Friday, 17 January 2014

பொற்கோவில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் அம்பலம்

பொற்கோவில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் அம்பலம்

Source: Tamil CNN
அமிர்தசரஸ் பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து உதவியை இந்திரா காந்தி நாடியதாக வெளியான தகவல்களால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆபரேஷன் புளு ஸ்டார்’
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் கடந்த 1984–ம் ஆண்டு சீக்கியத் தீவிரவாதிகள் புகுந்து விட்டனர். இவர்கள் காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தவர்கள். இவர்களை பொற்கோவிலில் இருந்து வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை எடுத்தார்.அதன்படி, அந்த ஆண்டு ஜூன் மாதம் 3–ந்திகதி தொடங்கி 8–ந்திகதி வரை ராணுவம் புகுந்து பல்முனை தாக்குதல்களை நடத்தியது.
‘ஆபரேஷன் புளு ஸ்டார்’ என்ற பெயரிலான இந்த தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்திரா காந்தி எடுத்த இந்த ராணுவ நடவடிக்கை விமர்சனங்களை ஏற்படுத்தியது. அத்துடன் அடுத்த 4 மாதங்களில், அதாவது அக்டோபர் 31–ந்திகதி இந்திரா காந்தியை அவரது சீக்கியப்பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங் சுட்டுக்கொன்றனர்.
தாட்சர் உதவியை நாடினாரா?
இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது, இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்க்கரெட் தாட்சரின் உதவியை இந்திரா காந்தி அப்போது நாடியதாகவும், ‘ஆபரேஷன் புளு ஸ்டார்’ நடவடிக்கையை சரியாகத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதற்காக தாட்சர், இங்கிலாந்து விமானப்படை அதிகாரி ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் இப்போது தெரியவந்துள்ளது.
அது தொடர்பான தகவல்களை லண்டன் தேசிய ஆவணக்காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பொற்கோவில் தாக்குதல் நடத்துவதற்கு 4 மாதங்கள் முன்னதாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் இருந்து சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்றுவதில் இங்கிலாந்தின் ஆலோசனையை இந்திய அதிகாரிகள் கேட்டதை அம்பலப்படுத்தும் அதிமுக்கிய ரகசிய கடிதம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் வேண்டுகோள் ஏற்பு
அதில், ‘‘இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அதற்கு சாதகமான பதிலை இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் அனுப்ப முடிவு செய்துள்ளார். பிரதமருடனான உடன்படிக்கையின்படி, சிறப்பு விமானப்படை அதிகாரி இந்தியா சென்று வந்தார். அவர் ஒரு திட்டம் தீட்டித்தந்தார். அதற்கு இந்திரா காந்தி ஒப்புதல் அளித்தார். அந்த திட்டத்தை இந்திய அரசு விரைவில் அரங்கேற்றும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்புகிறது என கூறப்பட்டுள்ளது.இதுபற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின.
நடந்தது என்ன?
இதுதொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், ‘‘இதில் நடந்த உண்மை என்ன என்பதை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். இங்கிலாந்து நாட்டின் ஆலோசனையில் பேரில்தான் பொற்கோவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது வேறு எந்த நாட்டுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.பஞ்சாப்பை ஆளும் சிரோமணி அகாலிதளம் கட்சி, ‘‘உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் வெளிநாடு ஒன்றின் தொடர்பு சீக்கிய மக்களுக்கு கவலை அளிப்பதாக அமைந்துள்ளது’’ என கருத்து தெரிவித்தது.
மத்திய அரசு நடவடிக்கை
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இதுதொடர்பான தகவல்களை நாங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தோம். இதுபற்றிய தகவல்களை இங்கிலாந்து அரசிடம் கேட்டுள்ளோம். நடந்தது என்ன என்ற உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளாமல் இதுபற்றி மேலும் எதுவும் கூற இயலாது’’ என கூறினார்.இதற்கிடையே இந்த விவகாரத்தில் மந்திரி சபை செயலாளர் அறிக்கை அளிக்குமாறு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...