1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் செய்தி முஸ்லீம்கள்மீது அவர் கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளம்
2. சிரியாவில் அமைதி இடம்பெறச் செபிக்குமாறு கர்தினால் Sandri அழைப்பு
3. ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினத்தில் கர்தினால் டர்க்சன்
4. புனித பூமியில் நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா திருஅவையின் ஒருமைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு - ஆயர் சோமாலி
5. புனித பூமியில் அன்னைமரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு இந்தியக் குடியேற்றதாரர்கள் தயாரிப்பு
6. Krakow உலக இளையோர் தினத்திற்கென அதிகாரப்பூர்வ இணையதளம்
7. தலத்திருஅவை பேச்சாளர் : எகிப்தில் கிறிஸ்தவர்கள் பயம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்
8. மெக்சிகோ உயர்மறைமாவட்டம் திருநற்கருணை புதுமை குறித்து விசாரணை
9. இந்தியா : Id-al-Fitr பண்டிகையை முன்னிட்டு 28 முஸ்லீம் கைதிகளுக்கு விடுதலை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் செய்தி முஸ்லீம்கள்மீது அவர் கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளம்
ஆக.,03,2013. 'இத் ஆல்-ஃபித்ரு'(Id al-Fitr) பண்டிகையை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகின் அனைத்து முஸ்லீம்களுக்கும் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, அவர் முஸ்லீம்கள்மீது கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரமதான் வாழ்த்துச் செய்தி, அவர் முஸ்லீம்களுடன் உரையாடலை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள பெரும் முயற்சியாக இருக்கின்றது என்று, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் கர்தினால் Tauran.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத்
தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் அவர் பேராயராகப் பணியாற்றிய புவனோஸ்
ஐரெஸ் உயர்மறைமாவட்டத்திலும் முஸ்லீம்கள்மீது மிகுந்த மரியாதை
கொண்டிருந்தார் என்றும் கூறினார் கர்தினால் Tauran.
இவ்வாண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே இச்செய்தியை வெளியிட்டிருப்பது, முழுவதும் அவரது முயற்சியே என்றும் கூறிய கர்தினால் Tauran, அரபு மொழியைப் படிப்பதற்காக, புவனோஸ்
ஐரெஸ் உயர்மறைமாவட்டத்திலிருந்து கெய்ரோவுக்கு ஓர் அருள்பணியாளரை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியது குறித்தும் தெரிவித்தார்.
Id al-Fitr பண்டிகை இம்மாதம் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிரியாவில் அமைதி இடம்பெறச் செபிக்குமாறு கர்தினால் Sandri அழைப்பு
ஆக.,03,2013. சிரியாவில் கடத்தப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணி Paolo Dall’Oglio குறித்த விவரங்கள் எதுவும் தெரியாதிருக்கும்வேளை, அவர்
குறித்த கவலையில் இருக்கும் இயேசு சபையினருக்குத் தனது
ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருப்பீட கீழைரீதி பேராயத் தலைவர்
கர்தினால் Leonardo Sandri.
சிரியாவின் இன்றைய நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் Sandri,
சில மாதங்களுக்கு முன்னர் சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்கள் மற்றும்
இரு அருள்பணியாளர்கள் குறித்த விபரங்கள் பற்றியும் இதுவரை எதுவும்
தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிரியாவில் சண்டை முடியவும், அந்நாட்டிலும்
மத்திய கிழக்குப் பகுதியிலும் அமைதி நிலைபெறவும் அன்னைமரியிடம்
உருக்கமாகச் செபிப்போம் என்றும் கர்தினாலின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினத்தில் கர்தினால் டர்க்சன்
ஆக.,03,2013. இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி
நகரங்களில் அணுகுண்டுகள் தாக்குதல்களுக்குப் பலியானவர்களை நினைவுகூரும்
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கென அந்நாட்டுக்கான ஐந்து நாள்
சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
ஜப்பானின்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் இடம்பெறும் நினைவுநாள்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உலகின் அமைதிக்கு அழைப்பு விடுப்பதற்காக
அந்நாட்டுக்கானச் சுற்றுப்பயணத்தை வருகிற திங்களன்று தொடங்குகிறார்
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
இம்மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதிவரை இடம்பெறும் இச்சுற்றுப்பயணத்தில், ஹிரோஷிமா புனித மரியா பேராலயத்தில் உலகின் அமைதிக்காகத் திருப்பலி நிகழ்த்துதல், ஹிரோஷிமாவில் பல்சமயக் கூட்டத்தில் கலந்து கொள்தல், நாகசாகியில் உலகின் அமைதிக்கான பல்சமய உரையாடல் அரங்கத்தில் உரை நிகழ்த்துதல், இந்நகரில் அணுகுண்டு வீச்சுக்குப் பலியானவர்களுக்கு நினைவுத் திருப்பலி நிகழ்த்துதல் போன்ற நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்நினைவு நாளையொட்டி ஜப்பான் ஆயர்கள் ஒவ்வோர் ஆண்டும் பத்து நாள்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கப் போர் விமானம், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதியன்று நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசியது. இதில் ஹிரோஷிமாவில் 90,000 பேர் முதல் 1,66,000 பேர் வரையும், நாகசாகியில் 60,000 பேர் முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. புனித பூமியில் நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா திருஅவையின் ஒருமைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு - ஆயர் சோமாலி
ஆக.,03,2013. திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்ட நம்பிக்கை ஆண்டு, வருகின்ற நவம்பர் 17ம் தேதி புனித பூமியின் நாசரேத் நகரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்துலக நம்பிக்கை ஆண்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாளில் நாசரேத்தில் உள்ள அனைத்துப் புனித இடங்களைப் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாலையில் மெழுகுதிரி பவனியானது மங்களவார்த்தை பசிலிக்காவில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் துணை ஆயர் William Shomali இந்நிகழ்வு குறித்து கூறுகையில், இந்த நிகழ்வுக்காக 60,000 திருப்பயணிகள் பங்குபெறுமளவுக்கு இடம் ஏற்பாடு செய்ய அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வானது அனைத்து இறைமக்களின் விழாவாக இருக்கும் எனவும், இந்நிகழ்வில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிகமாகப் பங்கேற்பார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் Shomali.
அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளும் பல மொழிகளில் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ள ஆயர் Shomali,
எருசலேம் நகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருவழிபாடானது திருஅவையின்
ஒருமைத்தன்மையை பிரதிபலிப்பதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
"இது ஒரு சிறப்பான மற்றும் நம் மனங்களை முழுமையாக இறைவனை நோக்கி மாற்ற உறுதுணை புரிகின்ற காலம்" என்று சொல்லி, நம்பிக்கை ஆண்டைத் தொடங்கிவைத்தார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides
5. புனித பூமியில் அன்னைமரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு இந்தியக் குடியேற்றதாரர்கள் தயாரிப்பு
ஆக.,03,2013.
புனித பூமியில் வாழும் மூவாயிரத்து மேற்பட்ட இந்தியக் குடியேற்றதாரர்கள்
அன்னைமரியாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்து
வருகின்றனர்.
இஸ்ரேலின்
ஜாப்பாவில் வருகிற செப்டம்பர் 8ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும்
இவ்விழாவுக்கானத் தயாரிப்புக்களை இப்பொழுதே அக்குடியேற்றதாரர்
தொடங்கிவிட்டனர் என்று, புனித பூமியில் இந்தியர்களின் ஆன்மீகப்பணிப் பொறுப்பாளர் அருள்பணி ஜெயசீலன் பிச்சைமுத்து கூறினார்.
இந்தியச் சமூகம், அன்னைமரியாவைத் தங்களின் தாயாகப் போற்றுகின்றது என ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அருள்பணியாளர் பிச்சைமுத்து, அன்னைமரியா, குடியேற்றதாரர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றார் என்றும் கூறினார்.
இயேசுவின் பாதுகாப்புக்காக எகிப்தில் புகலிடம் தேடிய திருக்குடும்பம் பின்னர் நாசரேத்தில் வாழ்ந்தது என்றும், இயேசு தமது இறையாட்சிப் பணியை யூதேயா, கலிலேயா மற்றும் எருசலேமில் செய்தார் என்றும் அருள்பணியாளர் பிச்சைமுத்து கூறினார்.
ஜாப்பாவில்
வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் திருவிழா நவநாள் செபங்கள் செப்டம்பர்
8ம் தேதியன்று விழாத் திருப்பலியோடு நிறைவடையும்.
ஆதாரம் : UCAN
6. Krakow உலக இளையோர் தினத்திற்கென அதிகாரப்பூர்வ இணையதளம்
ஆக.,03,2013. போலந்து நாட்டின் Krakowவில்
2016ம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் அடுத்த உலக கத்தோலிக்க இளையோர்
தினத்திற்கென அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது தலத்திருஅவை.
அடுத்த உலக இளையோர் தினம், போலந்து நாட்டின் Krakowவில்
2016ம் ஆண்டில் இடம்பெறும் என்று பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த சிலமணி நேரங்களில்
அத்தினத்திற்கென இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது போலந்து திருஅவை.
Krakow பேராயர் கர்தினால் Stainslao Dziwisz திறந்துவைத்துள்ள இவ்விணையதளம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மானியம், இத்தாலியம், இஸ்பானியம், போலந்து ஆகிய மொழிகளில் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
Krakow நகரம் பற்றியும், 2016ம் ஆண்டின் உலக இளையோர் தினம் பற்றியும் செய்திகள் இதில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த இணையதள முகவரி www. Krakow 2016.com
ஆதாரம் : Romereports
7. தலத்திருஅவை பேச்சாளர் : எகிப்தில் கிறிஸ்தவர்கள் பயம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்
ஆக.,03,2013. எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் Mohamed Morsiன்
ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திவருவதால் கிறிஸ்தவர்கள் பயம்
நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர் என்று அந்நாட்டுத் திருஅவை பேச்சாளர்
அருள்பணி Rafic Greiche தெரிவித்தார்.
தலைநகர் கெய்ரோவிலும், பிற நகரங்களிலும் பல முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பாளர்கள் இருந்துகொண்டு மக்கள்மீதும், ஆலயங்கள்மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர் என்று அருள்பணி Greiche மேலும் தெரிவித்தார்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் திருத்தந்தை Tawadros, இராணுவம், குருக்கள் ஆகியோர் பற்றி அவதூறான வார்த்தைகளை ஆலயங்களில் எழுதி வைப்பதோடு, குருக்களைத் துரோகிகள் என அழைத்து வருவதாகவும் அருள்பணி Greiche வத்திக்கான் வானொலியில் கூறினார்.
எகிப்தில் தற்போது வன்முறைச் சூழல் இருப்பதாகவும், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் எகிப்து திருஅவை பேச்சாளர் அருள்பணி Rafic Greiche கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. மெக்சிகோ உயர்மறைமாவட்டம் திருநற்கருணை புதுமை குறித்து விசாரணை
ஆக.,03,2013.
மெக்சிகோவில் கடந்த வாரத்தில் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ள
திருநற்கருணை புதுமை குறித்த உண்மை நிலையை அறிவதற்கு விசாரணைகள்
தொடங்கப்பட்டுள்ளதாக Guadalajara உயர்மறைமாவட்ட முதன்மைக்குரு Ramiro Valdes Sanchez கூறினார்.
அன்னைமரி ஆலயப் பங்கின் அருள்பணி Jose Dolores Castellanos Gudino என்பவர் கடந்த ஜூலை 24ம் தேதி திருநற்கருணையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தபோது, திருநற்கருணையிலிருந்து ஓர் ஒளி வந்ததாகவும், அதிலிருந்து ஒரு குரலைத் தான் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
திருநற்கருணையில் தான் தொடர்ந்து புதுமைகளைச் செய்வேன் என்றும், ‘நமது அன்னையோடு அன்பின் மனுஉருவில் திருநற்கருணை புதுமை’ என அது அழைக்கப்பட வேண்டும் என்றும் அக்குரல் கூறியதாக அருள்பணி Castellanos Gudino மேலும் கூறியுள்ளார்.
திருநற்கருணையிலிருந்து அக்குரலைக் கேட்டவுடன் அந்த அருள்பணியாளர் ஆலய மணிகளை அடிக்க, அனைத்து மக்களும் ஆலயம் வந்தனர் என்றும், இவ்வாலயத்தில் இப்போதும், இந்த நாள் முழுவதும் இருப்பவர்கள்மீது தான் அருளைப் பொழிவேன் என்று அக்குரல் அச்சமயத்தில் கூறியது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNA
9. இந்தியா : Id-al-Fitr பண்டிகையை முன்னிட்டு 28 முஸ்லீம் கைதிகளுக்கு விடுதலை
ஆக.,03,2013. முஸ்லீம்களின் Id-al-Fitr பண்டிகையை முன்னிட்டு 22 பாகிஸ்தான் மற்றும் 6 பங்களாதேஷ் கைதிகளை விடுவித்துள்ளது இந்திய அரசு.
இந்தியாவின் பல்வேறு சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 22 பாகிஸ்தான் கைதிகள் அமிர்தசரசுக்கு கொண்டுவரப்பட்டு Attari எல்லையில் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
60 வயது மதிக்கத்தக்க இக்கைதிகளில் ஒருவரான Saddiq Umar ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் பாகிஸ்தான் செல்கிறார். இவர் Times of India செய்தியாளரிடம் கூறுகையில், தான் ஒரு மீனவர் என்றும், போதைப்பொருள் குற்றத்தில் தான் எவ்வாறு கைது செய்யப்பட்டேன் என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : TOI
No comments:
Post a Comment