Wednesday, 22 January 2014

செய்திகள் - 22.01.14

செய்திகள் - 22.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - செல்வம், மனிதர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், அதிகாரம் செய்யக்கூடாது

2. துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு திருஅவையின் கனிவான முகத்தைக் காட்டுவது நம் கடமை - கர்தினால் Veglio

3. இரண்டாம் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் கிடைக்க சிரியா கிறிஸ்தவர்கள் செபம், உண்ணாநோன்பு

4. சிரியாவை இரத்தத்தில் மூழ்கச் செய்துள்ள போருக்கு நிரந்தர முடிவு கிடைக்கும் - மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill நம்பிக்கை

5. அமெரிக்க அரசுத்தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க மார்ச் மாதம் வத்திக்கானுக்கு வருகை

6. எகிப்தின் புதிய சட்டங்கள் அந்நாட்டு மக்களின் பெருமளவு ஆதரவு பெற்றதற்கு கத்தோலிக்க ஆயர்கள் மகிழ்வு

7. திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படுவது மகிழ்வுதரும் ஒரு செய்தி - கர்தினால் Seán Brady

8. மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை - காமன்வெல்த் அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - செல்வம், மனிதர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், அதிகாரம் செய்யக்கூடாது

சன.22,2014. இவ்வுலகில் உருவாக்கப்படும் செல்வம், மனிதர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும், மனிதர்களை அதிகாரம் செய்யக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 21, இச்செவ்வாய் மாலை சுவிட்சர்லாந்தின் Davos நகரில் "உலகை மறுவடிவமைத்தல்: சமுதாயம், அரசியல், வர்த்தகம் ஆகியவற்றில் தாக்கம்" என்ற மையக்கருத்துடன் துவங்கிய உலகப் பொருளாதார மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
சனவரி 25, வருகிற சனிக்கிழமை முடிய நடைபெறும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். திருஅவையின் சார்பில், திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, நைஜீரியா நாட்டின் கர்தினால் John Onaiyekan, மற்றும் டப்ளின் பேராயர் Diarmud Martin ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மனிதகுலத்தின் நலவாழ்வு, கல்வி, தொடர்பு வசதிகள் ஆகியவற்றில் வர்த்தக உலகம் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், இத்துறைகளில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கொடுக்கப்பாடாமல், வறியோர் பலர் இந்த வசதிகளிலிருந்து புறக்கணிக்கப்படுவதையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கக்கூடிய ஒரு சமுதாயக் கட்டுமானத்தை உருவாக்கும் கடமை, பொருளாதார வல்லுனர்களுக்கும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உள்ளது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
உலகில் ஒவ்வொரு நாளும் பெருமளவு உணவு வீணாக்கப்படும் அதேவேளையில், பல்லாயிரம் மக்கள் பசியால் இறப்பது குறித்தும், பாதுகாப்பான இடம்தேடி நாடுவிட்டு நாடு செல்லும் மக்கள் ஆபத்தான பயணங்களில் இறப்பது குறித்தும் திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டின் தலைவரான பேராசிரியர் Klaus Schwab அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியினை, இச்செவ்வாய் மாலை, மாநாட்டின் துவக்க அமர்வில், கர்தினால் டர்க்சன் அவர்கள் வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு திருஅவையின் கனிவான முகத்தைக் காட்டுவது நம் கடமை - கர்தினால் Veglio

சன.22,2014. கடல்கொள்ளைக் காரர்களால் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பயணிகளையும், அவர்கள் குடும்பங்களையும் சிறப்பாக எண்ணிப்பார்க்கிறோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடல்பயணிகள் மேய்ப்புப்பணி குறித்த ஆண்டு கூட்டம் சனவரி 20 இத்திங்கள் முதல் 24, இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் நடைபெறுவதையொட்டி, குடியேற்றதாரர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio அவர்கள், அக்கூட்டத்தின் துவக்க அமர்வில்இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
கடல் பயணங்களின்போது கடத்தப்பட்டு துன்பங்களை அனுபவித்துவரும் நபர்களின் குடும்பங்களுக்கு திருஅவையின் கனிவான முகத்தைக் காட்டுவது, கடல்பயணிகள் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோரின் கடமை என்று கர்தினால் Veglio அவர்கள் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பன்னாட்டு உறுப்பினர்கள், சனவரி 22, இப்புதனன்று திருத்தந்தை தலைமையேற்று நடத்திய புதன் பொது மறையுரையிலும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இரண்டாம் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் கிடைக்க சிரியா கிறிஸ்தவர்கள் செபம், உண்ணாநோன்பு

சன.22,2014. நம்பிக்கையின் அடிப்படையிலும், அடிப்படை மனித உரிமைகளின் அடிப்படையிலும் சிரியாவில் உருவாகவேண்டிய ஒப்புரவு ஒன்றே, இரண்டாம் ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைக் கொணரும் என்று தமாஸ்கு முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் கூறினார்.
சிரியாவில் நடைபெற்றுவரும் போரினை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, சனவரி 22, இப்புதனன்று சுவிட்சர்லாந்தின் Montreux என்ற நகரில் துவங்கியுள்ள ஒரு பன்னாட்டு கருத்தரங்கைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் தீர்வுகள் கிடைக்கவேண்டுமென்ற விண்ணப்பங்களுடன் கிறிஸ்தவர்கள் செபம் மற்றும் உண்ணாநோன்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் முதுபெரும் தந்தை மூன்றாம் கிரகோரி லஹாம் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையே, இப்புதன் காலையில் துவங்கிய கூட்டத்தில், சிரியாவில் போராடிவரும் இரு தரப்பினரின் பிரதிநிதிகளுக்கிடையே காரசாரமான குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டன என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / BBC

4. சிரியாவை இரத்தத்தில் மூழ்கச் செய்துள்ள போருக்கு நிரந்தர முடிவு கிடைக்கும் - மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill நம்பிக்கை

சன.22,2014. "இரண்டாம் ஜெனீவா" என்ற பெயரில் துவங்கியுள்ள கருத்தரங்கு, சிரியா நாட்டை இரத்தத்தில் மூழ்கச் செய்துள்ள போருக்கு ஒரு நிரந்தர முடிவைக் கொணரும் என்று தான் நம்புவதாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவர் Kirill அவர்கள் கூறினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு முயற்சியாக, சுவிட்சர்லாந்தின் Montreux என்ற நகரில், இப்புதனன்று துவங்கியுள்ள இக்கூட்டத்தில் நிகழ்வனவற்றை, உலகில் அமைதியை விரும்பும் அனைத்து உள்ளங்களும் ஆவலோடு பின்பற்றுகின்றனர் என்று மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும், சிரியாவில் நிகழும் போரின் ஒரு பக்க விளைவாக, அந்நாட்டில் கடத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்த்தடாக்ஸ் சபை ஆயர்கள் இருவரை விடுவிக்கக் கோரியும் மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill அவர்கள்  விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில், மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த Boulos Yazigi, மற்றும் Mar Gregorios Youhanna Ibrahim ஆகிய இரு ஆயர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடத்தப்பட்டனர். இவர்களைக் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews

5. அமெரிக்க அரசுத்தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க மார்ச் மாதம் வத்திக்கானுக்கு வருகை

சன.22,2014. வருகிற மார்ச் 27ம் தேதி, வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வத்திக்கானுக்கு வருகை தருகிறார் என்று அமெரிக்க அரசும், திருப்பீடமும் அறிவித்துள்ளன.
சனவரி 21, இச்செவ்வாயன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான இச்செய்தியை, திருப்பீடப் பத்திரிக்கை அலுவலகத்தின் தலைவர், இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் உறுதி செய்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற திருப்பலியில், அமெரிக்க அரசின் சார்பில், அந்நாட்டுத் துணைத் தலைவர் Joe Biden அவர்கள் பங்கேற்றதும், இவ்வாண்டு சனவரி 14ம் தேதி, அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் John Kerry அவர்கள், திருப்பீடச் செயலரும் அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பேராயர் Pietro Parolin அவர்களைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அணு ஆயுதங்கள் குறித்து, நெதர்லாந்தில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில்நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கான் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபின், இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களையும், பிரதமர் Enrico Letta அவர்களையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வத்திக்கானில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. எகிப்தின் புதிய சட்டங்கள் அந்நாட்டு மக்களின் பெருமளவு ஆதரவு பெற்றதற்கு கத்தோலிக்க ஆயர்கள் மகிழ்வு

சன.22,2014. எகிப்தில் வரையறுக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களுக்கு, அந்நாட்டு மக்களில் 98 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருப்பது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று காப்டிக் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
எகிப்து ஒளிநிறைந்த ஓர் எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை, மக்களின் இந்த வாக்களிப்பு தெரிவிக்கிறது என்று Luxor ஆயர்கள் Antonios Aziz Mina அவர்களும், Joannes Zakaria அவர்களும் Aid to the Church in Need என்ற அமைப்பினருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
2012ம் ஆண்டு எகிப்தின் முன்னாள் தலைவர் Mohammed Morsi அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்ட சட்டத்திருத்தங்களை 64 விழுக்காட்டினரே ஆதரித்தனர் என்றும், தற்போதைய சட்டத்திருத்தங்களை 98 விழுக்காட்டினர் ஆதரித்துள்ளனர் என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டினர்.
புதிய சட்டச் சீர்திருத்தங்கள் குழுவின் ஓர் உறுப்பினராக இருந்த ஆயர் Aziz Mina அவர்கள், புதிய சட்டங்களின் வழியாக, கிறிஸ்தவர்களின் வாழ்வும் உடமைகளும் பாதுக்காக்கப்படும் என்று கூறினார்.

ஆதாரம் : ICN / ACN

7. திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படுவது மகிழ்வுதரும் ஒரு செய்தி - கர்தினால் Seán Brady

சன.22,2014. திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படுவது மகிழ்வுதரும் ஒரு செய்தி என்றும், திருஅவைக்கும் ஒரு நாட்டின் அரசுக்கும் இடையே இருக்கவேண்டிய ஆக்கப்பூர்வமான உறவின் வெளிப்பாடு இதுவென்றும் அயர்லாந்தின் கர்தினால் Seán Brady அவர்கள் கூறினார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்ட திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகம் மீண்டும் துவக்கப்படும் என்று அயர்லாந்து அயல்நாட்டு உறவுகள் அமைச்சர் TEG இச்செவ்வாயன்று அறிவித்ததைத் தொடர்ந்து, கர்தினால் Seán Brady அவர்கள் இவ்வாறு கூறினார்.
அயர்லாந்து அரசு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து அயர்லாந்துக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown அவர்களும் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
1929ம் ஆண்டு முதல் அயர்லாந்து நாடும் திருப்பீடமும் தூதரகத் தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை - காமன்வெல்த் அறிக்கை

சன.22,2014. இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எவ்வகையிலும் முன்னேற்றமடையவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய (Commonwealth) நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து இத்திங்கள் இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் அந்நாடுகளில் மனித உரிமைகள் நிலவரம் எவ்வாறு இருந்த்தென்பதை விவரிக்கிறது.
கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்குபெற வடபகுதியைச் சேர்ந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு போக முற்பட்ட வேளையில், இராணுவத்தினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறும் அவ்வறிக்கை, அந்நிகழ்வில் கலந்துகொண்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறுகிறது.
அதேபோல பொதுநலவாய (Commonwealth) நாடுகளுக்கான மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்துப்பட்டு பவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...