செய்திகள் - 10.04.14
------------------------------ ----------------------------- ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கொடுங்கோல் எண்ணங்கள் மனச்சான்றின் சுதந்திரத்தை நெருக்குகின்றன
2. உரோம் நகரில் இயேசு சபையினர் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பயில்வோரும் திருத்தந்தையுடன் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் - மனித வர்த்தகம், இன்றைய உலகின் மீது பதிந்துள்ள திறந்த காயமாக உள்ளது
4. திருத்தந்தையர் இருவர் புனிதர்களாக உயர்த்தப்படும் பெருவிழாவை முன்னிட்டு "அஞ்சாதீர்கள்" என்ற இசை நாடகம்
5. இளையோர் உலக நாள் ஏற்பாடுகள் குறித்து, உரோம் நகரில், 90 நாடுகளைச் சேர்ந்த இளையோர் சந்திப்பு
6. குடியரசின் மீது ஒடிஸ்ஸா கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் - பேராயர் ஜான் பார்வா
7. அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்துள்ள இத்தாலிய கால்பந்தாட்ட வீரர்
8. சீனாவின் சமூக வலைத்தளத்தில் 'இயேசு' என்ற வார்த்தை மிக அதிக அளவில் தேடப்படும் வார்த்தையாக உள்ளது
9. மின்கருவி வழியாக பக்கவாதத்தை குணப்படுத்தும் அமெரிக்கச் சாதனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கொடுங்கோல் எண்ணங்கள் மனச்சான்றின் சுதந்திரத்தை நெருக்குகின்றன
ஏப்.10,2014. இன்றைய உலகில் மக்களின் சுதந்திரத்தையும், மனச்சான்றையும் கட்டுப்படுத்தும் கொடுங்கோல்தன்மை கொண்ட எண்ணங்கள் நிலவுகின்றன என்றும், எனவே விழிப்பாயிருந்து செபிப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியான் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், ஆபிரகாமுடன் இறைவன் கொண்ட உடன்படிக்கையையும், பரிசேயர்கள் இயேசுவுடன் மேற்கொண்ட உரையாடலையும் தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
சட்டங்களைக்கொண்டு மூடப்பட்ட மனங்களில் இறைவன் நுழைவதற்கும், இறைவனின் வார்த்தை ஒலிப்பதற்கும் வாய்ப்பின்றிப் போகின்றது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சட்டங்களின் பாரத்தை மக்கள்மீது சுமத்தும் மதத்தலைவர்கள், தாங்கள் அப்பாரத்தைச் சுமக்காததை இயேசு கண்டித்தார் என்பதையும் திருத்தந்தை தனது மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இறைவனோடு உரையாடும் வழிகளை அமைத்துத் தந்த இறைவாக்கினர்களைக் கொலைசெய்த மக்களைப் போலவே, வரலாற்றில் பல கொடுங்கோலர்கள் மாற்றுக்கருத்து கொண்டவர்களைக் கொலை செய்தனர் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய
உலகில் நிதி உதவிசெய்யும் பல நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை அனைவரும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது நாம் சந்தித்துவரும்
கொடுங்கோல் ஆட்சியே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனிதப் பரிதாபங்களைத் தொடுவதற்கு, துன்புறும் நம் சகோதர, சகோதரிகள் வழியாக அவரது உடலைத் தொடுவதற்கு நாம் வெட்கப்படக் கூடாது என்று இயேசு சொல்லித்தருகிறார் என்ற Twitter செய்தியை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார். திருத்தந்தை
அவர்கள் கடந்த ஆண்டு வெளியிட்ட நற்செய்தியின் மகிழ்ச்சி (Evangelii Gaudium) என்ற திருத்தூது அறிவுரையிலிருந்து இந்த வார்த்தைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. உரோம் நகரில் இயேசு சபையினர் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பயில்வோரும் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஏப்.10,2014. கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு மிக்க வரலாற்றைப் பேணிக் காக்கும் அதே வேளையில், இன்றைய உலகின் நிலையையும், நாளைய உலகின் சவால்களையும் ஒருங்கிணைப்பது அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் மிகப் பழமைவாய்ந்த பல்கலைக் கழகமான கிரகோரியன் பல்கலைக் கழகம், பாப்பிறை விவிலிய நிலையம், மற்றும் பாப்பிறை கீழை வழிபாட்டு முறை நிலையம் ஆகிய நிறுவனங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, 4,000க்கும் அதிகமானோரை இவ்வியாழன் மதியம் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாற்றையும், வருங்காலத்தையும் இணைக்கும் எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
கலாச்சாரம், வரலாறு என்ற இரு கோணங்களிலும் புகழ்பெற்றுள்ள உரோம் நகரம், அங்கு அமைந்துள்ள கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பீடம் என்ற இரு கொடைகளைப் பெற்றுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த கிடைத்தற்கரிய வாய்ப்புக்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து உரோம் நகர் வந்து பணியாற்றும், பயிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் உரோம் நகரின் பல நிறுவனங்களுக்கு பெரும் கொடையாக அமைந்துள்ளனர் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
கல்விக்கும், ஆன்மீக வாழ்வுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் அடுத்த எண்ணமாகப் பகிர்ந்தார்.
நற்செய்தி, இறையியல் இவற்றைச் சரியான முறையில் கற்றுக்கொள்வதன் பயனாக, வாழ்வு, இவ்வுலகம், மனிதர்கள் என்ற அனைத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதைத் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இறைவனை மையப்படுத்தாமல், தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் இறையியலாளர், தன் அழகில் மயங்கிக் கிடந்த Narcissus போல வாழ்வது அருவருப்பூட்டுகிறது என்று கூறினார் திருத்தந்தை.
இறைவன் முன்னிலையில் முழந்தாளிட்டு, திறந்த மனதுடன் உண்மைகளை அறியும் பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அறிவின் அரியணையான அன்னை மரியாவிடமும், புனித இஞ்ஞாசியாரிடமும் அனைவரின் பணிகளையும், கல்வியையும் ஒப்படைத்து, கூடியிருந்த அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் - மனித வர்த்தகம், இன்றைய உலகின் மீது பதிந்துள்ள திறந்த காயமாக உள்ளது
ஏப்.10,2014. மனித வர்த்தகம் என்பது, இன்றைய உலகின் மீது பதிந்துள்ள திறந்த காயமாக, சாட்டையடியாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித வர்த்தகத்தைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, திருப்பீட
சமூக அறிவியல் கழகம் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக்
கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் 120க்கும் அதிகமான பிரதிநிதிகளை
இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனித வர்த்தகத்தை, சட்டங்கள் வழியே தடுத்து நிறுத்தும் அதிகாரிகள், அத்தகைய வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை விடுவித்து, மறுவாழ்வு தரும் சமுதாய ஆர்வலர்கள் இருவரும் இக்கருத்தரங்கில் கூடிவந்திருப்பது நம்பிக்கை தருகிறது என்று கூறினார் திருத்தந்தை.
கடந்த ஆண்டு நடைபெற்ற இக்கூட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை உரோம் நகரில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கூடிவந்திருப்பது, இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் ஆர்வத்தைக் காட்டுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் வழியாகவும், மனிதாபிமான
முயற்சிகளாலும் இந்த சமுதாய அவமானத்தைத் தீர்க்கும் அனைத்து
முயற்சிகளையும் திருஅவை ஆதரிக்கும் என்ற உறுதியை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் செபம் கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையர் இருவர் புனிதர்களாக உயர்த்தப்படும் பெருவிழாவை முன்னிட்டு "அஞ்சாதீர்கள்" என்ற இசை நாடகம்
ஏப்.10,2014. "அஞ்சாதீர்கள்" என்று முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறியது, நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதுடன், இறைவனுக்குப்
பிரமாணிக்கமுள்ள ஊழியர் வழியே அவர் ஆற்றக்கூடிய அற்புதங்களையும் நமக்கு
உணர்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவை அடுத்தத் திங்கள் முதல், ஏப்ரல் 24 வியாழன் முடிய வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் அருகில் அமைந்துள்ள Conciliazione அரங்கத்தில் "அஞ்சாதீர்கள்" என்ற பெயர்கொண்ட இசை நாடகம் நடைபெறும் என்று திருபீடத்தின் கலாச்சார அவை இவ்வியாழனன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் இந்த முயற்சியை பாராட்டியுள்ளார்.
ஏப்ரல் 27, இறை இரக்க ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம்
ஜான் பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் பெருவிழாவை முன்னிட்டு
"அஞ்சாதீர்கள்" என்ற இசை நாடகம் வழங்கப்படுகிறது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு
பெற்றத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் கூற்றுகளில் மிகவும்
புகழ்பெற்ற கூற்றான "அஞ்சாதீர்கள்" என்பதை மையப்படுத்தி, Lecce என்ற உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள் பணியாளர் Joseph Mailloux அவர்களால் எழுதப்பட்டு, Danilo Brugia என்பவரால் இசைவடிவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த இசை நாடகம், உயிப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் நான்கு நாட்கள் இலவசமாகக் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. இளையோர் உலக நாள் ஏற்பாடுகள் குறித்து, உரோம் நகரில், 90 நாடுகளைச் சேர்ந்த இளையோர் சந்திப்பு
ஏப்.10,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தவரை, எதிர்காலத்தை இவ்வுலகிற்குக் கொணரும் சன்னல்களாக விளங்குபவர்கள் இளையோர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற ஆண்டு பிரேசில் நாட்டில் நிகழ்ந்த உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்திருந்த குழுவுக்கும், 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின் Krakow நகரில் அடுத்த உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்துவரும் குழுவுக்கும் இடையே, உரோம் நகரில் ஏப்ரல் 10 இவ்வியாழன் முதல் ஏப்ரல் 13 வருகிற ஞாயிறு முடிய கூட்டம் ஒன்றை, திருப்பீட பொதுநிலையினர் அவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அவையின் தலைவரான கர்தினால் Stanislaw Rylko அவர்கள், இக்கூட்டத்தின் துவக்க அமர்வில் உரையாற்றியபோது, பிரேசில் மற்றும் போலந்து நாடுகளிலிருந்து வந்திருந்த அனைத்து உறுப்பினர்களையும், குறிப்பாக, ரியோ தே ஜனெய்ரோ பேராயர், கர்தினால் Orani João Tempesta அவர்களையும், Krakow பேராயர் கர்தினால் Stanislaw Dziwisz அவர்களையும் வரவேற்றார்.
புனிதராக உயர்த்தப்படவிருக்கும் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தலைமையில், 1991ம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நினைவுகூர்ந்த கர்தினால் Rylko அவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் போலந்து நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து மகிழ்வு தெரிவித்தார்.
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ள மையக் கருத்து, இயேசுவின் பேறுபெற்றோர் வரிசையில் இடம்பெறும், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவார்" என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Rylko அவர்கள், இறை இரக்கம் என்பது திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வாழ்வை இயக்கிய ஒரு சக்தியாக அமைந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.
ஏப்ரல் 10 முதல் 13 முடிய, உரோம் நகரின் Saxon என்ற இடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 90 நாடுகளைச் சேர்ந்த பல நூறு இளையோர் கலந்துகொள்கின்றனர். இவர்கள் அனைவரும், ஏப்ரல் 13, குருத்தோலை
ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் புனித பேதுரு
வளாகத்தில் கொண்டாடப்படும் இளையோர் நாள் திருப்பலியில் கலந்துகொள்வர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. குடியரசின் மீது ஒடிஸ்ஸா கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் - பேராயர் ஜான் பார்வா
ஏப்.10,2014. இந்தியாவில் அடுத்ததாக அரசை அமைக்கவிருப்பவர் யார் என்ற கலக்கம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தாலும், குடியரசின் மீதும், வாக்காளர்களின் சக்தி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 7 கடந்த திங்கள் முதல் மேமாதம் 12 முடிய நடைபெறும் இந்தியத் தேர்தல்களின் ஒரு முக்கிய நாளான இவ்வியாழனன்று, ஒடிஸ்ஸா
மாநில மக்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுகின்றனர் என்று எடுத்துரைத்த
கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த
பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அமைதியை இழந்து தவிக்கும் ஒடிஸ்ஸா மாநில மக்கள், குறிப்பாக, கந்தமால் பகுதி மக்கள், புதிதாக அமையும் அரசின் வழியாக தங்கள் அமைதியைப் பெறவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார் பேராயர் ஜான் பார்வா.
இவ்வியாழனன்று தங்கள் வாக்குகளை அளித்துள்ள கந்தமால் மக்கள், இந்தத் தேர்தல் காலத்திலும், இனி தொடரும் நாட்களிலும் அமைதியாக வாழ்வதையே, நல்ல மனம் கொண்ட அனைவரும் விரும்புகின்றனர் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறினார்.
ஆதாரம் : AsiaNews
7. அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்துள்ள இத்தாலிய கால்பந்தாட்ட வீரர்
ஏப்.10,2014. கால்பந்தாட்டத்தை வர்த்தக ரீதியாக விளையாடி வரும் ஓர் இத்தாலிய கால்பந்தாட்ட வீரர், இரயிலில் அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்துள்ளார்.
இத்தாலியின் ஒரு உள்நாட்டு இரயில்தொடர் பெட்டியில், பிறந்து 3 அல்லது 4 நாட்களே ஆன ஓர் ஆண் குழந்தை, ஓர் இருக்கையின் அடியில், சில நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது.
இக்குழந்தையைக் குறித்து ஊடகங்கள் வழியே கேள்விப்பட்ட, இத்தாலிய கால்பந்தாட்ட வீரர் Antonio Floro Flores அவர்கள், இக்குழந்தையைத் தான் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான Floro Flores அவர்கள், தான் ஒரு குடும்பத்தின் தந்தை என்பதே தன் முதல் கடமை என்றும், தன் கால்பந்தாட்டம் அடுத்த கடமையே என்றும் கூறியுள்ளார்.
இரயில் காவலர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட இக்குழந்தைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் நினைவாக, 'பிரான்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNA
8. சீனாவின் சமூக வலைத்தளத்தில் 'இயேசு' என்ற வார்த்தை மிக அதிக அளவில் தேடப்படும் வார்த்தையாக உள்ளது
ஏப்.10,2014. சீனாவில் பயன்படுத்தப்படும் Weibo என்ற சமூக வலைத்தளத்தில் 'இயேசு' என்ற வார்த்தை அந்நாட்டின் அரசுத் தலைவர் 'Xi Jinping' என்ற வார்த்தையை விட மிக அதிக அளவில் தேடப்படும் வார்த்தையாக உள்ளது என்று ஓர் ஆய்வுக் கணிப்பு கூறியுள்ளது.
கம்யூனிச ஆதிக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சீனாவில், Twitterக்கு இணையான Weibo என்ற சமூக வலைத்தளத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கணிப்பு ஆச்சரியம் தரும் பல முடிவுகளைத் தந்துள்ளது.
'இயேசு' என்ற சொல் 1 கோடியே 80 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், அரசுத் தலைவர் 'Xi Jinping' என்ற வார்த்தை, 53 இலட்சம் முறையே தேடப்பட்டு வருகிறது.
விவிலியம் என்ற சொல் 1 கோடியே, 70 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், சீனாவின் தந்தை என்று அழைக்கப்படும் மாவோ அவர்களின் எண்ணங்கள் அடங்கிய நூல்கள், 60000 முறையே தேடப்படுவதாக இந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
அனைத்திற்கும் மேலாக, 'கிறிஸ்தவக் குழுக்கள்' என்ற வார்த்தை, 4 கோடியே 18 இலட்சம் முறை தேடப்படும் வேளையில், 'கம்யூனிசக் கட்சி' என்ற வார்த்தை, 53 இலட்சம் முறையே தேடப்பட்டுள்ளது என்று இந்த Weibo கணிப்பு கூறுவதாக UCAN செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது..
ஆதாரம் : UCAN
9. மின்கருவி வழியாக பக்கவாதத்தை குணப்படுத்தும் அமெரிக்கச் சாதனை
ஏப்.10,2014. மின்கருவி வழியாக பக்கவாதத்தை குணப்படுத்தி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்புக்கு கீழே செயலிழந்து ஒன்றும் செய்ய
முடியாது என்ற நிலையில் இருந்த நான்கு நோயாளிகளுக்கு முதுகுத் தண்டில்
மின்கருவி பொருத்தப்பட்டதால், அவர்கள், கால்களையும், பாதங்களையும் அசைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
மிகக்
குறைவான அளவிலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இந்த
புதிய முயற்சி பக்கவாத நோயினால் முடங்கியுள்ள 60 இலட்சம் அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக
முதுகுத்தண்டு பிரச்சனையால் அவதிப்பட்டுவரும் 13 இலட்சம் நோயாளிகளுக்கு
நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மறுவாழ்வு
கிடைக்கும் என்ற நம்பிக்கையே அளிக்கப்படாத நோயாளிகளுக்குக் கூட இந்த
சிகிச்சை முறையில் பலன் கிடைக்கக்கூடும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை
தெரிவிக்கின்றனர்.
இந்தப் புதிய முறையின் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினைகளால் பக்கவாதம் ஏற்படும்போது, அதனை வாழ்நாள் தண்டனையாக அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று மருத்துவர் Roderic Pettigrew அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இவர்
அமெரிக்க உள்நாட்டு நலவாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு
வரும் உயிர் மருத்துவவியல் இமேஜிங் மற்றும் உயிர்பொறியியல் தேசிய
நிறுவனத்தின் (National Institute of Biomedical Imaging and Bioengineering) இயக்குனராகப் பணியாற்றி வருகின்றார்.
நடக்க முடியாது என்ற போதிலும், தன்னார்வ செயல்பாடுகள் சிலவற்றை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்றும், முதுகுத்தண்டு காயங்களுக்கான ஆய்வில் இச்சிகிச்சை ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் மருத்துவர் Pettigrew அவர்கள் கூறியுள்ளார்.
ஆதாரம் : Reuters
No comments:
Post a Comment