Thursday 31 March 2011

Catholic News - hottest and latest - 28 Mar 2011


1.  திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்தார் சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர்.

2.  நாத்ஸிப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இத்தாலியர்களின் நினைவிடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை.

3. திருத்தந்தை : மனிதனின் தாகத்தைத் தணிப்பதற்காகக் கடவுள் இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார் 

4.   லிபியாவில் மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு திருத்தந்தை அழைப்பு

5.   லிபிய அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்புக்கு Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகி நன்றி.

6.    லிபியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

7.   ஃப்ளோரிடாவில் குரான் எரிக்கப்பட்டதற்கு எதிரொலியாகப் பாகிஸ்தானில் ஆலயங்கள் சேதம்

8.    குடியேறியுள்ள மக்கள் மீது கொரிய கலாச்சாரத்தை திணிப்பது அகற்றப்பட தென் கொரிய திருச்சபை அழைப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------

1.  திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்தார் சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர்.

மார்ச் 28, 2011.  சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் கிறிஸோஸ்டொமோஸ் இத்திங்களன்று தன் குழுவினருடன் வந்து திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந்தேதி சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஏற்கனவே 2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வத்திக்கானிலும், கடந்த ஆண்டின் திருத்தந்தையின் சைப்ரசுக்கான திருப்பயணத்தின்போது அங்கும் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இத்திங்களன்று திருப்பீடத்தில் இடம்பெற்ற இந்த மூன்றாம் சந்திப்பினைத் தொடர்ந்து திருத்த‌ந்தையின் அழைப்பின் பேரில் திருப்பீடத்தில் அவருடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டார் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் கிறிஸோஸ்டொமோஸ்.
இதே திங்களன்று, தங்கள் அட்லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள இந்தியாவின் சீரோ மல‌பார் ஆயர்களுள் ஏழு பேரையும் சந்தித்து உரையாடினார் பாப்பிறை.

2.  நாத்ஸிப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இத்தாலியர்களின் நினைவிடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை.

மார்ச் 28, 2011.  ஆக்ரமிப்பு ஜெர்மன் படையினரால் 1944ம் ஆண்டு உரோம் நகருக்கு சிறிது வெளியே 335 இத்தாலியர்கள் கொல்லப்பட்ட இடத்தை இஞ்ஞாயிறன்றுச் சென்று பார்வையிட்டு அவர்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஃபோஸே அர்தியத்தீனே எனுமிடத்தில் 67 ஆண்டுகளுக்கு முன் மார்ச் 24ந்தேதி இடம்பெற்ற இப்படுகொலைகளின் நினைவு நாளையொட்டி இஞ்ஞாயிறன்று அங்கு சென்று, பலியானவர்களின் கல்லறையைத் தரிசித்த பாப்பிறை, இப்படுகொலைகள் இறைவனுக்கு எதிரான குற்றம் என்றார்.
உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் அவ்விடத்தை தரிசிக்கச் சென்றதாக உரைத்த திருத்தந்தை, இறை அன்பின் வல்லமையோடு  உலகின் ஒவ்வொருவரும் அமைதியில் நடைபோடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
1944ம் ஆண்டு ஆக்ரமிப்பு ஜெர்மன் காவல்துறை மீது உரோம் நகரில் இத்தாலியத் தேசப்பற்றுக் குழு ஒன்று வெடிகுண்டு வீசியதில் 33 ஜெர்மானியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஒவ்வொரு ஜெர்மானியருக்கும் பத்து இத்தாலியர் கொல்லப்படவேண்டும் என்று ஹிட்லர் தந்த ஆணையின்படி,  மறு நாளே 335 இத்தாலியர்கள் ஜெர்மன் படையினரால் கொல்லப்பட்டனர்.

3. திருத்தந்தை : மனிதனின் தாகத்தைத் தணிப்பதற்காகக் கடவுள் இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார் 

மார்ச்28,2011. கடவுளின் எல்லா வல்லமையும் நிறைந்த அன்பு ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தை மதிக்கின்றது, எனவே அது மனிதனின் இதயத்தைத் தொடுகிறது மற்றும் அவனின் பதிலுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, தந்தையாம் கடவுள் தமது அன்பை நமக்கு வழங்கி, நித்திய வாழ்வுக்கான மனிதனின் தாகத்தைத் தணிப்பதற்காக கிறிஸ்து இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார் என்றார்.
கிணற்றருகில் இயேசு சமாரியப் பெண்ணோடு உரையாடிய நற்செயதிப் பகுதியை மையமாகக் கொண்டு உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் களைப்பு அவரின் உண்மையான மனிதப் பண்பின் அடைாளமாக இருக்கின்றது, இது அவரது திருப்பாடுகளுக்கு முன்னோட்டமாகவும் இருக்கின்றது என்றார்.
தாகமும் களைப்பும் உடல்ரீதியானதாக இருக்கின்ற போதிலும் இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசம் மற்றும் அனைத்து மனித சமுதாயத்தின் விசுவாசத்திற்காகத் தாகம் கொண்டிருந்தார் என்று திருத்தந்தை விளக்கினார்.
நாம் ஒவ்வொருவருமே சமாரியப் பெண்ணின் இடத்தில் வைத்து நம்மை நோக்கலாம் என்றும், இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், குறிப்பாக இத்தவக்காலத்தில் நம்மோடு பேசக் காத்திருக்கிறார், ஆதலால் நமது அறையிலோ அல்லது ஆலயத்திலோ அல்லது தனிமையான இடத்திலோ அமைதியில் நேரம் செலவழிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

4.   லிபியாவில் மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு திருத்தந்தை அழைப்பு

மார்ச்28,2011. லிபியாவில் இடம் பெறும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மிக உருக்கமாக விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்றது. இத்தகைய அதிகப் பதட்டம் நிறைந்த ஒரு சூழலில், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத் தூதரக ரீதியாக எடுக்க்க்கூடிய அனைத்து வழிகளையும் கையாளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
லிபியாவிலும் வட ஆப்ரிக்கா முழுவதிலும் அமைதி திரும்பட்டும் என்று செபித்தார். அத்துடன், மத்திய கிழக்குப் பகுதியிலும் இடம் பெற்ற அண்மை வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டு நீதியும் சகோதரத்துவ நல்லிணக்க வாழ்வையும்தேடும் முயற்சியில் உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கானவழிகளைக் கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் Moammar Ghadafi க்குப் பிரமாணிக்கமாக இருக்கும் படைகளுக்கும் பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் ஆதரவு கொண்ட லிபியப் புரட்சிப் படைகளுக்கும் இடையே கடும் தாக்குதல்கள் இடம் பெற்று வருகின்றன.

5.   லிபிய அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்புக்கு Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகி நன்றி.

மார்ச் 28, 2011.    ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன் வர வேண்டும் என்று லிபிய தாக்குதல் குறித்து திருத்தந்தை இஞ்ஞாயிறு மூவேளை செபவுரையின்போது விடுத்த அழைப்புக்குத் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் லிபிய தலைநகர் Tripoli யின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenza Martinelli.
லிபியாவில் அமைதியை வலியுறுத்தி சர்வதேச அமைப்புகளுக்கும், லிபியாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கும் திருத்தந்தை முன்வைத்துள்ள இவ்வழைப்பை அரபு மொழியில் மொழிபெயர்த்து அதனை லிபிய வெளியுறவு அமைச்சருக்கு அனுப்ப உள்ளதாகவும்  கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.
 Tripoli கத்தோலிக்கக் கோவிலின் முன் பாதுகாப்பிற்கென காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அறிவித்த அப்போஸ்தலிக்க நிர்வாகி, பல்வேறு தரப்புகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற‌ தலத்திருச்சபை முயன்று வருகிறது என மேலும் கூறினார்.

6.    லிபியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மார்ச் 28, 2011.  லிபிய அரசிடமிருந்து அந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் நோக்குடன் ஏனைய நாடுகளுடன் இணைந்து லிபியா மீது தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்க ஐக்கிய நாடு, அந்நோக்கத்தை விட்டு விலகாமல் சரியானப் பாதையில் செல்லவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
லிபியாவில் இராணுவத் தாக்குதல் இடம்பெறுவது குறித்தக் கேள்வியை எழுப்பி அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அமெரிக்க ஆயர்களின் சர்வதேச நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Howard Hubbard,  தீமையை அகற்றும் நோக்குடன் கையாளப்படும் இராணுவத் தாக்குதல்கள், அதை விட பெரிய தீமையைக் கொணர்வதாக இருக்கக்கூடாது என அக்கடிதத்தில் ஆயர்களின் கவலையை வெளியிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வையும் மாண்பையும் காப்பாற்ற வேண்டிய தேவையிலும் இராணுவத் துருப்புகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமாக‌ சிந்திக்க வேண்டிய  ஒழுக்க ரீதி கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆயர் Hubbard.

7.   ஃப்ளோரிடாவில் குரான் எரிக்கப்பட்டதற்கு எதிரொலியாகப் பாகிஸ்தானில் ஆலயங்கள் சேதம்

மார்ச்28,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளோரிடாவில் குரான் எரிக்கப்பட்டதற்கு எதிரொலியாகப் பாகிஸ்தானில் ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன, இரண்டு விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் விவிலியப் பிரதிகள் எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ஹைதராபாத் மற்றும் லாகூரில் இசுலாம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களைத் தாக்கி விவிலியப் பிரதிகளை அவமரியாதை செய்துள்ளன.
இம்மாதம் 20ம் தேதி ஃப்ளோரிடாவில் பாதிரியார் வாய்னே சாப் என்பவர்

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...