1. மரியாவின் புகழ்பாடல் குழந்தைகளாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நம்பிக்கைப் பாடல் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. எகிப்தில் அமைதிக்காகச் செபிக்கத் தருத்தநதை விண்ணப்பம்
3. Castel Gandolfoவில் திருத்தந்தை பிரான்சிஸ்
4. கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதன் முக்கிய கடமை அவரைப் பறை சாற்றுவதே – திருத்தந்தையின் செய்தி
5. பல துறைகளில் சமத்துவம் உருவாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது - அமெரிக்க ஆயர்கள்
6. இந்தியாவில் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளருக்கு விருது
7. 'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு வசதிகளும்' - ஐ.நா.வின் அண்மைய அறிக்கை
8. தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலை ஒழிக்க புதிய செயல்திட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மரியாவின் புகழ்பாடல் குழந்தைகளாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நம்பிக்கைப் பாடல் - திருத்தந்தை பிரான்சிஸ்
ஆக.15,2013. "Magnificat" என்று அழைக்கப்படும் மரியாவின் புகழ்பாடல் நமக்குத் தெரிந்த புனிதர்களாலும், தெரியாத பல கோடி பெற்றோர், அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள், இளையோர், ஏன்? குழந்தைகளாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நம்பிக்கைப் பாடல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 15, இவ்வியாழன் கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லம் அமைந்துள்ள Castel Gandolfoவின் விடுதலை வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருவெளிப்பாடு நூலில் கூறியுள்ளதுபோல், திருஅவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்பெண் மாண்பையும், போராட்டத்தையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் பெண்ணாக நாம் காண்கிறோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இப்பெண்ணைப் போல, திருஅவையும் இவ்வுலகில் போராட்டங்களால் சூழப்பட்டிருந்தாலும், இறைவனின் மகிமையில் இப்போதே பங்கேற்கும் நிலையிலும் விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
தன் மகன் இயேசுவும், சீடர்களும் சந்தித்த அனைத்து பிரச்சனைகளிலும் முழுமையாகப் பங்கேற்ற அன்னை மரியா, தற்போது விண்ணக மகிமையில் இருந்தாலும், நம்முடன் அனைத்துப் போராட்டங்களிலும் உடன் வருகிறார் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. எகிப்தில் அமைதிக்காகச் செபிக்கத் தருத்தநதை விண்ணப்பம்
ஆக.15,2013.
உலகம் முழுவதும் திருஅவையில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அன்னை
மரியாவின் விண்ணேற்பு விழாவையொட்டி காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லப்
பங்குதளத்தில் திருப்பலி நிறைவேற்றி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், எகிப்தில் அமைதி நிலவச் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
எகிப்திலிருந்து வரும் செய்திகளால், தான் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகத் தெரிவித்தத் திருத்தந்தை, வன்முறைகளால் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், காயமுற்றோருக்கும் தன் செப உறுதிகளையும் தெரிவித்தார். எகிப்திலும், உலகின் அனைத்து நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் வழியாகவும், ஒப்புரவின் வழியாகவும் முழுமையான அமைதி நிலவ செபிக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
'பெண்களின் மாண்பு' என்று பொருள்படும் 'Mulieris dignitatem' என்ற அப்போஸ்தலிக்க சுற்றுமடலை, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் வெளியிட்டதன் 25ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுவதையும், தன் மூவேளை செப உரையின்போது நினைவூட்டினார் திருத்தந்தை.
இச்சுற்றுமடல் வலியுறுத்தும், பெண்களின் அழைப்பு மற்றும் மாண்பு பற்றியும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தி இம்மடலில் காணப்படும் அனைத்துக் கருத்துக்களும், அன்னைமரியை அடித்தளமாகக்கொண்டவை எனவும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. Castel Gandolfoவில் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆக.15,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மறைகல்வி உரைகள் அனைத்திலும் நம்பிக்கையும், விடுதலையும் இழையோடுவதைக் காண்பது தங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துகிறது என்று Castel Gandolfoவில் அமைத்துள்ள புனித தோமா வில்லனோவா பங்கின் அருள் பணியாளரான Pietro Diletti அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Castel Gandolfoவில் இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றச் சென்றிருந்தபோது, பங்கு மக்களின் சார்பாக, திருத்தந்தையை வரவேற்று உரையாற்றிய அருள் பணியாளர் Diletti அவர்கள், இளையோர் மீது திருத்தந்தை அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வமும் நம்பிக்கையும் பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை 9 மணி அளவில் வத்திக்கானை விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். 9.30 மணியளவில் Castel Gandolfoவை அடைந்த திருத்தந்தை, அங்குள்ள வறியோரின் கிளாரா தவ இல்லத்திற்கு முதலில் சென்று அங்கு வாழும் அருள் சகோதரிகளுடன் 45 நிமிடங்கள் உரையாடினார்.
10.30 மணிக்கு Castel Gandolfoவின் விடுதலை வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியை நிறைவேற்றியபின், கூடியிருந்தோருக்கு மூவேளை செப உரையையும் வழங்கினார்.
Castel Gandolfoவில் மதிய உணவு அருந்தியபின், புனித
தோமா வில்லனோவா பங்கினை தனிப்பட்ட முறையில் பார்வையிட்டார். மதியம் 2
மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் வத்திக்கான்
திரும்பினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதன் முக்கிய கடமை அவரைப் பறை சாற்றுவதே – திருத்தந்தையின் செய்தி
ஆக.15,2013. கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதன் முக்கிய கடமை அவரைப் பறை சாற்றுவதே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அர்ஜென்டீனா நாட்டில் உள்ள Santisima Concepcion என்ற மறைமாவட்டம் தனது 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, அம்மறைமாவட்டத்தின் ஆயர் Armando José Maria Rossi அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
தான் Buenos Aires பேராயராக இருந்தபோது இம்மறைமாவட்டக் குருக்களுக்கு ஆண்டு தியானம் கொடுத்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, 'கிறிஸ்துவுடன் நடைபயிலுங்கள், சீடராகுங்கள், பறைசாற்றுங்கள் என்ற மூன்று கருத்துக்களில் அவர்களுக்கு தன் செய்தியை வழங்கியுள்ளார்.
தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற திருப்தியில் ஒரே இடத்தில் தங்கிவிடுவது, கிறிஸ்துவர்களுக்கும், குறிப்பாக, அருள் பணியாளர்களுக்கும் உள்ள ஓர் ஆபத்து என்ற எச்சரிக்கையை வழங்கும் திருத்தந்தையின் செய்தி, கிறிஸ்துவுடன் தொடர்ந்து நடந்து செல்வதற்கும் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது.
கிறிஸ்தவ வாழ்வில் இதுவரை கண்ட வளர்ச்சியில் திருப்திகொண்டு, வளர்ச்சியை நிறுத்திவிடாமல், தொடர்ந்து
கிறிஸ்துவின் மீது தாகம் கொண்டவர்களாக மறைமாவட்டத்தின் அனைத்து மக்களும்
விளங்கவேண்டும் என்ற ஆசீருடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு
செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. பல துறைகளில் சமத்துவம் உருவாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது - அமெரிக்க ஆயர்கள்
ஆக.15,2013. குடியுரிமைகளைக் கோரி, மேற்கொள்ளப்பட்ட பேரணி, கடந்த 50 ஆண்டுகளில் பல நன்மைகளை வழங்கியிருந்தாலும், இன்னும்
பல துறைகளில் சமத்துவம் உருவாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து பயணம்
செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், குடியுரிமைகளைக் கோரி, 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரணியின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ம்
ஆண்டு மற்றும் 1984ம் ஆண்டு அமெரிக்க ஆயர்கள் வெளியிட்ட மேய்ப்புப்பணி
சுற்றுமடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மீண்டும் நினைவுறுத்தும்
இச்செய்தி, இனபாகுபாடுகளை ஒழிக்கும் வகையில் நீதியை நிலைநாட்டுவது, புதுவழி நற்செய்தி பரப்பும் பணியின் முக்கிய அம்சம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
வறுமையை ஒழித்தல், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல், இனபாகுபாடுகளை நீக்குதல், அனைவருக்கும்
சரிநிகரான உரிமைகள் வழங்குதல் ஆகிய சவால்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு
மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திக்கவேண்டும் என்று, இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNA/EWTN
6. இந்தியாவில் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளருக்கு விருது
ஆக.15,2013. இந்தியாவில், காணாமற்போன
குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பான பணியில்
ஈடுபட்டுள்ள ஒரு கத்தோலிக்க அருள்பணியாளருக்கு ஆகஸ்ட் 17, இச்சனிக்கிழமையன்று விருது ஒன்று வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BoscoNet என்ற பெயரில் பரந்ததோர் வலைதளத்தை உருவாக்கி, அதன் வழியாக பணியாற்றிவரும் சலேசிய சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் ஜார்ஜ் மேனம்பரம்பில் அவர்களுக்கு Imaan India Samman என்று அழைக்கப்படும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள குழந்தைகள், இளையோர் ஆகியோரை இனம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்துவரும் BoscoNetன் பணியைப் பாராட்டி, இவ்விருது வழங்கப்படுவதாக விருது விழாவின் ஒருங்கிணைப்பாளர் Bhuvanesh Ahuja அவர்கள், அருள் பணியாளர் மேனம்பரம்பில் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விருது தனக்குக் கிடைத்துள்ளதைக் கண்டு மகிழ்வதாகக் கூறிய அருள் பணியாளர் மேனன்பரம்பில் அவர்கள், அரசும், அரசு சாரா நிறுவனங்களும் வலுவிழந்த சிறாருக்கும், இளையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமை அதிகம் உள்ளது என்பதை இத்தருணத்தில் தான் வலியுறுத்த விரும்புவதாகவும் கூறினார்.
ஆதாரம் : UCAN
7. 'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு வசதிகளும்' - ஐ.நா.வின் அண்மைய அறிக்கை
ஆக.15,2013. உறுதியான தலைமைத்துவமும், தேவையான நடவடிக்கைகளும் இருப்பதால், குடிநீர், மற்றும்
தகுதியான கழிவு வசதிகள் ஆகிய மில்லென்னிய இலக்குகளை அடையும் முயற்சிகள்
பலனளித்து வருகின்றன என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு வசதிகளும்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கையை அண்மையில் வெளியிட்ட ஐ.நா.வின் இணைச் செயலர் Jan Eliasson அவர்கள், இந்த இலக்குகளை அடைய இன்னும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வளரும் நாடுகள் என்று அழைக்கப்படும் 15 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மில்லென்னிய இலக்குகளை அடைவதில் இந்நாடுகள் 60 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மில்லென்னிய இலக்குகளை அடையும் இறுதி ஆண்டு 2015 என்பதையும், அதற்கு முன்னதாக 'அனைவருக்கும் குடிநீரும் தகுந்த கழிவு வசதிகளும்' என்ற இலக்கைக் குறித்த கூட்டம் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் Jan Eliasson அவர்கள் அறிவித்தார்.
ஆதாரம் : UN
8. தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலை ஒழிக்க புதிய செயல்திட்டம்
ஆக.15,2013.
தமிழகத்தில் கொத்தடிமைகளாக உள்ள ஆயிரக்கணக்காவர்களை மீட்க மாநிலம் தழுவிய
செயல்திட்டம் ஒன்றை யுனிசெஃப் உட்பட பல அமைப்புகள் இணைந்து முயற்சிகளை
மேற்கொண்டுள்ளன.
மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக இதற்கு ஏற்பாடுச் செய்துள்ளோர் அறிவித்துள்ளனர்.
1976ம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது பல்வேறு புதிய வடிவங்களில் கொத்தடிமை முறை வளர்ந்துள்ளதாக, இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள யுனிசெஃப் அதிகாரி வித்யாசாகர் தெரிவித்தார்.
பல
மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கட்டிடத் தொழில் மற்றும் பெரிய
தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள் கூட கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு வேலை
வாங்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment