செய்திகள் - 14.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசம் மனிதரின் தோள்மீதுள்ள சுமை அல்ல
2. திருத்தந்தை பிரான்சிஸ்: கர்தினால்களின் பணி திருஅவைக்குத் தொண்டுபுரிவதாகும்
3. புனித பூமியில் குடியேற்றதாரர்க்கு நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காண முடிகின்றது, மேற்குலக ஆயர்கள்
4. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க அரசு இராணுவக் கொள்கையை அதிக அளவில் திணிக்கின்றது, அமெரிக்க ஆயர்கள் குறை
5. எகிப்தில் புதிய அரசியல் அமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்
6. வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாக்க இலங்கை-சவுதி உடன்பாடு
7. தமிழக மலைக் கிராமங்களில் 80 விழுக்காட்டுக் குழந்தைத் திருமணங்கள்
8. முதல் உலகப் போர் வீரர்களின் தினசரிக் குறிப்புகள் இணையத்தில்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : விசுவாசம் மனிதரின் தோள்மீதுள்ள சுமை அல்ல
சன.14,2014. இயேசுவைப்போல் வாழும் கிறிஸ்தவர்கள், மக்களைத் தேடிச் செல்வதிலும், மக்களைக் குணப்படுத்துவதிலும், அவர்களை அன்பு கூர்வதிலும் ஆர்வமாக இருப்பவர்கள், இவர்கள் பரிசேயர்கள், சட்டவல்லுனர்கள் அல்லது ஊழல்வாதிகள் போன்று இருப்பவர்கள் அல்ல எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், ‘எடுத்துக்காட்டான’ வாழ்வு வாழும் விசுவாசிகள் பற்றி விளக்கினார் திருத்தந்தை.
மறைநூல் அறிஞர்கள் போலன்றி, அதிகாரமுள்ளவராக இயேசு எவ்வாறு போதித்தார் என்று கூறிய திருத்தந்தை, மறைநூல் அறிஞர்கள் போதித்தார்கள், மக்கள்மீது பளுவான சுமையை சுமத்தினார்கள், ஏழை மக்கள் முன்னோக்கி நகர முடியாதபடி அது இருந்தது என்றும் கூறினார்.
குழந்தை வரத்துக்காக ஆண்டவரிடம் கண்ணீரோடு முணுமுணுத்து செபித்த அன்னா, குடித்துவிட்டு
இவ்வாறு செபித்துக்கொண்டிருக்கிறார் என ஆலயக் குரு ஏலி தவறாகப்
புரிந்துகொண்டதை விளக்கும் இந்நாளின் முதல் வாசகத்தையும் விளக்கிய
திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசத்தின் தலைவராக, விசுவாசத்தின் பிரதிநிதியாக இருக்கும் இவரின் இதயம் அந்தப் பெண்ணைப் புரிந்துகொள்ளவில்லை என்று கூறினார்.
கடவுளுக்குச்
சாட்சிகளாக இருக்க வேண்டியவர்களால் அன்பு கூரப்படாததை இறைமக்கள் எத்தனை
தடவைகள் உணர்ந்திருப்பார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தங்கள் சூழ்நிலைகளால் ஆதாயம் தேடும் ஊழல்மிக்க கிறிஸ்தவர்கள், ஊழல்மிக்க குருக்கள், ஊழல்மிக்க ஆயர்கள் யார் யார் என்பதையும் விளக்கினார்.
குரு ஏலியின் மகன்கள் போன்று ஊழல்வாதிகளாக வாழாமல் இருக்கவும், இயேசுவைப் போன்று மக்களை அன்புசெய்து, மக்களைக் குணப்படுத்தி, மக்களைத் தேடிச் செல்பவர்களாக வாழவும் ஆண்டவரிடம் வரம் கேட்போம் என மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ்: கர்தினால்களின் பணி திருஅவைக்குத் தொண்டுபுரிவதாகும்
சன.14,2014. திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்படுவது, ஓர் அலங்கரிப்பு அல்ல, மாறாக, திருஅவைக்குத் தொண்டுபுரிவதற்காக வழங்கப்படும் ஒரு பணிஉயர்வு என, திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
சனவரி 12,
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் அறிவித்த 19 புதிய கர்தினால்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்
ஆண்டவர் இயேசுவின் குணநலன்களையும் உணர்வுகளையும் அணிந்துகொண்டு உரோம்
திருஅவையுடன் இணைந்து அகிலத் திருஅவைக்குத் தான் ஆற்றும் பணிகளில் தனக்கு
இந்தப் புதிய கர்தினால்கள் உதவுவார்கள் என்று தான் நம்புவதாகவும்
அக்கடிதத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் கர்தினால்களின் பணியை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஒரு பதவி உயர்வோ, ஒரு கவுரவமோ அல்லது அணிசெய்வதாகவோ இல்லை, மாறாக, இது பணி செய்வதற்கு அவர்களின் கண்ணோட்டத்தையும், இதயங்களையும் விரிவுபடுத்துவதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில், நாம் எப்பொழுதும், கடவுளே, உமக்கு நன்றி எனச் சொல்வோம், சிறப்பாக, அவரது பொறுமைக்கும் கருணைக்கும் நன்றி சொல்வோம் என எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. புனித பூமியில் குடியேற்றதாரர்க்கு நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காண முடிகின்றது, மேற்குலக ஆயர்கள்
சன.14,2014. புனித பூமியில் குடியேற்றதாரர்க்கு நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காண முடிகின்றது என, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
புனிதபூமித் தலத்திருஅவைகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் கூட்டமைப்பு இவ்வாறு கூறியது.
பூனிதபூமியில் திருப்பயணம் மேற்கொண்டுவரும் இந்த ஆயர்கள் கூட்டமைப்பு, காசாவில் திருப்பலி நிறைவேற்றி, இஸ்ரேலின் தெல் அவிவ் நகரிலுள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுத் தூதர்களையும் சந்தித்துள்ளது.
இஸ்ரேலில் நுழைவதற்கும், அந்நாட்டைவிட்டு
வெளியேறுவதற்கும் காசா மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடும்
கட்டுப்பாடுகளைத் தாங்கள் அறியவந்ததாகத் தெரிவித்த ஆயர்கள், தெல் அவிவ் போன்ற நவீன நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஏழ்மை நிலையைக் காண முடிகின்றது என்றும் கூறினர்.
இவ்வாறு ஏழ்மையான பகுதிகளில் வாழ்வோரில் பெரும்பாலானோர் ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி, பிலிப்பின்ஸ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அடைக்கலம் தேடியவர்கள் என்றும் ஆயர்கள் தெரிவித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க அரசு இராணுவக் கொள்கையை அதிக அளவில் திணிக்கின்றது, அமெரிக்க ஆயர்கள் குறை
சன.14,2014.
மெக்சிகோவில் போதைப்பொருளைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்க ஐக்கிய
நாட்டு அரசு தனது இராணுவக் கொள்கையை அதிக அளவில் திணிக்கின்றது என்று
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் இரு பணிக்குழுக்கள் குறை
கூறியுள்ளன.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கென நிதி ஒதுக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்து, குடிமக்கள் சமுதாயத்தை வலுப்படுத்தி, மனிதாபிமான மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என, அப்பணிக்குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க ஆயர்கள் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழு, அனைத்துலக
நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு ஆகிய இரண்டின் தலைவர்கள் இணைந்து
அந்நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விவகாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மெக்சிகோவும், அமெரிக்க
ஐக்கிய நாடும் இணைந்து செய்யும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து
பரிசீலனை செய்யுமாறு அப்பணிக்குழுக்களின் தலைவர்களான மியாமி பேராயர் Thomas Wenski ம், Des Moines ஆயர் Richard Patesம் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, இவ்விரு நாடுகளின் எல்லையில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்காணிப்பதற்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Robotகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides
5. எகிப்தில் புதிய அரசியல் அமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்
சன.14,2014.
எகிப்தில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள புதிய அரசியல் அமைப்பு குறித்த
பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் அனைத்துக் கிறிஸ்தவர்களும்
பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின்
தலைவர்கள்.
இந்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் பங்கெடுப்பது, அனைத்துக் கிறிஸ்தவர்களின் கடமையும் பொறுப்பும் என்று, அந்நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அச்சபையின் கிறிஸ்மஸ் விழாத் திருப்பலியின்போதே கூறியுள்ளார்.
மேலும், எகிப்தில் இச்செவ்வாய், இப்புதன் தினங்களில் இடம்பெறும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்புக்கென, ஏற்கனவே பணியிலுள்ள பாதுகாப்புப் படையினர், அவசரகாலப் படைப்பிரிவினர் தவிர, மேலும் 2 இலட்சம் காவல்துறையினரையும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தியுள்ளது அந்நாட்டு உள்துறை அமைச்சகம்.
ஆதாரம் : Fides
6. வீட்டுப் பணிப்பெண்களைப் பாதுகாக்க இலங்கை-சவுதி உடன்பாடு
சன.14,2014. வீட்டுப் பணிப்பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தொழில்சார்ந்த முக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சவுதி அரசும் இலங்கை அரசும் இத்திங்களன்று கையெழுத்திட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சர் Adel Mohammed Fakih, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் Dilan Perera ஆகிய இருவரும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடம், அதிக ஊதியம், உரிமைப்
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு இந்த இருநாடுகளின்
ஒப்பந்தம் அடிப்படையாக அமைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பெருமளவிலான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவுக்கேச் செல்கின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி, ஏறக்குறைய நாலரை இலட்சம் இலங்கைத் தொழிலாளர்கள் சவுதியில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்; இவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்கள்.
இதற்கிடையே, இலங்கை
அரசு முதலில் உள்நாட்டுத் தொழில்சட்டங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Gulf Business
7. தமிழக மலைக் கிராமங்களில் 80 விழுக்காட்டுக் குழந்தைத் திருமணங்கள்
சன.14,2014. தமிழக மலைக் கிராமங்களில், 80 விழுக்காட்டுக் திருமணம், குழந்தைத் திருமணங்களாக நடக்கும் அதிர்ச்சி தகவல், மலைக் கிராம குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அம்மக்கள் வாழும் ஊர்களிலேயே, மேல்நிலைப்பள்ளிப் படிப்பை படிக்க வழி இல்லாதது, போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தராதது போன்றவை, இதற்கு முக்கிய காரணங்கள் என அந்த ஆய்வின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.
தமிழக மலைக் கிராமங்களில், 80 விழுக்காட்டுக் திருமணங்கள், குழந்தை திருமணங்களாக நடந்து வருகின்றன.
தமிழகத்தின், பர்கூர்
மலைக் கிராமமான ஜீயன்தொட்டி கொங்கடையில் 93 குடும்பங்களில் 432 பேர்
உள்ளனர். இவர்களில் திருமணமானவர்கள் 257 பேர். இவர்களில் 18 வயதை
அடையும்முன் திருமணம் செய்தவர்கள் 206 பேர். இதன்படி 80 விழுக்காட்டுத்
திருமணங்கள், குழந்தைத் திருமணங்களாக நடந்துள்ளன.
மேலும், உலக அளவில் இடம்பெறும் குழந்தைத் திருமணங்களில் 45 விழுக்காடு, இந்தியாவில் நடப்பதாக ஐ.நாவின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : தினமலர்
8. முதல் உலகப் போர் வீரர்களின் தினசரிக் குறிப்புகள் இணையத்தில்
சன.14,2014. முதலாம் உலகப்போரின்போது அப்போரில் ஈடுபட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள் போரின்போது எழுதிய தினசரிக் குறிப்புகளில், 15 இலட்சம் பக்கங்களுக்கு மேற்பட்ட 3 இலட்சம் டிஜிட்டல் தினசரிக் குறிப்புகள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக, இத்தினசரிக் குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கத் திட்டமிடப்பட்டது.
1914ம்
ஆண்டு ஜூலை 28 முதல் 1918ம் ஆண்டு நவம்பர் 11 வரை இடம்பெற்ற முதல்
உலகப்போரில் 8 இலட்சத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டனர். 2
கோடியே 20 இலட்சம் பேர் காயமடைந்தனர்.
1914ம்
ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து பிரான்சின்
ப்ளாண்டர்ஸிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியது வரையிலான
காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பிரித்தானிய இராணுவப் பிரிவுகள்
அதிகார பூர்வமான தினசரிக் குறிப்புகளில் எழுதி வைத்திருந்தன.
மொத்தம் ஏறக்குறைய 15 இலட்சம் தினசரிக் குறிப்புப் பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் இதுவரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 தினசரிக் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளில் அனுபவங்களை விளக்குகின்றன.
இராணுவத் தளபதி CJ Paterson, தனது குறிப்பு ஒன்றில், போரின்போது தான் கண்ட காட்சிகள் "விவரிக்க முடியாதவை" என்றும், "பதுங்கு குழிகள்,பொருட்கள், இரத்தக்கறை தோய்ந்த ஆடைகளின் பகுதிகள், வெடி மருந்துகள், கருவிகள், தொப்பிகள், மேலும் பிற பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடக்கின்றன, எல்லாத்திசைகளிலும் மனித உடல்கள், அவைகளில் சில நமது ஆட்கள்" என்றும் விவரித்திருந்தார்.
இந்தக் குறிப்பை எழுதிய ஆறு வாரங்களில் அவரும் கொல்லப்பட்டார்.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment