Wednesday, 14 August 2013

Catholic News in Tamil - 12/08/13


1. மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பு நமது மாபெரும் செல்வம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குமாறு கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித வாழ்வு தாயின் கருவிலிருந்து எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்

4. மெக்சிகோ நகர் பேராலயம் கட்டப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தி

5. திருஅவையோடு இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வு, திருமுழுக்கின் அருளிலிருந்து நமக்குக் கிட்டுகிறது

6. பஞ்சாபின் துணை முதல்வர், ஜலந்தரின் புதிய ஆயர் சந்திப்பு

7. சீனாவில் மீண்டும் ஓர் அருள்பணியாளர் கைது

------------------------------------------------------------------------------------------------------

1. மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பு நமது மாபெரும் செல்வம்

ஆக.12.2013. ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றாக இணைத்திருப்பது அன்பு என்றும், அந்த அன்பைக் கொடுப்பவர் இறைவன் என்றும், அதுவே நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் உண்மையான செல்வம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் தெரிவித்தார். 
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு கடமைக்கும் பொருள் கொடுப்பதும், வாழ்க்கையில் வரும் சோதனைகளை எதிர்கொள்ளத் துணைபுரிவதும் கடவுளின் அன்புதான் என்றும் திருத்தந்தை கூறினார்.
கடவுள் அன்பு என்பது வெறுமையான ஓர் உணர்வு அல்ல, மாறாக, அது இயேசு கிறிஸ்துவில் உருவமும் உயிரும் பெற்றுள்ளது, அதுவே மனித வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மதிப்பையும் அழகையும் கொடுக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துவில் வெளிப்படுகின்ற இறையன்பு நம் நம்பிக்கையின் கதவுகளைத் திறக்கின்றது. நம் வாழ்வுத் திருப்பயணத்தின் எல்லையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. அதைப்போலவே நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் பொருள் பெறுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை. 
நம் பாவங்களும், கடவுளின் அன்பினால் அர்த்தம் பெறுகின்றன, ஏனென்றால் கிறிஸ்துவில் வெளிப்படும் இறையன்பு நம்மை எப்பொழுதும் மன்னிக்கின்றது. மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், தன் சகோதரர்களுடன் இணைந்து கடவுளைச் சந்திக்கவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குமாறு கிறிஸ்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் அழைப்பு

ஆக.12.2013. ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குமாறு, சிறப்பாக, புதிய தலைமுறைகளுக்கு கல்வி வழங்குவதன் வழியாக அதனைச் செயல்படுத்துமாறு கிறிஸ்தவரையும் முஸ்லீம்களையும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரமதான் பண்டிகையைக் கொண்டாடியுள்ள உலகெங்கும் வாழும்  முஸ்லீம் சகோதரர்களைத் தான் வாழ்த்துவதாக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாண்டின் இப்பண்டிகைக்கென தான் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்திய கருத்துக்களையும் குறிப்பிட்டார். 
கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கல்வி வழியாக ஒருவர் ஒருவரை மதித்து நடப்பதை ஊக்குவிக்குவிப்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படவிருக்கும் மரியின் விண்ணேற்பு விழா பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நாளில் நாம் அன்னைமரியைக் கவுரவிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித வாழ்வு தாயின் கருவிலிருந்து எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்

ஆக.12.2013. கிறிஸ்தவ விசுவாசத்தைக் கற்றுக்கொடுப்பதிலும், பரப்புவதிலும் இறைவனின் உடனுழைப்பாளர்களில் பெற்றோர்கள் முதன்மையானவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டில் கொண்டாடப்படும் குடும்ப வார விழாவுக்கான தன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
மனித வாழ்வும், மனித அன்பும் இறைவெளிபாட்டின் மூலமாகப் புதுப்பொலிவு பெறுகின்றன என்ற அடிப்படை உண்மையை, பெற்றோர் தங்கள் வார்த்தைகள் மூலமாகவும், அதைவிட தங்களின் செயல்கள் மூலமாகத் தங்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும் எனவும் திருத்தந்தை அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேவையில்லாதவை வீண் என்று ஒதுக்குகின்ற இக்காலத்தில், மனித வாழ்க்கையின் மதிப்பை புறந்தள்ளும் கலாச்சாரத்தில்மனிதவாழ்க்கை கடவுளின் கொடை, அது மனித குலத்தின் எதிர்காலம், எனவே ஒவ்வொரு மனித உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற  விழிப்புணர்வை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
சமுதாயத்தின் கடந்தகாலத்தின் நினைவுகளாகவும், வாழ்க்கை ஞானத்தைக் கற்றுகொடுக்கும் வயது முதிர்ந்தவர்களை, குறிப்பாக, நம் தாத்தா பாட்டிகளை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறு முதல் வருகிற சனிக்கிழமை வரையுள்ள நாள்களை, தேசிய குடும்ப வாரமாக அறிவித்துள்ளது பிரேசில் நாட்டு ஆயர் பேரவை. "இல்லங்களில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புதலும், கற்றுக்கொடுத்தலும்' என்பதை இவ்வாரம் தலைப்பாகக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மெக்சிகோ நகர் பேராலயம் கட்டப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தையின் வாழ்த்துச்செய்தி

ஆக.,12,2013. மெக்சிகோ நகர் பேராலயம் கட்டப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி அப்பெருமறைமாவட்ட பேராயர் கர்தினால் Norberto Rivera Carreraவுக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள இந்த 200ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், ஆன்மீகத் தூண்டுதலுக்கும் மறைப்பணி அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு என திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
விசுவாசத்திலிருந்து வரும் நம்பிக்கையை வளர்ப்பதில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார், தன் செய்தியில் திருத்தந்தை.
நம் நம்பிக்கைகளை எவரும் திருடிவிட அனுமதிக்காமல், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவோம் எனவும் தன் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, அன்பின் சாட்சிகளாக விளங்குவதற்கான பலத்தை திருநற்கருணையிலிருந்து பெற்றுச் செயல்படுவோம் எனவும் கூறியுள்ளார்.
மெக்சிகோ மக்களனைவரையும் குவாதலூப்பே அன்னைமரியாவிடம் ஒப்படைப்பதாக தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருஅவையோடு இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வு, திருமுழுக்கின் அருளிலிருந்து நமக்குக் கிட்டுகிறது

ஆக.,12,2013. திரு அவையையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது. திரு அவைக்குள்ளும் திருஅவையோடும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வு, திருமுழுக்கின் அருளிலிருந்து நமக்குக் கிட்டுகிறதுஎன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கள்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், அரபு உட்பட ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையோடு இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கிடைக்கும் மகிழ்வுக்கும், திருமுழுக்கின்வழி நாம் பெற்றுள்ள அருளுக்கும் இடையேயானத் தொடர்பு குறித்து விவரித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பஞ்சாபின் துணை முதல்வர், ஜலந்தரின் புதிய ஆயர் சந்திப்பு

ஆக.,12,2013. பஞ்சாபின் துணை முதல்வர் Sukhbir Singh Badal,  மரியாதை நிமித்தம் ஜலந்தரின் புதிய ஆயரைச் சந்தித்து தன் வாழ்த்துக்களை வழங்கினார்.
ஜலந்தரின் ட்ரினிட்டி கல்லூரியில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பஞ்சாபில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய சலுகைகள் குறித்து மத்திய அரசிடம் பஞ்சாப் மாநில அரசு எடுத்துரைக்க வேண்டும் என ஏற்கனவே மாநில அரசிடம் புதிய ஆயர் பிராங்கோ  மூலக்கல் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜலந்தர் நகரில் மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருந்த 'Sarv Dharam' செப வழிபாட்டிலும் கலந்துகொண்டார் துணை முதல்வர் Sukhbir Singh Badal.
செப வழிபாட்டிற்குப் பின்னர் துணைமுதல்வருக்கும் ஆயருக்கும் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது. 

ஆதாரம் : UCAN

7. சீனாவில் மீண்டும் ஓர் அருள்பணியாளர் கைது

ஆக.,12,2013. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சீனாவின் அருள்பணியாளர் ஒருவர், அந்நாட்டின் வட மாநிலமான Hebeiயில் கைது செய்யப்பட்டுள்ளார். 
காலை 4 மணிக்கு வாகனம் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, 10 காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட அருள்பணி Song Wanjun, எங்கு எடுத்துச்செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை கூற மறுத்து வருகின்றது.
11 ஆண்டுகளுக்கு முன்னர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட 39 வயதாகும் Wanjun, ஏற்கனவே ஒருமுறை தன் விசுவாசத்திற்காகக் கைதுசெய்ய முற்பட்டபோது காவல்துறையிடம் சிக்காமல் தப்பிச்சென்றவர் ஆவார்.
திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் கிறிஸ்தவர்கள், அரசு ஆதரவுபெற்று, அரசு அதிகாரத்தின்கீழ் இயங்கும் கத்தோலிக்க சபையில் இணைய வேண்டும் என வலியுறுத்தி, கைதுகளையும் சித்ரவதைகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது சீன அரசு.

ஆதாரம் :  AsiaNews

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...