Friday 27 May 2022

கதைசொல்லல், ஒவ்வொருவரையும் இணைக்கும் அடிப்படைக் காரணி

 

கதைசொல்லல், ஒவ்வொருவரையும் இணைக்கும் அடிப்படைக் காரணி


கதை சொல்லும் கலை, பல நூற்றாண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்து, ஓர் எதிர்காலத்தை உருவாக்குகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புதிய புத்தகம் ஒன்றிற்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கதைசொல்லல் என்பது, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், அனைத்தையும் மற்றும் அனைவரையும் இணைக்கும் உடைக்க முடியாத ஒரு அழகிய பந்தம் என்று கூறியுள்ளார்.

மே 26, இவ்வியாழனன்று வத்திக்கான் பதிப்பகமும் சலானி பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள Andrea Monda என்பவர் எழுதியுள்ள The weaving of the world  என்ற புதிய புத்தகத்திற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புத்தகத்தின் தொகுதிகள் அமைப்பு முறைபற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, நூலின் தொடக்கத்திலேயே அருமையான செய்தி ஒன்று பகிரப்பட்டு அது மக்களின் கவனத்தை கவர்ந்திழுப்பதாகவும், சவால்களைச் சந்தித்து, தங்களைப் பங்களிப்பு செய்ய அவர்களைத் தூண்டி எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.

மறைபொருள், அமைதி, பரிவிரக்கம் ஆகிய மூன்று முக்கிய தொடர் கருப்பொருள்களை இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இதில் பரிவிரக்கம் என்பது காயமடைந்தவர்மேல் நல்ல சமாரியர் காட்டிய பரிவிரக்கத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, இப்புத்தகத்தைப் படிக்கும் அனைவரும் உரையாடலின் உண்மையான தத்துவத்தை உணரவும் அதனைத் தங்களின்  அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் நல்லதொரு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மொத்தம் 240 பக்கங்களைக் கொண்டுள்ள The weaving of the world  என்று தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் கலைஞர்கள், இறையியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஏறத்தாழ 44 எழுத்தாளர்கள், மீட்பு என்ற ஒற்றைவழிப் பாதை என்ற கருப்பொருளில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...