Tuesday 28 January 2014

மலேசியாவில் தேவாலயத்தின் மீது தாக்குதலை அடுத்து, போலிஸ் ரோந்து அதிகரிப்பு

மலேசியாவில் தேவாலயத்தின் மீது தாக்குதலை அடுத்து, போலிஸ் ரோந்து அதிகரிப்பு

Source: Tamil CNN
மலேசியாவின் பினாங் மாகாணத்தில் உள்ள கிறித்தவ தேவாலயங்களைச் சுற்றிலும், பாதுகாப்பு ரோந்துகளைத் தாங்கள் அதிகரித்திருப்பதாக மலேசியப் போலிசார் கூறுகின்றனர்.
கிறித்தவ தேவாலயம் ஒன்றின் மீது வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.
“அல்லா” என்ற சொல்லை, முஸ்லிமல்லாத பிற மதத்தினர் பயன்படுத்துவது குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணியில், கிறித்தவர்களுக்கும், முஸ்லீம் பெரும்பான்மையினருக்கும் இடையே பதற்றங்கள் அதிகரிக்கின்றன என்ற கவலைகளை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கிறது.
“அல்லா மிகப்பெரியவர், ஏசு, அல்லாவின் மகன்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பினாங்கில் உள்ள மூன்று கிறித்தவ தேவாலயங்களின் வெளியே தொங்கவிடப்பட்டிருந்தன. இந்தத் தேவாலயங்களில் ஒன்றுதான் தாக்குதலுக்குள்ளானது.
இந்தப் போஸ்டர்களை தாங்கள் வைக்கவில்லை என்று கிறித்தவ மதத் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தத் தாக்குதல் ஒரு பதிலடி நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
கடந்த அக்டோபரில், கடவுளைக் குறிக்கும் வகையில், ‘அல்லா’ என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஆனால் மலேசியாவின் போர்னியோ பகுதியில் வசிக்கும் கிறித்தவர்கள் தாங்கள் இந்த அரபு வார்த்தையைப் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...