Tuesday 10 May 2022

தமிழகத்தின் 16வது பறவைகள் சரணாலயம் கலிவேளி ஏரி

 

தமிழகத்தின் 16வது பறவைகள் சரணாலயம் கலிவேளி ஏரி


கலிவேளி சதுப்புநில ஏரியின் 5,151.60 ஹெக்டேர் பகுதி, பறவைகளின் சரணாலயமாக அமைந்திருக்கும் என்று, 2021ம் ஆண்டு டிசம்பரில், தமிழக அரசு அறிவித்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

கழுவேலி அல்லது கலிவேளி ஏரி (Kazhuveli or Kaliveli Lake, Kaliveli Lagoon) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, ஒரு கடற்கரை சதுப்புநில ஏரி மற்றும், கடற்காயல் நீர்த்தடம் ஆகும். இந்த ஏரி, கோரமண்டல் கடற்கரையில் புதுச்சேரியிலிருந்து ஏறக்குறைய 16 கிலோ மீட்டர்கள் (9.9 மைல்) வடக்கிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோ மீட்டர்கள் (6.2 மைல்) வடக்கில் உள்ளது. இந்த ஏரியில், பருவமழை காலத்தில் நல்ல நீர் பாய்வதால், அது, உவர் நீராகும் ஒரு நீர்த்தடமாகவும் ஆகுகின்றது. மேலும், இந்த ஏரி, மற்ற இடங்களிலிருந்து புலம்பெயரும் பறவைகளுக்கு உணவளிக்கும், மற்றும் இனப்பெருக்கம் செய்ய உதவும் சரணாலயமாகவும் உள்ளது. இது, இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாகும். இந்த ஏரியை, பன்னாட்டு சூழலியல் பாதுகாப்பு அமைப்பு, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. கலிவேளி சதுப்புநில ஏரியின் 5,151.60 ஹெக்டேர் பகுதி, பறவைகளின் சரணாலயமாக அமைந்திருக்கும் என்று, 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்வழியாக அப்பகுதியில் திட்டமிடப்பட்ட சூழலியலைப் பாதிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த ஏரியின் 90 விழுக்காடு கரைப் பகுதி, சாலை வழியாக நெருங்க இயலாதவாறு உள்ளது. இதுவே இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பெருக முக்கிய காரணம் ஆகும். கலிவேளி சதுப்புநில ஏரி, இங்கு வருபவர்களை மூழ்கடிக்கும் ஆபத்து வாய்ந்ததாகவும், யானைக்கால், மலேரியா போன்ற கடும் நோய்களைப் பரப்பும் பூச்சிகள் உள்ள இடமாகவும் உள்ளது. மேலும், இந்த சதுப்புநில ஏரிப் பகுதியில், வேளாண்மைக்காக நில ஆக்ரமிப்பு, வன வேட்டை, காடழிப்பு, இறால் பண்ணை போன்றவை அதிகரித்து வருவதால், இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த ஏரியின் வாய்க்காலின் துவக்கத்தில் காலனி ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த ஆலம்பரை கோட்டை உள்ளது. தற்போது அக்கோட்டை அழிந்து காணப்படுகிறது. (நன்றி: விக்கிப்பீடியா, இணையதள செய்திகள்)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...