Monday, 19 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 17/08/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு உரையாடலும் ஒப்புரவும் இடம்பெற வேண்டுகோள்

2. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்களும் கிறிஸ்தவக் கட்டிடங்களும் மேலும் சேதம்

3. பிலிப்பீன்சில் கப்பல் விபத்தில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போது நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது

5. பிரேசில் திருஅவைக்குத் திருத்தந்தை நன்றி

6. நீதி ஞாயிறு : அமைதிக்கு வழிவிடும் செயல்களில் ஈடுபட இந்தியருக்கு அழைப்பு

7. அதிகம் காபி குடித்தால் ஆபத்து, ஆய்வாளர்கள் எச்சரிக்கை

8. மலேசியாவில் 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு உரையாடலும் ஒப்புரவும் இடம்பெற வேண்டுகோள்

ஆக.,17,2013. எகிப்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, போரிடும் தரப்புகள் உரையாடல் மற்றும் ஒப்புரவின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எகிப்திலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மிகவும் வேதனைதரும் செய்திகள் திருத்தந்தையின் கவலையை அதிகரித்திருப்பதாகவும், அந்நாட்டில் சண்டையிடும் குழுக்கள் வன்முறையை நிறுத்தி அமைதிக்கான உரையாடலில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகத்தின் உதவி இயக்குனர் அருள்பணி Ciro Benedettini கூறினார்.
அன்னைமரியின் விண்ணேற்பு விழாவான இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் வழங்கிய மூவேளை செப உரையிலும் எகிப்தில் அமைதி நிலவ அனைவரும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார் என்பதையும் அருள்பணி Benedettini குறிப்பிட்டார்.
அதேசமயம், வன்முறைகளில் காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், இன்னும் துன்புறுவோர் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் என்றும் அருள்பணி Benedettini கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்களும் கிறிஸ்தவக் கட்டிடங்களும் மேலும் சேதம்

ஆக.,17,2013. எகிப்தில் இவ்வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தெருக்களுக்கு வந்து மீண்டும் தாக்குதலை நடத்திய முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பினர் கிறிஸ்தவர்களின் இடங்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என ஊடகங்கள் கூறுகின்றன.
எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் முகமது மோர்சி மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்களான இந்த முஸ்லீம் அமைப்பினருக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் கடுமையாகியுள்ளன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இரத்த வங்கிக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இவ்வெள்ளி இரவு முதல் Ghamal Al-Fatah மசூதிக்குள் இருக்கும் 700க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினர் அதைவிட்டு வெளியேற மறுத்து வருகின்றனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, எகிப்தில் உள்நாட்டுப்போர் நடக்கவில்லை என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட வெளிநாட்டுச் சக்திகள் இதில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுள்ளார் அந்நாட்டின் அலெக்சாந்திரியாவின் காப்டிக் கத்தோலிக்க ஆயர் Youhanna Golta. இவர் எகிப்தின் 2012ம் ஆண்டின் அரசியல் அமைப்பைத் தொகுத்த குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews

3. பிலிப்பீன்சில் கப்பல் விபத்தில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்

ஆக.,17,2013. பிலிப்பீன்சின் Cebu துறைமுகத்தில் இவ்வெள்ளி இரவு இடம்பெற்ற கப்பல் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது செபமும் ஆறுதலும் நிறைந்த செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Cebu பேராயர் Jose S. Palma அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அவ்விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான திருத்தந்தையின் செபமும் ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Cebu துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, 700க்கும் அதிகமான பயணிகளுடன் அங்கு நின்று கொண்டிருந்த தாமஸ் அக்குய்னாஸ் என்ற பயணியர் கப்பலுடன் மோதியதில் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர் மற்றும் 270க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை.
ஏழாயிரத்துக்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பீன்சில் கடல் விபத்து அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. 1987ம் ஆண்டில் தோனா பாஸ் என்ற கப்பல், எரிவாயுக் கப்பலுடன் மோதியதில் 4,300க்கும் அதிகமானோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போது நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது

ஆக.,17,2013. குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கும்போதும், முதியோர் மருத்துவ உதவியின்றி இருக்கும்போதும் நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் அன்றாடத் திருப்பலிகளில், அர்ஜென்டீனா நாட்டின் ஒரு பெண் சிறைக்கைதி செய்த திருநற்கருணை அப்பங்களை கடந்த ஜூலை 18ம் தேதியிலிருந்து பயன்படுத்தி வருகிறார்.
அர்ஜென்டீனாவில்,“Gaby C” என்ற பெயரிலுள்ள ஒரு பெண் சிறைக்கைதி தனக்கு அனுப்பிய கடிதத்துக்கும், திருநற்கருணை அப்பங்களுக்கும் நன்றி தெரிவித்து கடந்த ஜூலை 17ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஜூலை 18ம் தேதியிலிருந்து அந்த திருநற்கருணை அப்பங்களைத் தனது அன்றாடத் திருப்பலிகளில் பயன்படுத்தவிருப்பதாக அதில் எழுதியுள்ளார்.
சிறையின் ஆன்மீக அருள்பணியாளர் Jorge Garcia Cueva, உள்ளூர்ப் பங்குத்தந்தை Juan Ignacio Pandolfini ஆகிய இருவரும் அப்பெண்ணைச் சந்தித்த பின்னர், அப்பெண் சிறையில் திருநற்கருணை அப்பங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இப்பெண் சிறையில் வைக்கப்பட்ட நாள்முதல் அலைக்கழிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார் என்று இவ்வருள்பணியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பிரேசில் திருஅவைக்குத் திருத்தந்தை நன்றி

ஆக.,17,2013. கடந்த ஜூலையில் தான் பிரேசிலுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தில் தனக்கு கிடைத்த இனிய வரவேற்புக்கு நன்றி சொல்லி அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், Aparecida பேராயருமான கர்தினால் Raymundo Damasceno Assis அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசிலின் அனைத்து ஆயர்கள், மேய்ப்பர்கள், பங்குமக்கள், 28வது உலக இளையோர் தினத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், திருஅவையின் பல்வேறு இயக்கங்கள், கழகங்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிக்குமாறு அதில் கூறியுள்ளார் திருத்தந்தை.
இத்திருப்பயண நிகழ்வுகள், பிரேசில் திருஅவையில் புதிய வசந்தத்தை மலரச்செய்யும் என்று தான் நம்புவதாகவும், இவை அத்தலத்திருஅவைக்கு அருளை வழங்குவதாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொட்டும் மழையிலும் Aparecida அன்னைமரி வளாகத்தில் நின்றுகொண்டிருந்த திருப்பயணிகளை மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், Aparecida அன்னைமரியா  பிரேசில் நாட்டை ஆசீர்வதிக்குமாறு தான் செபிப்பதாகவும் அதில் எழுதியுள்ளார்.
பிரேசிலின் ரியோ தெ ஜனெய்ரோவில் நடைபெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி கடந்த ஜூலை 23 முதல் 29 வரை அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நீதி ஞாயிறு : அமைதிக்கு வழிவிடும் செயல்களில் ஈடுபட இந்தியருக்கு அழைப்பு

ஆக.,17,2013. உண்மையில் உருவாக்கப்பட்டு, நீதியில் கட்டப்பட்டு, பிறரன்பால் வழிநடத்தப்பட்டு, சுதந்திரத்தின்கீழ் செயல்படும் இடமாக இவ்வுலகை மாற்றுவதற்கு, நீதி ஞாயிறன்று இந்தியர்கள் உறுதி எடுக்குமாறு கேட்டுள்ளது இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம்.
ஆகஸ்ட் 18, இஞ்ஞாயிறன்று இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் 30வது நீதி ஞாயிறை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள இவ்வாணையம், உலகில் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும், ஐ.நா. ஆயுத வியாபார உடன்பாட்டிலிருந்து விலகியிருக்கும் 24 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏழைகள் புறக்கணிக்கப்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப வன்முறை, மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்கள் குறித்து இந்தியத் திருஅவை அக்கறை கொண்டுள்ளது என்றும் அச்செய்தி கூறுகிறது.  
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டில் வெளியிட்ட அவனியில் அமைதி’(Pacem in Terris) என்ற திருமடலின் 50ம் ஆண்டின் நினைவாக இந்தியத் திருஅவை, இந்த நீதி ஞாயிறுக்குரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து சிறப்பிக்கிறது என்று இவ்வாணையம் கூறியுள்ளது.
30வது நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் அவ்வாணையத் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்,  அதன் உறுப்பினர் ஆயர்கள் Mathew Arackal, Gerald Almeida, இன்னும் அதன் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : CBCI

7. அதிகம் காபி குடித்தால் ஆபத்து, ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஆக.,17,2013. ஒரு நாளைக்கு, நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிப்பவர்களின் இதயம் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
ஒரு நாளைக்கு, நான்கு கோப்பை காபி குடிக்கும் பழக்கம் உடைய 40 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் வெளியான பல தகவல்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால், உடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன என்றும், இவ்வாறு குடிப்பவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலானோரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
காபி குடிக்கும் பழக்கத்தால் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்றும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அதிகம் காபி குடிப்பவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைகின்றது என்றும், 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காபி குடிக்கும் பழக்கம் உடைய இளையோர், உடல் அளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், ஒரு வாரத்திற்கு 28 கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும், காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Independent

8. மலேசியாவில் 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு

ஆக.,17,2013. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு இவ்வியாழனன்று  கோலாகலமாகத் துவங்கியது.
இஞ்ஞாயிறுவரை நடைபெறும் இம்மாநாட்டில் 650க்கும் மேலான அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். மலாயாப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள, "பெர்டானாசிஸ்வா' அரங்கத்தில் துவங்கிய இம்மாநாட்டில், "இதுவரை தமிழ் இணையம்' என்ற தலைப்பில் மல்டி மீடியா விளக்கக்காட்சி காண்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவரும், இன்பிட் நிறுவனத்தின், கவுரவ ஆலோசகருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன், இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத்தான் உலக அளவில் இத்தனை மாநாடுகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென நடைபெற்றுள்ளன. இந்த மாநாட்டுக் கட்டுரைப் புத்தகத்தில் வெளியாகியுள்ள நூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தரமானவை என்று கூறினார்.
.தமிழில், "மெஷின் டிரான்சிலேஷன்' செய்ய வேண்டியது மிகவும் அவசியம் எனவும், அப்போதுதான் விக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் உள்ள பல இலட்சக்கணக்கான ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள தகவல்கள் தமிழில் வெளிவர இயலும் எனவும், அதற்கு, குறைந்தபட்சம், இரண்டு இலட்சம் வார்த்தைகளாவது தமிழில் சேர்க்கப்பட வேண்டும், அதற்கான பணியை, இளையோர் செய்ய வேண்டும் எனவும் மு.ஆனந்தகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாட்டுத் துவக்க விழாவின் தலைமை விருந்தினரான, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது ஷபெரிசீக் பேசியபோது, ""மலேசியாவில் பெரும் பகுதி மக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், தாய்மொழிகளில் அவற்றைப் பயன்படுத், முன்னுரிமை அளித்து, அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மலேசிய அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்தார்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment