பயிற்சியின் போது துன்புறுத்தப்படும் சீனப் படைவீரர்கள் : வீடியோ காட்சியால் கொந்தளிப்பு
சீனாவில் புதிதாக ராணுவப் பணிக்கு சேர்ந்த வீரர்கள் பயிற்சியின் போது சித்திரவதைப்படுத்தப்படுவது போன்ற வீடியோக் காட்சி ஒன்று மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் மங்கோலியாவின் உட்பகுதியில் உள்ள வுஹாய் நகரில் ராணுவப் பயிற்சி நடைபெற்றபோது இந்த வீடியோக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவத்தின் வீரர்கள் பயிற்சி வீரர்களை வரிசையில் நிற்கவைத்து அடிப்பதை இந்த வீடியோ காட்டுகின்றது. ஒவ்வொரு முறையும் கீழே விழுந்த பின்னர் மீண்டும் அவர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு இதுபோல் பலமுறை சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
இதுமட்டுமின்றி, ஒரு பயிற்சி வீரனின் தலையை சுவற்றில் முட்டுவதும், பெல்ட்டுகளால் அவர்களை விளாசுவதும், காயம்பட்ட வீரனின் முகத்திலிருந்த ரத்தத்தை வழிப்பதும், மற்றொரு வீரனை முதுகில் தட்டிக்கொடுத்து பின்னர் தொடர்ந்து அடிப்பது போன்ற காட்சிகளும் இந்த 15 நிமிட வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான முறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் காட்சிகள் மக்களிடையே கோபமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசின் அதிகாரபூர்வ நிறுவனம் ஒன்று இந்த சம்பவங்கள் உண்மை என்று உறுதி செய்தது. வுஹாய் நகர தீயணைப்பு வீரர்கள் பிரிவும் இந்த சம்பவத்தினை ஆமோதித்துள்ளது. மேலும், இந்தத் தண்டனையை அளித்த வீரர்கள் அனைவரும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ குறித்த விசாரணை ஒன்றும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் சக நாட்டவர்களிடமே மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்ளும் இத்தகைய வீரர்களைத்தான் சீனா நம்பியுள்ளது என்று இணையதளத்தில் ஒருவர் விமர்சித்துள்ளார்.
அரசு ஊடகங்களோ ராணுவத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்ற தகவலை வெளியிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அன்பானவர்களை புதிய கோணத்தில் பார்க்க முடிந்தது என்ற மக்களின் கோபமான கருத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment