செய்திகள் - 11.04.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மனித வாழ்வின் புனிதம், எவ்வித நடவடிக்கைகளாலும் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
2. சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்திய அருள்பணியாளர்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன், திருத்தந்தை பிரான்சிஸ்
3. திருத்தந்தை பிரான்சிஸ் : 21ம் நூற்றாண்டில் தீயவன் இருக்கிறான், சோதனைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
4. வெனெசுவேலாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமாறு திருத்தந்தை வேண்டுகோள்
5. சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்புக்கு Pax Christi அனைத்துலக விருது
6. பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதச் சிறுமிகள், முஸ்லிம்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்
7. சிரியா புலம்பெயர்ந்தோர்க்கென மேலும் அதிகமான அகதிகள் முகாம்கள் திறக்கப்பட வேண்டும்
8. உலகில் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா. குற்றவியல் நிறுவனம்
9. 2015ம் ஆண்டுக்குள் அனைத்துச் சிறாருக்கும் கல்வி, பான் கி மூன்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மனித வாழ்வின் புனிதம், எவ்வித நடவடிக்கைகளாலும் குறைத்து மதிப்பிடப்படக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.11,2013. பொருளாதாரத்துக்கும் நன்னெறிக்கும் இடையே நிலவும் பிரிவினை, இந்நவீன உலகு எதிர்நோக்கும் கடும் சவால்களில் ஒன்றாக உள்ளவேளை, இதனால் மனித இயல்பின் அடிப்படை அறநெறிக்கூறுகள் அதிகமதிகமாய்ப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இத்தாலிய வாழ்வு இயக்கத்தின் ஏறக்குறைய 470 பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்வை, குறிப்பாக, கருவில் வளரும் குழந்தைகள், அப்பாவிகள்
மற்றும் வலுவற்றவர்களின் வாழ்வை நேரடியாகத் தாக்கும் எந்த ஒரு செயலுக்கும்
எதிராகக் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
தாயின் கருவறையிலிருந்து இயற்கையான மரணம் அடையும்வரை மனித வாழ்வு காக்கப்பட வேண்டும், கருச்சிதைவு, குழந்தைக்கொலை ஆகியவை கொடிய குற்றங்களாகும் என, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறியிருப்பதை நினைவுபடுத்துவோம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மனித வாழ்வு புனிதமானது மற்றும் மதிக்கப்பட வேண்டியது என்றும், மனிதர் வாழ்வதற்கான முதலும், அடிப்படையுமான உரிமையை ஏற்பதன் அடிப்படையில் ஒவ்வொரு குடியுரிமைச் சட்டமும் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த உரிமை பொருளாதார அல்லது கருத்தியல் அல்லது எவ்வித நிலையாலும் மீறப்படக் கூடாது என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இத்தாலிய வாழ்வு இயக்கத்தினரின் பணிகளை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வியக்கத்தினருக்காகத் தான் செபிப்பதாகவும், தனக்காக அவர்கள் செபிக்குமாறும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், சமுதாயத்தின் நம்பிக்கையாகிய குழந்தைகளையும் முதியோரையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்திய அருள்பணியாளர்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன், திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.11,2013. உலகிலுள்ள எல்லா அருள்பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, மிகச்
சிறிய எண்ணிக்கையிலுள்ள அருள்பணியாளர்களால் சிறாருக்கு இழைக்கப்பட்டுள்ள
பாலியல் முறைகேடுகள் உட்பட்ட அனைத்துத் தீமைகளையும் என் தோள்மீது சுமக்க
வேண்டிய பொறுப்பை உணர்ந்து, அத்தீமைகளுக்காக, தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் சில மனிதர்களால் இழைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் அறநெறிப் பாதிப்புக்களைத் திருஅவை அறிந்தே இருப்பதாகவும், இப்பிரச்சனை குறித்தும், அத்தீமைக்கு
எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்தும் திருஅவை எடுத்துவரும்
நடவடிக்கைகளில் ஓர் அடிகூட பின்வாங்காது எனவும் கூறிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், அதற்கு மாறாக, திருஅவை இன்னும் கடுமையாகக்கூடச் செயல்படும் எனவும், ஏனெனில் சிறாரின் வாழ்வில் எவரும் தலையிட முடியாது எனவும் கூறினார்.
பாரிஸ் நகரை மையமாகக் கொண்டு செயல்படும், BICE என்ற அனைத்துலக கத்தோலிக்க குழந்தைநல அமைப்பின் தலைவர், செயலர் என எட்டு முக்கிய உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
சிறார் மற்றும் இளையோரைப் பரிசோதனைப் பொருள்களாகப் பயன்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் தான் புறக்கணிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, தங்கள்
பிள்ளைகளுக்கு நன்னெறி மற்றும் சமயக்கல்வியை வழங்குவதற்குப்
பெற்றோருக்கும் இருக்கும் உரிமைக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும்
கூறினார்.
சிறாரின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்கு உதவும், ஒரு தந்தை மற்றும் ஒரு தாயைக் கொண்டுள்ள குடும்பச் சூழலில் வளர்வதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அடிமைத் தொழில், படைப்பிரிவில்
சேர்க்கப்படல் உட்பட சிறாருக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து
வன்முறைகளுக்கும் எதிரான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது இக்காலத்தில்
மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : 21ம் நூற்றாண்டில் தீயவன் இருக்கிறான், சோதனைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
ஏப்.11,2013. நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் சாத்தான் இருக்கிறான், நமக்கு வருகின்ற சோதனைகளுக்கு எதிராக எப்படி போராடுவது என்பதை நற்செய்தியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது சோதனைகள் குறித்து நாம் விழிப்பாய் இருக்க வேண்டுமென்றும், தொடக்கத்திலேயே சோதனைக்கு நம்மை உட்படுத்தினால் அது மற்றவர்களுக்கும் பரவி அதை நியாயப்படுத்தும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு தமது வாழ்வில் தீயவனுக்கும், அவனது சோதனைகளுக்கும் எதிராக எவ்வாறு போராட வேண்டியிருந்ததோ அவ்வாறே, ஒவ்வொரு
கிறிஸ்தவரின் வாழ்வும் தீமைக்கு எதிரான தொடர் போராட்டமாக அமைந்துள்ளது
என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது ஆன்மீக வாழ்வு மற்றும் நமது கிறிஸ்தவ வாழ்வின் சட்டம், போராட்டமாக இருப்பதால் நாம் அனைவரும் சோதிக்கப்படுகிறோம் எனவும், இவ்வுலகின் இளவரசனான சாத்தான் நமது தூய்மையான வாழ்வையும், நாம் கிறிஸ்துவைப் பின்செல்வதையும் விரும்பவில்லை எனவும் கூறினார் திருத்தந்தை,
மேலும், இறைவனில் வைக்கும் நம்பிக்கை மட்டுமே, சந்தேகங்களை உறுதியான உண்மைகளாகவும், தீமையை நன்மையாகவும், இரவை ஒளிரும் விடியலாகவும் மாற்றும் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. வெனெசுவேலாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமாறு திருத்தந்தை வேண்டுகோள்
ஏப்.11,2013.
வெனெசுவேலா நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அரசியல்
நெருக்கடிகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான ஒரு தீர்வைக் காணுமாறு
அந்நாட்டின் அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் அரசுத்தலைவர் Nicolas Maduroவுக்கும்,
சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வியாழன் இரவு
அமைதிக்கானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதையடுத்து அந்நாட்டுக்கென
அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை அப்பேச்சுவார்த்தை அமர்வில் வாசித்தார் வெனெசுவேலா நாட்டுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்தோ ஜொர்தானோ.
வெனெசுவேலாவில் நிறைய மக்கள் அனுபவித்துள்ள வேதனைகளையும் பதட்டநிலைகளையும் தன்னால் உணர முடிகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, அம்மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
வன்முறை ஒருநாளும் அமைதியைக் கொண்டு வராது, மாறாக, அது மேலும் அதிகமான வன்முறைக்கே இட்டுச்செல்லும் என்பதில் தான் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்புக்கு Pax Christi அனைத்துலக விருது
ஏப்.11,2013. 2014ம் ஆண்டின் Pax Christi அனைத்துலக விருது, சிரியா நாட்டில் புலந்பெயர்ந்தோர் மத்தியில் பணிசெய்யும் இயேசு சபை அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் 2011ம் ஆண்டில் சண்டை தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின்
புலந்பெயர்ந்தோர்க்கு சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்பு ஆற்றிவரும்
சிறப்பான பணிகளை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக Pax Christi அமைப்பு அறிவித்துள்ளது.
கர்தினால் Bernardus Alfrink அமைதி நிதி நிறுவனத்தால் 1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பாக்ஸ் கிறிஸ்டி அனைத்துலக அமைதி விருது, உலகின் பல்வேறு பாகங்களில் அமைதி, நீதி மற்றும் அகிம்சாவுக்காக அர்ப்பணித்து உழைக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
சிரியாவின் தமாஸ்கு, ஹோம்ஸ், அலெப்போ
மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு
இதுவரை உதவியுள்ளது சிரியா இயேசு சபை அகதிப்பணி அமைப்பு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதச் சிறுமிகள், முஸ்லிம்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்
ஏப்.11,2013.
பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த
ஏற்க்குறைய ஆயிரம் சிறுமிகள் ஒவ்வோர் ஆண்டும் கடத்தப்பட்டு இசுலாமுக்கு
மதம் மாற்றப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று இவ்வாரத்தில் வெளியான ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு உட்பட பல அரசு- சாரா அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 700 கிறிஸ்தவப் பெண்களும், 300 இந்துமதச் சிறுமிகளும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கிறிஸ்தவப் பெண்களும், சிந்து மாநிலத்தில் இந்துமதச் சிறுமிகளும் கட்டாயமாக முஸ்லிம்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் எனவும், இவர்கள் எல்லாரும் 12க்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆதாரம் : Fides
7. சிரியா புலம்பெயர்ந்தோர்க்கென மேலும் அதிகமான அகதிகள் முகாம்கள் திறக்கப்பட வேண்டும்
ஏப்.11,2013. லெபனன் நாட்டில் சிரியா நாட்டின் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, லெபனன் நாட்டின் மக்கள் தொகையில் முப்பது விழுக்காட்டுக்குச் சமமாக இருப்பதால், அனைத்துலக
சமுதாயம் சிரியாவில் மேலும் அதிகமான அகதிகள் முகாம்களைத் திறக்குமாறு
கேட்டுள்ளார் லெபனன் தலத்திருஅவைப் பணியாளர் ஒருவர்.
சிரியா நாட்டின் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, லெபனன் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Paul Karam அவர்கள், சிரியாவில் போரிடும் தரப்புகளுக்கு, அனைத்துலக
மற்றும் சிரியாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆயுதங்களை விநியோகிப்பதைக்
கைவிட்டு அவசரகால உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
சிரியாவில்
போரினால் பாதிக்கப்படாமல் இருக்கும் பெருமளவான பகுதிகளில் அகதிகள்
முகாம்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று, மாரனைட் முதுபெரும் தந்தை பெக்காரா பூத்ரோஸ் ராய் அவர்கள் ஜெனீவாவில் உரையாற்றியதையும் குறிப்பிட்டார் அருள்பணி Karam.
லெபனன் காரித்தாஸ் அமைப்பு, இரண்டு இலட்சம் சிரியா அகதிகளுக்கு நேரிடையாகவும், 55 ஆயிரம் பேருக்கு நலவாழ்வு உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார் அருள்பணி Karam.
அரசியல் மற்றும் புவியியல் பிரச்சனைகள் என்று வரும்போது தாங்கள் அதில் தலையிட முடியாது எனவும், இப்பிரச்சனைக்கு உலகின் பெரும் தலைவர்களே தீர்வு காண வேண்டுமென்றும் மேலும் தெரிவித்தார் அருள்பணி Karam.
ஆதாரம் : Fides
8. உலகில் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா. குற்றவியல் நிறுவனம்
ஏப்.11,2013. திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகளால் உலகில் 2012ம் ஆண்டில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர், இக்கொலைகள் அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன என்று, ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனமான UNODC அறிவித்தது.
திட்டமிட்ட கொலைகள் குறித்த உலகளாவிய ஆய்வு பற்றி இலண்டனில் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய, நிறுவனத்தின் பொது விவகாரத் துறை இயக்குனர் Jean-Luc Lemahieu, உலகில் திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகளுக்குப் பலியாகுவோரில் ஆண்கள் ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர் என்று கூறினார்.
இக்கொலைக் குற்றங்களைச் செய்வோரில் 95 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், இக்கொலைகளில் ஏறக்குறைய பதினைந்து விழுக்காடு வீடுகளில் இடம்பெறுகின்றன என்றும் கூறினார் Lemahieu.
பெண்களுக்கு, வீடு மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாகவும், இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கு ஆவன செய்யப்படுமாறும் Lemahieu கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : UN
9. 2015ம் ஆண்டுக்குள் அனைத்துச் சிறாருக்கும் கல்வி, பான் கி மூன்
ஏப்.11,2013. 2015ம்
ஆண்டுக்குள் அனைத்துச் சிறாரும் பள்ளிக்குச் செல்வதற்கு ஐ.நா. நிறுவனம்
எடுத்துவரும் புதிய முயற்சிகளுக்கு உலகளாவியத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், உலகின் புகழ்பெற்ற நபர்களும் ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
சிறார் பள்ளிக்குச் செல்லாத தற்போதைய நிலை நீடித்தால், அனைத்துச் சிறாருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை 2086ம் ஆண்டில்தான் நிறைவேற்ற முடியும் என, வாஷிங்டனில் உலகின் பிரபலங்களுடன் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்தார் பான் கி மூன்.
இவ்வியாழனன்று நடந்த கூட்டத்தில், பாடகரும் கவிஞருமான Shakira, நடிகர்கள் Jude Law, Goldie Hawn, CNN அனைத்துல அமைப்பின் Isha Sesay உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment