Sunday, 17 November 2013

டேவிட் கெமரூன் வைத்த ஆப்பு:நிலை குலைந்து போன ராஜபக்ஷ!

டேவிட் கெமரூன் வைத்த ஆப்பு:நிலை குலைந்து போன ராஜபக்ஷ!

Source: Tamil CNN
கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்ற நேரம்…
கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் அந்த புதுமையான காட்சி அரங்கேறியது. டைட் பேன்ட், டீ சர்ட்டுடன் ஒரு இளம் விளையாட்டு வீரர் போல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அவர்விளாசிய பந்துகள் பவுண்டரிக்கு போனதோ இல்லையோ… வீசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன.
விளையாட்டை ரசித்தவர்கள் தங்கள் கடவுள் விடைபெற்று விட்டதாக சோகத்தில் மூழ்கினார்கள். அதே நேரத்தில் வாழ்க்கையை தொலைத்த தமிழர்கள் தங்கள் வேதனைக்கு ஆறுதல் கூற நடந்த அநியாயங்களை தட்டி கேட்க கடவுளை போல் கேமரூன் வந்திருப்பதாக எண்ணினார்கள். சோக ரேகை படர்ந்த அவர்கள் முகங்களில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஒரு காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த நாடுகளெல்லாம் சுதந்திரம் பெற்ற பிறகு தங்களுக்குள் உருவாக்கிய அமைப்புதான் ‘காமன்வெல்த்நாடுகள்’ கூட்டமைப்பு.
எனவேதான் சுதந்திரமாக இருந்தாலும் இந்த நாடுகளில் அநியாயங்கள் நடந்தால் தட்டிக் கேட்க எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று துணிந்து களம் இறங்கி விட்டார் போலும்…
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் தொடங்க போகிறது என்ற தகவல் வெளியான உடனேயே எதிர்ப்புகள் தொடங்கி விட்டன.
இரக்கமற்ற அரக்கர்கள் வாழும் பூமியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பற்றி பேசுவதற்கு காமன்வெல்த் கூட்டம் நடத்தலாமா?
இறுதிக்கட்ட போரின்போது குண்டு வீசப்படாத இடம் என்று சிங்கள அரக்க அரசு அறிவித்த இடத்தில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் அழிக்கப்பட்டார்கள். முள்வேலிக்குள் அடைக்கப்பட்டவர்கள் குடிக்க தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவித்ததும், இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் இதயம் உள்ளவர்களை உறைய வைத்தது.
குற்றுயிரும், குலையுருமாக கிடந்து ‘அய்யோ, காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…’ என்று அவர்கள் எழுப்பிய அபய குரல் உலக நாடுகள் மத்தியில் எடுபடவில்லை. கண்டு கொள்ளாமல் அத்தனை நாடுகளும் மவுனம் சாதித்தன.
தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் பாதிக்கப்படுவதை நிச்சயம் இந்தியா வேடிக்கை பார்க்காது என்று நம்பிய இலங்கை தமிழர்களின் நம்பிக்கை தகர்ந்தது. உள்நாட்டு போரின் போது கண்டு கொள்ளாமல் மவுனம் காத்தது.
போர்தான் முடிந்து விட்டதே! மிச்சமுள்ள தமிழர்களையாவது பாதுகாப்பார்கள். மனித குலமே கண்டராத அளவுக்கு அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காவது இலங்கையை தண்டிக்க இந்தியா முன்வரும் என்று எண்ணினார்கள்.
அந்த எண்ணமும் ஈடேறவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க முடிவு செய்ததும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கொந்தளித்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவில்லை. ஆனால் வெளியுறவு துறை மந்திரி சல்மான்குர்ஷித் பங்கேற்றுள்ளார்.
‘குர்ஷித் இந்தியாவின் குரலாக என்ன சொன்னார்…? என்பது சிதம்பர ரகசியம்தான். குரல் எழுப்ப வேண்டிய இந்தியா இன்னும் மவுனம் கலையவில்லை.
உலகமெங்கும் பரவி கிடக்கும் தமிழர்கள் அந்த அந்த நாடுகளில் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதன்படி லண்டனில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களும் கேமரூன் இலங்கை செல்லகூடாது என்று போராடினார்கள்.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்தாலும் இலங்கை சென்றால்தான் உண்மை நிலவரத்தை நேரில் கண்டறிய முடியும். இலங்கை தமிழர்களுக்காக மாநாட்டில் நிச்சயம் குரல் எழுப்புவேன் என்று உறுதியளித்து விட்டு இலங்கை புறப்பட்டார். அவர் சொன்னதை செய்து விட்டார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை எந்த நாட்டு தலைவரும் கால்பதிக்காத யாழ்ப்பாணம் பகுதிக்கு கேமரூன் சென்றார். தன்னோடு பத்திரிகையாளர்களையும் அழைத்து சென்றார்.
மீளாத்துயரில் தத்தளிக்கும் தமிழர்களை பார்த்து நிஜக்கண்ணீர் வடித்தார். அவர்கள் அனுபவித்து வரும் வேதனைகளையும், இலங்கை அரசால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
போர் குற்றம் தொடர்பாக மார்ச் மாதத்துக்குள் நம்பத்தகுந்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜபக்சேவுக்கு கெடுவும் விதித்தார்.
காமன்வெல்த் மன்றத்தை விசாரணை மன்றமாக மாற்றிவிடகூடாது என்று எச்சரிக்கை விடுத்த ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொடுத்த சாட்டையடி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேமரூரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துவிட்டது. விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர்.
சுண்டைக்காய் நாட்டை ஆளும் உனக்கே இவ்வளவு தெனாவட்டு என்றால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தே உன்னை ஒரு காலத்தில் அடக்கி ஆண்ட பரம்பரை நாங்கள் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்…? என்று அடுத்த அதிரடி தாக்குதலை தொடங்கினார்.
உடனடியாக பத்திரிகையாளர்ளை சந்தித்து யாழ்ப்பாணத்தில் கண்டதை, கேட்டதை, அறிந்ததை வைத்து மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்து இருக்கிறது என்பதை உறுதிபடுத்தினார்.
போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதை நான் ஆதரிக்கிறேன். சானல் 4 காட்டிய சில உறைய வைக்கும் சம்பவங்கள் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மறுகுடியேற்றம் நடக்கவில்லை.
உறைய வைக்கும் அளவுக்கு நடந்த சில சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டத்தான் சர்வதேச ஊடகங்களுடன் யாழ்ப்பாணம் சென்றேன். கள நிலவரத்தை புரிந்து கொள்ள முடிந்தது என்று விளக்கினார்.
ஒரு வேளை புகார் கூறிய தமிழ் மக்களை இலங்கை அரசு பழிவாங்குமா என்ற நியாயமான கேள்விக்கும் ‘இலங்கை அரசின் பதில் நடவடிக்கையை உலகம் கண்காணிக்கும்’ என்று பகிரங்கமாகவே அவரது பாணியில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். நியாயங்கள் ஒரு போதும் தோற்பதில்லை. எந்த காலத்திலும் நியாயத்தை நிலைநாட்ட யாராவது ஒருவர் வரத்தான் செய்வார்.
தாயகமான இந்தியா கைவிட்டு விட்டதே என்று ஏங்கிய இலங்கை தமிழர்களுக்கு கைகொடுக்க அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க இங்கிலாந்து முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
காமன்வெல்த் அமைப்பின் தலைவராக முடிசூடி நடத்தப்பட்ட அக்கிரமங்களை மூடி மறைக்கலாம் என்ற ராஜபக்சேவின் கனவு தகர்ந்துவிட்டது. கேமரூன் வைத்த ‘ஆப்பு’ ராஜபக்சேவை நிலைகுலைய வைத்துள்ளது.
 raja
சபாஷ் கேமரூன்!

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...