செய்திகள் - 12.04.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மனிதரின் மாண்பும் மதிப்பும் தொடக்க முதல் இறுதிவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : வரலாறு வாழ்வின் ஆசிரியர்
3. சிலுவையின் முன்னே நின்று ஆண்டவரைப் பார்த்துக்கொண்டிருப்பது எத்துணை அழகானது, திருத்தந்தை பிரான்சிஸ்
4. புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
5. இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணிக்கிறார் கர்தினால் கிரேசியஸ்
6. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, பெரும் ஆபத்தை முன்வைக்கின்றது, ஐ.நா.வில் வத்திக்கான் பிரதிநிதி
7. கிறிஸ்துவின் திருப்பாடுகள் தனது வாழ்வை மாற்றியது, புத்தமத இளைஞர் ஒருவர்
8. புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்கள் முயற்சிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்
9. இந்தியாவில் ஆண்டுக்கு பத்து இலட்சம் பேருக்கு புற்றுநோய்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மனிதரின் மாண்பும் மதிப்பும் தொடக்க முதல் இறுதிவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.12,2014. ஒருவரின் நோயை முழுமையாய்க் குணமாக்கும் பணியில், இறைவனின் சாயலாகவும், உருவாகவும்
படைக்கப்பட்டுள்ள மனிதர் உடலையும் ஆன்மாவையும் கொண்டிருப்பவர் என்பது
மறக்கப்படக் கூடாது என இச்சனிக்கிழமையன்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
புற்றுநோய்
அறுவைச் சிகிச்சை குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட 120 பிரதிநிதிகளை
இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், உடல், ஆன்மா இந்த இரு கூறுகள் குறித்து வேறுபடுத்திக் காட்டலாம், ஆனால் அவை இரண்டும் பிரிக்க முடியாதவை, ஏனெனில் மனிதர் ஒருவரே என்றும் கூறினார்.
வேதனைகளையும், துன்பங்களையும் கொணரும் நோய், மனிதரின் உடலை மட்டுமல்ல, முழு மனிதனையும் பாதிக்கிறது என்பதால், நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளியின் மனித, மனநல, சமூக மற்றும் ஆன்மீகக் கூறுகளைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நோயாளியோடு சகோதரத்துவ அன்பைப் பகிர்ந்து கொள்ளும்போது, மனித வாழ்வின் உண்மையான அழகு நமக்குத் திறக்கப்படுகின்றது எனவும், மனிதரின் நிலைமை எந்நிலையில் இருந்தாலும், மனிதரின் பிறப்பு முதல் இயற்கையான இறப்புவரை, மனிதர் என்ற அவரின் மாண்பும் மதிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று புனித வாரம் தொடங்குகிறது, அப்பாவி மக்கள் துன்புறுவதன் பொருளை கிறிஸ்து மட்டுமே தருகிறார், உங்களின் அன்றாடப் பணிகளில், சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்துவை நோக்குங்கள், வியாகுல அன்னை, உங்களிலும், உங்களின் ஆய்வுப் பணிகளிலும் உடன் இருப்பாராக என்று இப்பிரதிநிதிகளிடம் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : வரலாறு வாழ்வின் ஆசிரியர்
ஏப்.12,2014. திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்களால் தொடங்கப்பட்ட திருப்பீட சமூக அறிவியல் கழகத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கழகத்தின்
ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 25 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று
திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரலாறு வாழ்வின் ஆசிரியர் என்றும், வரலாற்றை ஆய்வு செய்வது, மனிதரின்
மனதை எப்போதும் நிரப்பியுள்ள உண்மையை ஆர்வத்துடன் தேடும் வழிகளில் ஒன்றாக
உள்ளது என்றும் இவ்வுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைமீது கொண்டுள்ள உண்மையான பற்றாலும், உண்மைமீது கொண்டுள்ள நேர்மையான அன்பாலும் இக்கழகத்தினர் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதாக உரைத்த திருத்தந்தை, இன்று திருஅவைக்கு, தூய ஆவி சொல்ல விரும்புவதைத் தேர்ந்துதெளியும் பணியைச் செய்பவர்களுக்கு இந்த ஆய்வுகள் அதிக உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.
திருஅவைக்கும், இந்நவீன உலகுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவதற்கு இக்கழகத்தினர் பெரும் உதவிகளைச் செய்ய முடியும் என்றும் உரைத்த திருத்தந்தை, முதல்
உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு இக்கழகத்தினர் நடத்தத்
திட்டமிட்டிருக்கும் அனைத்துலக கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சிலுவையின் முன்னே நின்று ஆண்டவரைப் பார்த்துக்கொண்டிருப்பது எத்துணை அழகானது, திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.12,2014. முழுவதும் அன்பே வடிவான ஆண்டவரை, சிலுவையின் முன்னே நின்று பார்த்துக்கொண்டிருப்பது எத்துணை அழகானது என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 29வது உலக கத்தோலிக்க இளைஞர் தினமான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்தோலை பவனியை நடத்தி குருத்தோலை ஞாயிறு திருப்பலியை நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இக்குருத்தோலை பவனியில் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர்
எனப் பலர் எடுத்துச் செல்லும் மற்றும் பலிபீடத்தில் வைக்கப்படும் ஏறத்தாழ
மூவாயிரம் அலங்கரிக்கப்பட்ட குருத்தோலைகளை இத்தாலியின் சன்ரேமோ நகராட்சி
நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அலங்கரிக்கப்படும் ஒலிவக் கிளைகள் மற்றும் ஒலிவ மரங்களை, இத்தாலியின் பூல்யா பகுதியினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இம்மக்கள், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இதனை வழங்கி வருகின்றனர்.
இவ்வாண்டு, 29வது உலக கத்தோலிக்க இளைஞர் தினம், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படுகின்றது.
மேலும், இத்தாலியின் சன்ரேமோ சிறைக் கைதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய எளிமையான, ஒலிவ மரச் செங்கோலை குருத்தோலை ஞாயிறன்று பயன்படுத்துவார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
ஏப்.12,2014. ஏப்ரல் 14, இத்திங்களன்று
தொடங்கும் யூதர்களின் பாஸ்கா விழாவை முன்னிட்டு உரோம் நகர் யூத
சமுதாயத்துக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
உரோம் நகர் தலைமை ரபி Riccardo Di Segni அவர்களுக்கும், உரோம் யூத சமுதாயத்துக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், வருகிற மே மாதத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
ஆண்டவரின் வல்லமையுள்ள கரத்தால், அடக்குமுறையிலிருந்து விடுதலை கிடைத்த நினைவு, அடிமைத்தனத்தின் புதிய வடிவங்களால் துன்புறும் அனைவருடன் சகோதரத்துவ ஒருமைப்பாடும், கருணையும், ஒப்புரவும் காட்டப்படுவதற்கான எண்ணங்களைத் தூண்டுவதாக எனவும் அத்தந்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணிக்கிறார் கர்தினால் கிரேசியஸ்
ஏப்.12,2014. இந்திய மக்களின் வாழ்வு புதுப்பிக்கப்படவும், நாட்டின்
புதிய நற்செய்திப் பணிக்கும் அன்னைமரியின் பரிந்துரையை கேட்பதாகத்
தெரிவித்தார் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் புனிதப்பொருள் வைக்கப்பட்டுள்ள Bandraவிலுள்ள மலைமாதா பசிலிக்காவுக்கு இச்சனிக்கிழமையன்று சென்று இந்தியாவை அன்னைமரியிடம் அர்ப்பணித்தார் கர்தினால் கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அவனியில் அமைதி திருமடல் வெளிவந்ததன் 51ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, மலைமாதா பசிலிக்கா சென்று திருத்தந்தையர் பிரான்சிஸ், 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய மூவருக்காகவும் செபித்தார் கர்தினால் கிரேசியஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அவனியில் அமைதி திருமடல் 1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இம்மாதம் 27, இறைஇரக்க ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதர் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : AsiaNews
6. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, பெரும் ஆபத்தை முன்வைக்கின்றது, ஐ.நா.வில் வத்திக்கான் பிரதிநிதி
ஏப்.12,2014. உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, பெரும் ஆபத்தை முன்வைப்பதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் எச்சரித்தார்.
மக்கள் தொகையும் வளர்ச்சியும் குறித்த 47வது ஐ.நா. அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், குறைந்தது எண்பது நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது ஆபத்தான நிலை என்று கூறினார்.
குடும்பமும், மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள் கைவிடப்பட வேண்டும், கருத்தாங்குதல் ஒரு நோய் அல்ல என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.
கல்வி, பொருளாதார வளர்ச்சி, நிலையானதன்மை, நலவாழ்வு, குடும்ப வாழ்வு ஆகியவற்றை ஆதரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை வலியுறுத்த, நியாயமான அணுகுமுறைகள் அவசியம் என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. கிறிஸ்துவின் திருப்பாடுகள் தனது வாழ்வை மாற்றியது, புத்தமத இளைஞர் ஒருவர்
ஏப்.12,2014. இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் குறித்த நிகழ்வு மேடையில் காட்டப்பட்டதைப் பார்த்தபோது தனது வாழ்வு மாறியதாக, இலங்கை புத்தமத இளைஞர் ஒருவர் கூறினார்.
முப்பது வயதாகும் Chandrarathna என்ற இளைஞர் தனது மனமாற்றம் பற்றிப் பேசியபோது, கிறிஸ்துவின் திருப்பாடுகளைப் பார்த்ததால் தனது வாழ்வு மாறியதாகவும், இது தனது வாழ்வை மேம்படுத்தி அமைதியில் வாழ உதவியதாகவும் கூறினார்.
இலங்கையின் தெற்கேயுள்ள Beliaththa என்ற கிராமத்தில் பிறந்த Chandrarathna, தனது 22வது வயது முதல் நாட்டின் வடக்கிலுள்ள Wennappuwa என்ற ஊரில் வாழ்ந்து வருகிறார்.
மது அருந்தி, புகைப்பிடித்துக்கொண்டு பல பெண் நண்பர்களைக் கொண்டு மோசமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும், ஆனால், கடந்த
மார்ச் மாதத்தில் தனது நண்பர்களுடன் சென்று கிறிஸ்துவின் திருப்பாடுகள்
குறித்த நிகழ்வைப் பார்த்தபின்னர் தனது வாழ்வு மாறிவிட்டது எனவும்
கூறினார் Chandrarathna.
இவர், வருகிற உயிர்ப்பு ஞாயிறு திருவிழிப்பில் திருமுழுக்குப் பெறவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews
8. புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்கள் முயற்சிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்
ஏப்.12,2014.
புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்கின்ற போராட்டத்தில் "எதிர்காலத்தை
தீர்மானிக்கின்ற முக்கியமான ஒரு கட்டத்தை" மனித குலம் தற்போது
எதிர்கொள்கிறது என்பதை உலக தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள
புதிய அறிக்கை எடுத்துக் காட்டுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.
முன்பு
கருதப்பட்டதைவிட புவி வேகமாக வெப்பமடைந்து வருவதாக பருவநிலை மாற்றம்
தொடர்பான பன்னாட்டு நிபுணர் குழு கண்டறிந்த விடயங்கள் தெளிவாகக் காட்டுவதாக
வாஷிங்டனில் நடந்த அனைத்துலக நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பான் கி மூன்
தெரிவித்துள்ளார்.
இஞ்ஞாயிறன்று வெளியிடப்படவுள்ள இந்த நிபுணர் குழுவின் வரை வடிவம் ஒன்று இந்தக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
குறைவான
கரிம வெளியேற்றத்துக்கான தொழில்நுட்பத்தை நாம் பரவலாகப் பயன்படுத்த
நூறாயிரம் கோடி டாலர்கள் அளவில் முதலீடு தேவை என்று இந்த அறிக்கை
வலியுறுத்துகிறது.
பெட்ரோலிய
எரிபொருட்களில் இருந்து நாம் வேறொரு எரிசக்திக்கு மாறுவதென்பது உலக
பொருளாதார வளர்ச்சியை ஆண்டொன்றுக்கு ஒரு விழுக்காடு என்ற அளவில்
மந்தமாக்கிவிடும் என அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
ஆதாரம் : UN/BBC
9. இந்தியாவில் ஆண்டுக்கு பத்து இலட்சம் பேருக்கு புற்றுநோய்
ஏப்.12,2014. உலகிலுள்ள புற்றுநோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா, சீனா, இரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர் என த லான்சென்ட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டிரைக் கொண்டுள்ள இந்த மூன்று நாடுகளில் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உலகின் மொத்த புற்றுநோயாளிகளில் 46 விழுக்காடு எனவும், இந்நாடுகள், உலகில் இடம்பெறும் புற்றுநோய் இறப்புக்களில் 52 விழுக்காட்டைக் கொண்டுள்ளன எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்நோயைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாற்பது புற்றுநோய் வல்லுனர்கள் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்
மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் புற்றுநோயால்
பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 6 முதல் 7 விழுக்காட்டினர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். 2035ம் ஆண்டில் புற்றுநோயால் ஆண்டு ஒன்றிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17 இலட்சமாகவும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடாக உயரும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment