Friday, 17 January 2014

செய்திகள் - 16.01.14

செய்திகள் - 16.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு என்று இயேசு கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு தொடர்பு இல்லாதபோது, திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் எழுகின்றன

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருத்தந்தையின் இல்லத்திற்குத் தலைவராக இருப்பவர் கிறிஸ்துவே

4. புனிதர் நிலைக்கு பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளின் செலவுகளை திருஅவை குறைத்துள்ளது

5. ஐ.நா. பொதுஅவை, குழந்தைகள் உரிமைகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு திருப்பீடம் முழு ஆதரவு தந்தது - திருப்பீடப் பேச்சாளர் Lombardi

6. Gaza நிலப்பகுதி மனிதர்கள் உருவாக்கிய ஒரு பெரும் அநீதி - கத்தோலிக்க ஆயர்கள்

7. மக்களுடன் நெருங்கி வரும் அற்புதக் கொடையை, திருத்தந்தை பெருமளவில் பெற்றுள்ளார் - இராபி Abraham Skorka

8. அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு என்று இயேசு கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

சன.16,2014. அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவுஎன்று இயேசு கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின்வரும் நல்லாயன் ஞாயிறு, இறை அழைத்தலுக்காக செபங்களை எழுப்பும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இறை அழைத்தலுக்காக செபங்களை எழுப்பும் 51வது நாளுக்கென இவ்வியாழனன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
"அறுவடை மிகுதி" என்று இயேசு குறிப்பிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று தன் செய்தியைத் துவக்கும் திருத்தந்தை, உழுதல், பயிரிடுதல் போன்ற பணிகள் எதையும் குறிப்பிடாமல் அறுவடையைக் குறிப்பிடும் இயேசு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் என்றும், கிறிஸ்துவின் இந்தக் கூற்று, இவ்வுலகில் இறைவன் ஏற்கனவே அறுவடையை வழங்கியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும்  விளக்குகிறார் திருத்தந்தை.
நான்கு பகுதிகளாக அமைந்துள்ள இச்செய்தியில், இறை அழைத்தல் என்பது கிறிஸ்துவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
நல்ல நிலங்களாக வாழ்வது என்பது இன்றைய காலக் கட்டத்தில் சவால்கள் நிறைந்த ஓர் அழைப்பு என்பதையும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இத்தகைய நிலங்களாக வாழ்வது உலகம் காட்டும் வழிகளிலிருந்து வேறுபட்டது என்று எடுத்துரைக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனோடு தொடர்பு இல்லாதபோது, திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் எழுகின்றன

சன.16,2014. தவறான வழியில் செல்லும் அருள் பணியாளர்கள், வாழ்வளிக்கும் வானக உணவை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, நஞ்சு கலந்த உணவைத் தருகின்றனர் என்ற கடினமானதொரு கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை அவர்கள், இறைவாக்கினர் ஏலியின் இரு புதல்வர்கள் தவறான வழியில் சென்ற குருக்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டி, இக்கருத்தை தன் மறையுரையில் வெளியிட்டார்.
இறைவனோடும், அவர் வழங்கும் வார்த்தைகளோடும் நாம் கொள்ளவேண்டியத் தொடர்பைப்பற்றிச் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, இந்தத் தொடர்பு இல்லாதபோது, திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் எழுகின்றன என்று எடுத்துரைத்தார்.
அருள் பணியாளர்கள், ஆயர்கள், பொதுநிலையினர் என்ற பல நிலைகளில் திருஅவையில் தவறான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பதைக் கூறியத் திருத்தந்தை, இத்தகையத் தவறுகளால் திருஅவை இறை மக்களை இழந்துள்ளது என்பதையும் கூறினார்.
இஸ்ரேல் மக்கள் மத்தியில் உடன்படிக்கைப் பேழை இருந்தபோதிலும், அவர்கள் போரில் தோல்வியடைந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையை அல்லது புனிதர்கள் உருவத்தை அணிந்திருப்பதால் மட்டும் நாம் தோல்விகளிலிருந்து தப்பிக்கமுடியாது என்று வலியுறுத்தினார்.
மேலும், "அமைதிக்காக செபிப்பதோடு, அந்த அமைதியை நமது குடும்பங்களில் உருவாக்குவதிலிருந்து ஆரம்பிப்போம்" என்ற வார்த்தைகளை தன் Twitter செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருத்தந்தையின் இல்லத்திற்குத் தலைவராக இருப்பவர் கிறிஸ்துவே

சன.16,2014. திருத்தந்தையின் இல்லத்திற்குத் தலைவராக இருப்பவர் ஆண்டவர் கிறிஸ்துவே, அவருக்குச் சீடர்களாகவும், ஊழியர்களாகவும் இருக்கவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இல்லத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்பதிலும், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் இவ்வியாழன் நண்பகல் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறினார்.
இப்புதனன்று திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில், இறைவனின் குரலைக் கேட்பதற்குப் பழகிய இறைவாக்கினர் சாமுவேலைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, திருத்தந்தையின் இல்லத்திலும் இறைவனின் குரலைக் கேட்பதற்கும், அதற்கு இயைந்து நடப்பதற்கும் நாம் அனைவரும் பழக வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் இல்லப் பணியாளர்கள் என்ற குழுவினர் 1592ம் ஆண்டு திருத்தந்தை 8ம் Clement அவர்களின் காலத்தில் உருவாகியிருந்தாலும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களே, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு நிலையை, 1968ம் ஆண்டில் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புனிதர் நிலைக்கு பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளின் செலவுகளை திருஅவை குறைத்துள்ளது

சன.16,2014. புனிதர் நிலைக்குப் பரிந்துரைக்கப்படும் அனைவருமே சமமானவர்கள் என்பதால், அவர்களைப் புனிதர்களாக்கும் வழிமுறைகளில் செலவுகளைக் குறைக்கவும், அனைவருக்கும் சமமான மதிப்பளிக்கவும் புதிய சீர்திருத்தங்கள் திருஅவையில் இவ்வாண்டு துவக்கத்திலிருந்து புகுத்தப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனிதர்நிலை பரிந்துரை வழிமுறைகளுக்கென நிறுவப்பட்டுள்ள திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் பகிர்ந்துகொண்ட இக்கருத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் இச்செவ்வாயன்று வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் புனிதமான வாழ்வை மேற்கொண்ட பலரையும் புனித நிலைக்கு உயர்த்தும் வழிகளை அனைத்து நாடுகளும் சமமான நிலையில் பின்பற்றும் வகையில் இந்த வழிமுறைகள் விரைவில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தெரிவித்தார்.
தற்போதைய வழக்கப்படி, புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் வழிமுறைகள் ஒரு சில ஆண்டுகளிலிருந்து, பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கிறது என்பதும், வருகிற ஏப்ரல் மாதம் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் வழிமுறையே மிகக் குறுகிய காலமான 9 ஆண்டுகள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : L’OR / Reuters

5. ஐ.நா. பொதுஅவை, குழந்தைகள் உரிமைகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு திருப்பீடம் முழு ஆதரவு தந்தது - திருப்பீடப் பேச்சாளர் Lombardi

சன.16,2014. குழந்தைகளின் உரிமைகள் என்ற மையக்கருத்துடன் ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் அமர்வில், திருப்பீடத்திற்கு தரப்படும் அனைத்து பரிந்துரைகளையும் மனதார ஏற்பதற்கு திருஅவை தயாராக உள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இவ்வியாழன் துவங்கியுள்ள ஐ.நா. அமர்வில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளச் சென்றுள்ள பேராயர் சில்வானொ தொமாசி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
குழந்தைகள் குறித்த உரிமைகள் என்பது சட்டப்பூர்வமாக்கப்படும் முயற்சிகளை ஐ.நா. பொது அவை, 1990ம் ஆண்டு, முன்வைத்தபோது, அந்த முயற்சிகளுக்கு திருப்பீடம் முழு ஆதரவு தந்தது என்பதை, திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, குழந்தைகள் குறித்த இரு அறிக்கைகளை 1994ம் ஆண்டும், 2011ம் ஆண்டும் திருப்பீடம் வெளியிட்டுள்ளது என்றும் அருள் பணியாளர் Lombardi விளக்கிக் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் குழந்தைகளுக்கு அவர் தரும் முக்கியத்துவத்தை உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதில் திருஅவை எள்ளளவும் பின்வாங்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. Gaza நிலப்பகுதி மனிதர்கள் உருவாக்கிய ஒரு பெரும் அநீதி - கத்தோலிக்க ஆயர்கள்

சன.16,2014. இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டுக்கும் இடையே சிக்கியுள்ள Gaza நிலப்பகுதி மனிதர்கள் உருவாக்கிய ஒரு பெரும் அநீதி என்றும், இந்த அநீதிக்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்றும் கத்தோலிக்க ஆயர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது.
சனவரி 11 கடந்த சனிக்கிழமை முதல் சனவரி 16, இவ்வியாழன் முடிய புனித பூமியில் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பன்னாட்டு ஆயர்கள் இணைந்து, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
1998ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் வட அமேரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு சில ஆயர்கள் புனித பூமிக்குப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு இப்பயணத்தை மேற்கொண்ட 13 ஆயர்களின் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், Gaza பகுதியைக் குறித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், அந்நிலப்பரப்பில் வாழும் எளிய மக்களிடையே தாங்கள் கண்ட நம்பிக்கையையும், ஒற்றுமையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
இவ்விரு நாடுகளிலும் உள்ள அரசுத் தலைவர்கள், மக்களின் நம்பிக்கையை குலைக்கும் தடைகளாக இல்லாமல், அதை வளர்க்கும் கருவிகளாக இருக்கவேண்டும் என்ற தங்கள் ஆவலை ஆயர்கள் இந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. மக்களுடன் நெருங்கி வரும் அற்புதக் கொடையை, திருத்தந்தை பெருமளவில் பெற்றுள்ளார் - இராபி Abraham Skorka

சன.16,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் அங்குள்ள மக்களின் மனங்களைத் தொட்டு, ஓர் ஆன்மீக புத்துணர்வைக் கொணரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று யூத மதத் தலைவர் ஒருவர் கூறினார்.
ஆர்ஜென்டீனாவின், Buenos Aires நகரில் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்க யூத குருக்கள் பயிற்சி இல்லத்தின் தலைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருங்கிய நண்பருமான இராபி Abraham Skorka அவர்கள், Avvenire என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
இராபி Skorka அவர்கள், இவ்வியாழனன்று உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், கத்தோலிக்க, யூத மதங்களுக்கிடையே உள்ள உறவு குறித்து ஒரு கருத்தரங்கை தலைமையேற்று நடத்தினார்.
அவரது உரோம் நகர் பயணத்தின்போது, Avvenire என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மக்களுடன் நெருங்கி வரும் அற்புதக் கொடையை திருத்தந்தை பெருமளவில் பெற்றுள்ளார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இராபி Skorka அவர்களும் இணைந்து, வானமும் வையமும் என்ற பொருள்படும் “El cielo y la terra” என்ற நூலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : VIS / Zenit

8. அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்

சன.16,2014. மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கு 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் ஒரு புதிய ஆய்வு எச்சரித்திருக்கிறது.
பந்த்தேரா (Panthera) என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பகுதியில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில், இந்தப் பகுதிக்கே உரிய தனிப்பட்ட வகையானதும், மரபணு முறையில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள், வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு விழுக்காடு இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
சிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான Philipp Henschel கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்கத் தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் Henschel தெரிவித்தார்.

ஆதாரம் : BBC
 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...