1. திருத்தந்தை பிரான்சிஸ் நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் நமக்குள் அளவற்ற அரும்பொருள்களைச் சுமந்து செல்கிறோம்
3. Knights of Columbus அமைப்பினரின் சான்றுவாழ்வை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
4. நாகசாகியில் கர்தினால் டர்க்சன் : மன்னிப்பு, ஒப்புரவுக்கு முதல்படி
5. நாகசாகி நினைவு நாள்
6. இரம்ஜான் பண்டிகைக்கு கோவா பேராயர் வாழ்த்து
7. Weliweriyaவில் இராணுவத்தின் தாக்குதலுக்கு அனைத்து மதத்தவரும் கண்டனம்
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அப்பாவி குடிமக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன
9. மியான்மார் இராணுவப் பிரிவிலிருந்து சிறார் விடுதலை, ஐ.நா. வரேவற்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார்
ஆக.,09,2013. சட்டத்துக்குப் புறம்பே பணமோசடி இடம்பெறுவதைத் தடை செய்யவும், பயங்கரவாத நிறுவனங்களுக்கும், பெருமளவில்
அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவலுக்கும் நிதியுதவி செய்வதைத் தடுத்து
நிறுத்துவதற்குமென புதிய நடவடிக்கைகள் கொண்ட அரசாணையை இவ்வியாழனன்று
வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Motu Proprio அதாவது ‘தனது சொந்த முயற்சியினால்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த ஆணை, நிதி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திருப்பீடத்தின் அனைத்துத் துறைகளுக்கும், திருப்பீடத்தைச் சார்ந்த பிற நிறுவனங்களுக்கும், திருஅவை சட்டப்படி இயங்கும் இலாபமற்ற அமைப்புகளுக்கும் பொருந்தும் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.
சட்டத்துக்குப்
புறம்பே இடம்பெறும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு வத்திக்கான் மேற்கொண்டுள்ள
அர்ப்பணத்தை உறுதிப்படுத்துவதற்கென முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள், 2010ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று வெளியிட்ட Motu Proprio ஆணையை
மீண்டும் உறுதிப்படுத்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தற்போதைய
ஆணை உள்ளது என்றும் அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
Motu Proprio என்ற இலத்தீன் பதத்திற்கு, ஒருவரின் சொந்த முயற்சியினால் என்று அர்த்தமாகும். Motu Proprio என்று வெளியிடப்படும் ஆணை திருத்தந்தை அவர்களால் மட்டுமே வெளியிடப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் நமக்குள் அளவற்ற அரும்பொருள்களைச் சுமந்து செல்கிறோம்
ஆக.,09,2013. நாம் அனைவரும் உடையக்கூடிய மற்றும் வறிய, மண்கலங்கள், ஆயினும், நாம்
நமக்குள் அளவற்ற அரும்பொருள்களைச் சுமந்து செல்கிறோம் என்று தனது
டுவிட்டரில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், அரபு உட்பட ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. Knights of Columbus அமைப்பினரின் சான்றுவாழ்வை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆக.,09,2013 கத்தோலிக்கர் தங்களின் அழைப்புக்கேற்றபடி வாழ்வதற்கு Knights of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு செய்துவரும் சிறப்பான பணிகளை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Texas மாநிலத்தின் San Antonioவில், “இறைவனின் கொடைகளைப் பாதுகாக்கின்றவர்களாக இருங்கள்”
என்ற தலைப்பில் தங்களின் 131வது மாநாட்டை நடத்திய இப்பிறரன்பு அமைப்பின்
உறுப்பினர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு ஊக்குவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணம் மற்றும் குடும்பத்தின் உண்மையான இயல்புக்கும், மனித வாழ்வின் தூய்மைக்கும் அதன் இன்றியமையாத மாண்புக்கும், மனிதப் பாலியலின் அழகுக்கும், அதன் உண்மைக்கும் சான்றுகளாய்த் திகழுமாறும் அச்செய்தியில் அவ்வமைப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் வேகமாக இடம்பெற்றுவரும் இக்காலத்தில்,
நற்செய்தி அறிவிக்கும் ஒழுக்கநெறி உண்மைகளை உறுதிப்படுத்திக்
காப்பவர்களாகவும் செயல்படுமாறு அவர்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செய்தியை திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்கள் அனுப்பியுள்ளார்.
இம்மாதம் 6 முதல் 8 வரை நடைபெற்ற இம்மாநாட்டில் 11 கர்தினால் உட்பட 100க்கும் மேற்பட்ட திருஅவைத் தலைவர்களும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நாகசாகியில் கர்தினால் டர்க்சன் : மன்னிப்பு, ஒப்புரவுக்கு முதல்படி
ஆக.,09,2013. இறைவனின் கொடையாகிய உண்மையான அமைதியைப் பெறுவதற்கு மன்னிப்பே முதல்படி என்று, நாகசாகியில் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
இரண்டாம்
உலகப்போரின்போது ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டதன் 68ம் ஆண்டு
நிறைவு நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று அந்நகரில் திருப்பலி நிகழ்த்தி
மறையுரையாற்றிய கர்தினால் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
நாகசாகியில் அணுகுண்டுக்குப் பலியானவர்களின் நினைவுத் திருப்பலியை அந்நகர் ஆயருடன் இணைந்து நிகழ்த்திய கர்தினால் டர்க்சன், உலகில் அமைதி நிலைபெற அழைப்பு விடுத்தார்.
அமைதி, இறைவன் மற்றும் மனித சமுதாயத்தின் ஒத்துழைப்பினால் ஏற்படுவது என்றும், இறைவன் மனிதருக்கு அமைதி எனும் கொடையை வழங்குகிறார் என்பது உண்மையெனினும், அமைதியை நிலைநாட்டுவதற்கு மனித சமுதாயம் அன்புடன் உழைக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டால் 74 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. நாகசாகி நினைவு நாள்
ஆக.,09,2013.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட
நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் இவ்வெள்ளியன்று மௌன அஞ்சலி செலுத்தி உலகில்
அணுஆயுதங்கள் களையப்படுவதற்கு உருக்கமாக அழைப்புவிடுத்தனர்.
இந்நிகழ்வில் பேசிய, 1945ம் ஆண்டின் அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான Shohei Tsuiki, அந்நாளைய கோர நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்கு 18 வயது நடந்தது என்றும், நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டவுடன் அவ்விடம் நரகம் போன்று இருந்ததாகவும், மக்களின் உடல்கள் எரிந்த தோல்களுடன் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், சிலர் இறந்த தங்களின் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தனர் எனவும் கூறினார் Shohei Tsuiki.
மேலும், இந்நிகழ்வில் பேசிய நாகசாகி மேயர், எந்தச்
சூழ்நிலையிலும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்யும்
அறிக்கையில் இவ்வாண்டில் கையெழுத்திட ஜப்பான் அரசு தவறியுள்ளது என்று குறை
கூறினார்.
இதற்கிடையே, இந்நிகழ்வன்று உரையாற்றிய ஜப்பான் பிரதமர் Shinzo Abe, அணுஆயுதத் தாக்குதலால் உலகில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஜப்பான் என்பதால், உலகில் ஆயுதங்கள் களையப்படுவதற்கு ஜப்பான் மேலும் முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. இரம்ஜான் பண்டிகைக்கு கோவா பேராயர் வாழ்த்து
ஆக.,09,2013.
இரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்கச் சமூகத்தின் சகோதரத்துவ
அன்பும் ஒருமைப்பாடும் நிறைந்த நல்வாழ்த்துக்களை அனைத்து முஸ்லீம்களுக்கும்
தெரிவித்துள்ளார் கோவா மற்றும் டாமன் பேராயர் Filipe Neri Ferrao.
மதங்களுக்கிடையே நிலவும் ஒருமைப்பாட்டுணர்வு, உண்மையான நீதியையும், எல்லா
உறவுகளுக்கும் ஊற்றான கடவுளோடு நட்புறவில் வாழ்வதையும் ஊக்கப்படுத்தும்
என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் பேராயர் Ferrao.
மேலும், இரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லீம்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நைஜீரிய ஆயர்கள், இயற்கையைப் பாதுகாப்பதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் மற்ற மதத்தவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆதாரம் : Fides /UCAN
7. Weliweriyaவில் இராணுவத்தின் தாக்குதலுக்கு அனைத்து மதத்தவரும் கண்டனம்
ஆக.,09,2013. இலங்கையின் Weliweriya கிராமத்தில் குடிநீர் கேட்டுப் போராடிய அப்பாவி குடிமக்கள்மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளையோர் இறந்துள்ளவேளை, இவ்வன்முறைக்கு எதிரான தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் பல்சமயத்தவர்.
இவ்வெள்ளியன்று கொழும்புவில் கண்டன ஊர்வலம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான கத்தோலிக்க, புத்த, இந்து மற்றும் இசுலாம் மதத்தவர்கள், காந்தியின் சத்யாகிரக வழியைப் பின்பற்றி அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்தினர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
CSM என்ற கிறிஸ்தவ தோழமை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்டன அமைதி ஊர்வலத்தில், ஆயுதம்
ஏந்தாத அப்பாவி குடிமக்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அரசின்
இப்பயங்கரவாதச் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு மக்கள்
சென்றனர்.
மேலும், இலங்கை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித், இவ்வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது மற்றும் நியாயப்படுத்தப்பட முடியாதது என்று கூறியுள்ளார்.
உண்மை, தியாகம், வன்முறையின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சத்யாகிரகக் கொள்கையானது, 1906ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாத்மா காந்தியால் முதன் முதலில் நடைமுறைபடுத்தப்பட்டது.
ஆதாரம் : AsiaNews
8. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அப்பாவி குடிமக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன
ஆக.09,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Seleka புரட்சிக்குழுவினர்
அந்நாட்டின் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக நடத்திவரும் வன்முறைகள்
தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மறைபோதக அருள்பணியாளர் Aurelio Gazzera, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், இந்நாட்டில் கொலைகள், திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், கட்டாயக் காணாமற்போதல், பெண்களுக்கெதிரான வன்முறை, பாதுகாப்பின்மை, சட்டம்-ஒழுங்கின்மை போன்றவை அதிகமாக இடம்பெறுவதாக ஐ.நா. வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Seleka புரட்சிக்குழுவினர், கடந்த மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் François Bozizéஐ ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர், அந்நாடு ஒரு சர்வாதிகாரப் போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவும் அவ்வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
ஆதாரம் : Fides
9. மியான்மார் இராணுவப் பிரிவிலிருந்து சிறார் விடுதலை, ஐ.நா. வரேவற்பு
ஆக.09,2013. சிறார், இளையோர் என 68 பேரை மியான்மார் அரசு ‘Tatmadaw’ என்ற இராணுவப் பிரிவிலிருந்து விடுவித்ததை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தைநல அமைப்பான யுனிசெப் வரவேற்றுள்ளது.
“சிறார் வாழ்வதற்கும், வளர்வதற்கும் ஏற்ற இடம் இராணுவம் இல்லை என்பதால், இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்க்காகவும், இளையோருக்காகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்று மியான்மார் நாட்டுக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் அசோக் நிகம் (Ashok Nigam) தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட சிறார், அவர்கள் குடும்பத்தோடு மீண்டும் இணைய அவர்களை வாழ்த்துகிறோம் என்றும் அவர் கூறினார்.
மியான்மார் நாட்டின் இச்செயலை வரவேற்பதாகவும், இராணுவத்தில் இன்னும் இருக்கின்ற அனைத்துச் சிறாரையும் விடுவிக்கத் துரிதமான நடவடிக்கை எடுக்கவும் அரசும் ‘Tatmadaw’வும் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. கேட்டுள்ளது.
2012 ஆண்டு ஜூனில் மியான்மார் அரசும், ஐ.நா.வும்
கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர் மியான்மார் இராணுவப்
பிரிவிலிருந்து இதுவரை 176 சிறார்ப் படைவீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment