Monday, 14 April 2014

செய்திகள் - 14.04.14

செய்திகள் - 14.04.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Twitter செய்தி: "சரியானப் பாதையை மீண்டும் தேர்ந்துகொள்ள, புனித வாரம் மிகச் சரியான காலம்"

2. திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணியாளர்கள், ஒரு நிறுவன அதிகாரிகள் அல்ல

3. திருத்தந்தையின் குருத்து ஞாயிறு மறையுரை - கேள்விகளால் நிறைந்த ஓர் ஆன்ம சோதனை

4. திருத்தந்தையின் மூவேளை செப உரை

5. நியூ யார்க், மன்ஹாட்டன் பகுதியில், புனித வெள்ளியன்று, Pax Christi அமைப்பினர் நடத்தும் சிலுவைப் பாதை

6. மதங்களிடையே சகிப்புத்தன்மை நிலவ செபிக்குமாறு யாங்கூன் பேராயர் அழைப்பு

7. 'வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமல் புவி வெப்பமடைதலை தவிர்க்க முடியும்', ஐநா.

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் Twitter செய்தி: "சரியானப் பாதையை மீண்டும் தேர்ந்துகொள்ள, புனித வாரம் மிகச் சரியான காலம்"

ஏப்.14,2014. "ஒப்புரவு திருவருள் அடையாளத்தைப் பெற்று, சரியானப் பாதையை மீண்டும் தேர்ந்துகொள்ள, புனித வாரம் மிகச் சரியான காலம்" என்று தன் Twitter பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தவக் காலத்தில் மனந்திரும்புதலின் தேவையையும், ஒப்புரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித வாரத்தின் முதல் Twitter செய்தியிலும் ஒப்புரவு, மற்றும் மனந்திரும்புதல் குறித்தே எடுத்துரைத்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 14, இத்திங்கள் முதல், ஏப்ரல் 22, வருகிற செவ்வாய்க் கிழமை முடியக் கொண்டாடப்படும் யூதர்களின் பாஸ்கா விழாவை முன்னிட்டு உரோம் நகர் யூத சமுதாயத்துக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகர் தலைமை ரபி Riccardo Di Segni அவர்களுக்கும், உரோம் யூத சமுதாயத்துக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், வருகிற மே மாதத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமித் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணியாளர்கள், ஒரு நிறுவன அதிகாரிகள் அல்ல

ஏப்.14,2014. அருள்பணியாளர் பணிக்கென பயில்பவர்கள், ஒரு நிறுவனத்தின் அதிகாரத்திற்குரிய பணிக்கென தங்களைத் தயாரிக்கவில்லை, மாறாக, இயேசுவைப்போல் தன் மந்தையை மேய்க்கும் நல்லாயன் பணிக்கென தங்களைத் தயாரிக்கிறார்கள் என்று இத்திங்கள் காலை தன்னைச் சந்தித்த குரு மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரைத் தன்னுள் கொண்டிருக்கும் Lazio மாநிலத்தின் தென் பகுதியில், அருள் பணியாளர்களை உருவாக்கும் Leonianum பாப்பிறைப் பல்கலைக் கல்லூரியிலிருந்து நடைப்பயணமாக வத்திக்கான் வந்திருந்த ஏறத்தாழ 100 குரு மாணவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர்கள், ஒரு நிறுவன அதிகாரிகளைப் போல் அல்லாமல், மக்களிடையே வாழ்ந்து அவர்களை, தகுந்த மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் கடமையைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.
'இது எப்படி நிகழும்?' என்று வானதூதரிடம் அன்னைமரியா கேட்டதுபோல், நாமும், நம் பணிகள் குறித்துச் சிந்திக்கலாம், ஆனால், குயவனாம் இறைவன் கையில் நம்மை களிமண்ணாக ஒப்படைக்கும்போது, நாம் புது உருப்பெறுவது எளிதாக மாறுகிறது என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மக்களை வழிநடத்த நாம் முதலில் செபத்தின் மனிதர்களாக இருக்கவேண்டியத் தேவையை வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள் அடையாளத்தால் கிடைக்கும் இறை இரக்கத்தை நாம் வாழ்வில் சுவைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் குருத்து ஞாயிறு மறையுரை - கேள்விகளால் நிறைந்த ஓர் ஆன்ம சோதனை

ஏப்.14,2014. "துன்பங்களைத் தாங்கும் இயேசுவுக்கு முன்னால் நான் யாராக இருக்க விரும்புகிறேன்?" என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களிடம் எழுப்பினார்.
ஏப்ரல் 13, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட குருத்து ஞாயிறு பவனியையும், திருப்பலியையும் தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரை முழுவதையும் கேள்விகளால் நிறைத்தார்.
இவ்வாரம் முழுவதும் நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறை நிகழ்வுகளில் நாம் பங்கேற்கப் போகிறோமா அல்லது பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா என்ற கேள்வியை, திருத்தந்தை மீண்டும், மீண்டும் எழுப்பினார்.
கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்றவர்களில் பலரது பெயர் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அவர்களில் பலர் இயேசுவின் பாடுகளைக் குறைக்கும் வகையில் பங்களிப்பைத் தந்தனர் என்றும், வேறு பலர் இயேசுவின் பாடுகளைக் கூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர் என்றும் கூறினார்.
இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், சிலுவையின் அடியில் நின்ற அன்னை மரியா, ஏனைய பெண்கள், இயேசுவின் அடக்கத்திற்கு உதவிய அரிமெத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, போன்றோரை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல நாம் இயேசுவின் பாடுகளில் பயனுள்ளவகையில் பங்கேற்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார் திருத்தந்தை.
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு, பிரச்சனைகள் சூழந்ததும் பொறுப்பிலிருந்து விலகிவிட்ட பிலாத்து, அவரைக் கண்டனம் செய்வதிலேயே குறியாக இருந்த மதத் தலைவர்கள், அவரைத் துன்புறுத்திய வீரர்கள், அவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட பின்னரும் கேலி செய்த பார்வையாளர்கள் ஆகியோரையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களில் ஒருவராக நாம் இருக்கிறோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்ட இயேசுவின் திருப்பாடுகள் வாசகத்திற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய குறுகிய மறையுரை, கேள்விகளால் மட்டுமே நிறைந்து, ஓர் ஆன்ம சோதனைபோல அமைந்தது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஏப்.14,2014. குருத்து ஞாயிறு திருப்பலிக்குப்பின், தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பொதுநிலையினருக்கான திருப்பீட அவையினால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ள ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறத்தாழ 250 பிரதிநிதிகளுக்கும் தன் மூவேளை செப உரையில் வாழ்த்துத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த இளையோர் தினம் 2016ம் ஆண்டு போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் இடம்பெறுவதற்கான தயாரிப்புகள் இப்போதே துவங்கிவிட்டன எனவும் தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் இடம்பெற்ற உலக இளையோர் தினத்தைத் தொடர்ந்து, தற்போது இளையோர் தினச் சிலுவையை, அந்நாட்டு இளையோர், போலந்து இளையோரிடம் ஒப்படைக்க உள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 27ம் தேதி புனிதராக அறிவிக்கப்பட உள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இளையோரின் மிகப்பெரும் பாதுகாவலராக இருப்பாராக எனவும் வேண்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நியூ யார்க், மன்ஹாட்டன் பகுதியில், புனித வெள்ளியன்று, Pax Christi அமைப்பினர் நடத்தும் சிலுவைப் பாதை

ஏப்.14,2014. "என் இறைவா, ஏன் எங்களைக் கைவிட்டீர்; ஏன் நாங்கள் ஒருவர் ஒருவரைக் கைவிட்டோம்" என்ற கருத்தில், நியூ யார்க் பெருநகரின், மன்ஹாட்டன் பகுதியில், ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று, சிலுவைப் பாதை நடைபெறவுள்ளது.
நியூ யார்க் நகரில் பணியாற்றும் Pax Christi அமைப்பினர் கடந்த 32 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இம்முயற்சி, 80க்கும் அதிகமான கிறிஸ்தவ அமைப்புக்களின் ஆதரவுடன், வருகிற வெள்ளியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள 42வது தெரு என்றழைக்கப்படும் முக்கியமான சாலை வழியே நடைபெறும் இச்சிலுவைப்பாதை, இன்றைய உலகில் துன்புறுவோரை மையப்படுத்தி, 15 நிலைகளாக நடைபெறும்.
குடியுரிமையற்றோர், புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகத்தால் துன்புறுவோர், பசித்திருப்போர், வீடற்றோர், இனவெறியாலும், மற்ற பிரிவினை வெறிகளாலும் துன்புறுவோர் என்று, இவ்வுலகில் நிலவும் பல்வேறு அநீதிகளை, Pax Christi அமைப்பினர் இந்தச் சிலுவைப்பாதையில் மையப்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.

ஆதாரம் : ICN

6. மதங்களிடையே சகிப்புத்தன்மை நிலவ செபிக்குமாறு யாங்கூன் பேராயர் அழைப்பு

ஏப்ரல் 14,2014. மியான்மாரின் யாங்கூனில் இஸ்லாமியர்களுக்கும் புத்தமதத்தினருக்கும் இடையே பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும் இன்றையச் சூழலில், மதங்களிடையே நிலைக்கவேண்டிய சகிப்புத்தன்மைக்கு அனைவரும் உழைக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் யாங்கூன் பேராயர் சார்ல்ஸ் போ.
தடுப்புகளை அகற்றவும் பிரிவினைச் சுவர்களை உடைத்தெறியவும் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும் என, கிறிஸ்து உயிர்ப்பு நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள பேராயர் போ அவர்கள், பாவங்களை அறிக்கையிடுவது மற்றும், ஒப்புரவு அருளடையாளத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதில் எடுத்தியம்பியுள்ளார்.
போர்கள் மற்றும் அகதிகள் பிரச்னைகளால் பலகாலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள மியான்மாரில், அமைதி மற்றும் வளமான வருங்காலத்திற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் யங்கூன் பேராயர் போ.
உயிர்த்த கிறிஸ்து கொணர்ந்த முக்கிய செய்தியே ஒப்புரவு எனும் கொடைதான் என்பதையும் தன் செய்தியில் கூறியுள்ளார் பேராயர் போ.

ஆதாரம் : Asia News

7. 'வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமல் புவி வெப்பமடைதலை தவிர்க்க முடியும்', ஐநா.

ஏப்.14,2014. பேரழிவைத் தரக்கூடிய புவி வெப்பமாதலை தவிர்ப்பதற்கான இலக்கை, வாழ்க்கை வசதிகளில் சமரசம் செய்யாமலேயே எட்ட முடியும் என, பல்வேறு அரசுகளின் அறிவியல் பிரதிநிதிகளைக் கொண்ட ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேறகொண்டுவரும் ஐ.நா.வின் இக்குழுஅதிகமாக கரிமத்தை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடிய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உலகம் வேகமாக விலகிக்கொள்ள வேண்டும் என தன் அறிக்கையில் எச்சரித்துள்ளது.
பெட்ரோலிய எரிபொருள் பயன்படுத்தலை உலக அளவில் குறைப்பது இயல்பு வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்காத ஒன்றே என்று கூறும் இந்த அறிக்கை, தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எரிபொருளை நோக்கியத் தேடலில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இதனால், சற்று தாமதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படுமேயொழிய, பெரும் தியாகத்தை செய்ய வேண்டிய நிலை வராது என்றும் அக்குழு கூறியுள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment