Monday, 19 August 2013

Catholic News in Tamil - 14/08/13


1. அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று Castel Gandolfoவில் திருத்தந்தை

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகையும் அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார்

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் - Lionel Messi

4. மணிலாவில் "நம்பிக்கைத் திருவிழா" கொண்டாடப்படும் - கர்தினால் Tagle

5. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுவது தவறு - அமெரிக்க ஆயர் Stephen Blaire

6. 900 ஆண்டுகளுக்கு முன் எருசலேமில் இயங்கி வந்த மருத்துவமனையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு

7. நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்

8. ஏழைகளுக்கு ஒளி தரும் Alfredo Moser விளக்கு

------------------------------------------------------------------------------------------------------

1. அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று Castel Gandolfoவில் திருத்தந்தை

ஆக.14,2013. ஆகஸ்ட் 15, இவ்வியாழன் கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfo வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, நண்பகல் மூவேளை செப உரையும் வழங்குகிறார்.
திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Castel Gandolfoவில் அமைந்துள்ள ஏழைகளின் கிளாரா தவஇல்லத்திற்குத் தனித்துச்சென்று பார்வையிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1631ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தவஇல்லத்திற்கு ஜூலை மாதம் 14ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே தனித்துச்சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில், 1944ம் ஆண்டு, அருள்சகோதரிகளின் தவஇல்லம் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டதில், அங்கு வாழ்ந்த 18 கன்னியர்கள் கொல்லப்பட்டனர் என்று வரலாறு சொல்கிறது.
திருத்தந்தையர்கள் ஆறாம் பவுல், இரண்டாம் ஜான்பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகியோர் ஏழைகளின் கிளாரா தவஇல்லத்திற்குச் சென்றுள்ளனர் என்பதும், அங்கு திருப்பலிகள் நிறைவேற்றி, அருள் சகோதரிகளைச் சந்தித்துள்ளனர் என்பதும் வரலாறு.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகையும் அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார்

ஆக.14,2013. வருகிற அக்டோபர் 13, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகையும் அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார் என்று புதிய நற்செய்திபணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 13ம் தேதி வத்திக்கானில் கொண்டாடப்படவிருக்கும் மரியன்னை நாள் கொண்டாட்டங்களில், திருத்தந்தை ஆற்றும் திருப்பலியின்போது, பாத்திமா அன்னையின் திரு உருவம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் என்று பாத்திமா அன்னை திருத்தலத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.
அக்டோபர் 13ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில் பாத்திமா அன்னையின் திரு உருவம் வைக்கப்படுவது நம்பிக்கை ஆண்டின் ஒரு தனிப்பட்ட முயற்சி என்று, பேராயர் Fisichella அவர்கள் கூறினார்.
மேலும், அக்டோபர் 12, 13 ஆகிய நாள்களில் பாத்திமா நகரை நோக்கி திரளான மக்கள் மேற்கொள்ளும் ஆண்டு திருப்பயணத்தின் இறுதியில் நடைபெறும் திருப்பலியினை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும் பாத்திமா அன்னை திருத்தலம் அறிவித்துள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி CNA

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் - Lionel Messi

ஆக.14,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று அர்ஜென்டீனா கால்பந்தாட்டக் குழுவினரின் தலைவர் Lionel Messi அவர்களும், இத்தாலிய கால்பந்தாட்டக் குழுவினரின் தலைவர் Gianluigi Buffon அவர்களும் கூறினர்.
இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளின் கால்பந்தாட்டக் குழுவினரைத் திருப்பீடத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து, இவ்விரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினர்.
கால்பந்தாட்ட வீரராக தான் உலகின் பல நாடுகளுக்கும் சென்றுள்ளதாகவும், பல்வேறு தலைவர்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறிய Messi அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தது இதுவரை தான் பெற்றிராத ஓர் அனுபவம் என்று கூறினார்.
விளையாட்டுப் போட்டிகள் குழந்தைகளையும், இளையோரையும் கவர்ந்திழுக்கும் காரணத்தால், இப்போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் எடுத்துக்காட்டுகளாக விளங்க வேண்டுமென்பதை திருத்தந்தை வலியுறுத்தியது தன்னைப் பெரிதும் கவர்ந்ததென்று Buffon அவர்கள் கூறினார்.
வரவிருக்கும் உலகக் கால்பந்து கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியும், அர்ஜென்டினாவும் விளையாடவேண்டும் என்ற புதுமையைத் திருத்தந்தை விரும்புவாரா என்று வேடிக்கையாகக் கேட்ட செய்தியாளரிடம், திருத்தந்தை அவர்கள் இன்னும் பல முக்கியமான் விடயங்களில் புதுமைகள் நடக்க வேண்டுமென்று விரும்புவார் என்று, Buffon அவர்கள் பதிலிறுத்தார்.
இத்தாலி, ஆர்ஜென்டீனா நாடுகளின் கால்பந்தாட்ட அணியினர் உரோம் நகரில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் இப்புதன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, நட்புறவின் அடிப்படையில் கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: Zenit

4. மணிலாவில் "நம்பிக்கைத் திருவிழா" கொண்டாடப்படும் - கர்தினால் Tagle

ஆக.14,2013. நம்பிக்கை வாழ்வு ஏனைய ஆசிய நாடுகளில் எவ்விதம் வாழப்படுகிறது என்பதை பிலிப்பின்ஸ் நாட்டில் வாழும் மக்கள் கேட்பது மிகுந்த பலனைத் தரும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக, வருகிற அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதி முடிய மணிலாவில் "நம்பிக்கைத் திருவிழா" கொண்டாடப்படும் என்று அறிவித்த கர்தினால் Tagle அவர்கள், இத்திருவிழாவில் கலந்து கொள்ள ஆசிய நாடுகளின் அனைத்து ஆயர்களையும் தான் அழைத்துள்ளதாகவும் கூறினார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள், மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள நாடுகளில் வாழ்வோர் தங்கள் நம்பிக்கையை எவ்விதம் வாழ்கின்றனர் என்பதை அறிந்துகொள்வது  பயனளிக்கும் என்று கர்தினால் Tagle அவர்கள் கூறினார்.
மணிலாவின் புனித தோமா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் 6000க்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம்: UCAN

5. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுவது தவறு - அமெரிக்க ஆயர் Stephen Blaire

ஆக.14,2013. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுவது தவறு என்று அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமை உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் உழைப்பாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஆயர் Blaire அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளைச் சீரமைக்கும் மனம் அனைவருக்கும் தேவை என்று கூறியுள்ளார்.
சுய மரியாதையை உறுதிப்படுத்தும் உழைப்பும், அதற்குரிய ஊதியமும் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுக்களிலிருந்து எடுத்துரைக்கும் ஆயர் Blaire அவர்களின் செய்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்துவரும் ஏழை செல்வந்தர் இடைவெளியை மையமாக்கி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நிலவும் பொருளாதாரச் சரிவினால், 4 கோடியே, 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் தகுந்த வேலைகள் இன்றி வறுமையில் வாழ்வதாகவும், இவர்களில் 1 கோடியே, 60 இலட்சம் பேர் குழந்தைகள் என்றும் ஆயர் Blaire அவர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம்: Zenit

6. 900 ஆண்டுகளுக்கு முன் எருசலேமில் இயங்கி வந்த மருத்துவமனையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு

ஆக.14,2013. 900 ஆண்டுகளுக்கு முன் எருசலேம் நகரில் இயங்கி வந்த ஒரு மருத்துவமனையின் இடிபாடுகள் பூமிக்கடியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புனித யோவானின் மருத்துவர்கள் என்ற பெயரைத் தாங்கிய ஒரு துறவுச் சபையினர் 1099ம் ஆண்டுக்கும் 1291ம் ஆண்டுக்கும் இடையே நடத்தி வந்த ஒரு மருத்துவமனை பழைய எருசலேம் நகரின் இடிபாடுகள் நடுவே கண்டறியப்பட்டுள்ளது என்று Order of Malta என்ற அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
திருமுழுக்கு யோவான் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டிருந்த இந்த மருத்துவமனையில் 2000க்கும் அதிகமானோர் தங்கியிருக்கும் வசதிகள் இருந்ததென்று கூறப்படுகிறது.
Grand Bazaar என்ற நிறுவனம் கிழக்கு எருசலேமில் ஓர் உணவகத்தைக் கட்ட அடித்தளம் இடுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது புதையுண்ட இந்த மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்டதென்றும், அகழ்வாராய்ச்சி துறை தற்போது பணிகளை மேற்கொண்டிருக்கும் இப்பகுதி, 2014ம் ஆண்டு மக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: ICN

7. நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்றிலிருந்து நீர் உற்பத்தி : முதன் முறையாக மதுரையில் அறிமுகம்

ஆக.14,2013. மதுரையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்து, குடிநீர் வழங்கும் திட்டத்தை, முதன்முறையாக மாநகராட்சி அறிமுகம் செய்ய உள்ளது.
மழை குறைவு, மரங்கள் அழிப்பு போன்றவற்றால், மதுரையின் நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வைகை அணையிலிருந்து கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது.
துளைக்கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், வார்டுகளில், பொது குடிநீர் தொட்டிகள் நிறுவ முடியவில்லை. இந்நிலையில், காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் முறையை, நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் வறண்ட எல்லை பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, தமிழகத்தில் முதன் முறையாக, மதுரையில் நடைமுறைப்படுத்த உள்ளனர். காற்றிலிருந்து நீரை பிரிக்கும் திறன் கொண்ட வாட்டர் மேக்கர்இயந்திரம் மூலம், அதற்கான பரிசீலனை நடக்க உள்ளது.
120 லிட்டர் முதல், 5,000 லிட்டர் வரை, நாள் ஒன்றுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் இவ்வியந்திரங்கள் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸி., அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகளில் பயன்படுத்தப்படுகின்றன
இந்தியாவில், மணிப்பூர், குஜராத், கோல்கட்டா, திரிபுரா, நாகலாந்து போன்ற இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள "வாட்டர் மேக்கர்' முறை, மதுரை மாநகராட்சியில் நடைமுறைக்கு வருகிறது. 

ஆதாரம்: தினமலர்

8. ஏழைகளுக்கு ஒளி தரும் Alfredo Moser விளக்கு

ஆக.14,2013. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Alfredo Moser என்ற தொழில்நுட்ப உழைப்பாளி ஒருவர் சூரிய ஒளியில், மின்சாரம் இல்லாமல் எரியும் விளக்கு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.
2002இல் பிரேசில் நாட்டில் நிலவிய மிகப்பெரிய மின்வெட்டு காலத்தில், குறிப்பாக ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் வீடுகள் எல்லாம் பகலிலும் இருளாக இருந்தபோது, மோஸர் அவர்களின் மனதில் இந்த ''பாட்டில் லைட்'' (bottle light) திட்டம் உதித்தது.
பெரும் சாதனையாகக் கருதப்படும் பாட்டில் லைட் விளக்குக்கான அடிப்படை நுட்பம், மிகவும் எளிமையான ஒளி முறிவுத் தத்துவத்தை தளமாகக் கொண்டதாகும்.
அதாவது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை, நீரால் நிரப்பி, அந்த நீர் நிறம் மாறாமல் இருப்பதற்காக அதில் சிறிது பிளீச்சிங் தாளைச் சேர்த்து, வீட்டுக் கூரையில் சிறிய துவாரத்தைபோட்டு, பாட்டிலின் மேற்பகுதி வெளியே சூரிய ஒளியிலும், கீழ் பகுதி இருளான வீட்டு அறையினுள்ளும் வைக்கப்படும்.
ஒளிமுறிவுத்தத்துவத்தின் அடிப்படையில், பிளாஸ்டிக் பாட்டிலின் ஊடாக வரும் சூரிய ஒளிக்கதிர், அதன் உள்ளே உள்ள தண்ணீரில் செல்லும் போது முறிந்து, அதன் வேகத்தை மாற்றி வீட்டினுள்ளே செல்லும், அப்போது உள்ளே மிகவும் பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும்.
உள்ளே கிடைக்கின்ற இந்த ஒளியைப் பரிசோதித்த மின் பொறியியலாளர் ஒருவர், சூரிய ஒளி எவ்வளவு பலமாக இருக்கின்றது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளே வெளிச்சம் வரும் என்கின்ற போதிலும், 40 முதல் 60 வாட் மின்குமிழ்களின் அளவுக்கு வெளிச்சம் கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த ஒளிவிளக்குத் திட்டம் பிரேஸில் நாட்டின் எல்லா இடங்களுக்கும் பரவி, ஏழைகள் வீடுகளில் இலவசமாக ஒளி விளக்கு எரிந்தது. சூரியன் இறைவனால் படைக்கப்பட்ட கொடை. ஆகவே இது ''இறைவனின் ஒளி'' என்கிறார் மோஸர்.
இந்தக் கண்டுபிடிப்பு தற்போது பிலிப்பின்ஸ், இந்தியா, பங்களாதேஷ், டான்சானியா, ஆர்ஜென்டீனா, பிஜி ஆகிய நாடுகளில் பரவி வருகின்றது என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மோஸருக்கு நொபெல் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, அவரால் பல லட்சம் மக்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள் என்று அவரது ஆர்வலர் ஒருவர் கூறுகிறார். ஊருக்கே ஒளி ஏற்றியிருக்கும் மோஸர், இன்னமும் ஏழையாகவே இருக்கிறார். அதிலும் ஒரு சுகம் இருக்கிறது என்கிறார் மோஸர்.

ஆதாரம்: BBC

No comments:

Post a Comment