செய்திகள் - 09.04.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவர்கள் மறைவுக்கு திருத்தந்தையின் தந்தி
2. திருத்தந்தை பிரான்சிஸ் – மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புனித வியாழன் திருப்பலி
3. உயிர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் -
பிலிப்பின்ஸ் நாட்டு ஆயர்கள்
4. சிரியாவில் கொல்லப்பட்ட அருள் பணியாளர் Van der Lugt, சிரிய மக்களின் கலாச்சாரத்தில் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்டவர்
5. பொதுத் தேர்தல்களையொட்டி, இந்தியத் திருஅவை எழுப்பிவரும் செபங்களுக்கு குடியரசுத் தலைவரின் நன்றி
6. பிற மத நம்பிக்கை கொண்டவர் மத்தியிலும் திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் உயர்ந்த மதிப்பு பெற்றுள்ளனர் - வத்திக்கான் நாளிதழ்
7. இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க பெண்கள் முயற்சி
8. ஒவ்வோர் ஆண்டும் 1,70,000 கோடி டாலர்கள் இராணுவச் செலவுக்கென உலக நாடுகள் ஒதுக்குகின்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவர்கள் மறைவுக்கு திருத்தந்தையின் தந்தி
ஏப்.09,2014.
பாபிலோனியத் திருஅவையின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாகப்
பணியாற்றி ஓய்வுபெற்ற கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவர்கள்
ஏப்ரல் 9, இப்புதன் காலை, இறைவனடி சேர்ந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத்தைத் தெரிவித்து தந்தியோன்றை அனுப்பியுள்ளார்.
கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயில் சாக்கோ அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்தியில், மத நம்பிக்கை கொண்ட அனைத்து குழுக்கள் மீதும் மதிப்பு கொண்டு, அவர்களுடன் உரையாடலை வளர்க்கப் பாடுபட்ட முதுபெரும் தந்தை கர்தினால் டெல்லி அவர்களின் மறைவுக்கு தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
1927ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி பிறந்த கர்தினால் டெல்லி அவர்கள், உரோம் நகரின் உர்பானியா, மற்றும் லாத்தரன் பல்கலைக் கழகங்களில் பயின்று, 1952ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1963ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1963ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்ற கர்தினால் டெல்லி அவர்கள், ஏப்ரல் 9, இப்புதன் காலை, அமெரிக்காவின் சான் தியெகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், தன் 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.
கர்தினால் மூன்றாம் எம்மானுவேல் டெல்லி அவரகளின் மறைவையடுத்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 216ஆகக் குறைந்துள்ளது. இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோரின் எண்ணிக்கை 120.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் – மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் புனித வியாழன் திருப்பலி
ஏப்.09,2014. உரோம் நகரில், மாற்றுத்திறனாளிகளையும், வயதில் முதிர்ந்தோரையும் பராமரிக்கும் இல்லமொன்றில், ஏப்ரல் 17, புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு புனித வியாழனன்று Casal del Marmo என்ற இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி ஆற்றினார். இவ்வாண்டு அதே பகுதியில் அமைந்துள்ள 'பராமரிக்கும் புனித மரியா' இல்லத்தில் திருப்பலியாற்றவுள்ளார்.
150 பேரைப் பாராமரிக்கும் இவ்வில்லத்தில் தங்கியிருப்போர், அவர்களுக்குப் பணியாற்றுவோர், அவர்கள் குடும்பத்தினர் ஆகிய அனைவருக்காகவும் திருத்தந்தை திருப்பலியாற்றுவார்.
முத்திப்பேறு பெற்ற Carlo Gnocchi என்ற அருள் பணியாளர் ஒருவரால் நிறுவப்பட்ட அறக்கட்டளை, அங்கக் குறையுள்ளோர் மற்றும் முதியோருக்கென இத்தாலியின் பல இடங்களில் நடத்திவரும் பராமரிப்பு இல்லங்களில், 'பராமரிக்கும் புனித மரியா' இல்லமும் ஒன்று.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உயிர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் - பிலிப்பின்ஸ் நாட்டு ஆயர்கள்
ஏப்.09,2014.
மக்கள் தொகை பெருக்கம் குறித்து பிலிப்பின்ஸ் அரசு இயற்றிய சட்டத்திற்கு
அந்நாட்டு உச்சநீதி மன்றம் ஆதரவு தெரிவித்து வழங்கியுள்ள தீர்ப்பை தாங்கள்
ஏற்கும் அதே வேளையில், உயிர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிலிப்பின்ஸ் நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பின்ஸ் அரசு வெளியிட்ட சட்டத்தில் ஒரு சில பரிந்துரைகள் வழங்கி, அந்நாட்டு உச்ச நீதி மன்றம் இச்செவ்வாயன்று வழங்கிய தீர்ப்பைக் குறித்து, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அரசின் இச்சட்டத்தை ஆதரிக்கும் உச்ச நீதி மன்றம், அதே நேரம், மனசாட்சியின்
அடிப்படையில் இதற்கு உடன்படாதவர்களையும் காக்கும் வண்ணம் தீர்ப்பு
வழங்கியுள்ளது நிறைவு தருகிறது என்று பேராயர் வியேகாஸ் அவர்கள் கூறினார்.
கடந்த ஈராயிரம் ஆண்டுகள் பல்வேறு எதிர்ப்புக்கள், அடக்கு முறைகள் போன்ற பிரச்சனைகள் மத்தியில் தன் மதிப்பீடுகளை இழக்காமல் வாழ்ந்துவரும் திருஅவை, பிலிப்பின்ஸ் அரசின் இந்த அடக்குமுறை சட்டத்தையும் தகுந்த வகையில் சந்திக்கும் என்று பேராயர் வியேகாஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : AsiaNews / Fides
4. சிரியாவில் கொல்லப்பட்ட அருள் பணியாளர் Van der Lugt, சிரிய மக்களின் கலாச்சாரத்தில் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்டவர்
ஏப்.09,2014. சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைப்பதில் தன் வாழ்வை செலவிட்ட அருள் பணியாளர் Frans Van der Lugt அவர்கள், சிரிய
மக்களின் கலாச்சாரத்தில் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்டவர் என்று
இயேசு சபை அருள் பணியாளர் பிமல் கெர்கெட்டா அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 7 இத்திங்களன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Van der Lugt அவர்களைப் பற்றி, எகிப்தில் மறைப்பணியாற்றிவரும் இந்திய அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
மத வேறுபாடுகள் ஏதுமின்றி உழைத்த அருள் பணியாளர் Van der Lugt அவர்கள், மாற்றுத் திறன் கொண்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் ஆகியோருக்கு ஆற்றியச் சிறப்புப் பணிகளையும், சிரியாவின் பெண்களுக்கு ஆற்றியக் கல்விப் பணியையும், அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.
1938ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி பிறந்த அருள் பணியாளர் Van der Lugt அவர்கள், இவ்வியாழனன்று தன் 76வது வயதை நிறைவு செய்திருப்பார் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்ட அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள், சிரியாவுக்கு, தானும் சென்று உழைக்கத் தாயாராக இருப்பதாகக் கூறினார்.
அருள் பணியாளர் Van der Lugt அவர்கள் கொலைசெய்யப்பட்டது, கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, இஸ்லாமியர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று சிரியாவில் பணியாற்றும் ஆர்மீனிய கத்தோலிக்க அருள் பணியாளர் Joseph Bazuzu அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இயேசு சபை அருள் பணியாளர் Van der Lugt அவர்களின் மறைவு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் மறையுரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டபோது, அவர் இயேசு சபையில் தன் உடன்பிறந்தவர் என்று கூறியதோடு, சிரியாவில் அமைதி நீடிக்க அனைவரும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. பொதுத் தேர்தல்களையொட்டி, இந்தியத் திருஅவை எழுப்பிவரும் செபங்களுக்கு குடியரசுத் தலைவரின் நன்றி
ஏப்.09,2014.
இந்தியாவில் துவங்கியுள்ள பொதுத் தேர்தல்கள் அமைதியான முறையில்
நடைபெறவேண்டும் என்று இந்தியத் திருஅவை எழுப்பிவரும் செபங்களுக்கு இந்தியக்
குடியரசுத் தலைவர் பிரணாப் முக்கர்ஜி அவர்கள் நன்றி கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், பேரவையின் ஏனைய புதியப் பொறுப்பாளர்களுடன் இந்திய அரசுத் தலைவரை அண்மையில் சந்தித்தபோது, அரசுத்தலைவர் முக்கர்ஜி அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தியத் திருஅவை, நாட்டிற்கு ஆற்றும் பல்வேறு சேவைகளை, குறிப்பாக, கல்வி, நலப் பராமரிப்பு ஆகியத் துறைகளில் ஆற்றும் பணிகளைப் பாராட்டிப் பேசிய அரசுத் தலைவர் முக்கர்ஜி அவர்கள், தேர்தலுக்காகச் செபிப்பதுபோலவே, தொடர்ந்து, அரசமைக்கவிருக்கும் தலைவர்களுக்காகவும் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர்கள், பேராயர் Andrews Thazhath, பேராயர் Filipe Neri Ferrao, மற்றும், செயலர், பேராயர் Albert D'Souza ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : UCAN
6. பிற மத நம்பிக்கை கொண்டவர் மத்தியிலும் திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் உயர்ந்த மதிப்பு பெற்றுள்ளனர் - வத்திக்கான் நாளிதழ்
ஏப்.09,2014. உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் மனங்களில் மட்டுமல்ல, ஏனைய கிறிஸ்தவர்கள் மனங்களிலும், இன்னும் பிற மத நம்பிக்கை கொண்டவர் மத்தியிலும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் உயர்ந்த மதிப்பு பெற்றுள்ளனர் என்று வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.
"Roncalli மற்றும் Wojtyla ஆகியோரின் ஆசிய வழி" என்ற தலைப்புடன் வத்திக்கான் நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை, புனிதர்களாகவிருக்கும் இவ்விரு திருத்தந்தையரும் ஆசியாவின் மீது காட்டிய ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியதால் வரலாற்றில் இடம்பெற்றுள்ள திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், ஆசிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு, உரையாடல் என்ற கருத்துக்களை இந்தச் சங்கத்தில் அறிமுகப்படுத்தினார் என்று இக்கட்டுரை ஆசிரியர் James Channan அவர்கள் கூறியுள்ளார்.
"உலகில் அமைதி" (Pacem in Terris) என்ற முக்கியமான சுற்றுமடலை எழுதியத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இந்த மடலை உலகில் உள்ள நல்மனம் கொண்ட அனைவருக்கும் என்று எழுதியது, ஆசிய மக்களைப் பெரிதும் கவர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.
மதச் சுததிரத்தையும், மதங்களுக்கிடையே உரையாடலையும் பெரிதும் ஊக்குவித்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், ஆசியக் கண்டத்தில் பல முறை பயணங்களை மேற்கொண்டு, ஆசிய மக்களின் மனங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளார் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
இவ்விரு திருத்தந்தையர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் நிகழ்வு, ஆசிய மக்களுக்கு முக்கியமான ஒரு நிகழ்வாக அமையும் என்று, கட்டுரை ஆசிரியர், James Channan அவர்கள், தன் கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க பெண்கள் முயற்சி
ஏப்.09,2014. இந்தோனேசியாவின் Peso பகுதியில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சமாதானத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக, இவ்விரு மதங்களையும் சார்ந்த பெண்கள் Sulawesi நகரில் ஒரு கூட்டம் நடத்தினர்.
Peso பகுதியில் அமைந்துள்ள 70 கிராமங்களிலிருந்து வந்த 450க்கும் அதிகமான பெண்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எனினும், அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிவரும் இருக்கமானச் சூழலை நன்கு உணர்ந்தவர்கள் என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இப்பெண்களில் பலர் முதல் முறையாகத் தங்கள் கிராமங்களை விட்டு Sulawesi நகருக்கு வந்துள்ளனர் என்றும், 1997ம் ஆண்டு முதல் தங்கள் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிலவி வரும் பகை உணர்வைத் தீர்க்கும் ஆர்வம் இப்பெண்களிடம் உருவாகியுள்ளது என்றும், இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த Lilan Gogali என்ற பெண் ஆசிய செய்தியிடம் கூறினார்.
1997, மற்றும் 2001ம் ஆண்டுகளில் நடைபெற்ற மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர், மற்றும் பல கிறிஸ்தவக் கோவில்களும், இல்லங்களும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும், 2005ம்
ஆண்டு பள்ளிக்குச் சென்ற கிறிஸ்தவப் பெண்களில் மூவர் தலை வெட்டப்பட்டு
கொல்லப்பட்டது அப்பகுதியை அதிர்ச்சியடையச் செய்தது என்றும் ஆசியச் செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews
8. ஒவ்வோர் ஆண்டும் 1,70,000 கோடி டாலர்கள் இராணுவச் செலவுக்கென உலக நாடுகள் ஒதுக்குகின்றன
ஏப்.09,2014. உலகின் பல அரசுகள் இராணுவத்திற்காகச் செலவிடும் நிதியை, மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிடக் கோரி, பல உலக அமைப்புக்கள் ஏப்ரல் 14, அடுத்த திங்களன்று இராணுவச் செலவு எதிர்ப்பு நாளைக் கடைபிடிக்க உள்ளன.
2011ம் ஆண்டு அகில உலக அமைதி நிறுவனத்தால் துவக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் இம்முயற்சியில், Pax Christi, Columban Justice Peace and Integrity of Creation, Christian Ecology Link, போன்ற பல கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் 1,70,000 கோடி டாலர்கள் இராணுவச் செலவுக்கென உலக நாடுகள் ஒதுக்குகின்றன என்று Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை, பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது என்று இந்த அமைப்புக்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment