Tuesday, 6 August 2013

உலகின் உயரமான விமான நிலையத்தை திபெத்தில் அமைக்கிறது சீனா

உலகின் உயரமான விமான நிலையத்தை திபெத்தில் அமைக்கிறது சீனா

திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில், 4,411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக, சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது.இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார், லாஸு, பாங்டா, ஸிகாஜே, நகாரி ஆகிய இடங்களில் ஐந்து விமான நிலையங்களை சீனா அமைத்துள்ளது.
திபெத் பிராந்தியத்தில் ரயில் வழித்தடங்களையும், சாலைகளையும் அமைத்துள்ள சீனா, விமான உள்கட்டமைப்புகளையும் துரிதமாக மேம்படுத்தி வருவது இந்தியாவை கவலை அடையச் செய்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் மூலம், பூகோள ரீதியிலான பிரச்னைகளை தோற்கடிக்க, சீனா தனது படைகளையும், உபகரணங்களையும் அந்தப் பகுதிகளுக்கு துரிதமாக அனுப்பி வைக்க முடியும்.
இதற்கிடையே, பழுதுபார்ப்புக்காக கடந்த ஜூன் 22ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த பாங்டா விமான நிலையம், திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 ஆண்டு பழமையான இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் பழுதுபார்க்கப்பட்டு விட்டதாக, பயணிகள் விமான நிர்வாகத்தின் திபெத் கிளை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...