Thursday, 16 October 2014

செய்திகள் - 15.10.14

செய்திகள் - 15.10.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் பாதை, ஒருவர் ஒருவரை அன்புகூரும் பாதை

2. வேதிய, அணுஆயுதங்கள் விரைவில் ஒழிக்கப்பட திருத்தந்தை அழைப்பு

3. EU அவை எடுக்கும் தீர்மானங்கள், வன்முறையால் மக்கள் துன்புறுவதைத் தடுப்பதாய் இருக்க வேண்டும்

4. மலாவியில் திருமணத்திற்காகச் சிறுமிகள் கல்வியைக் கைவிடல்

5. Ad Gentes கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டுக்கு Miao மறைமாவட்டம் தயாரிப்பு

6. முதல் ஆசிய அனைத்துலக கருத்தரங்கு : “மனித வாழ்வு இன்றி நீதி கிடையாது"

7. ஹாங்காங் சனநாயக ஆதரவாளர்களுக்கு ஆலயங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன 

8. உலக கைகழுவும் தினம் அக்டோபர் 15

9. இரு கொரிய நாடுகளின் இராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இறைவனின் பாதை, ஒருவர் ஒருவரை அன்புகூரும் பாதை

அக்.15,2014. இறைவனின் பாதை, ஒருவர் ஒருவரை அன்புகூரும் பாதையென்றும், நம்மைச் சுற்றி நடப்பவைகளை முழுமையாய் அறிவதற்கு அதிகமாகச் செபிக்க வேண்டுமென்றும் புனித அவிலா தெரேசா கூறுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இஸ்பெயின் நாட்டின் அவிலா நகரில் புனித தெரேசா பிறந்ததன் 500ம் ஆண்டையொட்டி ஜூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ள இஸ்பெயின் ஆயர்களுக்கு இப்புதனன்று செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, புனித தெரேசாவிடம் விளங்கிய, மகிழ்வில் வாழ்வது, செபம், தோழமையுணர்வு, தனது காலத்தின் எதார்த்தங்களோடு தொடர்பு ஆகிய பண்புகளை விளக்கியுள்ளார்.
தன் சகோதரிகள் மகிழ்வோடு தொண்டுபுரியவும், உண்மையான புனிதத்துவம் மகிழ்ச்சியாக இருப்பதே என்பதையும், கடவுளைக் காண்பதிலே இன்பம் உள்ளது என்பதையும் புனித தெரேசா உணர்த்தியுள்ளார் என்றும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.  
நம்பிக்கையற்ற நிலையை மேற்கொண்டு நல்ல முயற்சிகளைத் தொடங்குவதற்குச் செபம் உதவுகின்றது, தாழ்மையின் உண்மையில் நடக்கவும், தன்னை அன்புகூருவதிலிருந்து நம்மை விடுவித்து பிறரை அன்பு கூரவும் இப்புனிதரின் வாழ்வு உணர்த்துகின்றது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
கார்மேல் ஆதீனத் துறவு இல்லங்களைச் சீர்திருத்திய புனித தெரேசா, அவிலா நகரில் 1515ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பிறந்தார். திருஅவையின் மறைவல்லுனராகிய இப்புனிதர் பிறந்த 5ம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை இப்புதனன்று தொடங்கியுள்ளது இஸ்பெயின் தலத்திருஅவை. புனித அவிலா தெரேசா விழா அக்டோபர் 15.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வேதிய, அணுஆயுதங்கள் விரைவில் ஒழிக்கப்பட திருத்தந்தை அழைப்பு

அக்.15,2014. வேதிய ஆயுதங்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் கடந்த ஆண்டில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகில் குளோரின் வாயு உட்பட வேதிய ஆயுதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து வெளிவரும் தகவல்கள், இந்த ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டுமென்பதை உலக சமுதாயத்துக்கு நினைவுபடுத்துகின்றன என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.   
அணுஆயுத ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம் ஆகிய இரு தலைப்புக்களில் நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
வேதிய மற்றும் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படவும், போரிடும் குழுக்கள் ஆயுதங்களைக் களையவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் அழைப்பை ஐ.நா. அமர்வுகளில் குறிப்பிட்டுப் பேசினார் பேராயர் Auza.
அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றைக் குறைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் திறனற்று உள்ளவேளை, இந்நாடுகள் இந்த ஆயுதங்களை  நவீனப்படுத்தவும், சேமிப்புக்களை அதிகரிக்கவும் முயற்சிப்பது கவலை தருகின்றது என்றும் தெரிவித்தார் பேராயர் Auza.
அணுஆயுதங்கள் ஏற்படுத்தும் மனிதப் பேரழிவுகள் குறித்து வருகிற டிசம்பரில்  வியன்னாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்டார் பேராயர் Auza.
மேலும், பெண்களின் முன்னேற்றம் பற்றிய பேச்சுகள் உலகெங்கும் இடம்பெற்றாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் இன்றும் உள்ளன, அவர்கள் அநியாயமாய்க் கைது செய்யப்படுகின்றனர், குடியேற்றப் பெண்களும், புலம்பெயர்ந்த பெண்களும் துன்புறுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Auza.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. EU அவை எடுக்கும் தீர்மானங்கள், வன்முறையால் மக்கள் துன்புறுவதைத் தடுப்பதாய் இருக்க வேண்டும்

அக்.15,2014. கனிம வளங்களைப் பொறுப்புள்ள வகையில் கையாள்வது குறித்த சட்டம் குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தயாரித்துவரும்வேளை, இச்சட்டம், இவ்வளங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைவதற்கு ஆவன செய்யுமாறு உலகின் எழுபது கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து CIDSE என்ற, கத்தோலிக்க வளர்ச்சித்திட்ட நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆயர்கள், ஐரோப்பிய சமுதாய அவை எடுக்கும் தீர்மானங்கள், வன்முறையால் மக்கள் துன்புறுவதைத் தடுப்பதாய் இருக்க வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.
இயற்கை வளங்களை வியாபாரம் செய்வதில் அறநெறிக் கோட்பாடுகள் பின்பற்றப்படுமாறும், உலகில் வன்முறை மோதல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி செய்வது தடை செய்யப்படுமாறும் ஐரோப்பிய சமுதாய அவையை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
மேலும், ஐரோப்பிய சமுதாய அவை தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள், ஆயுதம் தாங்கிய மோதல்களுக்கு கனிமவள நிறுவனங்கள் உதவி செய்வதைத் தடைசெய்வதாய் இல்லையெனவும் CIDSE பன்னாட்டுக் கூட்டமைப்பு குறை கூறியுள்ளது.  
கனிம வளங்களைப் பொறுப்புள்ள வகையில் கையாள்வது குறித்து கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய சமுதாய அவை முன்வைத்துள்ள பரிந்துரைகளை விவாதிப்பதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தயாரித்துவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மலாவியில் திருமணத்திற்காகச் சிறுமிகள் கல்வியைக் கைவிடல்

அக்.15,2014. ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில் இடம்பெறும் இளம் வயதுத் திருமணங்களால் 2010ம் ஆண்டுக்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 27 ஆயிரத்துக்கு அதிகமான சிறுமிகள் ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் பேரவை கூறியது.
இவ்வாண்டின் உலக சிறுமிகள் தினத்தன்று(அக்.11) இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ள, மலாவி ஆயர் பேரவையின் கல்விப் பணிக்குழு, மலாவியில் சிறுமிகள் திருமணம் நிறுத்தப்படவில்லையெனில், 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற ஐ.நா.வின் மில்லென்யத் திட்டம் இந்நாட்டில் நிறைவேறாது என்று கூறியது.
மலாவியில் இடம்பெறும் பாலியல் திருமணங்கள், சிறுமிகள் கல்வி பெறுதற்கான முக்கிய தடைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும், இந்நாட்டில் சிறுமிகள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் என்றும் அப்பணிக்குழு கூறியது.
மலாவியில் பெண்களின் அதிகாரப்பூர்வ திருமண வயது 15. இந்த வயது வரம்பை 18 ஆக உயர்த்துவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை எடுக்கும் நடவடிக்கைக்கு, சமயக் குழுக்களும், பழங்குடியினத் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளது அப்பணிக்குழு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. Ad Gentes கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டுக்கு Miao மறைமாவட்டம் தயாரிப்பு

அக்.15,2014. திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகள் குறித்து விவரிக்கும் Ad Gentes இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏட்டின் அறிவுரைகளைத், தலத்திருஅவைகளில் செயல்படுத்துவது குறித்த தொடர் கருத்தரங்குகளை இந்தியாவின் மறைமாவட்டம் ஒன்று நடத்தி வருகிறது.
வடகிழக்கு இந்தியாவிலுள்ள Miao மறைமாவட்டம் நடத்தி வரும் தொடர் கருத்தரங்குகள் குறித்துப் பேசிய அம்மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் அவர்கள், கிறிஸ்துவை மக்கள் மத்தியில் அறியச் செய்வதற்கு நமக்கிருக்கும் பொறுப்புணர்வை இக்கருத்தரங்குகள் அதிகரிக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
கிறிஸ்துவை அறிவிப்பதற்கான ஆவலை அதிகரித்தல், துணிச்சலுடன் சான்று பகர்தல், ஏழைகளின் தோழமையில் செயல்படுதல், உரையாடல்மூலம் திருஅவையை இன்னும் காணக்கூடிய வகையில் சமூகத்தில் வெளிப்படுத்துதல், பிற மாநிலங்களுடன் நல்லுறவை வளர்த்தல், ஆயர்கள் மத்தியில் கூட்டுணர்வை ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளுடன் இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக மேலும் கூறினார் ஆயர் பள்ளிப்பரம்பில்.
1965ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி வெளியிடபட்ட Ad Gentes கொள்கைத் திரட்டின் ஐம்பதாவது ஆண்டுக்குத் தயாரிப்பாக இக்கருத்தரங்குகளை நடத்தி வருகிறது Miao மறைமாவட்டம்.

ஆதாரம் : CNA

6. முதல் ஆசிய அனைத்துலக கருத்தரங்கு : “மனித வாழ்வு இன்றி நீதி கிடையாது"

அக்.15,2014. ஆசியாவில் மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில், "மனித வாழ்வு இன்றி நீதி கிடையாது" என்ற தலைப்பில், பிலிப்பீன்சின் மனிலாவில் இம்மாதம் 27,28 தேதிகளில் முதல் ஆசிய அனைத்துலக கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பும், பிலிப்பீன்ஸ் நீதித்துறையும் சேர்ந்து நடத்தும் இக்கருத்தரங்கில், பல்வேறு நாடுகளின் நீதித்துறை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், நகர மேயர்களும், சமயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஜப்பான், மங்கோலியா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளில் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டுவதில் எதிர்நோக்கப்படும் சவால்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.   
மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தத் தொடங்கியுள்ள அல்லது அதனை நிறுத்துவதற்கான முயற்சியைத் தொடங்கவுள்ள நாடுகளுடன் உரையாடலைத் தொடங்குவதற்கு, இக்கருத்தரங்கு ஒரு தளமாக அமையும் என, இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்பவர்கள் கூறியுள்ளனர்.
ஆசியாவின் கலாச்சார மற்றும் சமய மரபுகளை முழுவதும் மதித்து, மனித உரிமைகளுக்கும், விழுமியங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று ஆசிய நாடுகளுக்கு இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது
உலகில் மரணதண்டனையை ஒழிப்பதற்கு 2005ம் ஆண்டில் முதல் உலகளாவிய நடவடிக்கையைத் தொடங்கிய சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, தற்போது முதல்முறையாக, ஆசிய அனைத்துலக கருத்தரங்கை நடத்தவுள்ளது.

ஆதாரம் : Fides

7. ஹாங்காங் சனநாயக ஆதரவாளர்களுக்கு ஆலயங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன 

அக்.15,2014. ஹாங்காங்கில் சனநாயக ஆதரவு போராட்டதாரர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆலயங்களைத் திறந்துவிட்டுள்ளதாக, ஹாங்காங் கத்தோலிக்க வார இதழான Sunday Examiner ஆசிரியர் அருள்பணி Jim Mulroney கூறினார்.
வாடகைக்கார் ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் என, இப்போராட்டங்களில் சலிப்படைந்துள்ள மக்கள், சனநாயக ஆதரவுப் போராட்டதாரர்கள்மீது தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார் அருள்பணி Jim Mulroney.
எனினும், ஹாங்காங் கத்தோலிக்கத் திருஅவை இப்போராட்டதாரர்களுக்கு மேய்ப்புப்பணி அளவில் ஆதரவு கொடுத்து வருகின்றது என்றுரைத்த அக்குரு,  போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு அருகிலுள்ள ஆலய வளாகங்களை இவர்களுக்குத் திறந்துவிட்டு இவர்கள் இரவில் தூங்கவும், செபிக்கவும், இன்னும்பிற அத்தியாவசிய வசதிகளுக்கும் உதவி செய்து வருவதாகதச் தெரிவித்தார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சனநாயக ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினர்க்கும் இடையே இப்புதன் இரவில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 45 போராட்டதாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது மிளகுத்தூள் தூவப்பட்டதால் இவர்கள் தாங்கள் போராடும் முக்கிய இடத்தைவிட்டு வேறிடம் சென்றுள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உலக கைகழுவும் தினம் அக்டோபர் 15

அக்.15,2014. கைகளைக் கழுவும் பழக்கம், எபோலா நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது என ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது.
சோப்பினால் கைகளைக் கழுவுதல், நோய்க்கிருமிகள் தாக்கத்திலிருந்தும், சளிப்பிடிப்பதிலிருந்தும் பாதுகாக்கிறது, இது ஓர் எளிய, செலவுகுறைந்த முறைகளில் ஒன்று என்று யூனிசெப் நிறுவனத்தின் தண்ணீர் மற்றும் நலவாழ்வுப் பிரிவின் தலைவர் Sanjay Wijesekera அவர்கள் கூறினார்.
அக்டோபர் 15, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக கைகழுவும் தினத்தையொட்டி இவ்வாறு கூறிய Wijesekera அவர்கள், எபோலாவால் பாதிக்கப்பட்ட சியெரா லியோன் நாட்டிற்கு 15 இலட்சம் சோப்புகளையும், லைபீரியாவுக்கும், கினி நாட்டுக்கும் இலட்சக்கணக்கான சோப்புகளையும் யூனிசெப் நிறுவனம் விநியோகித்திருப்பதாகத் தெரிவித்தார்.  
2013ம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் வயிற்றுப்போக்கால் இறந்தனர். இவ்விறப்பு ஒரு நாளைக்கு ஆயிரம் என்ற விகிதத்திலும் இடம்பெற்றது என யூனிசெப் கூறியது.
சுத்தமற்ற நீர், அடிப்படை நலவாழ்வு வசதியின்மை போன்றவையே வயிற்றுப்போக்கு நோய்க்கு முக்கிய காரணங்களாகும்.   

ஆதாரம் : UN                               

9. இரு கொரிய நாடுகளின் இராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

அக்.15,2014. ஏழு ஆண்டுகள் மௌனம் சாதித்த பின்னர், இரு கொரிய நாடுகளின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் இப்புதனன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர்.
எல்லைக் கடல் பகுதியில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பாக, வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள், இவ்விரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள Panmunjom  கிராமத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
தென் கொரியாவில் இயங்கும் சில குழுவினர்களால் எச்சரிக்கை செய்தி அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்ட பலூன்கள் அண்மையில் வட கொரியாவுக்கு அனுப்பி விடப்பட்டிருந்தன. இந்தப் பலூன்களை, வட கொரிய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள கடற்பகுதியில் அண்மைக் காலமாக மீண்டும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெறவிருந்தபோதிலும் சில காரணங்களால் அது தள்ளிப்போடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்ததை அடுத்து இப்புதனன்று இராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : AsiaNews                               

No comments:

Post a Comment