1. திருத்தந்தையின் பரிவிரக்கமும் அன்பும் உலகின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன, பாஸ்டன் கர்தினால்
2. லெபனன் நடுநிலை காக்க வேண்டும், மாரனைட் ஆயர்கள்
3. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நன்மதிப்பை வளர்ப்பது இன்றியமையாதது, இந்திய ஆயர்
4. ஆகஸ்ட் 10 இந்தியாவில் கறுப்பு தினம்
5. 2013ம் ஆண்டில் உலகில் 14 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை
6. குடியேற்றதாரர் வாரம் விசுவாசத்தையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு
7. அரசுகளுக்கும் பூர்வீக இனத்தவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்
8. இந்தியப் பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன,புதிய ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் பரிவிரக்கமும் அன்பும் உலகின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன, பாஸ்டன் கர்தினால்
ஆக.,10,2013.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிவிரக்கமும் அன்பும் உலகெங்கும்
வாழ்கின்ற மனிதர்களின் இதயங்களைத் தொட்டிருக்கின்றன என்று பாஸ்டன்
கர்தினால் Sean P. O'Malley கூறினார்.
Knights of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு அமெரிக்க ஐக்கிய நாட்டு Texas மாநிலத்தின் San Antonioவில் நடத்திய, 131வது மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் O'Malley, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியில் புதிய வழிகளில் நற்செய்தி
அறிவிக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டுவரும் முக்கியத்துவம் குறித்து
விளக்கினார்.
திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புதிய ஆர்வத்துடனும், புதிய துணிச்சலுடனும், நமது
வழியில் இறைவன் வைக்கும் அனைவர்மீது அதிக அன்புடனும் புதிய வழிகளில்
நற்செய்தி அறிவிக்கும் பணியைச் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார் என்றும் கூறினார் கர்தினால் O'Malley.
புதிய மில்லென்யத்தில், வழக்கமாக நாம் செய்யும் மறைப்பணி மட்டும் போதாது, மாறாக, குழுவாக மறைப்பணியைச் செய்ய வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதுபோல அதைக் கனிவுடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பாஸ்டன் கர்தினால் Sean P. O'Malley .
ஆதாரம் : CNS
2. லெபனன் நடுநிலை காக்க வேண்டும், மாரனைட் ஆயர்கள்
ஆக.,10,2013.
இன்றைய உலகில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்
சண்டைகளுக்கு மத்தியில் லெபனன் நாடு நடுநிலையோடு இருந்தால் மட்டுமே, அந்நாட்டின்
உறுதியான தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல சதிச்செயல்களிலிருந்து
நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று லெபனன் மாரனைட் ஆயர்கள்
கூறினர்.
கேதார் மரங்கள் நிறைந்த லெபனன் நாட்டின் தலைவிதிக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்த ஆயர்கள், நாடு
மேலும் மேலும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருவதற்கு
அந்நாட்டின் இரு பெரும் தேசிய அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளே
காரணம் என்று குறை கூறியுள்ளனர்.
லெபனனில் மக்களாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் தேர்தல் அமைப்பு குறித்த ஒப்புதலுக்கு வருவது, அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி அரசில் எல்லாக் கட்சிகளுக்கும் சமப்பங்கீடு வழங்குவது, அரசியல், சமூக, பொருளாதார உறுதித்தன்மைக்கு வழி அமைப்பது போன்ற விவகாரங்களில் ஓர் உடன்பாடு ஏற்பட வேண்டுமென்று மாரனைட் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
லெபனனிலுள்ள சிரியா நாட்டு அகதிகள்மீது ஒருமைப்பாட்டுணர்வு காட்டுவது, தேசியக் கடமை என்பதையும் அரசு அதிகாரிகளுக்கு ஆயர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.
ஆதாரம் : Fides
3. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நன்மதிப்பை வளர்ப்பது இன்றியமையாதது, இந்திய ஆயர்
ஆக.,10,2013.
கல்வி வழியாக ஒருவர் ஒருவர்மீது நன்மதிப்பை வளர்க்க வேண்டுமென்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரமதான் பண்டிகை வாழ்த்துச்
செய்தியில் அழைப்பு விடுத்திருப்பது இந்தியாவுக்கு இன்றியமையாதது என்று
பேராயர் ஃபீலிக்ஸ் மச்சாடோ கூறினார்.
இரமதான் பண்டிகையை முன்னிட்டு இந்திய முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணையத் தலைவர் பேராயர் மச்சாடோ, இந்தியத் திருஅவை, தனது
ஆயிரக்கணக்கான பள்ளிகளில் எல்லா மதங்களையும் சேர்ந்த மாணவ மாணவியருக்கு
இடமளிப்பதன்மூலம் பிற மதங்களை மதிப்பதற்குச் சான்று பகர்ந்து வருகின்றது
என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் வாழ்த்துச் செய்தி குறித்து கருத்து தெரிவித்த பேராயர் மச்சாடோ, இந்தியத் திருஅவை ஏறக்குறைய 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றது, இவை பல்சமய உரையாடலுக்குத் தொட்டிலாக அமைந்துள்ளன எனவும் கூறினார்.
15,000 பள்ளிகள், 300 கல்லூரிகள், 125 தாதியர் பள்ளிகள், 5,000 மருத்துவமனைகள் மற்றும் சிறிய மருத்துவமனைகள், 2,000 மறுவாழ்வு மையங்கள், 1,500 தொழில்நுட்ப நிறுவனங்கள்,
6 பல்கலைக்கழக மருத்துவமனைகள் மற்றும் 2 பல்கலைக்கழகங்களை இந்தியத்
திருஅவை நடத்தி வருகின்றது என்றும் பேராயர் மச்சாடோ தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
4. ஆகஸ்ட் 10 இந்தியாவில் கறுப்பு தினம்
ஆக.,10,2013.
இச்சனிக்கிழமை மாலை 4 முதல் 5 மணிவரை புதுடெல்லியின் இயேசுவின் திருஇதய
ஆலயத்துக்கு முன்னர் டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்களின் தலைமையில்
கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய
தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கறுப்பு தின நிகழ்வில் வட
இந்தியத் திருச்சபை பொதுச்செயலர் Alwan Masih, வழக்கறிஞர் Mushtaque Ahmed, அனைத்திந்திய Jamiatul Hawareenனின் தேசியத் தலைவர் Hafeez Ahmad Hawari, இன்னும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இஸ்லாம் மதப் பிரதிநிதிகள், கிறிஸ்தவப் பொதுநிலையினர் என, பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் 63 ஆண்டுகளுக்கு மேலாக, தலித்
கிறிஸ்தவர்களுக்கும் தலித் முஸ்லீம்களுக்கும் மதத்தின் அடிப்படையில்
அரசியல் அமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து இந்திய
சுதந்திர தினத்துக்கு முன்வரும் ஞாயிறன்று கறுப்பு தினம்
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : CBCI
5. 2013ம் ஆண்டில் உலகில் 14 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை
ஆக.,10,2013. 2013ம் ஆண்டில் உலகில் இதுவரை 14 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று La Stampa நாளிதழின் Vatican Insider ஊடகச் செய்தி கூறுகின்றது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நால்வர், மெக்சிகோவில் இருவர், பிரேசில், கானடா, ஹெய்ட்டி, இந்தியா, இத்தாலி, சிரியா, டான்சானியா, வெனெசுவேலா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் என மொத்தம் 14 அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின்
பெங்களூரு புனித பேதுரு குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்பணி கே.ஜே.தாமஸ்
இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி கொலை செய்யப்பட்டார்.
ஆதாரம் : Vatican Insider
6. குடியேற்றதாரர் வாரம் விசுவாசத்தையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு
ஆக.,10,2013. இம்மாதம் 11 முதல் 18 வரை 41வது தேசிய குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் வாரத்தைச் சிறப்பிக்கவுள்ளது OCPM என்ற போர்த்துக்கல் நாட்டின் தேசிய கத்தோலிக்க குடியேற்றதாரர் கழகம்.
இஞ்ஞாயிறன்று தொடங்கும் இந்தக் குடியேற்றதாரர் வாரம், உலகெங்கும் வாழ்கின்ற குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் நினைத்துப் பார்ப்பதற்கு, போர்த்துக்கீசியருக்குச் சிறப்பான தருணமாக உள்ளது என அக்கழகம் தெரிவித்தது.
இவ்வாரத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக, வருகிற திங்கள், செவ்வாய் தினங்களில் குடியேற்றதாரர்கள், பாத்திமா அன்னைத் திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்வர் எனவும் அக்கழகம் கூறியது.
இவ்வாரம் விசுவாசத்தையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் கூறியது OCPM கழகம்.
ஆதாரம் : Fides
7. அரசுகளுக்கும் பூர்வீக இனத்தவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும்
ஆக.,10,2013 அரசுகள், தங்களின் பூர்வீக இன மக்களுடன் ஏற்படுத்தியுள்ள உடன்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் மதித்து அவற்றைச் செயல்படுத்துவதே அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரே வழி என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக
பூர்வீக இன மக்கள் தினம் இவ்வெள்ளிக்கிழமையன்று
கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி
மூன், அனைத்து நிலைகளிலும் முடிவு எடுக்கும்போது பூர்வீக இன மக்களின் பங்களிப்பு உறுதிச் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அரசுகளுக்கும் பூர்வீக இனங்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், அவர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் விழுமியங்களைப் புரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ள பான் கி மூன், பல்வேறு கலாச்சாரங்கள் சமூக நல்லிணக்கத்தோடு ஒன்றித்திருக்க வகைச்செய்யப்பட வேண்டுமென கேட்டுள்ளார்.
'ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் மற்றும் ஏனைய ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளை மதித்தல்‘ என்ற தலைப்பில் இவ்வாண்டின் இவ்வனைத்துலக தினம் கொண்டாடப்பட்டது.
மேலும், அனைத்து அரசுகளும், உடன்பாடுகள் அனைத்தையும் மதிக்கவும் அதன் மூலம் வேற்றுமைகளைக் களையவும், பூர்வீக இன மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் வருகின்ற தடைகளைச் சமாளிக்கவும் வேண்டுமென, பூர்வீக இன மக்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அதிகாரி James Anaya தெரிவித்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற விவாதத்துக்குப் பின்னர் 2007ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அனைத்துலக பூர்வீக இன மக்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இசைவு தெரிவித்தது.
இத்தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 90 நாடுகளில் 5,000க்கும்
அதிகமான பூர்வீக இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் உலக
மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : UN
8. இந்தியப் பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன,புதிய ஆய்வு
ஆக.,10,2013. உலகில் இன்று பேசப்பட்டுவரும் 6,700க்கும்
அதிகமான மொழிகளில் பாதி மொழிகள் இந்நூற்றாண்டுக்குள் மறைந்துபோகக்கூடிய
ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று யுனெஸ்கோ நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒரு மொழியைப் பேசக்கூடிய கடைசி ஆள், இரண்டு வாரங்களுக்கு ஒருவர் வீதம் இறந்து வருகின்றார் என்று கூறியுள்ள டிஸ்கவரி என்ற ஊடகம், ஒரு மொழியைப் பேசக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், அவர்கள் முதுமை அடைவதாலும் மொழிகள் முற்றிலும் மறையக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்றும் கூறியுள்ளது.
உலகில் 85 விழுக்காட்டு மொழிகளைப் பேசுவோர் ஒரு இலட்சத்துக்கும் குறைவாகவே உள்ளனர் என்று மொழியியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
பிரேசிலின் மக்கள் தொகையில் ஏறக்குறைய இருபது விழுக்காடாக இருக்கும் அந்நாட்டின் பூர்வீக இன மக்கள் 170 மொழிகளைப் பேசுகின்றனர்.
மேலும், இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய, நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது. தற்போது ஏறக்குறைய 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.
No comments:
Post a Comment