Saturday 5 March 2022

மே 15ல், கூடுதலாக மூன்று அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்

 

மே 15ல், கூடுதலாக மூன்று அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்




மறைசாட்சி Titus Brandsma அவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாத்சி கொள்கைவாதிகள் அறிவித்த யூதர்களுக்கு எதிரான சட்டங்களை வெளிப்படையாக எதிர்த்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் மேலும் மூன்று அருளாளர்களுக்குப் புனிதர் பட்டமளிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

மார்ச் 04, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்பது கர்தினால்களுடன் நடத்திய கூட்டத்தில், டச்சு நாட்டு அருள்பணியாளர் ஒருவர், பிரான்ஸ் மற்றும், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகளுக்கு, வருகிற மே மாதம் 15ம் தேதி, வத்திக்கானில் புனிதர் பட்டம் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

டச்சு நாட்டு கார்மேல் சபை அருள்பணியாளர் Titus Brandsma, காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை நிறுவிய பிரெஞ்சு அருள்சகோதரி Maria Rivier, இயேசுவின் லூர்து அன்னையின் கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையைத் தோற்றுவித்த இத்தாலிய அருள்சகோதரி இயேசுவின் மரியா ஆகிய மூவரும், 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

மறைசாட்சியான அருள்பணியாளர் Titus Brandsma அவர்கள், ஓர் இறையியலாளர், பத்திரிகையாளர் மற்றும், எழுத்தாளர். இவர், இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாத்சி கொள்கைவாதிகள் அறிவித்த யூதர்களுக்கு எதிரான சட்டங்களை வெளிப்படையாக எதிர்த்தவர். 1942ம் ஆண்டு சனவரி மாதத்தில், ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டை ஆக்ரமித்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவர் வெளியிட்ட கத்தோலிக்க தினத்தாள்கள், நாத்சி கொள்கைகளைப் பரப்பினால் அவர் துறவுமடத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார் என்று அதிகாரிகள் கூறியதற்கு மறுப்புதெரிவித்தார். இதனால்  இவர் Dachau வதைமுகாமில் அடைக்கப்பட்டார். இறுதியில் அவர், அதே ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி, நச்சு ஊசி ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது வயது 61.

அருள்சகோதரி Maria Rivier அவர்கள், பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றபோது, 1796ம் ஆண்டில், காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர்.

வருகிற மே மாதம் 15ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் உட்பட ஏழு பேருடன், இந்த மூவரும் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...