செய்திகள் - 12.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2014ம் ஆண்டு உலக அமைதி நாள் செய்தி
2. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென தயார் செய்யும் இந்நாட்களில், இறைவனுக்குச் செவிமடுக்க அமைதியாக இருப்பது பயன்தரும் - திருத்தந்தை பிரான்சிஸ்
3. இன்றைய உலகில் பெருகிவரும் மனித வர்த்தகத்தை தடுக்கவேண்டும் என்பதே என் முக்கிய வேண்டுகோள் - திருத்தந்தை பிரான்சிஸ்
4. டிசம்பர் 12 திருத்தந்தை வெளியிட்ட Twitter செய்தி
5. 2013ம் ஆண்டின் மனிதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது - கர்தினால் Timothy Dolan
6. புது டில்லியில் பேராயர் Anil Couto அவர்களையும், பிற மதத் தலைவர்களையும், காவல் துறையினர் கைது
7. 130 நாடுகளில் பயணித்த புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள் பேழை, மீண்டும் இத்தாலியை வந்தடைகிறது
8. உலகில் பிறக்கும் குழந்தைகளில் 3ல் ஒரு குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை - UNICEF அதிர்ச்சித் தகவல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2014ம் ஆண்டு உலக அமைதி நாள் செய்தி
டிச.12,2013. சகோதரத்துவம் இன்றி, ஒரு நீதியான சமூகத்தையும், உறுதியான மற்றும் நிலைத்த அமைதியையும் கட்டியெழுப்ப இயலாது என்பதால், சகோதரத்துவத்தைக்
கட்டியெழுப்புவதில் குடும்ப உறுப்பினர்களின் பொறுப்புணர்வை வலியுறுத்தி
2014ம் ஆண்டின் உலக அமைதி நாளுக்கென தன் செய்தியை துவக்கியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
“சகோதரத்துவம், அமைதிக்கு அடித்தளமும் வழியும்” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று உலக அமைதி தின செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை,
உலகின் பல பகுதிகளில், அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக, குறிப்பாக, வாழ்வுரிமை மற்றும் மத சுதந்திர உரிமைக்கு எதிராக இடம்பெறும் கடும் குற்றங்கள், மனித வியாபாரம், ஆயுதம் ஏந்திய சண்டைகளுக்கு இணையான, பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் இடம்பெறும் சண்டைகள், சமத்துவமின்மை, வறுமை, அநீதியின் பல சூழல்கள் போன்றவை, சகோதரத்துவம் அதிகமாகக் குறைபடுவதை மட்டுமல்ல, ஒரு தோழமைக் கலாச்சாரம் இல்லாமல் இருப்பதன் அடையாளங்களாக உள்ளன எனவும் அதில் கூறியுள்ளார்.
மட்டுமீறிய தனியுரிமைக் கோட்பாடு, தன்னையே மையப்படுத்தும் நான் எனும் முனைப்பு, பொருளாதார நுகர்வு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட புதிய கருத்துருவாக்கங்கள், சமூகப் பிணைப்புகளைப் பலவீனப்படுத்துகின்றன எனவும் அதில் கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சகோதரத்துவத்துக்கு நாம் இயல்பாகவே அழைக்கப்பட்டுள்ளோம் என்றபோதிலும், அந்த
அழைப்பை மறுதலிக்கும் துயர்நிறைந்த சக்தியையும் நாம் கொண்டிருக்கிறோம்
என்பதை பழைய ஏற்பாட்டின் காயின் ஆபேல் கதை நமக்கு உணர்த்துகிறது எனவும்
கூறும் திருத்தந்தை, மனிதச் சகோதரத்துவம் சிறப்பான முறையில், இயேசு கிறிஸ்துவில், இயேசு கிறிஸ்துவால் அவரது மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாகப் புத்துயிரளிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சகோதரத்துவம் - ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரு முன்நிபந்தனை, பொருளாதாரத்தில் சகோதரத்துவத்தை மீண்டும் கண்டுணர்தல், சகோதரத்துவம் - போரைத் துடைத்தழிக்கின்றது, ஊழலும் திட்டமிட்ட குற்றமும் சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன, சகோதரத்துவம்
- இயற்கையைப் பாதுகாத்துப் பயிரிட உதவுகின்றது என்ற தலைப்புகளில் தன்
அமைதி நாள் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென தயார் செய்யும் இந்நாட்களில், இறைவனுக்குச் செவிமடுக்க அமைதியாக இருப்பது பயன்தரும் - திருத்தந்தை பிரான்சிஸ்
டிச.12,2013. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென நம்மையே தயார் செய்யும் இந்நாட்களில், ஒரு தாயைப்போல, தந்தையைப்போல
நம்மிடம் அன்புடன் உரையாடும் இறைவனுக்குச் செவிமடுக்க நாம் அமைதியாக
இருப்பது பயன்தரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 12, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
கனவு கண்டு, பயந்து கண்விழித்து அழும் குழந்தையிடம் 'நான் இருக்கிறேன், அஞ்சாதே' என்று தேற்றும் தாயாக, தந்தையாக இறைவன் நம்மைத் தேடி வருகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவன் நம்மிடம் என்ன பேசுகிறார் என்பதைவிட, அவர் நம்மிடம் எவ்விதம் பேசுகிறார் என்பதில் கவனம் செலுத்துவது பயனளிக்கும் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
குழந்தைகளிடம் பேசும் பெற்றோர், பயன்படுத்தும் வார்த்தைகளை, மேலோட்டமாக, வெளிப்புறத்திலிருந்து காண்போர், அர்த்தமற்ற பிதற்றல் என்று கூறலாம், ஆனால், அந்த வார்த்தைகள் குழந்தைகளுக்கு ஆறுதலும், உறுதியும் தருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இதே நிலையில் இறைவாக்கினர் எசாயாவிடம் இறைவன் பேசுவதைக் காணலாம் என்று விளக்கினார்.
இறைவன்
இவ்விதம் பேசுவதை ஆழமாகப் புரிந்துகொள்ள நம் மனதை ஒரு நிலைப்படுத்தும்
அமைதி பெரிதும் உதவும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில்
வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இன்றைய உலகில் பெருகிவரும் மனித வர்த்தகத்தை தடுக்கவேண்டும் என்பதே என் முக்கிய வேண்டுகோள் - திருத்தந்தை பிரான்சிஸ்
டிச.12,2013. மத நம்பிக்கை உள்ளவர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் இணைந்து, இன்றைய
உலகில் பெருகிவரும் மனித வர்த்தகத்தைத் தடுக்கவேண்டும் என்பதே என் முக்கிய
வேண்டுகோள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானில் தங்காமல், அதேநேரம் தங்கள் நாடுகளின் தூதர்களாக வத்திக்கானுடன் தொடர்பு கொண்டுள்ள 17 நாடுகளின் தூதர்களை, டிசம்பர் 12, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித மாண்பை குலைக்கும் மனித வர்த்தகத்தைத் தன் உரையின் மையக்கருத்தாக பகிர்ந்து கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் போதைப்பொருள்கள், போர்க்கருவிகள்
ஆகியவற்றின் வர்த்த்கங்களுடன் தொடர்புடைய மனித வர்த்தகத்தைத் தடுக்க
அரசுகள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்வதில்லை என்பதை திருத்தந்தை தன் உரையில்
வருத்தத்துடன் தெரிவித்தார்.
மனித வர்த்தகத்தில் குழந்தைகளும், பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்களின் அடிப்படை மனித மாண்பு பல வழிகளிலும் சிதைக்கப்பட்டு, அவர்கள் வர்த்தகப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தீமை என்பதையும் எடுத்துரைத்தார்.
அல்ஜீரியா, டென்மார்க், பாகிஸ்தான், மால்டா, உட்பட 17 நாடுகளின் தூதர்களை திருத்தந்தை சந்தித்து, அவர்கள் தங்கள் நாடுகளின் சார்பில் கொணர்ந்த நம்பிக்கைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. டிசம்பர் 12 திருத்தந்தை வெளியிட்ட Twitter செய்தி
டிச.12,2013.
"மகிழ்வற்ற ஒரு திருஅவையை நாம் எண்ணிப்பார்க்க இயலாது. இயேசுவின் பெயரைப்
பறைசாற்றுவதே திருஅவையின் மகிழ்வு" என்ற வார்த்தைகளை தன் Twitter செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 12, இவ்வியாழன் வெளியிட்டார்.
12.12.12, அதாவது, 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் முதல் Twitter செய்தியை வெளியிட்டதன் முதல் ஆண்டு நிறைவை இவ்வியாழன் நினைவுக் கூருகிறோம்.
இந்த ஓராண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒவ்வருநாளும் இத்தாலியம், லத்தீன், இஸ்பெயின், போலந்து, ஆங்கிலம், ஜெர்மன், போர்த்துகீஸ், பிரெஞ்ச், அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் தங்கள் Twitter செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
@pontifex என்ற இணைய முகவரி வழியாக வெளியிடப்படும் திருத்தந்தையின் Twitter செய்திகளை 11,000,000 பேர் பின் தொடர்கின்றனர் என்றும், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்வதன் வழியாக, திருத்தந்தையின் செய்திகள் ஏறத்தாழ 60,000,000 பேரைச் சென்றடைகின்றன என்று திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தையைச்
சந்தித்த 17 நாடுகளின் தூதர்களைத் திருப்பீடம் அன்புடன் வரவேற்கிறது என்ற
செய்தியை திருப்பீடச் செயலரின் அலுவலகம் தன் Twitter செய்தியாக, டிசம்பர் 12, இவ்வியாழனன்று வெளியிட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. 2013ம் ஆண்டின் மனிதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது - கர்தினால் Timothy Dolan
டிச.12,2013. இறையன்பையும், மக்கள் மீது கனிவையும் வெளிப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் மனிதராக Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan அவர்கள் கூறினார்.
அன்பும் கனிவும் திருஅவையில் எக்காலமும் அழியாத செய்தி என்றும், அந்த
நற்செய்தியின் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இவ்வாண்டின் மனிதர் என்ற இடத்தைப் பெறுவது அனைவரும் எதிர்பார்த்த
ஒரு தெரிவே என்றும் கர்தினால் Dolan தெரிவித்தார்.
திருஅவையின் மீது மக்களுக்கு மீண்டும் ஓர் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை விட்டு விலகி இருந்த பலரை மீண்டும் அதில் இணைத்ததை காணமுடிகிறது என்று Time இதழின் பொறுப்பாசிரியரான Nancy Gibbs அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.
பாரம்பரியத்தைக் காப்பவர்களும், புதுமையை விரும்புகிறவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகளை பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனசாட்சியின் குரலாக இருந்து செயல்படுகிறார் என்று பொறுப்பாசிரியர் Nancy Gibbs எடுத்துரைத்தார்.
பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடந்த கத்தோலிக்கத் திருஅவையை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாக
வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளார்
என்று அமெரிக்க இயேசு சபை மாநிலங்களின் தலைவர் அருள்பணி Thomas Smolich அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Time இதழின் 'ஆண்டின் மனிதர்' என்ற நிலையைப் பெறும் மூன்றாவது திருத்தந்தை என்பதும், இவருக்கு முன்னர், 1962ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 1994ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும் இதே நிலையைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், Time இதழின் இப்பெருமைக்குரியவர்களாக கருதப்பட்ட முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான்பால் அவர்களும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித நிலைக்கு உயர்த்தப்பட உள்ளனர் என்பதும் மற்றொரு சிறப்பு.
ஆதாரம் : CNA/EWTN
6. புது டில்லியில் பேராயர் Anil Couto அவர்களையும், பிற மதத் தலைவர்களையும், காவல் துறையினர் கைது
டிச.12,2013. தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளைக் கோரி புது டில்லியில் இப்புதனன்று ஓர் ஊர்வலத்தை மேற்கொண்ட டில்லி பேராயர் Anil Couto அவர்களையும், பிற மதத் தலைவர்களையும், காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உரிமைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் சமர்ப்பிக்க மதத் தலைவர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மேற்கொண்ட அமைதியான ஓர் ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மதத் தலைவர்களையும், ஏனைய அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள் ஆகியோரை கைது செய்தனர்.
அமைதியான ஓர் ஊர்வலத்தில் அத்துமீறிய வன்முறையைப் பயன்படுத்தியது வெட்கத்திற்குரியது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தரப்பட வேண்டிய உரிமைகளை மறுப்பது பெரும் அநீதி என்றும், இதைக் குறித்து ஊடகங்களும் மௌனம் காப்பது தவறு என்றும் பேராயர் Anil Couto தெரிவித்தார்.
கைது செய்யப்பட பேராயர் Couto அவர்களையும், ஏனையத்
தலைவர்களையும் காவல் துறையினர் பின்னர் விடுவித்தனர். இந்நிகழ்வைக்
குறித்து காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய டில்லி உயர்மறைமாவட்டம்
முயன்று வருவதாக UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews / UCAN
7. 130 நாடுகளில் பயணித்த புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள் பேழை, மீண்டும் இத்தாலியை வந்தடைகிறது
டிச.12,2013.
உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள 130 நாடுகளில் மக்கள் பார்வைக்கும்
வணக்கத்திற்கும் வைக்கப்பட்ட புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப்
பொருள்கள் அடங்கிய பேழை, டிசம்பர் 13, இவ்வேள்ளியன்று மீண்டும் இத்தாலியை வந்தடைகிறது.
சலேசிய துறவு சபை துவக்கப்பட்ட 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக, புனித தொன் போஸ்கோ அவர்களின் புனிதப் பொருள்கள் அடங்கிய பேழை ஒன்று 2009ம் ஆண்டு Turin நகரில் உள்ள சகாய அன்னை மரியா பசிலிக்காவிலிருந்து தன் திருப்பயணத்தை மேற்கொண்டது.
டிசம்பர் 13ம் தேதி மீண்டும் இத்தாலியை அடையும் இப்பேழை, இத்தாலியின் பல நகரங்களில் பயணம் மேற்கொண்டு, 2014ம் ஆண்டு சனவரி 31ம் தேதி மீண்டும் Turin நகரில் உள்ள அன்னை மரியா பசிலிக்கா சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித தொன் போஸ்கோ அவர்கள் பிறந்ததன் 2ம் நூற்றாண்டு 2015ம் ஆண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. உலகில் பிறக்கும் குழந்தைகளில் 3ல் ஒரு குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை - UNICEF அதிர்ச்சித் தகவல்
டிச.12,2013. உலகில் இன்று வாழும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 23 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படாமல் உள்ளது என்று UNICEF அறிக்கை ஒன்று கூறுகிறது.
குழந்தைகளின் நலனுக்கென, ஐ.நா.வின் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள UNICEF நிறுவனம், டிசம்பர் 11, இப்புதனன்று தன் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இத்தருணத்தையொட்டி, UNICEF நிறுவனம்
வெளியிட்ட ஓர் அறிக்கையில் உலகில் பிறக்கும் குழந்தைகளில் 3ல் ஒரு
குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை
வழங்கியுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவது, அக்குழந்தையின் அடிப்படை உரிமை என்று கூறிய UNICEF நிறுவனத்தின் இணை இயக்குனர் Geeta Rao Gupta அவர்கள், இந்த உரிமை மறுக்கப்பட்ட குழந்தைகள், ஏனைய அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பல சாதனைகளை ஆற்றக்கூடியவர்கள் என்றாலும், அவர்கள் இவ்வுலகில் பிறந்ததற்கான ஆதாரமே இல்லாதபோது, அவர்களின் எதிர்காலம் முழுவதும் கேள்விக்குறியாகிறது என்று UNICEF இயக்குனர் Gupta அவர்கள், தன் கவலையை வெளியிட்டார்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment