1. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் புனித கன்னிமரியைப் போன்றவர்கள்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ஜென்டீனாவின் ஏழை மறைமாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்கள் நன்கொடை
3. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து திருப்பீடத்தூதர் கவலை
4. பேராயர் ஜிரெல்லி : சமய சுதந்திரம், ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டிய உரிமை
5. ஆகஸ்ட் 18 இந்தியாவில் நீதி ஞாயிறு
6. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிரான வன்முறைகள்
7. எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்
8. இந்தியா, இலங்கையில் 2015ம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் வீடுகள்
9. கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன் பரிசோதனை
10. இலங்கையில் பாலர் திருமணங்கள் அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் புனித கன்னிமரியைப் போன்றவர்கள்
ஆக.,16,2013. அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் புனித கன்னிமரியைப் போன்றவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று அருள்சகோதரிகளிடம் கூறினார்.
காஸ்தெல்
கந்தோல்ஃபோவில் அடைபட்ட துறவு இல்லத்தில் வாழ்கின்ற ஏழைகளின் கிளாரா
அருள்சகோதரிகளை இவ்வியாழனன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், விண்ணரசின் கதவுகளுக்குப் பின்புறத்தில் மரியா நிற்கிறார் என்று கூறினார்.
மரியின் விண்ணேற்பு விழாவான இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அந்நகரின்
திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் அடைபட்ட துறவு வாழ்க்கை
வாழ்கின்ற ஏழைகளின் கிளாரா அருள்சகோதரிகளை முதலில் சந்தித்தார்.
இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலியில் பேட்டியளித்த அச்சகோதரிகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களுக்குக் கூறிய கருத்துக்களைத்
தெரிவித்தனர்.
பெண்களுக்கான
பிரான்சிஸ்கன் சபையான ஏழைகளின் கிளாரா சபை 1212ம் ஆண்டில் அசிசி நகர்
புனிதர்கள் பிரான்சிஸ் மற்றும் கிளாராவால் தொடங்கப்பட்டது. காஸ்தெல்
கந்தோல்ஃபோவில் திருத்தந்தையர் மாளிகை அமைக்கப்பட்டபோது, அங்கிருந்த அடைபட்ட துறவு இல்லம் 1631ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ஏழைகளின் கிளாரா சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம்
உலகப்போரின்போது 1944ம் ஆண்டு பிப்ரவரியில் இவ்வருள்சகோதரிகள் இல்லம்
குண்டுவீச்சால் தாக்கப்பட்டபோது அங்கிருந்த 18 அருள்சகோதரிகளும் இறந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ஜென்டீனாவின் ஏழை மறைமாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் யூரோக்கள் நன்கொடை
ஆக.,16,2013.
வருகிற செப்டம்பர் 8ம் தேதியன்று அர்ஜென்டீனா நாட்டில் தேசிய அளவில்
இடம்பெறும் நிதி சேகரிப்பில் அனைத்து மக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு
ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது நாட்டு மக்களை நன்கொடை வழங்க ஊக்கப்படுத்தியிருப்பதோடு, தனது
பங்காக அந்நாட்டின் தேவையில் இருக்கும் ஏழை மறைமாவட்டங்களுக்கு ஒரு
இலட்சம் யூரோக்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயற்கைப் பேரிடர்கள், பசி
மற்றும் பிற துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையர்
வழங்குவதற்கென அளிக்கப்படும் இராயப்பர் காசு என்ற நன்கொடைப் பணத்திலிருந்து
அர்ஜென்டீனாவில் ஏழை மறைமாவட்டங்களுக்கு உதவியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : CNA
3. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து திருப்பீடத்தூதர் கவலை
ஆக.,16,2013. உலகின் பல இடங்களில் இடம்பெறுவது போன்று இலங்கையிலும் மதசகிப்பற்ற நிகழ்வுகள் இடம்பெறுவதாக, இலங்கைக்கான திருப்பீடத்தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரி(Joseph Spiteri) அவர்கள் மடு அன்னைத் திருவிழாத் திருப்பலியில் கூறினார்.
இலங்கையின்
வரலாற்று சிறப்புமிக்க தேசியத் திருத்தலமான மடு அன்னைமரித் திருத்தலத்தில்
இவ்வியாழனன்று விழாத் திருப்பலி நிகழ்த்திய பேராயர் ஸ்பித்தேரி, இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் மதசகிப்பற்றதன்மையை எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
மக்களாட்சி மேலோங்கியுள்ள நாடுகளிலும்கூட கிறிஸ்தவர்கள் மதரீதியாக ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்த பேராயர் ஸ்பித்தேரி, மத சகிப்பற்றதன்மை, மதங்கள் மீதான அடக்குமுறை ஆகியவை, தீய சக்திகள் தலையெடுத்திருப்பதைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.
மடு அன்னையின் வழியைப் பின்பற்றி, சகிப்புத்தன்மையுடன் இத்தகைய தீமைகளில் இருந்து விலகியிருந்து, அடுத்திருப்பவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் திருப்பீடத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரியின் விண்ணேற்பு விழாவான ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஆண்டுதோறும் மடு அன்னைமரி விழா சிறப்பிக்கப்படுகின்றது.
திருப்பீடத்தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரி தலைமையில் இவ்வியாழனன்று நடைபெற்ற இவ்விழாத் திருப்பலியை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அநுராதபுரம் ஆயர் Norbert Andradi ஆகியோரும் சேர்ந்து நிகழ்த்தினர்.
ஆதாரம் : BBC
4. பேராயர் ஜிரெல்லி : சமய சுதந்திரம், ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டிய உரிமை
ஆக.,16,2013.
அடிப்படை மனித உரிமைகளாகிய சமய மற்றும் மனச்சான்றின் சுதந்திரங்கள்
ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டிய உரிமைகளாகும் என்று வியட்நாமுக்கான
திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி(Leopoldo Girelli) கூறினார்.
சிங்கப்பூர்
திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் ஜிரெல்லி இவ்வாரத்தில்
வியட்நாமுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வியட்நாமில் சிறுபான்மையாக இருக்கும் கத்தோலிக்கரின் விசுவாசத்தைப் பாராட்டினார்.
வியட்நாமில் கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும், சமய
மற்றும் மனச்சான்றின் உண்மையான சுதந்திரங்களை ஊக்குவிப்பதன் மூலம்
அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ முடியும் என்றும் பேராயர்
ஜிரெல்லி கூறினார்.
வியட்நாமில்
10 விழுக்காடாக இருக்கும் கத்தோலிக்கர் அந்நாட்டின் கம்யூனிச அதிகாரிகளால்
அடிக்கடி அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : AsiaNews
5. ஆகஸ்ட் 18 இந்தியாவில் நீதி ஞாயிறு
ஆக.,16,2013. “நீதியில் பூமியில் அமைதி” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18, வருகிற ஞாயிறன்று இந்தியாவில் நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகின்றது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்ட, ‘இவ்வுலகில் அமைதி’ என்ற திருமடலின் 50ம் ஆண்டின் நினைவாக இந்தியத் திருஅவை, இந்த நீதி ஞாயிறுக்கு இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நீதி ஞாயிறு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம், ‘இவ்வுலகில் அமைதி’ என்ற திருமடல் வழிகாட்டும் கோட்பாடுகளின் வழியில் கத்தோலிக்கர் நடக்குமாறு கேட்டுள்ளார்.
உண்மை, நீதி, அன்பு, சுதந்திரம்
ஆகிய தூண்களின்மீது புதிய உலகை கட்டியெழுப்புவதற்கு இத்திருமடல் அமைதியின்
புதிய ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பரிந்துரைக்கின்றது என்றும்
அருள்பணி சார்லஸ் இருதயம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்துக்கு அடுத்துவரும் ஞாயிறு, நீதி ஞாயிறாக இந்தியத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வருகிற ஞாயிறன்று 30வது நீதி ஞாயிறு ஆகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிரான வன்முறைகள்
ஆக.,16,2013. எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் மோர்சியின்(Morsi) ஆதரவாளர்கள் நடத்திவரும் வன்முறைப் போராட்டங்களில் கெய்ரோவிலும் பிற இடங்களிலும் 23 கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இவ்வன்முறை குறித்துப் பேசிய எகிப்தின் கத்தோலிக்கத் திருஅவைப் பேச்சாளர் அருள்பணி Rafic Greiche, இவ்வன்முறைகளில் 7 கத்தோலிக்க ஆலயங்களும், 15 காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆலயங்களும், ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயமும் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மோர்சி அரசை கவிழ்ப்பதற்கு எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் தூண்டுதலாக இருந்தனர் என்று நம்பி,
மோர்சியின் ஆதரவாளர்களாகிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு கிறிஸ்தவர்களைக்
குறிவைத்து தாக்கி வருகின்றது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இவ்வன்முறைகளில் அண்மை நாள்களில் குறைந்தது 638 பேர் இறந்துள்ளனர் மற்றும் நான்காயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆதாரம் : CWN
7. எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்
ஆக.,16,2013. மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைத் தலைவரும், எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தில் இடம்பெற்ற உயிரிழப்புகள் வேதனை தருவதாகவும், எகிப்தின்
அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து
கொள்ளுமாறும் கேட்டுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை.
எகிப்துக்குத் தேவையானது ஒப்புரவே என்றுரைத்துள்ள நவிபிள்ளை, அந்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் வன்முறையையும், வெறுப்பான பேச்சுக்களையும் நிறுத்தி உரையாடலில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார்.
ஆதாரம் : UN
8. இந்தியா, இலங்கையில் 2015ம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் வீடுகள்
ஆக.,16,2013.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கும்
இந்தியாவின் திட்டம் வேகமாக முன்னேறி வருவதாக கொழும்புவில் உள்ள இந்தியத்
தூதரக உயர் அதிகாரி Y.K. Sinha கூறினார்.
கொழும்புவில் இடம்பெற்ற 67வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது இதனை அறிவித்தார் Sinha.
2012ம்
ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 13
ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பல்வேறு நிலைகளில் உள்ளன என்றும், இவ்வாண்டு முடிவதற்குள் இவை முழுவதும் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் 2015ம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் Y.K. Sinha கூறினார்.
ஆதாரம் : ColomboPage
9. கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன் பரிசோதனை
ஆக.,16,2013.
கைத்தொலைபேசிகளைக் கொண்டே கண்களைப் பரிசோதித்து பிரச்சனைகளைக்
கண்டுபிடிக்க உதவும் புதிய மென்பொருள் ஒன்றை இலண்டன் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
பார்வைத்திறன் பரிசோதனையைப் பலருக்கும் கொண்டுசேர்க்கும் விதமான கைத்தொலைபேசி பயன்பாடு ஒன்றை London School of Hygiene and Tropical Medicineச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Portable Eye Examination Kit அதாவது PEEK என்று சொல்லப்படுகின்ற பயன்பாடு ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பார்வைத்திறன் பரிசோதனை கைத்தொலைபேசியில் வருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்துப் பேசிய, புதுச்சேரி அர்விந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியும், கண் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ரெங்கராஜ் வெங்கடேஷ், "கைத்தொலைபேசி தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கண் மருத்துவம் மேம்படும்" என்று கூறினார்.
உலக
அளவில் 28 கோடிக்கும் அதிகமானவர்கள் கண்பார்வை பாதிக்கப்பட்டோ அல்லது
கண்பார்வையின்றியோ உள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது.
பெரும்பாலான
கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சனைகள்தான். பொருத்தமான
கண்ணாடியை அணிவதாலோ கண்புரை நீக்க சிகிச்சை மூலமாகவோ அவற்றைக்
குணப்படுத்திவிட முடியும்.
உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 விழுக்காட்டினர் ஏழை நாடுகளில் உள்ளனர்.
ஆதாரம் : BBC
10. இலங்கையில் பாலர் திருமணங்கள் அதிகரிப்பு
ஆக.,16,2013. இலங்கையில் பாலர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனம் கூறியுள்ளது.
பொருளாதார நிலைமைகள், போதியத் தெளிவின்மை போன்றவற்றால் பாலர் திருமணங்கள் அதிகரிக்கின்றன என்று, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி Reza Hossaini தெரிவித்துள்ளார்
இவ்வாறான திருமணங்களால், மனஉளைச்சல், நலவாழ்வுச் சீர்கேடுகள், குழந்தை இறப்புகள் போன்றவை அதிகரிப்பதுடன், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பிற வன்முறைகளும் அதிகரிக்கும் என்று Hossaini எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நாட்டு மக்களுக்கு போதிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் Hossaini பரிந்துரைத்துள்ளார்.
சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் 30 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.
உலகில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்பட்ட 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார்த் திருமணங்கள் இடம்பெறுகின்றன.
ஆதாரம் : ColomboGazette
No comments:
Post a Comment