாகிஸ்தானில் இருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம்
6. நாம் நாகரீகமற்றவர்களாக செயல்படுகிறோம், எருசலேம் பேராயர் Zerey
7. ஐ.நா.வில் புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய கண்காட்சி
8. போரின் நாசவேலைகளிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. வலியுறுத்தல்
9. உலகளாவிய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தண்ணீர் மையமாக உள்ளது, ஐ.நா. உதவிப் பொதுச்செயலர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து நற்செய்திக்குச் சாட்சி சொல்ல வேண்டும்
நவ.07,2014. இன்றைய நம் காலத்தின் பல பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், அர்த்தமுள்ள விதத்தில் பதிலளிக்க ஆவல் கொண்டால், நாம் சகோதரர்களாகப் பேசவும், செயல்படவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம்
நாம் அனைவரும் ஒரே ஆண்டவராகிய கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்பதை
ஒவ்வொருவரும் எளிதில் ஏற்பார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஃபோக்கலாரே இயக்க ஆயர்கள் நண்பர்கள் அமைப்பு நடத்திய, 33வது கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாற்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை,
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் பொதுவான விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்களை
ஒன்றாகப் பார்ப்பது ஒளிமயமான மற்றும் கவர்ந்திழுக்கும் அடையாளமாய் உள்ளது
என்றும் கூறினார்.
ஒன்றிப்புக்கு இட்டுச்செல்லும் பாதையை விடாஉறுதியுடனும், பொறுமையுடனும், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடனும் நாம் தேட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய சுதந்திரமின்மை, கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை சமயக் குழுக்களும் நசுக்கப்படுதல், பயங்கரவாதம், புலம்பெயர்வோர் நெருக்கடி, மிகைப்படுத்தப்பட்ட சமயச்சார்பின்மை, குடியேற்றதாரர் ஆகிய விவகாரங்கள், நம் மனசாட்சிக்குச் சவாலாக உள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.
“திருநற்கருணை, ஒன்றிப்பின் பேருண்மை” என்ற தலைப்பில் இத்திங்கள் முதல் இவ்வெள்ளி முடிய நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏறக்குறைய 33 நாடுகளிலிருந்து கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை:செபம், திருநற்கருணை ஆராதனை, உடன்பிறந்தோர் சாட்சிய வாழ்வுக்கு உதவுகின்றன
நவ.07,2014.
இத்தாலிய துறவு சபைகளின் தலைவர்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட
ஏறக்குறைய நூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்தோர் உணர்வுடன் வாழும் வாழ்வு பற்றிப் பேசினார்.
உலகில், குறிப்பாக இன்றைய உலகில் உடன்பிறந்தோர் நிலையின் உண்மையான பொருளுக்குச் சாட்சியாக விளங்குவதற்கு, உடன்பிறந்தோர் உணர்வுடன் வாழும் வாழ்வு இன்றியமையாத கூறு என்று கூறினார் திருத்தந்தை.
எனினும், உடன்பிறந்தோர் நிலை, கடவுளின் தந்தைமை மற்றும் திருஅவையின் தாய்மைக்கு முன்னடையாளமாக உள்ளது என்றும், இந்த உறவில் நாம் ஒவ்வொரு நாளும் வளர, திருநற்கருணை ஆராதனை, திருப்பலி, செபமாலை, செபம், திருப்பலி ஆகியவை உதவியாக உள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்தாலிய துறவு சபைகளின் தலைவர்களின் 54வது தேசிய மாநாடு, தீவொளியில் இத்திங்கள் முதல் இவ்வெள்ளி முடிய நடைபெற்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : திருச்சிலுவைக்கு எதிரிகள்போன்று வாழும் கிறிஸ்தவர்கள் இக்காலத்திலும் உள்ளனர்
நவ.07,2014. வெளித்தோற்றத்தில் கிறிஸ்தவர்களாகவும், உள்ளார்ந்த வாழ்வில் திருச்சிலுவைக்குப் பகைவர்களாகவும் வாழ்வது குறித்து எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி
காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில்
இந்நாள் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரை வழங்கிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப்போக்கு கொண்டவர்களாய் வாழும் இவ்வுலகின் குடிமக்கள், விண்ணகத்தின் குடிமக்களாய் இருக்கமாட்டார்கள் என்று கூறினார்.
புனித பவுலடியார் காலத்தில் கிறிஸ்தவர்களில் இருந்த இரு குழுக்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒரு குழுவினர் விசுவாசத்தில் முன்னோக்கிச் சென்ற கிறிஸ்தவர்கள், அடுத்த குழுவினர் கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று வாழ்ந்த கிறிஸ்தவர்கள் என விளக்கினார்.
இவ்விரு குழுக்களுமே திருஅவையில் ஒன்றாக இருந்தனர், அவர்கள் ஞாயிறு திருப்பலிக்குச் சென்றனர், ஆண்டவரைப் போற்றினர், தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொண்டனர் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களிடமிருந்த வேற்றுமை பற்றியும் எடுத்துச்சொன்னார்.
இரண்டாவது குழு, கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று செயல்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் திருச்சிலுவைக்கு எதிரிகளாகச் செயல்பட்டனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இன்றும் கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று செயல்படும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்,
நம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும் உலகப்போக்கு நிறைந்த சோதனைகளிலிருந்து
நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பரிவன்பு நிறைந்த சேவையின் முக்கியத்துவத்தை உணர அழைப்பு
நவ.07,2014. பரிவன்பு நிறைந்த சேவையின் முக்கியத்துவத்தை, சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களின் தனிவாழ்விலும், பொதுவாழ்விலும்
மீண்டும் கண்டுணர்ந்து அத்தகைய சேவையை தங்களின் வாழ்வுமுறையாக
அமைத்துக்கொள்ளுமாறு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் 06, இவ்வியாழனன்று, சீக்கிய
மதத்தினர் சிறப்பித்த குருநானக் ஜெயந்தி விழாவுக்கென உலகெங்கிலும்
வாழ்கின்ற சீக்கியர்களுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய
உரையாடல் அவை, இன்றைய சமூகத்தில் பரிவன்புடன்கூடிய சேவையை சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய உலகில் வளர்ந்துவரும் பொருளின்பக் கோட்பாடும், நுகர்வுத்தன்மையும், தனிமனிதப் போக்கும், மனிதர்களை அதிகமதிகமாய் தன்னலவாதிகளாகவும், பிறரின் துன்பங்களையும், தேவைகளையும் புறக்கணிப்பவர்களாய், அவை பற்றிய உணர்வு இல்லாதவர்களாயும் மாற்றி வருகின்றன என்றும் அச்செய்தி கூறுகிறது.
கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமயங்களின் புனித நூல்கள், தன்னலமற்ற சேவையை முக்கிய கூறாகக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தி, பரிவன்பு நிறைந்த சேவை என்பது, ஏழைகள், தேவையில் இருப்போர், நோயாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர், பயன்படுத்தப்படுவோர், நசுக்கப்படுவோர் என நலிந்தவர்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்றுவதாகும் எனவும் கூறியுள்ளது.
“கிறிஸ்தவர்களும், சீக்கியர்களும்: பரிவன்பு நிறைந்த சேவையை ஒன்றிணைந்து ஊக்குவிக்க” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்களும், அவ்வவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கர்தினால் Tauran : பாகிஸ்தானில் இருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம்
நவ.07,2014. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றம் சுமத்தி, ஓர் இளம் அப்பாவித் தம்பதியர் உயிரோடு எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளது குறித்து, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றம் புரிந்தனர் என்று பொய்க்குற்றம் சுமத்தி, 28 வயதான Shazad Masih என்பவரும், அவரது மனைவி, 25 வயதான Shama என்பவரும் இச்செவ்வாயன்று உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இவ்வன்செயல் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், காட்டுமிராண்டித்தனமான இச்செயல்கள், தன்னை அதிர்ச்சியுறச் செய்ததாகத் தெரிவித்தார்.
உண்மையில், இத்தகைய இக்கொடுஞ்செயல்கள் முன்னர் ஒருவர் வாயடைத்து நிற்கின்றார் என்றும், மதத்தின் பெயரால் இப்படி நடத்தப்பட்டுள்ள செயல் அதிகமாக வேதனை தருகின்றது என்றும், இத்தகைய குற்றங்களுக்கும், செயல்களுக்கும் மதம் ஒருபோதும் நியாயம் சொல்ல இயலாது என்றும் கூறினார் கர்தினால் Tauran.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, இச்சட்டத்தின்கீழ் ஏறக்குறைய அறுபது பேருக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறிய கர்தினால் Tauran அவர்கள், இவ்விவகாரத்தில் அனைத்துலகத் தலையீடும், உரையாடலும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனிதமற்ற இவ்வன்செயலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் தங்களின் வன்மையான கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
லாகூருக்கு அருகே, Kasur மாவட்டத்தின், Chak என்ற கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் செங்கல் சூளையில் உழைப்பதற்கு, தன் குடும்பத்தோடு வந்தவர், Shazad. பிழைப்பு தேடி வந்த Shazad அவர்களின் மனைவி, தன் வீட்டிலிருந்த பழைய காகிதங்களை எரித்தபோது, அதில் திருக்குரானின் பக்கங்கள் இருந்தன என்று யாரோ ஒருவர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் திரண்டு வந்த 300க்கும் அதிகமான மக்கள், Shazad மற்றும் Shamaவை இழுத்துச் சென்று முதலில் கற்களால் எறிந்தனர் என்றும், இறுதியில் செங்கல் சூளையில் எரித்துக் கொன்றனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. நாம் நாகரீகமற்றவர்களாக செயல்படுகிறோம், எருசலேம் பேராயர் Zerey
நவ.07,2014. எருசலேமில் அண்மையில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குக் கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, இத்தகைய செயல்கள்
மனிதாபிமானமற்றது மற்றும் சமுதாயத்தைச் சின்னாபின்னமாக்குவது என்று கவலை
தெரிவித்துள்ளார் மெல்கிதே-கிரேக்க வழிபாட்டுமுறை பேராயர் ஒருவர்.
இப்புதனன்று, கிழக்கு எருசலேமில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த
மக்கள் மத்தியில் ஒரு வெள்ளை வாகனம் அத்துமீறி நுழைந்ததில் ஒரு காவல்துறை
அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், கடந்த 15 நாள்களில் நடைபாதை மக்களுக்கு எதிராக இரு வாகனத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதல்கள் குறித்து CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த எருசலேம் மெல்கிதே-கிரேக்க வழிபாட்டுமுறை பேராயர் Joseph Jules Zerey அவர்கள் இத்தகைய பயங்கரமான செயல்கள் எருசலேமில் மட்டுமல்ல, ஈராக்கிலும் சிரியாவிலும் இடம்பெறுகின்றன என்று கூறினார்.
பிறரைப் பாதுகாக்கவும், மதிக்கவும், ஒவ்வொருவருக்கும் அன்பையும் மனித உரிமையையும் வழங்கவும் பொறுப்புக்களைக் கொண்டிருப்போர், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வன்முறைகள் நிறுத்தப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பேராயர் Zerey.
ஹமாஸ் இஸ்லாம் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : CNA
7. ஐ.நா.வில் புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய கண்காட்சி
நவ.07,2014. புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய கண்காட்சி ஒன்றை, இம்மாதத்தில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசிசி
நகரின் துறவு இல்லத்தின் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட 13ம் மற்றும் 14ம்
நூற்றாண்டைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் பற்றிய படங்கள், அவரின் கையெழுத்துப் பிரதிகள், உருவங்கள், போன்றவை இந்தக் கண்காட்சியில் வைக்கப்படும்.
திருப்பீடத்தின் உதவியோடு வைக்கப்படவுள்ள இத்தகைய இக்கண்காட்சி, ஐ.நா. தலைமையகத்தில் நடப்பது இதுவே முதல் தடவை என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. போரின் நாசவேலைகளிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. வலியுறுத்தல்
நவ.07,2014. நிலத்தை மாசுபடுத்துவது தொடங்கி, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் நடவடிக்கைகள், போரின் விளைவுகளையொத்த சேதங்களை நீண்டகாலமாக மௌனமாக ஏற்படுத்தி வருகின்றன என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
இக்காலத்தில் வேகமாக மாறிவரும் போரின் யுக்திகள், வருங்காலத்தின் அமைதிக்கும், உறுதியான வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்பதால், இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டியது இன்றியமையாதது என்று மேலும் கூறியுள்ளார் பான் கி மூன்
அக்டோபர் 06, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, போரிலும், ஆயுதம் ஏந்திய மோதல்களிலும் சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.
மேலும், ஐ.நா. வளர்ச்சித்திட்ட அமைப்பின்(UNEP) அறிக்கையின்படி, கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுச் சண்டைகளில், குறைந்தது நாற்பது விழுக்காடு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதோடு தொடர்புடையது எனத் தெரிகிறது.
போரிலும், ஆயுதம் ஏந்திய மோதல்களிலும் சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடுக்கும் உலக தினத்தை 2001ம் ஆண்டில் ஐ.நா. பொது அவை உருவாக்கியது.
ஆதாரம் : UN
9. உலகளாவிய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தண்ணீர் மையமாக உள்ளது, ஐ.நா. உதவிப் பொதுச்செயலர்
நவ.07,2014. அனைத்து மனித உரிமைகளிலும் மிக அடிப்படையான தண்ணீருக்கான உரிமை, உலகளாவிய விவகாரங்களிலும், வளர்ச்சித்திட்ட நடவடிக்கைகளிலும் மையக் கூறாக அமைந்துள்ளது என்று ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் இலண்டனில் கூறியுள்ளார்.
இலண்டனில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள, உலக தண்ணீர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலியாசன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இன்று உலகில், தண்ணீரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைபடுவது, சண்டைகளுக்குக் காரணமாகி, அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை நம்மால் காண முடிகின்றது என்றும் கூறினார் எலியாசன்.
உலகில் 2050ம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான தேவை நாற்பது விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று எச்சரித்த எலியாசன் அவர்கள், மழைநீர் சேமிப்புச் சரியாக இல்லாததால், எண்பது விழுக்காட்டுத் தண்ணீர், யாருக்கும் பயன்படாமல் பெருங்கடல்களிலும், ஆறுகளிலும், ஏரிகளிலும் சென்று சேருகின்றன என்றும் கூறினார்.
சூடானில் நடந்த டார்ஃபூர் சண்டையின்போது, தண்ணீர், போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதையும் அம்மாநாட்டில் சுட்டிக்காட்டினார் எலியாசன்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment