Tuesday, 17 December 2013

சந்திரனில் இருந்து படங்களை அனுப்பத் தொடங்கியது சீன விண்உலாவி

சந்திரனில் இருந்து படங்களை அனுப்பத் தொடங்கியது சீன விண்உலாவி

Source: Tamil CNN 
சந்திரனுக்கு சீனா அனுப்பிய ஆளில்லா வாகனம், ஜேட் ராபிட், அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது.ஜேட் ராபிட், அதை சந்திரனில் தரையிறக்கிய கலனிலிருந்து பிரிந்து சென்று சில மீட்டர்கள் தூரம் சென்று, பின்னர் கலனை அது படமெடுத்து அனுப்பியது.
அதேபோல அந்த விண்கலனும் அந்த வாகனத்தைப் புகைப்படமெடுத்தது. இந்தப் புகைப்படங்கள் பீஜிங் ஏரோஸ்பேஸ் கட்டுப்பாடு மையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டன. அவை வந்தடைவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் லி கெகியாங்கும் பார்த்தனர்.
இந்த வாகனம் நிலவில் மூன்று மாதங்கள் இருந்து நிலவின் புவியியல் பரப்பை ஆராய்வதுடன், இயற்கை வளங்கள் அங்கு இருக்கின்றதா என்பதையும் ஆராயும். இந்த வாகனத்தை தரையிறக்கிய விண்கலன், அங்கு ஒரு ஆண்டு தங்கியிருந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
நிலவில் பத்திரமாக ஒரு கலனை தரையிறக்கிய நாடுகள் பட்டியலில், அமெரிக்கா மற்றும் முந்தைய சோவியத் ஒன்றியத்துக்குப் பின்னர் சீனா மூன்றாவது நாடாகச் சேர்கிறது. விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சீன நிலவு ஆய்வு திட்ட செய்தி தொடர்பாளர் பெய் ஜாயோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment