1. எகிப்தில் அமைதி திரும்ப செபிக்குமாறு மீண்டுமொருமுறை திருத்தந்தை அழைப்பு
2. அர்ஜென்டினா மறைபரப்புப் பணியாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு திருத்தத்தையின் செய்தி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பகுதி நேர கிறிஸ்தவர்களாக நாம் இருக்கமுடியாது
4. எகிப்தில் கோவில்களும் சமூகக்கூடங்களும் தாக்கப்படுவது குறித்து ஐ.நா. கண்டனம்
5. பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் நலமான பிரச்சனையற்ற மகப்பேறு குறித்த விழிப்புணர்வு
6. .காங்கோவில் ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்ட சிறார் மீட்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. எகிப்தில் அமைதி திரும்ப செபிக்குமாறு மீண்டுமொருமுறை திருத்தந்தை அழைப்பு
ஆக.19,2013. எகிப்தில் அமைதி திரும்ப, தொடர்ந்து செபிக்குமாறு மீண்டுமொருமுறை அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எகிப்தில் அமைதி திரும்ப தொடர்ந்து செபிக்கவும், பிலிப்பைன்ஸ் நாட்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிக்கவும் அழைப்புவிடுத்ததோடு, மக்களோடு இணைந்து தானும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஞாயிறு மூவேளை செப உரையில், ஞாயிற்றுக்கிழமையின் வாசகங்களுக்கு விளக்கமளித்து உரை வழங்கிய திருத்தந்தை, நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களைப் போன்றது அல்ல; மாறாக, அது கடவுளின் குழந்தைகள் என்ற அருள் நிலையை நமக்குக் கொடுக்கின்ற ஆற்றல் என்றும், இந்த அருள் நிலையை இயேசுவில் அவர் வழியாக பெறுகின்றோம் என்றும் கூறினார்.
இயேசுவைப் பின்தொடர்தல் என்பது நன்மை, உண்மை மற்றும் நீதி இவற்றை தேர்ந்தெடுப்பதிலும், சுயநலத்தையும், தீமையையும் கைவிடுவதிலும் அடங்கியிருக்கிறது என்ற திருத்தந்தை,. இது கடவுளை தன் வாழ்க்கையின் அடிப்படையாக ஏற்றுக்கொள்வதிலும், தன்னைத் துறப்பதிலும், தன்னையே கடவுளுக்காகவும், பிறருக்காகவும் அர்ப்பணிப்பதிலும் அடங்கியிருக்கிறது எனவும் கூறி, இதுவே நற்செய்தியில் இயேசு கூறுகின்ற பிளவு என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் 'வன்முறையை எதிர்க்கின்ற உண்மையும் அன்புமே' கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் உண்மையான ஆற்றல், ஏனென்றால், நம்பிக்கையும் வன்முறையும் எதிர்மறையானவை, ஆனால் நம்பிக்கையும் வலிமையையும் இணைந்துச்செல்பவை, இந்த நம்பிக்கை நம் ஆன்மாவின் ஆற்றல் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope’s Angelus message.
2. அர்ஜென்டினா மறைபரப்புப் பணியாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு திருத்தத்தையின் செய்தி
ஆக.19,2013. மறைப்பணியாளர்கள் தங்களையே துறந்து இயேசுவை அறிவிக்கவும், அவரது நற்செய்தியை எல்லா இடங்களிலும் வெளிபடுத்தவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
அர்ஜென்டினாவின் San Fernando del Valle de Catamarca என்ற இடத்தில் துவங்கிய, மறைபரப்பு பணியாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு, திருத்தத்தை அவர்கள் அனுப்பியுள்ளச் செய்தியில், மறைபரப்புப் பணியாளர்கள் செய்கின்ற பணிக்கும், அவர்கள் காட்டுகின்ற ஆர்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த மாநாடு மறைபரப்புப் பணியில் மென்மேலும் வளர உதவியாக இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
அர்ஜென்டினா நாட்டு ஆயர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரத்திற்கும் அதிகமான மறைப்பணியாளர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களும் கலந்துக்கொண்ட இம்மாநாட்டிற்கு Catamarca மறைமாவட்ட ஆயர் Luis Urbanc தலைமைதாங்கி வழிநடத்தினார். 'மறைத்தூது அர்ஜென்டினா, உன் நம்பிக்கையை பகிர்ந்துகொள்' என்பது இம்மாநாட்டின் தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope’s messge to the Argentinian 4th National Congress on mission
3. திருத்தந்தை பிரான்சிஸ் : பகுதி நேர கிறிஸ்தவர்களாக நாம் இருக்கமுடியாது
ஆக.19,2013. “பகுதி நேர கிறிஸ்தவர்களாக நாம் இருக்கமுடியாது. கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக இருந்தால், நாம் ஆற்றும் அனைத்துச் செயல்களிலும் அவர் பிரசன்னமாயிருப்பார்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் டுவிட்டரில், கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாக்க் கொண்டிருக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope’s twitter message.
4. எகிப்தில் கோவில்களும் சமூகக்கூடங்களும் தாக்கப்படுவது குறித்து ஐ.நா. கண்டனம்
ஆக.19,2013. எகிப்தில் கோவில்களும் சமூகக்கூடங்களும் தாக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்படமுடியாத வன்செயல் என தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
கோவில்களும், மருத்துமனைகளும், சமூகக் கூடங்களும் எகிப்தில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அரசியல் தீர்வுகளை நோக்கிய பாதையை உடனே துவக்கவும், எகிப்து அதிகாரிகள் முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
மேலும் மனித உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க நடவடுடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது, அனைவரின் முதன்மைக் குறிக்கோளாக இருக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பொதுச்செயலர் பான் கி மூன்.
ஆதாரம் : UN
UN Attacks on Egyptian churches and public facilities unacceptable – UN chief
5. பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் நலமான பிரச்சனையற்ற மகப்பேறு குறித்த விழிப்புணர்வு
ஆக.19,2013. இந்தியாவில் 2 கோடியே 70 இலட்சம் பெண்களுக்கு, 27,000 மகப்பேறு மருத்துவர்களே உள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது இந்திய மகப்பேறு மருத்துவர் கூட்டமைப்பான FOGSI.
பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் நலமான பிரச்சனையற்ற குழந்தைப்பிறப்பை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வை, தமிழகத்தில் ஏற்படுத்த, பல்வேறு கருத்தரங்கு மற்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார் இவ்வமைப்பின் தலைவர் மருத்துவர் ஹேமா திவாகர்.
பெண் சிசுக்கொலை தமிழகத்தில், 1 இலட்சத்திற்கு, 97 பேர் என்ற விகிதத்தில், இருப்பதும் FOGSI அமைப்பு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு மருத்துவ உதவி திட்டங்களால், மகப்பேறு கால இறப்பு விழுக்காடு குறைந்துள்ளபோதிலும், இதை மேலும் குறைத்து, பெண் சிசுக்கொலை இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்குவதே, மகப்பேறு மருத்துவர் கூட்டமைப்பின் நோக்கம் என மேலும் கூறினார் மருத்துவர் ஹேமா திவாகர்.
ஆதாரம் : DINAMALAR
DINAMALAR Awareness programs for child bearing women in Tamil Nadu
6. .காங்கோவில் ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்ட சிறார் மீட்பு
ஆக.19,2013. காங்கோ
ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த
எண்பதுக்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளதாக ஐ.நா. நிறுவனத்தால்
அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது.
காங்கோவின்
கடங்கா மாநிலத்தில் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டு
தற்போது ஜ.நா.வின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ள ஏழைச்சிறார்களுள், எட்டு வயதுச் சிறார்களும் அடங்குவர்.
அந்நாட்டின்
தென்கிழக்கிலுள்ள கடங்கா மாநிலத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற
ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இச்சிறார்கள் வலுக்கட்டாயமாக
இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 பேர் சிறுமிகள்.
காப்பாற்றப்பட்டுள்ள குழந்தைகளுள் நாற்பது பேர் அவரவர் குடும்பத்திடம் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள் அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment