Saturday, 10 August 2013

22 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த அண்ணன் தங்கையை இணைத்து வைத்தது பேஸ்புக்

22 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த அண்ணன் தங்கையை இணைத்து வைத்தது பேஸ்புக்

தஞ்சாவூரில் இருந்து வீட்டை விட்டு வெளியேறியவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மூலம் அவரது குடும்பத்தினருடன் இணைந்தார். தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருக்கு நடராஜன் என்ற மகனும், தனலட்சுமி, இந்திராணி என்ற இரு மகள்கள். நடராஜன் தனது 30 வயதில் நெல் வியாபாரம் செய்தார்.
பணத்துடன் தீய நட்பு வட்டமும் பெருகியது. இதனால் சம்பாதித்த சொத்தில் பெரும்பகுதியை இழந்தார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் விதி விளையாடியது.விஷ தாவரங்களை சாப்பிட்ட யானைகள் இறந்ததால், எஞ்சிய சொத்துக்களை சர்க்கஸ் கம்பெனி பறித்துக் கொண்டது. சொத்து அனைத்தையும் இழந்து சொந்தங்கள் முன் நிற்கவும் விரும்பாத நடராஜன் பல ஊர்களை சுற்றி இறுதியில் நாகர்கோவில் வந்தார். தற்போது 52 வயது ஆகும் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு தனது குடும்பத்தினரை பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதனை நாகர்கோவிலில் பழகிய புகைப்படக்காரர் ஜவஹரிடம் தெரிவித்தார்.
நடராஜனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் ஜவஹர் பதிவு செய்தார். அதனை நண்பர்கள் 14 பேர் ஷேர் செய்தனர். இதனை நடராஜனின் நண்பர் மாலி என்பவர் பார்த்து அவரது வீட்டிற்கே சென்று விபரங்களை தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த சகோதரனை பற்றிய தகவல் கிடைத்ததும், அவரது சகோதரி இந்திராணிக்கு சந்தோஷம் ஏற்பட்டது. ஜவஹரை தொடர்பு கொண்டு நேற்று நாகர்கோவில் வந்தார். வேப்பமூடு ஜங்ஷனில் உள்ள பூங்காவில் அண்ணனை கண்ட தங்கை இந்திராணி அவரை கண்ணீர்மல்க கட்டித்தழுவி வரவேற்றார். அவருடன் வந்த பாவாடை ராயன், நடராஜனை நகராட்சி குளியல் அறையில் குளிப்பாட்டி புதிய ஆடைகளை அணிவித்தார்.
இதுதொடர்பாக இந்திராணி கூறுகையில், திடீரென மாயமான அண்ணனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. மூத்த சகோதரி தனலட்சுமிக்கு திருமணம் ஆனது. உடல் நல குறைவு காரணமாக தாய், தந்தையும் மரணமடைந்துவிட்டனர். எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. 22 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நன்றாக வாழ்ந்த குடும்பம். கடைசிகாலத்தில் அண்ணனை சந்திக்க நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். பின்னர் அவரை பேஸ்புக் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...