1. திருத்தந்தை பிரான்சிஸ் கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் : மனிதத்தின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழுங்கள்
2. கடவுளின் குழந்தைகளாகவும், ஒருவர் ஒருவருக்குச் சகோதர சகோதரிகளாகவும் இருப்பது கிறிஸ்தவ அனுபவத்தின் மையம்
3. தனது சகோதரரின் கொலை குறித்து வருந்தும் இத்தாலியர் ஒருவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்
4. திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து சீன ஊடகத்தில் நல்ல அறிக்கை, ஹாங்காங் கர்தினால்
5. பிலிப்பீன்ஸ் ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனையில் கவனம், சேரிவாழ் மக்களுக்கு ஆதரவு
6. மரியின் விண்ணேற்பு விழா, கொரியாவில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது, செயோல் பேராயர்
7. ஜப்பான் கத்தோலிக்கருக்கு மரியின் விண்ணேற்பு விழா முக்கியமானது, மறைபோதகர்
8. கொலம்பியாவில் 2014ல் அனைத்துலக இறைஇரக்க மாநாடு
9. நேபாளத்தைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்கரைப் பின்பற்றுமாறு பிரதமர் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் : மனிதத்தின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழுங்கள்
ஆக.,13,2013. விளையாட்டு கடவுளின் கொடை என்பதால், விளையாட்டு
வீரர்கள் மனிதத்தின் எடுத்துக்காட்டுகளாய்த் திகழவேண்டுமென்று இத்தாலி
மற்றும் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதனன்று
உரோமையில் நடைபெறவிருக்கும் இத்தாலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் தேசிய
கால்பந்து விளையாட்டு வீரர்கள் அணிகளுக்கிடையேயான நட்புரீதியிலான
விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் விளையாட்டு வீரர்களை
வத்திக்கானின் Clementine அறையில் இச்செவ்வாயன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இக்காலத்தில் விளையாட்டு பெரிய வணிகமாக மாறிவருவது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது மைதானத்தில் அழகையும், நன்றியையும், தோழமையையும் காண்பதாகவும், அவ்விடத்தில் தன்னலப்போக்குக்கு இடமில்லை மாறாக, அணியின் ஒத்துழைப்புக்கே இடமுண்டு எனவும் கூறினார்.
தனது பாப்பிறைப் பணிக்காகச் செபிக்குமாறும், இதன்மூலம் கடவுள் தன்னை வைத்துள்ள விளையாட்டுத் தளத்தில் நேர்மையோடும் துணிச்சலோடும் விளையாட முடியும் என்றும், இச்செவ்வாயன்று தான் சந்தித்த விளையாட்டு அணிகளின் ஏறக்குறைய 200 பேரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி
மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் தேசிய கால்பந்து அணிகள் 12 ஆண்டுகளுக்குப்
பின்னர் இப்புதனன்று உரோம் ஒலிம்பிக் மைதானத்தில் விளையாடவுள்ளன. இதனை
இவ்வணிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கால்பந்து விளையாட்டுப் பிரியர் என்பதும், Buenos Aires de Almagro கால்பந்து அணியின் இரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கடவுளின் குழந்தைகளாகவும், ஒருவர் ஒருவருக்குச் சகோதர சகோதரிகளாகவும் இருப்பது கிறிஸ்தவ அனுபவத்தின் மையம்
ஆக.,13,2013. கடவுளின் குழந்தைகளாகவும்,
ஒருவர் ஒருவருக்குச் சகோதர சகோதரிகளாகவும் இருப்பது கிறிஸ்தவ அனுபவத்தின்
மையம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு
ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும்
திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவ அனுபவத்தின் இதயமாக இருப்பது குறித்து
இச்செவ்வாயன்று எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. தனது சகோதரரின் கொலை குறித்து வருந்தும் இத்தாலியர் ஒருவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்
ஆக.,13,2013.
தனது சகோதரர் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டதையடுத்து கடவுளை மன்னிக்க
மறுத்துவந்த இத்தாலியர் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து நம்பிக்கை நிறைந்த
ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் பேசரோ நகரில் பல எரிவாயு நிறுவனங்களை நடத்திவரும் Andrea என்பவர் கடந்த ஜூன் மாதத்தில் இரு பணியாளர்களால் கொலைசெய்யப்பட்டதால் கடவுளிடம் மிகுந்த கோபமாக இருக்கும் அவரின் சகோதரர் Michele Ferri என்பவரை கடந்த புதன்கிழமை நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
இத்தொலைபேசி அழைப்பு குறித்து Il Messagero என்ற இத்தாலிய நாளிதழுக்குப் பேட்டி கொடுத்துள்ள Michele Ferri, வேதனை மற்றும் மனச்சோர்வு அதிகமானதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றைத் தான் எழுதியதாகவும், ஆனால், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து வந்த எதிர்பாராத தொலைபேசி அழைப்பு, தனது வாழ்வில் மறக்கமுடியாத உணர்வுகளைத் தந்துள்ளது என Michele Ferri மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடவுளே உம்மை நான் எப்பொழுதும் மன்னித்து வந்துள்ளேன், ஆனால், இம்முறை உம்மை மன்னிக்கவே முடியாது என, தனது சகோதரர் கொலைசெய்யப்பட்டதற்குப் பின்னர் Michele Ferri தனது முகநூலில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Zenit
4. திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து சீன ஊடகத்தில் நல்ல அறிக்கை, ஹாங்காங் கர்தினால்
ஆக.,13,2013. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் கடந்த நான்கு மாதத் தலைமைப்பணியை வைத்து அவர்
குறித்த நேர்மையான மற்றும் அறிவுக்கு உகந்த தெளிவான செய்திகளை, சீன ஊடகம் வெளியிட்டிருப்பது ஓர் அசாதாரணச் செயல் என்று ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் ஹான் (John Tong Hon) கூறியுள்ளார்.
சீன ஊடகத்தின் புதிய திருத்தந்தை குறித்த செய்திகள் நடுநிலையானவை, முக்கியத்துவம் பெற்றவை மற்றும் இவை புதிய திருத்தந்தை குறித்து குறைவாக எழுதியதில்லை என்றும் ஹாங்காங் ஆயர் கர்தினால் டாங் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனக் கத்தோலிக்கர் குறித்து நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளார் என்றும், இத்தகைய நல்ல திருத்தந்தையை கர்தினால்கள் தேர்ந்தெடுத்திருப்பதற்கு, சீனக் கத்தோலிக்கர் நன்றி தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் டாங்.
தற்போதைய சீன-வத்திக்கான் உறவுகளில் இக்கட்டானநிலை இருந்தாலும், வருங்காலத்தில் இவ்வுறவு மேம்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார் ஹாங்காங் கர்தினால் டாங்.
ஆதாரம் : UCAN
5. பிலிப்பீன்ஸ் ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனையில் கவனம், சேரிவாழ் மக்களுக்கு ஆதரவு
ஆக.,13,2013.
சேரிகளில் வாழும் ஏழை மக்களைச் சந்தித்து அவர்களுடன் அதிகநேரம் செலவழிக்க
வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்திருக்கும்
வேண்டுகோளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.
பிலிப்பீன்சின் Deogracias Iniguez, Elmer Bolocon, Artemio Luwaton ஆகிய ஆயர்கள் உட்பட பல சமயத் தலைவர்கள், Quezon நகரின் கால்வாய்களில் வாழும் சேரி மக்களை இச்செவ்வாயன்று சந்தித்தனர்.
ஏழைச்சேரி மக்கள் வாழும் குடியிருப்புக்கள் தகர்க்கப்பட்டுவரும் தற்போதைய அரசின் நடவடிக்கைகள், மனிதமற்ற, நேர்மையற்ற, நியாயமற்ற மற்றும் அடக்குமுறைச் செயல்கள் என்று ஆயர்கள் குறைகூறியுள்ளனர்.
அத்துடன், சேரிகள் தகர்க்கப்படுவது நிறுத்தப்படுமாறும் விண்ணப்பித்துள்ள ஆயர்கள், கால்வாய்ப் பகுதிகளில் வாழும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி, அம்மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பேரிடர்களைக் களைவதற்கு ஆவன செய்யுமாறும் கேட்டுள்ளனர்.
பிலிப்பீன்சில் ஏறக்குறைய 2 கோடிப் பேர் நகர்ப்புற ஏழைகள் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது.
ஆதாரம் : UCAN
6. மரியின் விண்ணேற்பு விழா, கொரியாவில் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது, செயோல் பேராயர்
ஆக.,13,2013. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை ஆகஸ்ட் 15ம் தேதியன்று இவ்வுலகம் சிறப்பிக்கும் அதேவேளை, கொரியத் திருஅவை விண்ணேற்பு அன்னைத் திருவிழாவை ஒரு சிறப்பான பக்தியுடன் கொண்டாடுகின்றது என்று செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung கூறியுள்ளார்.
விண்ணேற்பு அன்னை திருவிழாவை முன்னிட்டு தனது விசுவாசிகளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள பேராயர் Yeom, கொரிய மக்கள், ஆகஸ்ட் 15ம் தேதியன்று விண்ணேற்பு அன்னைத் திருவிழாவைக் கொண்டாடுவதோடு, கொரியாவில் ஜப்பானிய பேரரசின் ஆதிக்கமும், இரண்டாம் உலகப்போரும் முடிவடைந்ததைச் சிறப்பிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதியின் அரசியாம் மரியின் பரிந்துரை மூலமாகவே கொரியத் தீபகற்பத்துக்கு ஒப்புரவு ஏற்பட முடியும் என்றுரைக்கும் பேராயரின் செய்தி, கொரிய அரசுகள், புதிய மோதல்களைத் தவிர்க்க விரும்பினால், இரு கொரிய நாடுகளுக்கு இடையே குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அவை முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews
7. ஜப்பான் கத்தோலிக்கருக்கு மரியின் விண்ணேற்பு விழா முக்கியமானது, மறைபோதகர்
ஆக.,13,2013. மரியின் விண்ணேற்பு விழா, இறப்பு
மற்றும் நிலைபேறான வாழ்வோடு தொடர்புடையதாக இருப்பதால் இவ்விழா ஜப்பான்
கத்தோலிக்கருக்கு முக்கியமானதாகும் என்று ஆஸ்திரேலிய மறைப்பணியாளர் ஒருவர்
தெரிவித்தார்.
ஜப்பானின் Nagoyவில் இயேசுவின் திருஇதய சபையினர் நடத்தும் Mikokoro மையத்தை நடத்தும் அச்சபையின் மறைப்பணியாளர் அருள்பணி Keith Humphries, மரியின் விண்ணேற்பு விழாவன்று கத்தோலிக்கர் திருப்பலியில் கலந்துகொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவர் என்று கூறினார்.
இவ்விழாத் திருப்பலியில் குடும்பங்களில் இறந்த அனைவரின் பெயர்களும் வாசிக்கப்படும், சிலநேரங்களில் இத்திருவழிபாடு மணிக்கணக்காய் நடைபெறும் எனவும் அருள்பணி Humphries கூறினார்.
மரியின் விண்ணேற்பு விழா ஆகஸ்ட் 15ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. இதே ஆகஸ்ட் 15ம் தேதி, 1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது. எனவே ஜப்பானில் மரியின் விண்ணேற்பு விழாவன்று, இந்த அறிவிப்பு தினம் நினைவுகூரப்படுகின்றது.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஹிரோஷிமாவும், 9ம் தேதியன்று நாகசாகியும் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதில் ஏறக்குறைய 2,46,000 பேர் இறந்தனர்.
ஆதாரம் : CNA
8. கொலம்பியாவில் 2014ல் அனைத்துலக இறைஇரக்க மாநாடு
ஆக.,13,2013. இறைஇரக்கம் குறித்த மூன்றாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க மாநாடு 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 19 வரை, கொலம்பியத் தலைநகர் Bogotaவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அனைத்துலக இறைஇரக்க மாநாடு நடைபெறவிருப்பது குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் Istima Tado ஆயர் Julio Hernando Garcia, கொலம்பியாவை
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அலைக்கழித்திருக்கும் சண்டையின் காயங்கள்
குணமடைவதற்கு ஒரு தளமாக இம்மாநாடு அமையும் எனத் தெரிவித்தார்.
கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே அரை நூற்றாண்டுகளாக சண்டைகள் இடம்பெற்ற பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் இந்நாள்களில், இறைஇரக்க மாநாடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இச்சண்டைகளில் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, 2006ம் ஆண்டில் உரோம் நகரிலும், 2011ம் ஆண்டு போலந்திலும் அனைத்துலக இறைஇரக்க அப்போஸ்தலிக்க மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
ஆதாரம் : CNA
9. நேபாளத்தைக் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்கரைப் பின்பற்றுமாறு பிரதமர் அழைப்பு
ஆக.,13,2013. நேபாள கத்தோலிக்க இளையோர், நாட்டுக்குப் பணிசெய்வதில் பல்வேறு வழிகளை நமக்குக் காட்டுகின்றனர், மாற்றங்கள் இடம்பெற்றுவரும் இந்நேரத்தில் அவர்கள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று நேபாள இடைக்காலப் பிரதமர் Khilaraj Regmi அந்நாட்டு கத்தோலிக்க இளையோரைப் பாராட்டியுள்ளார்.
அனைத்துலக இளையோர் தினத்தையொட்டி தேசிய தொலைகாட்சியில் இவ்வாறு உரையாற்றிய நேபாள பிரதமர் Khilaraj, பல நேபாள இளையோர் வளத்தையும் பணத்தையும் நாடிச் செல்கின்றனர், ஆனால் கத்தோலிக்க இளையோர் வித்தியாசமான எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர், அவர்களை நாம் பின்பற்ற வேண்டுமெனக் கூறினார்.
தேசிய உணர்வைத் தட்டியெழுப்பக்கூடிய பல இளம் நேபாளியர்கள் நாட்டுக்குத் தேவை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நேபாள மக்கள்தொகையில் 0.45 விழுக்காடே கத்தோலிக்கர்.
No comments:
Post a Comment